முன்னுரை

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுக்குப் பின் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்திற்கு வளமூட்டிய படைப்புகளும் படைப்பாளிகளும் கொண்ட தொகுப்பு ஒன்றை அளிக்கும் முயற்சி இது.

இந்த இருபதாண்டுகளின் தொடக்கத்தில்தான் அணு ஆயுத யுத்தம் வந்தேவிட்டது என்ற நிலைமை ஏற்பட்டது. அந்த ஆபத்து தற்காலிகமாக விலகியது என்றாலும் உலக அரசியலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ வலியோர் எளியோரை நிர்ப்பந்தத்துக்கு உட்படுத்தும் நிலைமை நீடிக்கத்தான் செய்கிறது. புதுப்பார்வை பெற்ற இளைஞர் சமுதாயம் உலகின் மனசாட்சிக்கு நெருக்கடி உண்டு பண்ணியது. ஆண்டாண்டு காலமாகப் பழக்க ரீதியில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நெறிமுறைகள், கொள்கைகள், கோட்பாடுகள் கடுமையான மறுபரிசீலனைக்கு ஆளாயின. பல ஒதுக்கித் தள்ளப்படுகின்றன. உலகம் ஒரு புதிய ஒழுங்குக்கு வழிதேடத் தொடங்கியது.

இலக்கியவாதிகள் தீர்க்கதரிசிகள் என்ற கூற்று வெகு சாதாரணமாக வெகுகாலமாக ஒப்புக்கொள்ளப்படும் ஒன்று. ஆனால் இலக்கியத்தின் தன்மை அது காலத்துக்குச் சற்றுப் பின்தள்ளியிருப்பதுதான். ஒரு நிகழ்ச்சி அது நிகழ்ந்த உடனேயே இலக்கியமாகிவிடுவதில்லை. அதை ஊடுருவிப் பார்த்தறிய ஒரு குறைந்தபட்ச இடைவெளி தேவைப்படுகின்றது. தகவல் பரிமாற்றச் சாதனங்கள் நன்கு வளர்ச்சியடைந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் தமிழ் எழுத்துத் துறையிலும் நிகழ்ச்சிகளின் பரபரப்பு அடங்குவதற்கு முன்பே பரபரப்புச் சிறுகதைகளும் கவிதைகளும் (நாவல்களும் கூட) நிறையவே தோன்றிவிடுகின்றன. ஆனால் அந்த நிகழ்ச்சியின் பரபரப்பு அமுங்கும்போது அந்த படைப்புகளும் அமுங்கிப்போய்விடுகின்றன. பரபரப்பை மட்டும் முக்கியமாகக் கொள்ளாமல் பரிணாமத்தின் ஒவ்வொரு காலத்திய சூட்சுமங்களைக் கலையுணர்வோடு வடித்துத் தருபவை என்று எனக்கு உறுதியாகத் தோன்றும் கதைகளில் சிலவற்றை இத் தொகுப்பின் அமைப்புக் கட்டுத்திட்டங்களுக்கு இணங்கத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். இதே தொகுப்பு இன்னொருவர் தேர்வில் வேறு கதைகள், கதாசிரியர்கள் கொண்டிருக்கக் கூடும் என்றும் உணர்கிறேன்.

தமிழ்ச் சிறுகதைத் துறையின் பின்னணியை ஓரளவு கூர்ந்து பார்த்தால் 1960 அளவில் கூட இந்திய சுதந்திரத்திற்கு முன் இந்திய எழுத்தில் பிரதானமாயிருந்த ரொமாண்டிசிஸமும் இலட்சியவாதமும் தொடர்ந்து இருந்து வந்ததை உணரலாம். அந்நாளில் பிரபலமடைந்த எழுத்தாளர்கள் அனைவருமே இந்திய சுதந்திரத்திற்கு முன்பு மக்களிடையே நிலவிய ஒரு குறிப்பிட்ட இலட்சிய வேகத்தை மேலும் பிரதிபலிப்பதாகவே எழுதினார்கள். சுதந்திரத்திற்கு முன்பு நிலவிய இலட்சிய வேகத்தில் மேற்கத்திய வாழ்க்கை முறையம்சங்கள் இங்கு அப்படியே ஏற்கப்படுவதைத் தடுத்து நிறுத்த நம் நாட்டுப் பண்பாட்டுச் சிறப்பும் சம்பிரதாய வாழ்க்கை நெறியும் வலியுறுத்தப்பட்டன. பழைமையை அனுசரித்துப் போகும் இப்போக்கைப் பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே மறுத்தவர்கள் இருந்தார்கள் எனினும், பொதுவாக மக்கள் உணர்வில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மறுப்பு வளர்ந்திருக்கவில்லை. மகாகவி சுப்பிரமணிய பாரதியாருக்குப் பின் தமிழ் உரைநடையிலும் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டு, தமிழ்ச் சிறுகதைத் துறையில் புதுமைப்பித்தன், கு.ப.ரா. போன்றோர் உருவம் உள்ளடக்கம் இரண்டிலும் முன்னேற்றப் போக்கை வடித்துத் தந்தார்கள். இவர்கள் பணியைத் தொடர்ந்து சம்பிரதாயக் கண்ணோட்டம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற இயக்கம், இந்த நூற்றாண்டின் பின் பாதியின் துவக்கத்தில் தமிழ் வாசகர்களிடையே கணிசமான அளவு அறிமுகம் பெற்றது ஜெயகாந்தனால்.

ஜெயகாந்தனைப் போலவே இளம் வயதில் பிரபலமடைந்த தமிழ் எழுத்தாளர்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள். ஆனால் ஜெயகாந்தன் சிறந்த கதைகள் மட்டுமல்லாமல் காலத்திற்குத் தேவையான கருத்துகளை முன் வைத்தவர் என்றும் அறியப்படுகிறார். அதே நேரத்தில் இந்தியாவின் நீண்ட பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் அவர் ஒதுக்கி விடுவதில்லை. தமிழ் எழுத்துலகில் யதார்த்த பூர்வமான சமுதாய மாற்றக் கருத்துகள் வெகுஜனப் பத்திரிகைகளிலும் இடம்பெற வைத்ததில் ஜெயகாந்தனின் பங்கு கணிசமானது.

நவீன தமிழ் இலக்கியம் மக்களிடையே பரவலாகக் கொண்டு செல்லப்பட்டது வெகுஜனப் பத்திரிகைகளால் என்று ஒப்புக்கொள்ளும் அதே நேரத்தில் நல்ல இலக்கியம் வளர இதே பத்திரிகைகள் முட்டுக்கட்டையாகவும் இருந்திருக்கின்றன என்றும் கூறப்படுகின்றது. பல்லாயிரக்கணக்கான வாசகர்களைத் திருப்திப்படுத்துவதை முதற்கோளாகக் கொள்ள வேண்டியிருப்பதாலும் அதில் பெரும்பான்மையோர் தீவிர எழுத்துகளை ஏற்கத் தயாரில்லை என்று நினைப்பதாலும் எளிமைப்படுத்தப்பட்ட எழுத்து, கருத்துகளையே திரும்பத் திரும்பப் பயன்படுத்துகின்றனர்; விற்பனைப் போட்டா போட்டியில் திருப்தியுடன் மட்டும் திருப்தியடையாமல் போதையூட்டுவது போலவும் கிளர்ச்சியூட்டுவது போலவும் பத்திரிகையை மாற்றிவிடவும் வேண்டி வருகிறது. இந்த போக்கில் முதலில் ஊனமுறுவது இலக்கியம்தான்.

இதில் உண்மையில்லை என்று இன்று யாரும் கூறிவிடுவதில்லை. ஆனால் வெகுகாலம் வரை பிரபலமடையும் எழுத்தே சிறப்பான எழுத்து என்ற எண்ணம் பல தமிழ்ப் பிரமுகர்களிடம் நிலவியது. இவர்கள் சமூக நிறுவனத்தின் தலைவர்களாகவும் இருந்ததால் தீவிர இலக்கியவாதிகள் புறக்கணிக்கப்படுவது இன்னமும் கூர்மையடைந்திருந்தது. பத்திரிகை எழுத்து, தீவிர இலக்கியம் இவற்றின் வேறுபாடுகளை ஒரு சிறு வட்டம் வரையிலாவது நன்குணர்த்த அயராது பாடுபட்டவர்களில் க.நா.சுப்பிரமணியன் மிகவும் முக்கியமானவர். துர்ப்பலமான எழுத்துத்துறையை ஆரம்ப முதலே வாழ்க்கைச் சாதனமாக ஏற்றுக்கொண்டதோடு, அத் துறையிலே மிகவும் துர்ப்பலமான அம்சமாகிய தீவிர இலக்கியத்தையே அவர் சார்ந்திருந்தவர். நாவல், சிறுகதை, கவிதை முதலியன எழுதியதோடு விமர்சனக் கட்டுரைகளும் எழுதி வந்தார். முப்பது-நாற்பது-ஐம்பதுகளில் க.நா.சு.வுக்குப் பாதகமான முறையில் அவருடைய விமர்சனக் கட்டுரைகளும் அவர் தீவிர இலக்கியம், பத்திரிகை இலக்கியம் என்று பாகுபாடு செய்து குறிப்பிட்டதும் அமைந்தாலும் அறுபதுகள் தொடக்கத்திலிருந்து தமிழ் வாசகர்-எழுத்தாளர் மத்தியில் இப்பாகுபாடு பற்றிய சிந்தனை பரவலாகத் தோன்ற ஆரம்பித்தது. இதன் ஒரு விளைவு பல சிறு பத்திரிகைகளின் தோற்றம்.

க.நா.சு.வே சிறு பத்திரிகைகள் நடத்தினார். 'தாமரை', 'சரஸ்வதி', 'சாந்தி', 'கிராம ஊழியன்' ஆகியவை அந்நாளைய வேறு சில குறிப்பிடத்தக்க சிறு பத்திரிகைகள். சி.சு.செல்லப்பா, 'எழுத்து' எனும் பத்திரிகையைப் புதுக்கவிதைக்கு ஒரு தளம் அமைத்துத் தருவதாக நடத்தினார். அறுபதுகளில் தோன்றிய சிறுபத்திரிகைகளில் முக்கியமானவை கணையாழி, தீபம், நடை, ஞானரதம், கண்ணதாசன். எழுபதுகளில் கசடதபற எனத் தொடங்கி பல பத்திரிகைகளின் பெயர்களைக் குறிப்பிட வேண்டி வரும். அறுபதுக்கு முற்பட்ட சிறு பத்திரிகைகளுக்கும் இந்த இருபதாண்டுச் சிறு பத்திரிகைகளுக்குமிடையே உள்ள முக்கிய வேறுபாடு, முந்தைய பத்திரிகைகளும் அவற்றின் ஆசிரியர்களும் பெருவாரி விற்பனையுள்ள பத்திரிகைகளும் அவை ஆதரிக்கும் எழுத்தும் போரிட்டு அகற்றக் கூடியதொன்று, அகற்ற வேண்டியதொன்று எனச் செயல்பட்டார்கள். இன்றைய சிறு பத்திரிகைகள், பெருவாரி விற்பனைப் பத்திரிகைகளை இந்தக் காலகட்டத்தின் ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக ஏற்றிருப்பதையும், அவற்றை ஒரு பொருட்டாகக் கருதாமல் தம் மட்டில் தீவிர இலக்கியப் பணிகளில் ஈடுபடுவதை ஓர் எதிர்வினையாகக் கொள்ளாமல் சுயமாகச் செய்யவேண்டிய பணியாக நினைப்பதையும் காண முடிகிறது.

அறுபதுகளில் தொடங்கிய சிறு பத்திரிகை இயக்கம் ஆரம்பத்தில் ஏளனத்துக்குரியதாகத்தான் பெருவாரிப் பத்திரிகைகள் தயாரித்திருந்த இலட்சக்கணக்கான வாசகர்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும். சமயம் வாய்த்தபோது இச் சிறு பத்திரிகைகள் பற்றியும் அதில் ஈடுபட்டிருப்போர் பற்றியும் பெருவாரிப் பத்திரிகைகள் மிகவும் துச்சமாகக் கருத்து தெரிவித்திருக்கின்றன. ஆனால், சிறு பத்திரிகைகள் இயக்கம் பெருவாரிப் பத்திரிகைகள் வாசகர்களைக் காட்டிலும் முன்னதாக அப் பத்திரிகைகளின் எழுத்தாளர்களிடமும் பாதிப்பு ஏற்படுத்தியது. சிறு பத்திரிகைக் கதைகளின் கரு, நடை, அழுத்தம், சிற்சில மாற்றங்கள் பெருவாரிப்பத்திரிகைகளிலும் பயன்படுத்தப்பட்டன. உருவம் பொருத்த வரையில் இன்று தமிழில் வெளியாகும் கதைகளில் பெரும்பான்மை தீவிர எழுத்துச் சாயல் கொண்டுதான் படைக்கப்படுகின்றன, பிரசுரிக்கப்படுகின்றன. ஆனால் உள்ளடக்கம், நோக்கம், அழுத்தம் போன்ற அம்சங்களில் விளைவு சாதகமாக உள்ளது என்று கூற முடியாது. இருபதாம் நூற்றாண்டின் கடைசி இருபது ஆண்டுகளில் அடியெடுத்துவைத்திருக்கையில் இன்றைய தமிழ் பெருவாரிப் பத்திரிகைகளின் சிறுகதைகள் அனைத்திலும் அப் பத்திரிகைகளில் இடமே பெறாத தீவிர எழுத்தாளர்களின் சாயலைத் தவறாமல் காண முடிகிறது. சிறுகதையையும் ஒரு தொழில் விஞ்ஞான நுட்பத் துறையாகக் கருதினால் இதர டெக்னாலஜித் துறைகளைப் போலச் சிறுகதைத் துறையும் ஒரு காலகட்டத்தின் அன்றாட வாழ்க்கையில் ஊடுருவிவிடும் தொழில்நுட்ப அம்சமாகிவிட்டது. ஓர் ஆரம்ப எழுத்தாளனின் முதல் படைப்பில் கூட ஒரு குறைந்தபட்சத் தேர்ச்சியும் திறமையும் காண முடிகிறது. நல்ல கதை, நன்கு எழுதப்பட்ட கதை, என இனங் கண்டு பிரிப்பது கடினமாவதுடன் அத்தியாவசியமுமாகிறது.

புதுக் கதாசிரியர்களை அவர்கள் பொதுத்தன்மை குறித்து விவாதித்து வெளியிடப்பட்ட கருத்துகள் தமிழில் அதிகம் வெளிவரவில்லை; பல்கலைக்கழகங்களில் புது இலக்கியம் பாடமாகக் கற்பிக்கத் தொடங்கியும் புது நோக்குடன் வெவ்வேறு கால கட்ட எழுத்துகள் பற்றிச் சுலபமாகவும் தீர்க்கமாகவும் தர்க்க ரீதியாகவும் அபிப்பிராயங்கள் இப்போதுதான் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கட்டுரையில் க.நா.சு. தற்காலத் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களிடம் ஒரு பொதுச் சரடு காணப்படுவதாகக் குறிப்பிட்டார். இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய எழுத்தாளர்களிடம் இருந்த இலட்சியவாதம் இப்போது மறைந்து போனதோடு மட்டுமல்லாமல் ஒருவித நம்பிக்கையின்மையும் இடம் பெற்றிருப்பதை உணர முடிகிறது என்றார் அவர். இன்று இன்னும் சில கருத்துகளும் கூற இயலும். எல்லாப் பிரச்னைகளையும் உள்ளடக்கியதாக அன்னியர் ஆதிக்கச் சுமை தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்களின் ஆத்மாவை அன்று அழுத்தியது. பிரச்னைகளுக்கு அவற்றினூடே தீர்வு காண இயலுவதாக இன்றைய தமிழ்ச் சிறுகதைகள் இருக்கின்றன. ஒரு பொது எதிரியை மனதில் வைத்து இயங்கியதால் தம் சமுதாயத்தினுள் உள்ள வேறுபாடுகள், வித்தியாசங்கள், முரண்பாடுகள் அன்று அதிகம் பெரிது படுத்தப்படவில்லை. ஆனால் இன்றைய சிறுகதைகள் இவ்விஷயங்கள் குறித்துப் பகிரங்கமாக விவாதிக்கத் தயங்குவதில்லை. பிராந்திய வாழ்க்கை நுணுக்கமாகவும் விவரமாகவும் பிரதிபலிக்கப்படுகிறது. மத நம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் ஒர் எளிதான, கைக்கெட்டும் தொலைவிலுள்ள சர்வ வியாதி நிவாரணியாக விநியோகிக்கப்படுவதில்லை. பெண்கள் சம்பிரதாயக் கூட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுப் பலவித பரிமாணங்கள் கொண்ட நபர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். இப்போக்குகளைப் பெருவாரி விற்பனையுடைய பத்திரிகைகளில் கூட இன்று காணலாம்.

சிறு பத்திரிகைகளுடன் சில நூல் பிரசுரங்களும் கடந்த இருபதாண்டுகளில் தமிழ்ச் சிறுகதையுலகில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உண்டு பண்ணின. இவற்றில் முதலானதும் முக்கியமானதும் ஆகும் 'குருஷேத்திரம்'. கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், ஒரு குறுநாவல், ஒரு நாடகம் ஆக மொத்தம் சுமார் நானூறு பக்கங்கள் கொண்ட இந்நூலை 1967-ம் ஆண்டில் திருவனந்தபுரத்தில்வசிக்கும் நகுலன் என்ற எழுத்தாளர் தொகுத்து வெளியிட்டார். அதே ஆண்டில்தான் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடந்தது. தமிழ் மொழிக்கு வளமூட்டும் இவ்விரு நிகழ்ச்சிகளில் எது முதன்மையிடம் பெறும் என்று கூறுவது கடினம் என நினைக்கும் அளவுக்கு 'குருஷேத்திரம்' பிரசுரமானது தீவிர இலக்கிய அன்பர்களிடம் சலசலப்பு ஏற்படுத்தியது. இந்நூலில் பங்கு பெற்றவர் அநேகமாக அனைவரும் பெருவாரிப் பத்திரிகைகளில் இடம் பெறாதவர்கள். 'குருஷேத்திரம்’ வெளியானபோது இவர்களில் ஓரிருவரே நூல் வடிவத்தில் பிரசுரமானவர்களாயிருந்தார்கள். இருப்பினும் அந்தக்கால கட்டத்தின் புதுத்தமிழ் எழுத்தின் உன்னத எடுத்துக்காட்டாக ‘குருக்ஷேத்திரம்’ அமைந்திருந்தது. பிற்காலத்தில் பல பரிசோதனைப் பிரசுர முயற்சிகளுக்கும் ஒரு முன்னோடியாக விளங்கியது. முழுக்க ஒரு தனிநபரின் முயற்சியும் தேர்வுமான ‘குருக்ஷேத்திரம்’ நவீன தமிழ் எழுத்தின் ஒரு மைல் கல்லாக நிலைபெற்றது.

‘குருக்ஷேத்திரம்’ தொகுப்பைத் தொடர்ந்து இன்னொரு சிறுகதைத் தொகுப்பு சென்னையில் நான்கு இளம் எழுத்தாளர்களால் வெளியிடப்பட்டது. ‘கோணல்கள்’ என்ற தலைப்பில் வெளிவந்த இந்த நூலில் இந்த நான்கு எழுத்தாளர்களும் தலா மூன்று கதைகள் சேர்த்திருந்தார்கள். ‘குருக்ஷேத்திரம்’ அடைந்த இலக்கிய அந்தஸ்து ‘கோணல்கள்’ பெறாது போயினும் பெருவாரிப் பிரசுர உலகில் இடம் அளிக்கப்படாத தரமுள்ள எழுத்தாளர்கள் கூட்டுறவு முயற்சியில் நூல் வெளிக் கொணருவதற்கு இது நல்லதொரு தொடக்கமாயிற்று; அத்துடன் ஆண்-பெண் பாலியற் சஞ்சலங்களை இலக்கிய கருப்பொருளாக எழுதும் போக்குக்கு முன்னோடியாகவும் அமைந்தது.

அரசியல் கலப்பற்ற எழுத்து சாத்தியமா? சம்பிரதாய இலக்கியப் பார்வைகளில் அரசியல் தனியாகக் குறிப்பிடத்தக்கதொரு அம்சமாகக் கருதப்படுவதில்லை. ஆனால் சோவியத் புரட்சியைத் தொடர்ந்து இந்தியாவிலும் பொதுவுடைமைக் கருத்துகளும் கோட்பாடுகளும் கவனம் பெறத் தொடங்கின. தமிழ் எழுத்தாளர்களிடமும் ‘நீங்கள் எந்தப் பக்கம்?’ என்றதொரு வினா ஐம்பதாண்டுகளாகவே நிலவி வருவதாகும். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் சில சிறுகதையாசிரியர்கள் வெளிப்படையாகவே தமது கட்சி அரசியல் உறவுகளை அறிவித்துக் கொண்டனர். இலக்கிய விமரிசனத் துறையிலும் எழுத்தாளர்கள் அவர்களின் கட்சி கண்ணோட்டத்திலும், அவர்கள் எழுத்து தெரிவிப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தியின் அடிப்படையிலும் போற்றப்பட்டனர், அல்லது கண்டனம் தெரிவிக்கப்பட்டனர். பெருவாரிப் பத்திரிகைகள் இச் சர்ச்சையில் ஈடுபடாத நிலையிலும் சிறு பத்திரிகைகள் அணிவகுத்துக்கொண்டு தீவிரவிவாதங்கள் நடத்திக் கொண்டன. இவ் விவாதங்கள் நேரடியாகச் சிறந்த எழுத்தாளர்களையோ படைப்புகளையோ சாத்தியமாக்காத போதிலும் தமிழ்ச் சிறுகதைகளின் தளத்தையும் எழுத்தாளர் கவனத்திற்குப் பல புதிய நுட்பங்களையும் சேர்த்துக் கொடுத்தன. அதே நேரத்தில் வளர்ந்து வரும் தொழில் நுட்பப் பரிச்சயம் தொழில் நுட்ப விவரங்களைக் கதைகளில் பொருத்தி வைப்பதைச் சாத்தியமாக்கிற்று. பாட்டாளி மக்கள் கிராமவாசிகளின் வாழ்க்கை நுட்பங்கள் இடம் பெறத் தொடங்கியது போலவே இயந்திர நிபுணர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள், உயர்மட்டவாசிகள், கதாபாத்திரங்களாகி அவர்கள் மூலம் அதுவரை வாசகர்களுக்கு அறிமுகமாகாத பரிமாணங்கள் எடுத்தளிக்கப்பட்டன.

இந்த இருபதாண்டுகளில் தமிழ்ச் சிறு கதைகள் பிற இந்திய மொழிகளில் நிறையவே மொழிபெயர்ப்புகள் மூலம் படிக்கக் கிடைத்திருக்கின்றன. ‘இண்டியன் கவுன்சில் ஃபார் கல்சரல் ரிலேஷன்ஸ்’ வெளியீடான ‘இண்டியன் ஹொரைஜன்ஸ்’ காலாண்டுப் பத்திரிகையில் பல தமிழ்ச் சிறுகதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் அராபிய மொழிகளில் பிரசுரமாகியிருக்கின்றன. இங்கிலாந்து பெங்குவின்ஸ் நிறுவனத்தாரின் ‘நியூரைட்டிங் இன் இந்தியா’ தொகுப்பு நூலில் மூன்று தமிழ்ச்சிறுகதைகள் இடம் பெற்றிருந்தன. பல தேசிய தினப் பத்திரிகைகளும் வார-மாத இதழ்களும் ஆங்கில மொழிபெயர்ப்பில் பல தமிழ்ச் சிறுகதைகளை வெளியிட்டிருக்கின்றன. பல அயல்நாடுகளில் தமிழ்ச் சிறுகதைகள் அந்நாட்டு மொழிகளில் மொழியாக்கம் செய்துவரும் தகவலும் இந்த இருபதாண்டுகளில்தான் அதிகம் தெரிய வந்திருக்கிறது. இது பரஸ்பரம் மக்கள் பற்றியும் வாழ்க்கை பற்றியும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தை மட்டுமின்றி, தமிழ்ச்சிறுகதை உலக இலக்கிய அரங்கில் மதிக்கத் தக்கதொரு இடம் பெற்றிருப்பதையும் குறிக்கும்.

முன்னரே குறிப்பிட்டபடி இத்தொகுப்பு ஒரு காலகட்டத்தில் தமிழ்ச் சிறுகதை இயங்கிய தளத்தை, அதன் உயர்ந்த நிலையில், பிரதிபலிக்கச் செய்யும் முயற்சி. இதுவே எக்காலத்துக்குமான தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பாகாது. ஆனால் அப்படி ஒரு தொகுப்பு தயாரிக்கப்படுமாயின் அதில் இத் தொகுப்பின் பல கதைகள் இடம் பெறுவது உறுதி.

சென்னை, செப்டம்பர் 19, 1980

அசோகமித்திரன்