நாஞ்சில் நாடன் - ஒரு இந்நாட்டு மன்னர்

நாஞ்சில் நாடன்:

நாஞ்சில் நாடன் என்ற பெயரில் எழுதும் ஜி. சுப்பிரமணியன் 30-12-1947 அன்று வீர நாராயணமங்கலத்தில் பிறந்தவர். பம்பாயில் ஒரு தொழில் நிறுவனத்தில் பணி புரிகிறார். ஏழாண்டுகளாக எழுதும் இவருடைய முக்கிய உந்துதல் 'சொந்த மண்ணை, மண் செய்த மனிதர்களை இழந்த ஏக்கம்', தலை கீழ் விகிதங்கள்' (1977-நாவல்) 'என்பிலதனை வெயில் காயும்' (நாவல்-1979), கல்கத்தா தமிழ் மன்றத்தின் வெள்ளி விழாச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது. இவையெல்லாம் இவருடைய குறிப்பிடத்தக்க சாதனைகள், 'மாமிசப் படைப்பு' (நாவல்), 'தெய்வங்கள், ஓநாய்கள், ஆடுகள்' (சிறுகதைத் தொகுப்பு) சமீபத்திய நூல்கள், தீபம் இலக்கிய மாத இதழின் ஆசிரியர் குழுவில் பங்கேற்றிருக்கிறார்.

முகவரி C/o W.H. Brady & Co. Ltd., Brady House, 12/14, Veer Nariman Road, Bombay - 400 023

ஒரு 'இந்நாட்டு மன்னர்' - நாஞ்சில் நாடன்

ஒரு இந்நாட்டு மன்னர்

அவர் பெயர் என்ன என்று யாருக்கும் தெரியாது! 'வைத்தியன்' என்று பெயராலேயே சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அவன் அழைக்கப்பட்டு வந்தான். ஒருவேளை வாக்காளர் பட்டியலில் பார்த்தால் தெரியலாம். அவன் பெயரைக் கண்டுபிடிக்கும் சிரமம் மேற்கொள்ளாமல் செத்துப் போன கொம்பையாத் தேவர் சார்பிலோ, அல்லது நாடு விட்டுப் போன நல்லதம்பிக் கோனார் சார்பிலோதான் அவன் ஓட்டுப் போட்டிருக்கிறான். ஆனால் இப்போது ஊராட்சித் தலைவர் தேர்தலில் இது சாத்தியமில்லை. 'உருளை' சின்னமுடைய உமையொருபாகன் பிள்ளையும், 'பூசணீக் காய்' சின்னம் பெற்ற பூதலிங்கம் பிள்ளையும் உள்ளூர்க்காரர்கள். எனவே கள்ளவோட்டுப் போட அதுவும், எல்லாருக்கும் தெரிந்த அவனைக் கொண்டு - யாரும் துணியவில்லை. தேர்தல் சந்தடிகளில் ஊரே அல்லோல கல்லோலப் படும் வேளையில், தான் ஒரு புற வெட்டாகிப் போனதில் வைத்தியனுக்கு மிகுந்த மனவருத்தம் உண்டு. இது வரையில்லாமல், தன் ஜனநாயக உரிமை புறக் கணிக்கப் படுவதில் ஓர் எரிச்சல்.

ஒரு வாக்கு இப்படி அர்த்தமற்று வீணாவதில் இரண்டு கட்சிக் காரர்களுக்கும் ஏமாற்றந்தான். அவன் பெயர் என்ன என்று கேட்டுத் தெரிந்துகொள்ளலாமென்றால், அவன் வயதுடையவர்கள் யாரும் உயிரோடு இல்லை. இப்போது இராஜாங்கம் நடத்தும் தானமானக்காரர்களுக்குப் பிறந்த முடி எடுத்தவனே வைத்தியன் தான். எனவே அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை.

அவன் பெயரைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற விளையாட்டுத்தனமான் ஆர்வத்தோடு, அவனிடமே கேட்கலா மென்றாலும், "அதெல்லாம் இப்ப என்னத்துக்குப் போத்தி? என் பேரிலே எடவாடா முடிக்கப் போறியோ?" என்பதுதான் இதுவரை பதிலாக வந்திருக்கிறது. தன்னுடைய பெயரே அவனுக்கு மறந்துவிட்ட நிலையில், அந்த உண்மைப் பெயரால் வாக்காளர் பட்டியலில் ஓட்டு இருக்க வேண்டுமே என்பது அவனுக்குத் தோன்றாமல் போயிற்று.

அவ்வூர் வாக்காளர் பட்டியலில் இன்னாரென்று தெரியாத இரண்டு பெயர்கள் இருந்தன. பட்டியலைக் குடைந்துகொண்டிருந்த 'பூசணிக் காய்' ஆதரவாளனான மாணிக்கம் அது யாரென்று தெரியாமல் விழித்தான். வைத்தியனின் முகம் அவன் நினைவில் வந்து வந்து போயிற்று. முதல் பெயர் புகையிலையா பிள்ளை. அவனாக இருக்க முடியாது. இன்னொன்று அணஞ்ச பெருமாள். வைத்தியனின் பெயர் இதுவாக இருக்கலாமோ என்ற ஊகத்தில் மாணிக்கம் வயதைப் பார்த்தான். எண்பத்து இரண்டு. ஒரு துள்ளுத் துள்ளினான்.

"கோச்ச நல்லூர்' என்று வழக்கமாகவும், 'கோச்சடைய நல்லூர்' என்று இலக்கணச் சுத்தமாகவும் அழைக்கப்படும் அந்த ஊரில் உத்தேசமாக நூறு வீடுகள் இருக்கும். நூறு வீடுகளில் மக்கள் வழி, மருமக்கள் வழி, சைவர்கள் (இந்த வைப்பு முறை மக்கள் தொகை விகிதத்தை அடிப்படையாகக் கொண்டதே அல்லாமல், உயர்வு தாழ்வு என்ற நிலையை உள்ளடக்கியதல்ல என்று தண்டனிட்டுச் சொல்லிக்கொள்கிறேன்.) என்ற பிரிவில் உட்பட்ட வேளாளர்கள் மொத்தம் அறுபது வீடுகள். (செங்குந்தர், காணி யாளர், கார்காத்தார், வீரசைவர், துளு வேளாளார்கள் ஆகியோரின் பிரதிநிதித்துவம் எப்படி இங்கே இல்லாமல் போகலாம் என்பதில் இந்தக் கதாசிரியனுக்கு மிகுந்த மனத்தாங்கல்.)

'கிராமம்' என்றும் 'பிராமணக்குடி' என்றும் அழைக்கப்படுகிற 'எவ்வுயிர்க்கும் செந்தன்மை பூண்டொழுகும்' வீடுகள் ஏழு. பூணூல் போட்டவர்கள் எல்லாரும் 'ஐயர்கள்' என்ற நினைப்பே வேளாளர் களிடம் ஏகபோகமாக இருப்பதால், அங்கும் என்ன வாழுகிறது என்று தெரியாமல், அவர்களின் 'ஒற்றுமை'யின் மேல் ஏகப் பொறாமை. இது தவிர இந்து சமய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டுப் போல - நாடார், தேவர், வண்ணார், நாவிதர் என்று பல பகுப்புக்கும் ஆட்பட்ட இந்துக்களும் அங்கே உண்டு.

இவை நீங்கலாக, தான் இந்துவா, கிறிஸ்துவனா இல்லை, இரண்டுமா அல்லது இரண்டும் இல்லையா என்று நிச்சயமாக அறிந்து கொள்ளாத மக்களும் அங்கே உண்டு. கும்பிடுகிற சாமியை வைத்துக் கணக்கிடலாமென்றால் - சுடலைமாடன், ஈனாப்பேச்சி, இசக்கி அம்மன், தேரடிமாடன், புலைமாடன், முத்துப்பட்டன், கழுமாடன், வண்டி மறிச்சான், முண்டன், முத்தாரம்மன், சூலைப்பிடாரி, சந்தன மாரி, முப்பிடாரி என்ற பட்டியல் நீண்டு போகும். அந்த ஊர் வாக்காளர் பட்டியலைவிட இது பெரிது.

மேற்சொன்னவர் அனைவரும் இந்துக் கடவுள்களும் கடவுளச்சி களுந்தான் என்று பல அவதார மகிமைகளை எடுத்துக் காட்டி நீங்கள் நிற்வுவீர்களேயானால், அந்த மக்களும் இந்துக்கள் தான். 'ஏ' யானது 'பி' க்குச் சமம். 'பி' ஆனது 'சி' க்குச் சமம். எனவே 'ஏ' 'சி' என்ற கணித விதியை இங்கே கையாண்டால், இவர்கள் இன்னின்ன கடவுள் அல்லது கடவுளச்சியை வழிபடுகிறார்கள்; அந்தக் கடவுள்களும் கடவுளச்சிகளும் இந்துங்கள்; எனவே இவர் களும் இந்துக்கள் என்று வல்லந்தமாக நிரூபித்துவிடலாம். இந்தச் சள்ளையெல்லாம் எதற்கு என்றுதான் பல சாதிகளும், பல தெய்வங் களும், பலதரப்பட்ட மொழி, பண்பாடு ஆகியவையும் உடைய இந்தக் கூட்டத்தை 'இந்தியா' என்றும், இந்து என்றும் ஆங்கிலேயன் பெயர் வைத்திருக்க வேண்டும்! இந்த நாட்டில் இத்தனை சதவிகிதம் இந்துக்கள் என்று பண்டார சந்நிதிகளும், ஜகத்குருக்களும் புள்ளி விபரம் தந்து பீற்றிக்கொள்வதெல்லாம் இந்தக் கணிசமான மக்களை யும் உள்ளடக்கித்தான்.

இப்படி 'இராம ராஜ்ய' யோக்கியதைகள் பல கோச்சநல்லூ ருக்கு இருந்தாலும், ஊராட்சித்தலைவர் தேர்தல் என்றால் சும்மாவா? பொறி பறக்கும் போட்டி. இதில் ஆசுவாசப்படுத்தும் சங்கதி என்னவென்றால், போட்டியிடும் இருவரும் வேளாளர்கள்; அதிலும் குறிப்பாக ஒரே வகுப்பைச் சேர்ந்த வேளாளர்கள். அதிலும் குறிப்பாக மைத்துனர்கள். எனவே காரசாரமான போட்டி இருந்தாலும் வகுப்புக் கலவரங்களாவது இல்லாமல் இருந்தது. ஊர் முழுவதும் ஏதாவது ஒரு சைடு எடுத்தாக வேண்டிய நிலை. இந்த நூறு வீடு களைத் தவிரவும் பச்சைப் பாசி படர்ந்த ஒரு தெப்பக்குளமும், அதன் கரையில் ஒரு செயலிழந்த காத்தாங்கோயிலு, சில சில்லறைப் பீடங்களும், ஒரு பாழடைந்த மண்டபமும், இரவு ஏழு மணிக்கு மேல் அதனுள் இயங்கும் சட்ட விரோதமான 'தண்ணீர்ப் பந்த' லும், ஒரு சுக்குக்காபிக் கடையும், வெற்றிலை பாக்கு முதல் 'டாம் டாம்' டானிக் ஈறாக விற்கும் ஒரு பலசரக்குக் கடையும், ஏழெட்டுத் தென்னந்தோப்புகளும், இருபது களங்களும், சுற்றிலும் நஞ்சை நிலங்களும் அங்கே உண்டு. மனிதனைத் தவிர, பிற தாவர ஜங்கமச் சொத்துக்களுக்கு ஓட்டுரிமை இல்லாமல் போனதுகூட ஒரு சௌகரியந்தன். இல்லையென்றால், இந்த இரண்டு பேரை அண்டிப் பிழைக்கும் மனிதர்களுக்கு ஏற்பட்ட தர்மசங்கடங்கள் அவற்றுக்கும் ஏற்பட்டிருக்கும்.

இருக்கின்ற வாக்குகளில், யாருக்கு எத்தனை கிடைக்கும் என்ற ஊகமும் கணக்கும் எங்கே பார்த்தாலும் நீக்கமற இருந்தன. 'பூசணிக்காய்' வேட்பாளரின் தங்கைக்கு இந்த ஊரில் ஓட்டு இருப் பதால், ஒரு வாரத்துக்கு முன்னாலேயே நாங்குநேரியில் இருந்து அவள் வந்தாயிற்று. மனைவியை அழைத்து வர வேண்டாம்; தனியாக வந்தால் போதும் என்று அவனுக்குக் கட்டளை. அவள் பூசணிக் காயின் தங்கை. (வசதி கருதி இங்கே தொட்டு சின்னம் வேட் பாளரைக் குறிக்கிறது.) என்ன தான் கணவன் கார்வார் செய்தாலும் பாசம் காரணமாக அவள் பூசணிக்காய்க்குப் போட்டுவிட்டால்? இங்கு ஒரு ஓட்டுக் கூடினால் என்ன பயன்? அதைவிட இரண்டு பேரும் வராமலேயே இருந்துவிடலாமே!

கூட்டிக் கழித்து, வகுத்துப் பெருக்கிப் பார்க்கையில் யார் வென்றாலும், பத்து வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெல்லமுடியும் என்று நோக்கர்கள் கணித்தனர். தேர்தல் வேலைக்காக இரண்டு பேரும் திறந்திருந்த செயலகங்கள் எப்போதும் நிரம்பி வழிந்தன. தேர்தல் நாள் நெருங்க நெருங்க வெற்றிலை, பீடி, சுக்குக்காபி, வடை, சீட்டுக்கட்டுகள் செலவு எல்லாம் ஜியாமெட்ரிக் புராகிரஷனில் வளர்ந்தது. நாளைக் காலை தேர்தல் என்ற நிலையில், இந்த வேகம் காய்ச்சலாகி, ஜன்னி கண்டு விடலாம் என்ற அச்சத்தைத் தந்துகொண் டிருந்தது. இந்தச் சரித்திரப் பிரசித்திப் பெறப்போகும் விநாடியில்தான் மாணிக்கம் பூசணிக்காய் செயலகத்திலிருந்து குபீரென்று கிளம்பினான்.

இப்போதே வெற்றி கிடைத்துவிட்டதைப் போன்ற ஒளி முகத்தில் துலங்க, தான் கண்டுபிடித்த அணஞ்ச பெருமாள், வைத்தியனே தான் என்ற வரலாற்றுப் பேருண்மையை யாருக்கும் தெரியாமல், ஐயம் திரிபு நீங்க நிரூபித்து விடவேண்டும் என்ற துடிப்பு. இந்த நேரத்தில் வைத்தியன் எங்கே இருப்பான் என்று அவனுக்குத் தெரியும்.

சாத்தான் கோயிலை நோக்கி மாணிக்கம் நடக்க ஆரம்பித்த போதே, 'சதக்' கென்று சிந்தனை எதையோ பிரித்தது. நேர்வழியாகப் போனால், இந்த நேரத்தில் இவன் இவ்வழியாகப் போவானேன் என்று எதிரிப் பாசறையைச் சேர்ந்தவர்கள் நினைக்க மாட்டார்களா? அதுவும் நாளை தேர்தலாக இருக்கும்போது, சந்தேகம் வலுக்கத்தானே செய்யும்? அதுவும் 'உருளை' ஒற்றர்கள் கண்ணில் பட்டுவிட்டால் துப்புத் துலக்கவோ, பின் தொடரவோ ஆரம்பித்தால் மோசமாகி விடுமே! தன் மூளையைக் கசக்கி, இந்தப் பாடுபட்டுக் கண்டுபிடித்த வாக்காளரை, மாற்றுக் கட்சிக்காரனும் கரைக்க ஆரம்பித்தால்...?

சமயத்தில் தனக்குத் தோன்றிய புத்திசாலித்தனமான யோச னையை மெச்சிக்கொண்டே, சாத்தான் கோயிலுக்குச் சுற்று வழியாக நடந்தான் மாணிக்கம். பள்ளிக்கூடம் வழியாகத் தென்னங்குழி மடை வந்து பத்தினுள் இறங்கி, வரப்பில் நடந்து, வழி நடைத் தொண்டில் ஏறி, கோயிலின் பின்பக்கம் வந்தான். வைத்தியன் தனியாக இருக்க வேண்டுமே என்ற கவலை இலேசாக முளை கட்ட ஆரம்பித்தது.

கோயில் முகப்புக்கு வந்தான். பனி மாதம். ஆகையால் அங்கே ஒரு குருவியைக் காணோம். ஈசான மூலையில், சுவரை அணைத்துக் கொண்டு ஒரு கந்தல் மூட்டை போலச் சுருண்டு படுத்திருப்பது வைத்தியனாகவே இருக்க வேண்டும். கண் மங்கி, கை நடுங்க ஆரம்பித்து, காதுகளில் ஓரத்தில் தன்னையறியாமல் கத்திக் கீறல்கள் விழ ஆரம்பித்ததும் தொழில் கைவிட்டுப் போனபிறகு, அந்த மூலை வைத்தியனின் நிரந்தரமான இடமாகிவிட் டிருந்தது.

மணி ஒன்பதைத் தாண்டிவிட்டதால் அவன் உறங்கி இருக்கவும் கூடும். ஆனால் சற்று நேரத்துக் கொருமுறை, 'நானும் இருக்கிறேன்' என்று காட்டிக் கொண்டிருக்கும் இருமல். மூலையை நெருங்கி நின்று கொண்டு அங்குமிங்கும் பார்த்தான் மாணிக்கம். ஆள் நடமாட்டம் இல்லை. நாளை தேர்தல் என்ற மும்முரத்தில் ஊர் பரபரத்துக்கொண் டிருந்தபோது இந்த ஒதுங்கிய மூலைக்கு யார் வரப் போகிறார்கள்?

வைத்தியனைப் பார்த்துச் சன்னமாகக் குரல் கொடுத்தான். "வைத்தியா...ஏ வைத்தியா!"

பதில் இல்லை. காதோடு அடைத்து மூடிக்கொண்டு படுத்திருப்பதால் கேட்டிருக்காது. அந்த மனித மூட்டையின் தோளைத் தொட்டு உலுக்கினான். அலறாமலும், புடைக்காமலும் நிதானமாக எழுந்து உட்கார்ந்த அவன் நிதானமாக மாணிக்கத்தைப் பார்த்தான்.

"ஏன் போத்தி...? வீட்டிலே யாராவது...."

அவன் என்ன கேட்கிறான் என்பது மாணிக்கத்துக்குப் புரிந்தது. மற்றச் சமயமாக இருந்தால், இந்தக் கேள்விக்குப் பதில் வேறுவித மாக இருக்கும். ஆனால், இன்று அந்த ஓட்டின் கனம் என்ன என்று அவனுக்குத் தெரியும். ஆகையால் அமைதியாகச் சொன்னான்.

"அதெல்லாம் ஒண்ணும் இல்லை. உங்கிட்டே ஒண்ணு கேட் கணும்."

வைத்தியனுக்கு நெஞ்சில் திகில் செல்லரித்தது. இந்த அர்த்த ராத்திரியில் தன்னை எழுப்பி ஒன்று கேட்க வேண்டுமானால்?

"உன் பேரு அணஞ்ச பெருமாளா?" வைத்தியன் முகத்தில் ஒருவிதப் பிரமிப்பு.

"அட, இதென்ன விண்ணாணம்? இதுக்குத்தானா இந்தச் சாமத்திலே வந்து சங்கைப் புடிக்கேரு...."

"பேரு அதானா சொல்லு?" "உமக்கு யாரு சொல்லிட்டா? நானே அயத்துப் போன துல்லா... இப்ப என்ன வந்திட்டு அதுக்கு?"

'யார்கிட்டேயும் மூச்சுக் காட்டாதே. உன் பேரு வோட்டர் லிஸ்டிலே இருக்கு. நாளைக்குக் காலம்பற நான் வந்து உன்னைக் காரிலே கூட்டிட்டுப் போறேன். காப்பி சாப்பாடு எல்லாம் உண்டு. உருளைக்காரப் பயங்க வந்து கேட்டா இல்லேன்னு சொல்லிரு. ஆமா!"

தானும் ஒரு சமயச் சார்பற்ற ஜனநாயக சோஷலிஸக் குடியரசின் முடிசூடா மன்னர்களில் ஒருவன் என்ற எண்ணம் - தனக்கும் ஓட்டுரிமை இருக்கிறது என்ற நினைப்பு - வைத்தியனுக்குப் புதிய தெம்பைத் தந்தது. அந்த உணர்வு காரணமாகச் சூம்பிய அவன் தோள்கள் சற்றுப் பூரித்தன.

"நான் ஏம் போத்தி சொல்லுகேன்? அண்ணைக்கு அந்த உருளைக் கார ஆளுக சொன்னாளே, 'இதுவரை நீ செத்தவன் ஓட்டையும் போட்டே. சரி, ஆனா எவனும் சொன்னாண்ணு இந்தத் தடவை அங்கே வந்தே, பொறவு தெரியும் சேதி.... நேரே போலீசிலே புடிச்சுக் குடுத்திடுவோம்' அப்படின்னுல்லா சொன்னா. நானும் அதால கம்முனு இருக்கேன். மச்சினனும் மச்சினனும் இப்போ அடிச்சிக் கிடுவாங்க. நாளைக்கு நானும் நீயும் சோடி, கடைக்குப் போகலாம் வாடின்னு கழுத்தைக் கட்டிக்கிட்டு அழுவாங்க. நமக்கு என்னாத் துக்கு இந்தப் பொல்லாப்புன்னு தாலா சலம்பாமல் கிடந்தேன். இப்பம் நம்ப பேரு லிஸ்டிலே இருக்கா? தெரியாமப் போச்சே இதுநாள் வரை..."

"இதுவரை இப்பம்கூட யாருக்கும் தெரியாது பார்த்துக்கோ. நான் தான் கண்டுபிடிச்சேன். முன்னாலேயே ஒன் பேரு இருந்திருக் கும். ஆனா என்னைப் போல யாரு அக்குசாப் பாக்கா...? அது கிடக்கட்டும். உனக்குப் புது வேட்டியும் துவர்த்தும் வாங்கி வச்சிரச் சொல்லுகேன். நீ காலம்பற எங்கூட வந்து இட்லி திண்ணுப் போட்டு, புதுத் துணியும் உடுத்திக்கிட்டு ஓட்டுப் போட்டிரணும். எல்லாம் நான் சொல்லித் தாறேன். ஆனா எவன்கிட்டேயும் அனக்கம் காட்டிராதே. என்னா?" ஒரு 'இந்நாட்டு மன்னர்'

"இனி நான் சொல்வேனா? நீங்க இம்புட்டு சொன்னதுக்கப் புறம்..."

வைத்தியன் தந்த உறுதியில் மனம் மகிழ்ந்து, தன் சாதனையை நினைத்து மாரஇ்பு விம்ம, பூசணிக்காய் வீட்டை நோக்கி நடந்தான் மாணிக்கம்.

அங்கே ஒரு அரசவையின் பொலிவு போன்ற சுற்றுச் சூழல்கள். பங்களாவில் நடுநாயகமாகப் பூசனிக்காய் கொலு வீற்றிருந்தார். அந்த வீட்டிலுள்ள மொத்த பெஞ்சுகளும், நாற்காலிகளும் அங்கே பரந்து கிடந்தன. கல்யாணக் களைதான். வந்து வந்து தன் விசுவாசத்தைத் தெரிவிக்கும் வாக்காளர்களின் புழக்கம். வெற்றிலைச் செல்லங்கள் இரண்டு மூன்று ஆங்காங்கே கண் பிதுங்கி நிறைந்து கிடந்தன. வந்தவர்களுக்கு வற்றாமல் ஊறிக் கொண்டிருக்கும் சுக்குக் காப்பி அண்டா. அந்த நூறு வீட்டு ஊரின் இரதவீதிகளைக் சுற்றிச் சுற்றிக் கோஷம் போட்டுத் தொண்டை கட்டியவர்கள் நெரிந்த குரலில் பேசிக்கொண் டிருந்தார்கள். நாளைக் காலைக் காப்பிக்கான ஆயத்தங்கள்.

இட்லிக் கொப்பரைகள் கிடார அடுப்பில் ஏற்றப்பட்டு விட்தால் 'கொர்' என்ற சீரான இரைச்சல். சின்னம் பூசணிக்காய் ஆன படியால், பூசணிக்காய் சாம்பாருக்காக அரிந்து பனையோலைப் பாய் மீது குவிக்கப்பட்டிருந்தது. இலைக்கட்டுக்கள் இடத்தை அடைத் துக்கொண்டு கிடந்தன. பாத்திர பண்ட வகையறாக்களின் முனகல். செயித்தால் வீட்டுக்கொரு பூசணிக்காய் பரிசாக விளம்பு வதற்காக ஐந்து மூட்டைகள் சாய்ப்பில் அடுக்கி வைக்கப்பட் டிருந்தன.

பூசணிக்காய் தோற்றுப்போகும் என்று கருதி, தோற்றப் பிறகு தெருவில் போட்டு உடைப்பதற்காக உருளையும் இரண்டு மூட்டை கள் வாங்கிப் பத்திரப்படுத்தியிருப்பதாகக் கேள்வி. ஆகக் கனக மூலம் சந்தையில் பூசணிக்காய்க்கு ஏகக் கிராக்கி. அடுத்தமுறை ஊராட்சித் தேர்தலைக் கணக்காக்கி, அதற்குத் தோதாக மேலாய்ச்சிக் கோணம் முழுவதும் பூசணிக்கொடி போடப் போவதாக அவ்வூர் பண்ணையார் ஒருவர் தீர்மானித்திருப்பதாகத் தகவல்.

நாளை வாக்குச் சாவடிக்குச் செல்வதற்காக ஏழெட்டு வில் வண்டிகளும் இரண்டு வாடகைக் கார்களும் தயார். இதே ஏற்பாடுகளை உருளையும் செய்திருப்பார் என்று சொல்லத் தேவை யில்லை. ஒரேயொரு அசௌகரியந்தான். அவர்கள் பூசணிக்காய் சாம்பார் வைப்பதைப்போல, இவர்களால் ரோடு உருளையைச் சாம்பார் வைக்க முடிநயாது. அதில் ஒரு 'புத்திசாலி' உருளை என்றால் உருளைக்கிழங்கையும் குறிக்கும் என்பதால், அதையே சாம்பார் வைக்கலாம் என்று சொன்னதன் பேரில் அவ்வாறே தீர்மானமாயிற்று.

இதில் ஓர் அதிசயம் என்னவென்றால், அங்கே மொத்த ஓட்டுக் களே இருநூற்று எழுபது. நூறு சதமானம் வாக்களிப்பு நடந்தாலும், இருநூற்றெழுபது வாக்காளர்களுக்கும் மொத்தம் பதினாறு வில் வண்டிகளும், நான்கு வாடகைக்; கார்களும். அது மட்டுமல்ல. வாக்கெடுப்பு நடக்கப்போகும் அரசினர் ஆரம்பப்பள்ளி, ஊர் எந்த மூலையில் இருந்து நடந்தாலும் அரை பர்லாங்குதான். ஆனாலும் முடிசூடா மன்னர்களை நடத்தியா கொண்டு செல்வது?

மறுநாள் பொழுது கலகலப்பாக விடிந்தது. தானாகப் பழுக்காததை தல்லிப் பழுக்க வைப்பது போன்று, சூரியன் கிழக்கில் எழச் சற்றுத் தாமதமாகியிருந்ததால். கயிறு கட்டி இழுத்துக்கொண்டு வந்திருப் பார்கள். அவ்வளவு அவசரமும் பதற்றமும்.

ஆறுமணிக்குப் பூசணிக்காயின் மகனும் மருமகளும் ஊரழைக்க வந்தார்கள். அதைத் தொடர்ந்து உருளையின் மகளும் மருமகனும் ஊரழைத்தார்கள். காலைக் காப்பிக்கான சன்னத்தங்கள். அதிகாலை யிலேயே வைத்தியனைப் பாதுகாப்பான இடத்தில் கொண்டுவந்து வைத்துவிட்டான் மாணிக்கம். அங்கேயே கிணற்றுத் தோட்டத்தில் குளிக்கச்செய்து, புதிய வேட்டியையும் துவர்த்தும் உடுத்து, வெண்ணீறு பூசி, ஒரே அலங்கரிப்பு. அவனுக்கே ஒரு புளகாங்கிதம். ஊராட்சித் தேர்தல் மாதம் ஒரு முறை வந்தால் எப்படி இருக்கும் என்று அவன் எண்ணினான்..

பத்துமணிக்கு மேல் வாக்கெடுப்பு துரிதகதியில் நடைபெற லாயிற்று. டாக்ஸிகள் எழுப்பும் புழுதிப்படலம். வில் வண்டிக் காளை கள் குடங்குடமாகப் பீச்சித் தெருக்களை மெழுகின. சைக்கிள் கூட நுழைந்திராத முடுக்குகளிலெல்லாம் கார் நுழைந்து தேடிப் பிடித்து வாக்காளரை இழுத்தது. பெற்றோர்கள் ஓட்டுப் போடப் போகும் போது சிறுவர்களுக்கும் காலைக் காப்பி, பலகாரம், டாக்ஸி சவாரி. சிலர் பிடிவாதமாக வில் வண்டியில் ஏற மறுத்து, காரில்தான் போவேன் என்றார்கள். தேர்தல்கள் இல்லாவிட்டால் இதையெல்லாம் எப்படித்தான் அநுபவிப்பது?

இரண்டு வேட்பாளர்களும் வாக்குச் சாவடியில் பிரசன்னமாயிருந் தார்கள். அவர்களின் பிரதிநிதிகள் இரண்டு வரிசைகளில். இது தவிர அரசாங்க அதிகாரிகளான பள்ளி ஆசிரியர்கள். கலவரம் வரலாம் என்று அஞ்சப்பட்டதால், இரண்டு போலீஸ்காரர்கள் கர்ம சிரத்தை யோடு* கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.

வைத்தியன் என்ற அணஞ்ச பெருமாளை மாணிக்கம் வாக்குச் சாவடி முன் காரில் கொண்டு வந்து இறக்கியபோது எல்லோர் கண்களும் நெற்றிமேல் ஏறின. வெள்ளையும் கொள்ளையுமாக நீறணிந்த சைவ நாயனாக, வந்து நின்ற அவனை அதிசயத்தோடு பார்த்தனர்.

"நாறப்பய புள்ளைக்கு என்ன தைரியம் இருந்தா இப்போ உள்ளூர் எலக்ஷன்லே கள்ள ஓட்டுப் போட வரும் ... ம்...வரட்டும் வரட்டும்."

கறுவினார் உருளை.

மணி பன்னிரண்டரை ஆகிவிட்டதால் கூட்டம் குறைந்து விட்டது. வைத்தியன் வந்து வரிசையில் நின்றபோது ஏழெட்டுப் பேரே அவன் முன்னால் வந்து நின்றார்கள். அவன் பின்னால் ஓரிருவர் வந்து சேரவா, இல்லை சாப்பிட்ட பிறகு பார்த்துக் கொள்ளலாமா என்று யோசனையில் தயங்கி நின்றனர்.

இரண்டு நிமிடங்கள் பொறுத்ததும் வரிசையைவிட்டு விலகி வேகமாக வெளியே நடக்கத் தடங்கினான் வைத்தியன். இவனுக்குத் திடீரென என்ன வந்துவிட்டது என்று புருவக் கோட்டை உயர்த்தினார் பூசணிக்காய். 'என் எதிரிலேயே, எனக்கு விரோதமாக் கள்ள ஓட்டுப் போட வந்திருக்கானாக்கும்' என்ற பாவனையில் மீசைமீது கைபோட்டு இளக்காரத்துடன் பூசணிக் காயைப் பார்த்தார் உருளை.

வரிசையிலிருந்து விலகிய வைத்தியனைப் பின் தொடர்ந்து ஓடிய மாணிக்கம் இரண்டு எட்டில் அவனைப் பிடித்துவிட்டான்.

"கெழட்டு வாணாலே! என்ன கொள்ளை எளகீட்டு உனக்கு? எங்கே சுடுகாட்டுக்கா ஓடுகே?"

"அட, சத்த போடாதேயும் போத்தி. இன்னா வந்திட்டேன்" வைத்தியனின் குரலில் அவசரம்.

"அதுதான் எங்க எளவெடுத்துப் போறேங்கேன்? பிரி களந் திட்டோவ்...?"

"இரியும் போத்தி, ஒரு நிமிட்லே வந்திருக்கேன்."

"ஓட்டுப் போட்டுக்கிட்டு எங்க வேணும்னாலும் ஒழிஞ்சு போயேன்கேன்."

"அட என்னய்யா பெரிய சீண்டறம் புடிச்ச எடவாடா இருக்கு? காலம்பற முகத்தைக் கழுவதுக்குள்ளே கூட்டியாந்தாச்சு. ஏழெட்டு இட்லி வேறே திண்ணேன். வயசான காலத்திலே செசரிக்கவா செய்யி. சித்த நிண்ணுக்கிடும். இன்னா ஒரு எட்டிலே போயிட்டு வந்திருக்கேன்."

வைத்தியன் குளத்தங்கரையோரம் போய்க் கால் கழுவி வருவதற் குள் உணவு இடைவேளைக்காக வாக்கெடுப்பு நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. வைத்தியனை அங்கே காத்திருக்கச் சொன்னால் ஆபத்து என்ழறு கருதி, மீண்டும் காரிலேற்றி, வீட்டுக்குக் கொண்டு போய்க் சாப்பாடு போட்டு முதல் ஆளாக்கொண்டு வந்து நிறுத்தினார்கள். சூரன்பாடு திருவிழாவில் முதலில் வருகின்ற சூரனைப் போல வைத்தியன் வீர விழி விழித்தான்.

இடைவேளைக்குமப்பிறகு, வாக்கெடுப்பு துவங்கியதும், கையில் வைத்திருந்த 'அணஞ்வ பெருமாள்' சீட்டுடன் வாக்குச் சாவடியினுள் நுழைந்தான் வைத்தியன். இவனுக்கு ஒரு பாடம் படிப்பித்துத்தான் அனுப்பவேண்டும் என்று உருளை உஷாராக இருந்தார். முதல் புொலிங் ஆபீசரிடம் சீட்டை நீட்டினான் வைத்தியன். உருளை ஒரு உறுமல் உறுமினார்.

"ஏ வைத்தியா, உனக்கு ஓட்டு இருக்கா?"

சந்தேகத்துடன் அவன் அவரைப் பார்த்தான்.

"இருக்கு போத்தியோ. இன்னா நீரே பாருமேன்..."

அவன் நீட்டிய சீட்டை வாங்கிப் பார்த்த உருளைக்குக் கொஞ்சம் மலைப்பு. அவர் மலைப்பதைக் கண்ட பூசணிக்காய் முகத்தில் மூரல் முறுவல்.

"அணஞ்ச பெருமாளா உன் பேரு?"

"ஆமா போத்தி. நான் பின்ன கள்ள ஓட்டா போட வருவேன்?"

உருளையின் ஐயம் தீரவில்லை. வாக்காளர் பட்டியலை வாங்கிப் பார்த்தார். அவர் முகத்தில் சிறிய திகைப்பு. சற்று நேரத்திலக் ஏளனப் புன்னகையொன்று விரிந்தது.

"இதுவரைக்கும் கள்ள ஓட்டுப்போட்டாலும் நாடுவிட்டுப் போன ஆளுக பேரிலேதான் போட்டிருக்கே. இப்ப செத்துப் போன ஆளு ஓட்டையும் போட வந்திட்டயோவ்?"

"இல்லை போத்தி. என் பேரு அணஞ்ச பெருமாளுதான். நான் பொய்யா சொல்வேன்?"

"அட உன் பேரு அணஞ்ச பெருமாளோ, எரிஞ்ச பெருமாளோ என்ன எளவாம் இருந்திட்டுப் போகுது. ஆனா இந்த அணஞ்ச பெருமாளு பொம்பிளைன்னுல்லா போட்டிருக்கு?"

"என்னது? பொம்பிளையா?"

"பின்னே என்னா? நல்லாக் கண்ணை முழிச்சுப் பாரு. அது நம்ம கொழும்புப் பிள்ளை பாட்டாக்கு அம்மையில்லா... அவ செத்து வருஷம் பத்தாச்சே? ஓட்டா போட வந்தே ஓட்டு? வெறுவாக் கட்ட மூதி... போ அந்தாலே ஒழிஞ்சு."

வைத்தியன் செய்வதறியாமல் பூசணிக்காயைப் பார்த்தான். கடித்துத் தின்றுவிடுவதைப்போல் அவர் அவனைப் பார்த்து விழித்தார்.