வண்ணநிலவன் - எஸ்தர்
வண்ண நிலவன்:
'வண்ண நிலவன்' என்ற பெயரில் எழுதும் உ.நா. ராமச்சந்திரன் திருநெல்வேலியில் 25-1-1948 அன்று பிறந்தவர். பத்தாண்டுகளுக்கு மேலாகச் சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் எழுதி வருகிறார். அபூர்வத் தகவல் களும், நேரடியான நடையும், நுண்ணிய மனச் சலனங்களின் பிரதிபலிப்பும் இவருடைய படைப்புகளின் சிறப்பம்சம். இவ ருடைய நாவல் 'கடல்புரத்தில்' இலக்கியச் சிந்தனையின் 1977-ஆம் ஆண்டுச் சிறந்த நூல் விருது பெற்றது. இவருடைய இதர முக்கிய நூல்கள்: 'எஸ்தர்' (சிறுகதைகள், 1976). 'பாம்பும் பிடாரனும்' (சிறுகதைகள், 1978), 'கம்பா நதி' (நாவல், 1979), 'ரெயினீஸ் ஐயர் தெரு' (நாவல், 1981), 'துக்ளக்' பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.
முகவரி: C/o Thuglak fortnightly. 29, Anderson Road - Nungambakkam, Madras - 600 006.
எஸ்தர் - வண்ணநிலவன்
எஸ்தர்
முடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும் பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு? அவள் வந்து என்ன காரியம் செய்யப் போகிறாள்? நடமாட முடியாது. காது கேளாது. பக்கத்தில் வந்து நின்றால், அதுவும் வெளிச்சம் இருந்தால்தான் தெரிகிறது. ஒரு காலத்தில் பாட்டிதான் இந்த வீட்டில் எல்லாரையும் சீராட்டினாள். பேரப் பிள்ளைகளுக்கெல்லாம், கடைசியாகப் பிறந்த ரூத் உள்பட, எல்லா ருக்கும் பாட்டியின் சீராட்டல் ஞாபகம் இருக்கிறது. உபயோக மில்லாத பாட்டியை அழைத்துக்கொண்டு பிழைக்கப் போகிற இடத்துக்கெல்லாம் கூட்டிச் செல்ல முடியுமா?
வீட்டில் பல நாட்களாக இதுதான் பேச்சு. எல்லாரும் தனித் தனியே திண்ணையில், குதிருக்குப் பக்கத்தில், மேல் ஜன்னலுக்கு அருகே அந்தப் பழைய ஸ்டூலைப் போட்டுக்கொண்டு, பின் புறத்தில், புறவாசல் நடையில் என்று இருந்துகொண்டு 'அவரவர்' யோசித்ததையெல்லாம் சாப்பாட்டு வேளையில் கூடியபோது பேசி னார்கள். முன்னாலெல்லாம் சாப்பாட்டு நேரம் அந்த வீட்டில் எவ் வளவோ ஆனந்தமாக இருந்தது. இப்போது நெல் அரிசிச் சோறு கிடைக்கவில்லை. கம்பையும், கேப்பையும் கொண்டுதான் வீட்டுப் பெண்கள் சமையல் செய்கின்றனர். நெல்லோடு ஆனந்த வாழ்வும் போயிற்றா?
அப்படிச் சொல்லவும் கூடாது. இன்னமும் சமையலின் பிரதான பங்கும் எஸ்தர் சித்தியிடமே இருக்கிறது. சக்கை போன்ற இந்தக் கம்பையும், கேப்பையையும் தான் எஸ்தர் என்னமாய்ப் பரிமளிக்கப் பண்ணுகிறாள்? ஒருவிதத்தில் இத்தனை மோசமான நிலையிலும் சித்தி எஸ்தர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் என்னவாகி இருக்கும்? யோசித்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. மூன்று பெண்களுக்கும் ஒரு பையனுக்கும் தந்தையான அகஸ்டின் கூட மாட்டுத் தொழுவில் பனங்கட்டை உத்திரத்தில் இடுப்பு வேட்டியை அவிழ்த்து முடிச்சுப் போட்டு 'நான்று' கொண்டு நின்று செத்துப் போயிருப்பான்.
மூன்று பேருக்குமே கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளுடன் தான் இருக்கிறார்கள். அகஸ்டின் தான் மூத்தவன். எதிலும் இவனை நம்பி எதுவும் செய்ய முடியாது. அமைதியானவன் போல எப்போதும் திண்ணையையே காத்துக் கிடப்பான். ஆனால் உள்ளூற அப்படியல்ல அவன்; சதா சஞ்சலப்பட்டவன். இரண்டாவதுதான் டேவிட். இவன் மனைவி பெயரும் அகஸ்டினுடைய மனைவி பெயரும் ஒரே பெய ராக வாய்த்துவிட்டது. பெரியவன் அகஸ்டினுடைய மனைவியைப் பெரிய அமலம் என்றும் சின்னவன் மனைவியைச் சின்ன அமலம் என்றும் கூப்பிட்டு வந்தார்கள். சின்னவனுக்கு இரண்டு பேரும் ஆண் பிள்ளைகள்.
இது தவிர இவர்களின் தகப்பனார் மரியதாஸுடைய ஒன்று விட்ட தங்கச்சிதான் எஸ்தர். மரியதாஸ் சாகிறதுக்குப் பன்னிரண்டு வருஷத்துக்கு முன்பே எஸ்தர் சித்தி இந்த வீட்டுக்கு வந்துவிட் டாள். புருஷனுடன் வாழப் பிடிக்காமல்தான் வந்தாள் என்று எஸ்தரைக் கொஞ்சகாலம் ஊரெல்லாம் நைச்சியமாகப் பேசியது. இப்போது எல்லாம் பழைய கதை ஆகிவிட்டது. எஸ்தர் சித்தி எல்லோருக்கும் என்ன தந்தாள் என்று சொல்ல முடியாது. அகஸ்டினுக்கும் டேவிட்டுக்கும் அழகிய மனைவிகள் இருந்துங் கூட எஸ்தர் சித்தியிடம் காட்டிய பிரியத்தை அந்தப் பேதைப் பெண்களிடம் காட்டினார்களா என்பது சந்தேகமே.
எஸ்தர் சித்தி குள்ளமானவள். நீண்ட காலமாகப் புருஷசுகத்தைத் தேடாமல் இருந்ததாலோ என்னவோ உடம்பெல்லாம் பார்க்கிறவர் களின் ஆர்வத்தைத் தூண்டுகிற விதமாய் இறுகிக் கெட்டித்துப் போயிருந்தது. இதற்கு அவள் செய்கிற காட்டு வேலைகளும் ஒரு காரணம் என்று சொல்லலாம். நல்ல கருப்பானதும், இடை இடையே நரைமுடிகள் சிலவுமாகச் சுருட்டை முடிகள். உள்பாடி அணிகிற வழக்கமில்லை. அதுவே அவள் மார்பகத்தை இன்னும் அழகான தாகப் பண்ணியது.
சித்திக்கு எப்போதும் ஓயாத வேலை. சேலை முன்றானை கரண்டைக் கால்களுக்கு மேல் பூனை முடிகள் தெரிய எப்போதும் ஏற்றிச் செருகப் பட்டே இருக்கும். சித்திக்கு தந்திர உபாயங்களோ நிர்வாகத் துக்குத் தேவையான முரட்டுக் குணங்களோ கொஞ்சம்கூடத் தெரி யாது. இருப்பினும் சித்தி பேச்சுக்கு மறுபேச்சு இல்லை. அவ்வளவு பெரிய குடும்பத்தை மரியதாஸுக்குப் பின் நிர்வகித்து வருகிற தென்றால் எத்தனை பெரிய காரியம்! இத்தனை ஏக்கர் நிலத்துக்கு இவ்வளவு தானியம் விதைக்க வேண்டும் என்கிற கணக்கெல்லாம் பிள்ளைகளே போடுகிற கணக்கு. ஆனால் வீட்டு வேலைகளானாலும் காட்டு வேலைகளானாலும் சுணக்கமில்லாமல் செய்ய வேண்டுமே! வேலை பார்க்கிறவர்களை உருட்டி மிரட்டி வேலை வாங்கிக் காரியம் செய்வது எப்படி? சித்தி உருட்டல் மிரட்டல் எல்லாம் என்ன வென்றே அறியாத பெண். விதைக்கிற சமயமாகட்டும், தண்ணீர் பாய்ச்சுகிற நேரமாகட்டும்; காலையிலோ, மதியமோ அல்லது சாயந்திரமோ ஒரே ஒரு பொழுது வீட்டுக் காரியங்கள் போக ஒழிந்த நேரத்தில் காட்டுக்குப் போய் வருவாள். அதுவும் ஒரு பேருக்குப் போய்விட்டு வருகிறது போலத் தான் இருக்கும். ஆனால் வேலைகள் எல்லாம் தானே மந்திரத்தால் கட்டுண்டது போல் நடைபெற்றுவிடும். சாயங்காலம் காட்டுக்குப் போனாள் என்றால் இவள் வருகைக்காக, பயபக்தியுடன் எல்லா வற்றையும் குற்றம் சொல்ல முடியாதபடி செய்து வைப்பார்கள். வீடே சித்திக்காக இயங்கியது; வேலைக்காரர்களும், அந்த ஊருமே கூடச் சித்திக்காக கட்டுப்பட்டு இயங்கியது.
அந்த இரண்டு பெண்களுமே அபூர்வமான பிறவிகள். மூத்தவள் ஒரு பெரிய குடும்பத்தின் முதல் பெண்ணாகப் பிறந்தவள். அவள் தன் பள்ளி நாட்களிலும் சரி, ஐந்தாவது வகுப்பைத் தன் கிராமப் பள்ளிக்கூடத்தில் முடிக்கும் முன்பே ருதுவாகி வீட்டில் இருந்த ஆரேழு வருஷமும் சரி, இப்போது இந்த வீட்டின் இந்த மூத்த அகஸ்டினுக்கு வந்து மனைவியாக வாய்த்து, மூன்று பெண்களும், ஓர் ஆண் மகவும் பெற்றுக் கொடுத்த பின்பும் கூட அவள் பேசின வார்த்தைகளைக் கூடவே இருந்து யாராவது கணக்கிட்டிருந்தால் சொல்லிவிடலாம். ஒரு சில நூறு வார்த்தைகளாவது தன்னுடைய இருபத்தெட்டுப் பிராயத்துக்குள் பேசியிருப்பாளா என்பது சந்தேகம். மிகவும் அப்பிராணி பெரிய அமலம்; சித்தி அவளுக்கு ஒரு விதத்தில் அத்தை முறையும், இன்னொரு சுற்று உறவின் வழியில் அக்கா முறையும் கூட வேண்டும். எஸ்தர் சொன்ன சிறுசிறு வேலைகளை மனங்கோணாமல் செய்வதும் கணவன் குழந்தைகளு டைய துணிமணிகளை வாய்க்காலுக்கு எடுத்துச் சென்று சோப்புப் போட்டு வெயிலில் உலர்த்தியும் எடுத்து வந்து, நன்கு மடித்து வைப்பதுமே இவள் வாழ்க்கையின் முக்கியமான அலுவல்கள் என லாம். தனக்கென எதையும் ஸ்தாபித்துக்கொள்ள வேண்டுமென்ற ஆசையும், யாரிடமாவது கேட்டு வாங்கிப் பெற வேண்டுமென்ற நியாயத்தையும் அறவே அறியாதவள்.
சின்ன அமலம் எதிரிடையான குணமுடைய பெண். உள் பாவாடைகள் லேஸ் பின்னலாலும் 'பாடிஸ்'களை விதவிதமான எம்பிராய்டரி பின்னல்களினாலும் அலங்கரித்துக்கொள்ள ஆசைப் பட்ட பெண். பெரியவளை விட வசதிக் குறைவான இடத்தி லிருந்தே வந்திருந்தாள். எனினும் இங்கே வந்தபின் தன் தேவை களையும் புற அலங்காரங்களையும் அதிகம் பெருக்கிக் கொண்டவள். எல்லாரும் கீழேயே படுப்பார்கள். மச்சு இருக்கிறது. ஓலைப் பரை வீட்டுக்கு ஏற்ற தாழ்வான மச்சு அது. வெறும் மண் தரைதான் அங்கும். என்றாலும் குழந்தைகளையெல்லாம் கீழே படுத்து உறங்கப் பண்ணிவிட்டு மூங்கில் மரத்தால் ஆன ஏணிப்படிகள் கீச்சிட ஏறிப் போய்ப் புருஷனோடு மச்சில் படுத்துறங்கவே ஆசைப்படுவாள். பாட்டிக்குச் சரியான கண் பார்வையும் நடமாட்டமும் இருந்த போது சின்னவளை வேசி என்று திட்டுவாள். தன் புருஷன் தவிர, அந்நிய புருஷனிடமும் சம்பாஷிப்பதில் கொஞ்சம் விருப்பமுடைய பெண்தான். ஆனால் எந்த விதத்திலும் நடத்தை தவறாதவள்.
இனிமேல் இந்த ஊரில் என்ன இருக்கிறது? சாத்தாங்கோயில் விளையிலும், திட்டி விளையிலும் மாட்டை விட்டு அழித்த பிற்பாடும் இங்கே என்ன இருக்கிறது?
பக்கத்து வீடுகளில் எல்லாம் ஊரை விட்டுக் கிளம்பிப் போய் விட்டார்கள். மேலத் தெருவில் ஆளே கிடையாது என்று நேற்று ஈசாக்கு வந்து அவர்களுக்குச் சொன்னான். ஊர் சிறிய ஊர்தான் என்றாலும் இரண்டு கடைகள் இருந்தன. வியாபாரமே அற்றுப் போய்க் கடைகள் இரண்டையும் மூடியாகி விட்டது. வீட்டில் இருக் கிற நெருப்புப் பெட்டி ஒன்றே ஒன்று தான். கேப்பை கொஞ்சம் இருக்கிறதுல். சில நாட்களுக்கு வரும். கம்புங் கூட இருக்கிறது. ஆனால் நெருப்புப் பெட்டி ஒன்றே ஒன்று இருந்தால் எத்தனை நாளுக்குக் காப்பாற்ற முடியும்?
அநியாயமாகப் பீடி குடிக்கிறதுக்காக வென்று, எஸ்தர் சித்திக் குத் தெரியாமல் டேவிட் நேற்று ஒரு குச்சியைக் கிழிக்கிற சத்தத்தை எப்படி ஒளிக்க முடியும்? இத்தனைக்கும் அவன் சத்தம் கேட்கக் கூடாதென்று மெதுவாகத் தான் பெட்டியில் குச்சியை உரசினான். எஸ்தர் சித்தி மாட்டுத் தொழுவத்தில் நின்றிருந்தாள் வழக்கத்தை விட அதிக முன்ஜாக்கிரதையாக நெருப்புக் குச்சியை உரசிய தால் சத்தமும் குறைவாகவே கேட்டது. இருந்தும் எஸ்தர் சித்தியின் காதில் விழுந்துவிட்டது. மாட்டுக்குத் தண்ணீர் காட்டிக் கொண் டிருந்தவள் அப்படியே ஓடி வந்துவிட்டாள். பதற்றத்துடன் வந்தாள். அடுப்படியில் நெருப்பு ஜ்வாலை முகமெங்கும் விழுந்து கொண்டிருக்க பீடியைப் பற்றவைத்துக்கொண்டு நின்றான் டேவிட்.
சித்தி அவனைக் கேட்டிருந்தால், ஏதாகிலும் பேசியிருந்தால் மனசுக்குச் சமாதானமாகப் போயிருக்கும். இவனுக்கும் ஒன்றும் பேசத் தோணவில்லை. வெறுமனே ஒருவர் முகத்தை ஒருவர் ஒரு சிறிது பார்த்துக்கொண்டதோடு சரி. வெறுமனே ஒன்றும் பேசா மல்தான் பார்த்துக்கொண்டார்கள். அது பேச்சை விடக் கொடுமை யானதாக இருந்தது. முக்கியமாக டேவிட்டை மிகுந்த சித்திர வதைக்குள்ளாக்கியது. எஸ்தர் சித்தியிடமிருந்த தயையும் அன்பும் அப்போது எங்கே போயின? இத்தனை காலமும் சித்தியின் நன் மதிப்புக்கும் அன்புக்கும் பாத்திரமான அவன் இந்த ஒரு காரியத் தின் காரணமாக எவ்வளவு தாழ்ந்து போய்விட்டான்! அந்தப் பீடியை முழுவதுமாகக் குடிக்க முடியவில்லை அவனால். ஜன்னலுக்கு வெளியே தூர எறிந்துவிட்டான்.
அன்றைக்கு ராத்திரி கூழ்தான் தயாராகி இருந்தது. அந்தக் கூழுக்கும், மேலும் வீட்டுச் செலவுகளுக்கும் வர வரத் தண்ணீர் கிடைப்பது அருகிவிட்டது. ரெயில் போகிற நேரம் பார்த்து எந்த வேலை இருந்தாலும் ஈசாக்கும் சித்தியும் ரெயில்வே ஸ்டேஷனுக்குப் போகவேண்டி வந்தது. அந்த இஞ்ஜின் டிரைவரிடந்தான் தண் ணீருக்காக எவ்வளவு கெஞ்ச வேண்டி யிருக்கிறது? எஸ்தர் சித்தி யிடம் பேசுகிற சாக்கில் டிரைவர்கள் கொஞ்ச நேரம் வாயாடி விட்டுக் கடைசியில் தண்ணீர் திறந்து விடுகிறார்கள். ஊரில் எல்லா மக்களும் இருந்தபோது இதற்குப் போட்டியே இருந்தது. ஊரை விட்டு எல்லாரும் போனதில் இது ஒரு லாபம். நான்கைந்து பேரைத் தவிர, போட்டிக்கு ஆள் கிடையாது.
அன்று இரவு எல்லாரும் அரைகுறையாகச் சாப்பிட்டுப் படுத்து விட்டார்கள். சின்ன அமலம் எப்போதோ மச்சில் போய்ப் படுத்துக் கொண்டாள். டேவிட் வெகுநேரம் வரை திண்ணையில் இருந்து கொண்டிருந்தான். எஸ்தர் சித்தி அவனை எவ்வளவோ தடவை சாப்பிடக் கூப்பிட்டாள். எல்லாரையும் சாப்பாடு பண்ணி அனுப்பி விட்டு அவனிடத்தில் வந்து முடிகளடர்ந்த அவன் கையைப் பிடித்துத் தூக்கி அவனை எழுந்திருக்க வைத்தாள். அவனைப் பின்னால் அடுப்படிக்குக் கூட்டிக்கொண்டு போய்த் தட்டுக்கு முன்னால் உட் கார வைத்தாள். தலையைக் குனிந்தவாறே சாப்பிட மனம் இல்லாத வனாயிருந்தான். சித்தி டேவிட்டுடைய நாடியைத் தொட்டுத் தூக்கி நிறுத்திச் சொன்னாள்.
"ஏய் சாப்பிடுடே. ஓங் கோவமெல்லாம் எனக்குத் தெரியும்." என்று சொன்னாள். அப்படியே டேவிட், சித்தியின் ஸ்தனங்கள் அழுந்த அவளுடைய பரந்த தோளில் சாய்ந்து முகத்தைப் புதைத்துக் கொண்டான். சித்தி அவன் முதுகைச் சுற்றியணைத்து அவனைத் தேற்றினாள். டேவிட் லேசாக அழுதான். சித்தியும் அவனைப் பார்த்து விசும்பினாள். இருவருமே அந்த நிலையையும், அழுகையையும் விரும்பினார்கள். ஒருவர் மீது ஒருவருக்கு இதுவரை யிலும் இல்லாத அபூர்வமான பிரேமையும் கருணையும் சுரந்தன.
டேவிட் அழுவதில் நியாயமிருந்தது. ஆனால் சித்தியும் அழுதாளே? அவள் தான் டேவிட்டிடம் அத்தனை கடுமையாக நடந்துகொண்ட துக்காக வருத்தப்பட்டு தான் இவ்விதம் அழுகிறாளா? ஆனால் விஷயத்தைச் சொல்ல வேண்டும். எஸ்தருக்கு அவள் புருஷன் லாரென்ஸுடைய ஞாபகம் வந்தது. லாரன்ஸும் அவனைப் பற்றிய ஞாபகங்களும் இப்போது எல்லாருக்குமே மிகப் பழைய விஷயம். யாருக்கும் இப்போது லாரன்ஸின் முகம் கூட நினைவில் இல்லை. அவ்வளவாய் அவன் காரியங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு விட்டன. இரண்டு பேருக்குமே அப்போது அதை விடவும் உயர்வான காரியம் ஒன்றுமில்லை அந்த நேரத்தில்.
அன்று இரவு டேவிட் மச்சில் படுத்து நன்றாக நிம்மதியுடன் உறங்கினான். ஆனால் எஸ்தர் சித்தி உறங்கவில்லை. டேவிட் சாப்பிட்ட வெண்கலத் தாலத்தைக் கூடக் கழுவியெடுத்து வைக்கவில்லை. வெகுநேரம் வரை தனியே உட்கார்ந்து பல பழைய நாட்களைப் பற்றி நினைத்துக்கொண்டே இருந்தாள். பின்னர் எப்போதோ படுத்து உறங்கினாள்.
ரெயில் தண்டவாளத்தில் என்ன இருக்கிறது? அவள் இந்த வீட்டின் மூத்த மருமகளாய் வந்த காலம் முதல் அவளுக்குக் கிடைக்கிற ஓய்வான நேரங்களிலெல்லாம் புற வாசலில் இருந்துகொண்டு இந்தத் தண்டவாளத்தைத் தான் பார்த்துக்கொண்ட் டிருக்கிறாள். தண்ட வாளம், போட்டிருந்த இடத்திலேயே அப்படியேதான் இருக்கிறது. அந்தத் தண்டவாளம் அவளுக்குப் புதுசாக எவ்விதமான செய்தி யையும் அறிவித்துவிடவில்லை. சில சமயங்களில் அந்தத் தண்ட வாளத்தின் மீதேறி ஆடுகள் மந்தையாகக் கடந்து போகும். அதிலும் குள்ளமான செம்மறியாடுகள் தண்டவாளத்தைக் கடக்கிறதை விட வெள்ளாடுகள் போகிறதையே அவளுக்குப் பிடிக்கிறது. இரண்டுமே ஆட்டினந்தான். அவளுடைய வீட்டில் வெள்ளாட்டு மந்தை ஒன்று இருந்தது. இதற்காகத்தான் அவள் வெள்ளாடுகளை விரும்பி னாளாக இருக்கும். இப்போது அதுபோல ஒரு வெள்ளாட்டு மந்தை அந்த தண்டவாளத்தைக் கடந்து மறுபுறம் போகாதா என்று இருந் தது. இப்போது ஊரில் மந்தைதான் ஏது? மந்தை இருந்த வீடுகள் எல்லாமே காலியாகக் கிடக்கின்றன.
சும்மாக் கிடக்கிற தண்டவாளத்தைப் பார்க்கப் பார்க்கத் தாங்க முடியாத கஷ்டத்தில் மனசு தவித்தது. இப்படிக் கஷ்டப்படுவதை விட அவள் உள்ளே போய் இருக்கலாம். பள்ளிக்கூடத்தை மூடி விட்டபடியால் குழந்தைகள் எல்லாம் திண்ணையில் பாட்டியின் பக்கத்தில் கூடியிருந்து விளையாடிக் கொண்டிருக்கின்றன. அங்கே போய்க் கொஞ்ச நேரம் குழந்தைகளோடு இருக்கலாம். ஆனால் அதில் அவளுக்கு இஷ்டமில்லை. ஒருவிதத்தில் இவ்விதமான அள வற்ற கஷ்டத்தை அநுபவிப்பதை அவள் உள்ளூற விரும்பினாள் என்றே சொல்லவேண்டும். இவ்விதம் மனசைக் கஷ்டப்பட வைப் பது ஏதோவொரு விநோதமான சந்தோஷத்தைத் தந்தது.
முன்னாலுள்ள மாட்டுத் தொழுவில் மாடுகள் இல்லை. இவ்வளவு கஷ்டத்திலும் மாடுகளைக் காப்பாற்ற வேண்டிய துரதிருஷ்டம். இத்தனை நாளும் உழைத்த அந்த இரண்டு வாயில்லா ஜீவன் களையும் எங்கே என்று விரட்டிவிட முடியும்? ஈசாக்குதான் தண்ணீர் கூட இல்லாத சாத்தாங் கோயில் விளைக்குக் காய்ந்து போன புல்லையும், பயிர்களையும் மேய்கிறதுக்குக் கொண்டு போயிருக்கிறான். ஈசாக்கு மட்டும் இல்லையென்றால் மாடுகள் என்ன கதியை அடைந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே முடிய வில்லை.
அத்தையையும் ஈசாக்கையும் ஊரில் விட்டுவிட்டுப் போக வேண்டுமாமே? அது எப்படி?
இவள் அத்தை இவளிடம் அதிகம் பேசினதே கிடையாது. இதற்கு இவள் - பெரிய அமலம் - ஒரு காரணமாக இருக்கும். யாரிடந்தான் அதிகம் பேசினாள்? அத்தையிடம் ஆழமான பணிவு உண்டு. இதைக் கற்றுத் தந்தது அம்மா என்றுதான் சொல்ல வேண்டும். அம்மா, அப்பாவுடைய அம்மாவும் இவளுக்கு ஆச்சி யான ஆலீஸ் ஆச்சியிடம் மிகவும் பணிவாக நடந்து கொண்டதைச் சிறுவயது முதலே பார்த்திருக்கிறாள். எவ்வளவோ விஷயங்கள் ஆச்சிக்கும் அம்மாவுக்கும் இடையே நடந்தன; எதிர்ப்போ, சிணுங்கலோ இல்லாமல் அமைதியும் அன்பும் நிரம்பிய சந்தோஷமான பேச்சுகளை இவள் நேரில் அறிவாள்.எல்லாம் நேற்றோ முன் தினமோ நடந்ததுபோல் மனசில் இருக்கிறது.
ஆச்சிக்கு வியாதி என்று வந்து படுத்துவிட்டால்,அம்மாவின் குடும்ப ஜெபத்தின் பெரும் பகுதியும்,ஆச்சிக்கு வியாதி சொஸ்தப் படவேன்டும் என்றே வேண்டுதலுடன் இருக்கும்.அம்மா படிக் காத பெண்.அம்மாவின் ஜெபம் நினைக்க நினைக்க எல்லாருக்கும் அமைதியைத் தருவது.அந்த ஜெபத்தை அம்மாவுக்கு யார் சொல்லித் தந்தார்கள் என்று தெரியவில்லை.அம்மாவே யோசித்துக் கற்றுக் கொண்டது அந்த ஜெபம்.சின்னஞ் சிறு வார்த்தைகள்.பெரும் பாலும் வீட்டில் அன்றாடம் புழங்குகிற வார்த்தைகள்.தினந் தோறும் அம்மா ஜெபம் செய்யமாட்டாள்.ஜெபம் செய்கிற நேரம் எப்போது வரும் என்று இருக்கும்.படிக்காத பெண்ணின் ஜெபம், அதனால்தான் பொய்யாகப் பண்ணத் தெரியவில்லை என்று மாமா அடிக்கடி சொல்லுவார்.
அம்மா தன் அத்தையைக் கனம் பண்ணினாள்.பெரிய அமலத் துக்கும் இது அம்மாவின் வழியாகக் கிடைத்தது.அம்மாவைப் போலவே குடும்பத்தில் எல்லாரிடமும் பிரியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உள்ளூறப் பேராசை வைத்திருந்த பெண் அமலம்.
அமலம் என்று நேசிக்கிற,உயரமான ஒரே ஆள் அவள் ஊரில் இருக்கிறான்.அவள் ஊருக்குக் கீழ்மேலாய் ஓடுகிற வாய்க்கால் உண்டு.வாய்க்காலிலிருந்தே ஊர் ஆரம்பமாகிறது. வாய்க்காலுக்கு அப்பாலும் கார் போகிற ரோடு வரை வெறும் தரையாக முட்செடிகள் அடர்ந்து கிடக்கின்றன.வாய்க்காலுக்கு அப்பால் ஊர் ஏன் வளரக்கூடாது என்று தெரியவில்லை.வாய்க்கா லுக்கு அப்பால் ரோடு வரை ஊர் வளர யாருக்கும் விருப்பமில்லை. வாய்க்காலிலிருந்தே ஒவ்வொரு தெருவும் ஆரம்பமாகி முடிகின்றது.
அமலத்துடைய வீடு இருக்கிற தெருவுக்குப் பெயர் கோயில் தெருவு.வெறும் சொரிமணல் உள்ள தெரு அது.அமலத்து வீட்டுக்கு வடக்கு வீடு,நீளமான வீடு.இளநீல வர்ணத்தில் வீட்டின் சுவர்கள் இருக்கும்.இந்த வீட்டில்தான் அமலமும் நேசித்துப் பேசிச் சிரிக்கிறவன் இருந்தான்.அவனை அமலம் விரும் பினது வெறும் பேச்சுக்காக மட்டும் இல்லை.அவன் இங்கேயும் எப்போதாவது வருவான்.ஏன் வந்தான் என்று சொல்ல முடியாது. வந்தவன் ஒரு தடவை கூட உட்காரக்கூட இல்லை.ஏன் வந்து விட்டு ஓடுகிறானென்று யாரும் காரணம் சொல்ல முடியாது.அமல மாவது அறிவளா?இவ்வளவு தூரத்திலிருந்து வருகிறவன் உட்காரக் கூட விருப்பமின்றி வந்ததும் புறப்பட்டுத் திரும்பிப் போகி றானே,இதெல்லாம் யார் அறியக்கூடும்?அமலத்துக்குத் தெரி யாமல் இருக்குமா?
இவ்வளவு மிருதுவான பெண்ணுக்கு எல்லாம் இருக்கிற வீட்டில் என்ன கஷ்டம் வந்தது?வீட்டில் யாரோடும் இணையாமல் தனியே இருந்து என்ன தேடுகிறாள்?யாரிடமும் சொல்லாத அவள் விருப்ப மும்,அவள் துக்கமுந்தான் எவ்வளவு விநோதமானவை?அமலத்தின் மனசை அவள் புருஷனும்,இவளுக்குக் கொழுந்தனுமான டேவிட்டும் கூட அறியவில்லை.
ஈசாக் காட்டிலிருந்து திரும்புகிற நேரம் ஆகிவிட்டது.ஈசாக் குக்கு இப்போது காட்டில் எந்த வேலையும் இல்லை.அவனுடைய உலகம் காடு என்பதை எஸ்தர் சித்தி மட்டும் எப்படியோ தெரிந்து வைத்திருந்து.வெயிலும் வறட்சியும் நிரம்பிய காட்டுக்குள் அனுப்பிவந்தாள்.காட்டைப் பார்க்காமல் இருந்தால் ஈசாக் செத்தே போவான் போல அவன் காட்டைப் பற்றிப் பேசாத நேரமே இல்லை.காடு மறைந்துகொண் டிருந்தது.விளைச்சலும், இரவைக் கிணறுகளில் மாடுகளின் கழுத்துச் சதங்கைச் சத்தமும் கண் முன்னாலேயே கொஞ்ச காலமாய் மறைந்து விட்டன.
ஊரில் எல்லோருக்கும் தேவையாக இருந்த காட்டுக்குள் இப் போது ஒன்றுமே இல்லை.ஒரு வெள்ளை வெயில் விளைகளுக்குள் அடிக்கிறதென்று ஈசாக் சொல்லுகிறான்.வெயிலின் நிறங்களை ஈசாக் நன்றாக அறிவான்.'மஞ்சள் வெயில் அடித்தால் நாளைக்கு மழை வரும்' என்று அவன் சொன்னால் மழை வரும்.கோடைக் காலத்து வெயிலின் நிறத்தையும்,மழைக்காலத்து வெயிலினுடைய நிறத்தையும் பற்றி ஈசாக்குக்குத் தெரியாத விஷயமில்லை.
ஈசாக்கு விளைகளில் விளைகிற பயிர்களுக்காகவும்,ஆடு மாடு களுக்காகவுமே உலகத்தில் வாழ்ந்தான்.ஆனாலும் ஈசாக்குக்குப் பிரியமான விளைகள் எல்லாமே மறைந்துகொண் டிருந்தன.கடைசி யாகத் திட்டி விளைவில் மாட்டை விட்டு அழிக்கப் போனபோது ஈசாக்கு கஞ்சியே சாப்பிடாமல் தானே போனான்.எவ்வளவு அழுதான் அன்றைக்கு?இத்தனைக்கும் அவன் பேரில் தப்பு ஒன்று மில்லை.தண்ணீரே இல்லாமல்,தானே வெயிலில் காய்ந்து போன பயிர்களை அழிக்கத்தான் அவனைப் போகச் சொன்னாள் எஸ்தர் சித்தி.காய்ந்து போன பயிர்களை அழிக்கிறதில் அவனுக்கு என்ன நஷ்டம்?ஆனாலும் கூட ஈசாக்கு எவ்வளவாய் அழுதான்?அவன் நிலம் கூட இல்லைதான் அது.
இவ்வளவு அக்னியை உயரே இருந்து கொட்டுகிறது யார்? தண்ணீரும் இல்லாமல்,சாப்பிடத் தேவையான உணவுப் பொருள்களும் கூட இல்லாத நாட்களில் பகல் நேரத்தை இரவு ஏழு மணி வரை அதிகப்படுத்தினது யார்? காற்றுக் கூட ஒளிந்துகொள்ள இடம் தேடிக்கொண்டது. பகலில் அளவில்லாத வெளிச்சமும் இரவில் பார்த்தாலே மூச்சைத் திணற வைக்கிற இருட்டும் கூடி யிருந்தன.
எஸ்தர் சித்தி ஒரு நாள் இரவு, ஹரிக்கேன் விளக்கு முன்னால் உட்கார்ந்திருந்தபோது சொன்னாள்: "இந்தமாதிரி மை இருட்டு இருக்கவே கூடாது. இது ஏன் இம்புட்டு இருட்டாப் போகுதுன்னு தெரியலே, இது கெடுதிக்குத்தான்." நல்லவேளை யாக இந்த விஷயத்தைச் சித்தி சொன்னபோது குழந்தைகள் எல்லாம் குறுக்கும் நெடுக்குமாகப் படுத்து உறங்கியிருந்தனர். சின்ன அமலத்துடைய கைக்குழந்தை மட்டும் பால் குடிக்கிறதுக்காக விழித்திருந்தது. சித்தி கூறிய விஷயத்தை உணர முடியாத அந்தக் குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள். இது நடந்து பல மாதங்கள் ஆகிவிட்டன.
இப்போது இந்த இராவிருட்டு மேலும் பெருகிவிட்டது. நிலாக் காலத்தில் கூட இந்த மோசமான இருட்டு அழியவில்லை. ஊரில் ஆட்கள் நடமாட்டமே இல்லாதது வேறு, இருட்டை மேலும் அதிகமாக்கிவிட்டது. வீடுகளில் ஆட்கள் இருந்தால், வீடுகள் அடைத்துக் கிடந்தாலும் திறந்து கிடந்தாலும் வெளிச்சம் தெரு வில் வந்து கசிந்து கிடைக்காமல் போகாது. எவ்வளவு அமாவாசை இருட்டாக இருந்தாலும் வீடுகளிலிருந்து கேட்கிற பேச்சுச் சத்தங் களும், நடமாட்டமும் இருட்டை அழித்துவிடும். இருட்டை அழிப் பது இதுபோல் ஒரு சிறிய விஷயமே. இருட்டைப் போக்கினது பஞ்சாயத்துப் போர்டில் நிறுத்தியிருந்த விளக்குத் தூண்களோ, பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவை வீசுகிற நிலா வெளிச்சமோ அல்ல. இருட்டை அழித்தது, வீடுகளிலிருந்து கேட்ட பேச்சுக் குரல்களும் நடமாட்டங்களுமே. எல்லா வீடுகளிலும் வெளிச்சமே இல்லாமல், விளக்குகளை எல்லாம் பறித்துக்கொண்டிருந்தாலுங் கூட வீடுகளில் மனிதர்கள் வசிக்கிறார்கள் என்கிற சிறு விஷயமே இருட்டை விரட்டப் போதுமானதாக இருந்தது. இருட்டு எப்போதும் எஸ்தர் குடும்பத்துக்குத் துயரம் தருகிறதாக இருந்தது இல்லை. இப்போது இருட்டுத் தருகிற துக்கத்தை வெயிலின் கொடுமையைப் போலத் தாங்க முடியவில்லை.
வெயில், புழுக்கமும் எரிச்சலும் அளித்தது. வெயில் பகலின் துயரங்களை அதிகப்படுத்தியது. இருட்டோ வெயிலைப் போல எரிச் சலைத் தராமல் போனாலும் இன்னொரு காரியத்தைச் செய்தது. அது தான் பயம். வெறும் இருட்டைக் கண்டு குழந்தைகள் பயப் படுகிறது போலப் பயமில்லை. யாரும் ஊரில் இல்லை என்பதை, உறங்கக்கூட விடாமல் நடைவாசலுக்கு வெளியே நின்று பயமுறுத்திக்கொண் டிருந்தது இருட்டு.
இருட்டு கரிய பொருள். உயிரில்லாதது போல்தான் இத்தனை வருஷமும் இருந்தது. இந்தத் தடவை உயிர் பெற்றுவிட்டது விநோ தந்தான். எஸ்தர் சித்தி வீட்டுக்கு வெளியே நின்று முணுமுணுத் துக் கொண்டிருந்தது. அது என்ன சொல்லுகிறது? இவ்வளவு கருப்பாக முகமே இல்லாதது எவ்விதம் பயமுறுத்துகிறது? ஆனால் உண்மையாக இவ்விதமே இருட்டு நடந்து கொண்டது தெளிவாகப் பேச முடியாமல் இருக்கலாம். ஆனால் முணு முணுக்கிறது என்ன வென்று வீட்டிலுள்ள பெரியவர்களுக்குக் கேட்கிறது.
முக்கியமாக விவேகமும், அதிகாரமும் நிரம்பிய எஸ்தர் சித்திக்கு அது முணுமுணுப்பது கேட்கிறது. இருட்டுச் சொன்னதைக் கேட்டுத் தைரியம் நிரம்பிய எஸ்தர் சித்தியே பயந்தாள். இனி மீள முடி யாது என்பது உறுதியாகிவிட்டது. இருட்டின் வாசகங்கள் என்ன?
மேலே ஓடுகளினால் கூரை வேயப்பட்டிருந்த வீடுதான் அது என்றாலும் பக்கத்துச் சுவர்கள் சுட்ட செங்கற்களினால் கட்டப் பட்டவை. சுவர்களுக்குச் சுண்ணாம்பினால் பூசியிருந்தார்கள். நல்ல உறுதியான சுவர்கள் தான். இருட்டு பிளக்க முடியாத சுவர்கள். நம்பிக்கைக்குரிய இந்தச் சுவர்களைக் கூடப் பிளந்துவிடுமா? எஸ்தர் சித்தி பயந்தாள். இருட்டு சொன்னது கொடுமையானது.
'நீயும் உனக்குப் பிரியமானவர்களும் இங்கிருந்து போவதைத் தவிர வேறே வழியென்ன? இன்னும் மழைக்காகக் காத்திருந்து மடிவீர்களா?" இதுதான் எஸ்தர் சித்திக்கு இருட்டு சொன்னது. இதை அது தினந்தோறும் இடைவிடாமல் முணுமுணுத்தது; பிடிவாதத்துடன் கூடிய, உறுதி நிரம்பிய முணுமுணுப்பு.
கண்களில் இமைகளைச் சுற்றி ஈரம் கசிந்து கொண்டிருந்தது பாட்டிக்கு. எஸ்தர் சித்தி வீட்டில் எல்லாரும் தூங்கியான பிறகு அடிக்கடி கைவிளக்கைத் தூண்டிக்கொண்டு வந்து பார்ப்பாள். அந்த வெளிச்சத்தில், அவள் கண்களின் ஈரத்துக்குப் பின்னே அழியாத நம்பிக்கை இருக்கும். எவ்வளவோ வருஷங்களாகப் பார்த்துக்கொண்டே இருக்கிற கண்களுக்குள் இந்த நம்பிக்கை இருப்பது ஆச்சரியமே. கண்களுக்கு முதுமையே வராதா? இவ்வளவு தீவிரமாக நம்பிக்கை கொண்டு உறக்கமின்றிக் கூரையைப் பார்த்துக் கொண்டிருகிறவளை விட்டுவிட்டுப் போவதைத் தவிர வழி என்ன? ஈசாக் துணையாக இருப்பானா? அவனுக்குத் தருகிறதுக்குக் கூட ஒன்றும் இல்லை என்பதையும் எதிர்பாராமல் உழைத்தான் என்றாலும் வீட்டை நிர்வகிப்பவளுக்கு இதுவும் ஒரு கௌரவப் பிரச்னைதான்.
கூரையில் பார்க்க என்னதான் இருக்கிறது? பயிர்களின் வளர்ச்சி யைக் கூடவே இருந்த ஈசாக்கு அறிவது போல, கூரை ஓலைகளை வெயிலிலும் மழையிலும் காற்றும் முதுமையடையச் செய்து, இற்றுக் கொண்டிருப்பதை பாட்டி அறியாமலா இருப்பாள்? கூரையின் எந்தெந்த இடத்தில் ஓலைகள் எப்போது வெளுக்க ஆரம்பித்தன என்பது பாட்டிக்குத் தெரியும்.
அன்றைக்கு ராத்திரி மறுபடியும் எல்லாரும் கூடினார்கள். இருந் தது கொஞ்சம் போல் கேப்பை மாவு மட்டிலுமே. காய்ந்துபோன சில கறிவேப்பிலை இலைகளும் கொஞ்சம் எண்ணெயும் கூட வீட்டில் இருந்தது பெரும் ஆச்சரியமான விஷயம். கேப்பை மாவிலிருந்து எஸ்தர் களி போல ஒரு பண்டம் கிளறியிருந்தாள்.
நெருப்புக்காகக் கஷ்டப்படவேண்டி வரவில்லை. காய்ந்த சுள்ளிகளை இதற்காகவே ஈசாக்கு தயார் செய்துகொண்டு வந்து போட்டிருந்தான். கடைசித் தீக்குச்சியைப் பற்ற வைத்த நாள் முத லாய் நெருப்பை அணையாமல் காத்து வருகிறார்கள். ஈசாக்கு மட்டும் காட்டிலிருந்து லேசான சுள்ளி விறகுகளைக் கொண்டு வந்து போடாமல் போயிருந்தால் இதுபோல நெருப்பைப் பாதுகாத்து வைத்திருக்கமுடியாது. நெருப்பு இல்லாமல் என்ன காரியம் நடக்கும்?
இவ்வளவு விசுவாசமான ஊழியனை எவ்விதம் விட்டுவிட்டுப் போக முடியும்? பயிர்களைப் பாதுகாத்து வந்தான். கால்நடைகளைப் போஷித்தான். மழையிலும், புழுக்கத்திலும் புறவாசலில் கயிற்றுக் கட்டிலே போதுமென்று இருந்தான். பாட்டிக்காக ஈசாக்கைச் சாக\ விட முடியுமா? இவளே சோறு போட்டு வளர்த்துவிட்டாள். இவளே மார்பில் முடிகள் வளர்வதையும் மீசை முடிகள் முளைக் கிறதையும் பார்த்து வளர்த்தாள். இரவில் எத்தனை நாள் கயிற்றுக் கட்டிலுக்குப் பக்கத்தில் வந்து ஓசைப்படாமல் நின்றுகொண்டு ஈசாக்கு கிடந்து உறங்குவதைப் பார்த்துக்கொண் டிருக்கிறாள்.
ஈசாக்கிடம் என்ன இருக்கிறது? காட்டு வெயிலில் அலைந்து கறுத்த முரட்டுத் தோலினால் மூடப்பட்ட் உடம்பு தவிர வேற என்ன வைத்திருக்கிறான் ஈசாக்கு? புறவாசலில் மாட்டுத் தொழுவில் நின்று தன்னுடைய மோசமான வேர்வை நாற்றமடிக்கிற காக்கி டிரவுசரை மாற்றுகிறபோது எத்தனையோ தடவை சிறுவயது முதல் இன்று வரையிலும் முழு அம்மணமாய் ஈசாக்கைப் பார்த்திருக்கிறாள்! இது தவிரவும் அந்த முரடனின் ஈரப்பசையே இல்லாத கண்களில் ஒரு வேடிக்கையான பாவனை ஒளிந்து கொண்டிருக்கிறது. அது ஆடுகளையும், மாடுகளையும் பார்க்கிறபோது தெரிகிற பாவனையில்லை. நன்றாக முற்றி வளர்ந்த பயிர்களுடனே நடந்து போகிறபோது கண்களில் மினுமினுக்கிற ஒளியும் இல்லை. எல்லா விதங்களிலும் வேறான ஓர் ஒளியை எஸ்தரைப் பார்க்கிறபோது அவனுடைய கண்கள் வெளியிடுகின்றன.
யாருக்குமே பற்றாத சாப்பாட்டைத் தட்டுகளில் பரிமாறினாள் எஸ்தர் சித்தி. குழந்தைகளுக்கும் கூடப் போதாத சாப்பாடு. சின்ன அமலம் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டாள். அது அவளுக்கு இயல்புதான்.
"நீங்க ரெண்டு பேரும் ஒங்க வீடுகளுக்குப் போய்க்கிங்க. புள்ளையளயுங் கூட்டிட்டுப் போங்க" என்று பெரிய அமலத்தை யும் சின்ன அமலத்தையும் பார்த்துக் கூறினாள். இரண்டு பேரும் அதற்குப் பதிலே சொல்லக் கூடாது என்கிறது போல் எஸ்தர் சித்தி யின் குரல் இருந்தது. அவர்களும் பதிலே பேசவில்லை.
"நீங்க ரெண்டு பேரும் எங்கூட வாங்க. மதுரையிலே போய்க் கொத்த வேல பார்ப்போம். மழை பெய்யுந்தண்ணியும் எங்கன யாவது காலத்த ஓட்ட வேண்டியது தானே? ஈசாக்கும் வரட்டும்."
இதற்கும் அகஸ்டினும், டேவிட்டும் ஒன்றும் சொல்லவில்லை. கொஞ்ச நேரம் கழித்து டேவிட் மட்டும் பேசினான். கைவிரல் களில் கேப்பைக் களி பிசுபிசுத்திருந்ததை ஒவ்வொரு விரலாக வாய்க்குள் விட்டுச் சப்பியபடியே பேசினான்.
பாட்டி இருக்காளா?"
எஸ்தர் அவனைத் தீர்மானமாகப் பார்த்தாள். பிறகு பதிலே சொல்லவில்லை. படுக்கப் போகும்போது கூடப் பதிலே சொல்ல வில்லை. ஆனால் அன்றைக்கு இராத்திரியில் சுமார் ஒரு மணிக்கும் மேல் வறட்சியான காற்று வீச ஆரம்பித்தது. அப்போது நடுவீட்டில் குழந்தைகளிடத்தில் படுத்திருந்த எஸ்தர் சித்தி எழுந்து போய்ப் பாட்டியின் பக்கத்தில் போய்ப் படுத்துக் கொண்டாள்.
அதிகாலையிலும் அந்த வறட்சியான காற்று வீசிக்கொண்டு இருந்தது. அது குளிர்ந்தால் மழை வரும். அது குளிராது. குளிர்ந்து போக அக் காற்றுக்கு விருப்பம் இல்லை. மெலிந்து போயிருந்த இரண்டு காளை மாடுகளும் அடிக்கடி பெருமூச்சு விட்டுக்கொண்டு இருந்தன. அதை அரைகுறையான தூக்கத்தில் புரண்டுகொண்டிருந் தவர்கள் எல்லாரும் நன்றாகக் கேட்டிருக்க முடியும். அந்த மாடு களின் பெருமூச்சை அதிக நேரம் கேட்க முடியாது. தாங்க முடியாத சோகத்தை எப்படியோ அந்தப் பெருமூச்சில் கலந்து அந்த மாடு கள் வெளியிட்டுக்கொண்டிருந்தன. அந்தக் காற்றாவது கொஞ்சம் மெதுவாக வீசியிருக்கலாம். புழுக்கத்தை வீசுகிற காற்றுக்கு இவ் வளவு வேகம் வேண்டாம். காய்ந்து கிடக்கிற மேலக்காட்டிலிருந்து அந்தக் காற்று புறப்பட்டிருக்க வேண்டும். காட்டில் விழுந்து கிடக்கிற காய்ந்த மாட்டுச் சாணம், ஆட்டுப் பிழுக்கை ஆகியவற்றின் மணம் காற்றில் கலந்திருந்தது. மேல் காட்டில் தான் கடைசியாக இந்த வருஷம் அதிகம் மந்தை சேர்ந்திருந்தது.
பாட்டியைக் கல்லறைத் தோட்டத்திற்குக் கொண்டு போகிற துக்கு, பக்கத்து ஊரான குரும்பூரிலிருந்து ஒரு பழைய சவப் பெட்டியை மிகவும் சொல்பமான விலைக்கு, ஈசாக்கே தலைச்சுமை யாக வாங்கிக்கொண்டு வந்தான். அதற்குள் சாயந்திரமாகி விட் டிருந்தது. பாதிரியார் ஊரிலில்லை யென்று கோயில் குட்டியார் தான் பாளையஞ்செட்டி குளத்தூரிலிருந்து வந்திருந்தார். ஊரை விட்டுக் கிளம்புகிறதுக்காகவென்று எஸ்தர் சேமித்து வைத்திருந்த பணத்தில் பாட்டியின் சாவுச் செலவுக்கும் கொஞ்சம் போய்விட்டது.
யாரும் அழவே இல்லை. மாறாகப் பயந்து போயிருந்ததை அவர்களுடைய கலவரமான முகங்கள் காட்டின. கல்லறைத் தோட்டம் ஒன்றும் தொலைவில் இல்லை. பக்கத்தில்தான் இருந்தது. கோயில் தெருவிலும், நாடாக்கமர் தெருவிலும் இருந்த இரண்டே வீட்டுக்காரர்கள் கொஞ்ச நேரம் வந்து இருந்துவிட்டுப் போய் விட்டார்கள். துக்க வீட்டுக்குத் துக்கம் விசாரிக்கின்ற பொறுப்பை அவ்வளவு லேசாகத் தட்டிக் கழித்துவிட முடியுந்தானா?
எஸ்தர் சித்திக்கு மட்டும் பாட்டியின் ஈரம் நிரம்பிய கண்கள் கூரையைப் பார்த்து நிலைகுத்தி நின்றது அடிக்கடி ஞாபகத்துக்கு வந்துகொண்டே இருந்தது. வெகுகாலம் வரை அந்தக் கண்களை அவள் மறக்காமல் இருந்தாள்.

