Chapter 1

(இந்த நவீனத்தில் வரும் நிஜப் பெயர்களுடன் கற்பனைப் பெயர்களும் கலந்திருக்கின்றன.)

டோக்கியோவில் நடைபெறப்போகும் தேரோட்ட விழா ஏற்பாடுகளை கவனிக்கச் சென்றுள்ள முதல் குழுவில் திரு கணபதி ஸ்தபதி, திருமதி மனோரமா, விழாவேந்தன் முத்து, புலவர் நன்னன், புள்ளி சுப்புடு ஆகிய ஐவரும் முக்கியமானவர்கள்.

திருக்குறள் ஷோஜோவும் ஜப்பானியப் பெண் கொமோச்சியும் இந்த ஐவரையும் இம்பீரியல் பாலஸ் - கிழக்கு வாசல் மைதானத்துக்கு அழைத்துச் சென்று, ”இங்கிருந்துதான் தேரோட்டம் தொடங்கப் போகிறது” என்றார்கள்.

”அடேயப்பா! எவ்வளவு விசாலமான இடம்! ஏழெட்டு ஃபுட்பால் கிரவுண்ட் போடலாம் போலிருக்கே!" என்று வியந்தார் விழாவேந்தன் முத்து.

"நம் விழாவுக்கு மிகப் பொருத்தமான இடம். இந்த இடத்தை யாருங்க தேர்ந்தெடுத்தது?' - கணபதி ஸ்தபதி கேட்டார்.

"சாவி ஸார்தான். அவருக்குத்தான் ஜப்பான்ல ஒவ்வொரு இடமும் அத்துபடியாச்சே!”

"உங்க பேர் என்ன சொன்னீங்க?" ஜப்பான் தமிழறிஞர் ஷோஜோ கேட்டார்.

"முத்து!"

"எங்க நாட்டிலே கூட நிறைய முத்து உண்டு" - ஷோஜோ

"முத்துக் குளிக்க வாரீகளா?' என்று முணுமுணுப்பாய் பாடினார் மனோரமா.

'நீங்க நல்லாத் தமிழ் பேசறீங்களே" என்றார் நன்னன்.

"நான் தமிழ்நாட்டில் அஞ்சு வருஷம் தங்கிக் குறள் படிச்சேன். திருக்குறள் முனுசாமிதான் எனக்கு வாத்தியார்!"

"அப்படியா! ஒரு குறள் சொல்லுங்க பார்க்கலாம்."

ஷோஜோ தமது கட்டைக் குரலில் சொன்னார் :

தேறினுந் தேறாவிடினு மழிவின்கட்

டேறான் பகா அன் விடல்.

"குறள் நல்லாயிருக்குங்க ; உங்க குரல்தான் சரியாயில்லை. குறளை சரியாப் பதம் பிரிச்சு சொல்லத் தெரியணும். நாளைக்கு ஒரு கறும்பலகையும் சாக்பீஸும் கொண்டாங்க. நான் பதம் பிரிச்சு எழுதி விளக்கம் சொல்றேன்" என்றார் நன்னன்.

”தேர் விடறதைப் பத்தி எங்க வள்ளுவர் அந்தக் காலத்திலேயே எவ்வளவு அழகாச் சொல்லிட்டார் பார்த்தீங்களா?" என்று மகிழ்ந்தார் புள்ளி சுப்புடு.

"வாயை மூடிக்கிட்டுப் பேசாம இருங்க. மானம் போகுது. தெரியாத விஷயத்துல தலையிடக்கூடாது. அந்தக் குறளுக்கு இதுவா அர்த்தம்?" என்று தலையிலடித்துக் கொண்டார் நன்னன்.

"மொத்தம் 1330 குறள். நாம் விடப் போகிற தேரையும் 1330 அடி உயரத்துக்குச் செய்தால் பொருத்தமாயிருக்கும்" என்று புள்ளி சுப்புடு யோசனை கூறினார்.

"நீங்க மொத்தம் எத்தனை பேர் வந்திருக்கீங்க?" - கோமோச்சி கேட்டார்.

"முப்பது பேர்”

"வள்ளுவரையும் சேர்த்தால் முப்பத்தொண்ணு" என்றார் புள்ளி.

"நீங்க இங்கே அஞ்சு பேர் தான். வந்திருக்கீங்க. மத்தவங்கெல்லாம்....?!”

”அவங்கல்லாம் பயக்சி ஓட்டல்ல தங்கியிருக்காங்க!"

"கின்ஸா டயச்சியா, ஷிம்பாஷி டயச்சியா? "

”அட, ரெண்டு டயச்சி இருக்கா இந்த ஊர்லி அது. எனக்குத் தெரியாதே!"

மனோரமா சிரித்தார்.

”உங்க பேர் மனோரமா தானே! தில்லானா மோகனாம்பாள்ல நாதசுரம் வாசிப்பீங்களே, ஜில் ஜில் ரமாமணி, அது நீங்கதானே? நான் உங்க ரசிகை!" என்றார் ஜப்பானியப் பெண்.

"உங்க பேர் என்னம்மா சொன்னீங்க?

”கோமோச்சி!"

”ரொம்ப அழகான பேர். எங்க ஊர்ல காமாட்சிம்பாங்க. நீங்க கோமோச்சிங்கறீங்க!"

"ரோடெல்லாம் பளபளன்னு மொஸைக் தரை மாதிரி படுசுத்தமா இருக்குதே!" முத்து வியந்தார்.

"எங்க நாடே சுத்தமான நாடு. இங்கே அசுத்தமும் இருக்காது. சத்தமும் இருக்காது. புல்லெட் ட்ரெயின் கூட ஸைலண்டாத்தான் நழுவிக்கிட்டு ஓடும். இவ்வளவு கார் போகுதே, எவனாவது ஹாரன் அடிச்சு சத்தம் போடறானா பார்த்தீங்களா?"

"ரோட்லயே இலை போட்டுச் சாப்பிடலாம் போல இருக்கே !"

"யாராவது இலை போட்டுச் சாப்பாடு போட்டாத் தேவலை!"

"முத்து எதுக்கு கோட்டைச் சுவரையே உத்துப் பார்த்துக்கிட்டிருக்கார்?"

"இந்தக் கோட்டைச் சுவர் பூராவும் வேஸ்டாக் கிடக்கே! கலர் கலரா போஸ்டர் அடிச்சு ஒட்டலாமேன்னு பார்க்கறாரோ, என்னவோ!"

"வி.ஜி.பிக்குத் தெரிஞ்சா விஸிட் வி.ஜி.பி. கோல்டன் பீச் என்று சுவத்திலேயே பெரிசு பெரிசா எழுதி வச்சுருவார்"

”மணி ஒண்ணரகப் போகுது. முதல்ல டயச்சி ஓட்டலுக்குப் போய் சாப்பாட்டை முடிச்சுறலாம். நாயர் கடையிலேருந்து முப்பது பேருக்குச் சாப்பாடு அனுப்பறதாச் சொல்லியிருக்காங்க."

ஷோஜோவும் கோமோச்சியும் அவர்கள் ஐவரையும் கின்ஸா டயச்சிக்கு அழைத்துப் போனார்கள்.

அங்கே இருந்தவர்கள் அத்தனை பேரும் பசியோடு. "கஞ்சி வரதப்பா ! எங்கு வருதப்பா!" என்று வழிமேல் விழி வைத்துக் காத்துக்கொண்டிருந்தார்கள். இவர்களைக் கண்டதும்,

"சாப்பாடு கொண்டு வரலையா?' என்று கேட்டார்கள்.

நாயர் கடையிலேருந்து சாப்பாடு வரலையா உங்களுக்கு?"- ஷேர்ஜோ கேட்டார்.

"வரலையே!" "என்ன ஆச்சு?

"நாயர் ரெஸ்டாரெண்ட்லேர்ந்து முப்பது பேருக்கு சாப்பாடு அனுப்பிச்சாங்களாம். அதை எடுத்து வந்தவங்க எந்த டயுச்சின்னு தெரியாம ஷிம்பாஷி டயச்சிக்குப் போயிருக்காங்க. அங்கே தமிழ்நாட்டிலிருந்து வேறு ஒரு கருப் வந்திருக்கு. டூரிஸ்ட் க்ரூப்! நாயர் கடைக்காரங்க விவரம் தெரியாம சாப்பாட்டை அவங்ககிட்டே கொடுத்துட்டுப் போயிட்டாங்களாம்!"

"உங்களுக்கு யார் சொன்னது?"

"நாயர் கடைக்குப் போன் பண்ணிக் கேட்டமே!"

”போச்சுடா!" என்றார் புள்ளி.

"ஒரு டீக்கடை கூட இல்லையே இங்கே? இருந்தா, இந்தப் பசி வேளைக்கு ஆளுக்கு ஒரு டீ அடிக்கலாமே"

”கண்ட இடத்துல டீக்கடை போடறதுக்கு இதென்ன தமிழ்நாடா, என்ன?”

"ஏன் ? ஜப்பான் காரங்க டீ சாப்பிடமாட்டாங்களா?"

”சாப்பிடுவாங்க. ஆனா, டீக்கடை இருக்காது. அதுக்குன்னு ஒரு தனி வீடு இருக்கும். அதற்கு டீ ஹவுஸ்னு பேரு. அங்கேதான் டீ ஸெரிமனி நடக்கும்."

”டீ ஸெரிமனியா?"

"ஆமாம்; தேயிலை திவசம்... திவசம் மாதிரியே ரொம்ப ஸ்லோவாத்தான் நடத்துவாங்க!"

"இப்ப ரொம்பப் பசியாயிருக்கு. முதல்ல சாப்பாட்டுக்கு ஏதாச்சும் வழி பண்ணுங்க."

"மகாராஜா இருக்கவே இருக்கார். வாங்க, போய்ப் பார்க்கலாம்."

"ஜப்பான் மகாராஜாவைச் சொல்றீங்களா? அரண்மனைச் சாப்பாடா?"

"நான் சொல்றது அந்த மகாராஜா இல்லய்யா! மகாராஜாங்கறது ஒரு சாப்பாடு ஓட்டலுக்குப் பேர். பக்கத்துலதான் இருக்கு."

"அங்கே போக வேணாம், அந்த ஓட்டல் பில் நம்மைச் சாப்பிட்டுடும். நாயர் கடைக்கே போவோம். காரட், குடமிளகா. உருளைக்கிழங்கு மூணும் போட்டு கொதிக்கக் கொதிக்க குழம்பும், சொறும் கொடுப்பாங்க. இந்தப் பசி வேளைக்கு அல்வா மாதிரி இறங்கும்" என்றார் ஷோஜோ.

"நாக்கில் ஜலம் ஊறுதே" என்றார் புள்ளி.

எல்லோரும் நாயர் கடையில் போய் கியூ நின்று டேபிள் பிடித்துச் சாப்பிட்டானதும், டோக்கியோ டவர் வாசலில் போய் நின்று டவரை அண்ணாந்து பார்த்தார்கள்.

"அம்மாடி எவ்வளவு உயரம்' என்றார் மனோரமா.

"உயரம் 83 மீட்டர்' என்றார் புள்ளி சுப்புடு.

இந்தக் கதைக்கும் தேரோட்டத்துக்கும் தொடர்பு உண்டு.

கின்ஸா வீதிகளில் நியான் விளக்குகள் வண்ணக் கோலங்களாய் நெளிந்து நெளிந்து ஒளி வீசிக்கொண்டிருந்தன. தரைக்குக் கீழே பாதாள ரயில்கள் சிலந்திக்கூடு.

சுரங்கப் பாதை ஒன்றிலிருந்து வெளிப்பட்ட அந்த வேற்றுநாட்டு இளைஞன் வட்டமான ஸனாய்க் கட்டடத்தின் அருகில் வந்து நின்றான். ஆவலோடு சுற்றுமுற்றும் பார்த்தான். பொதுவாகக் காதலர்கள் அந்த இடத்தில்தான் சந்தித்துக் கொள்வார்கள். அந்த இளைஞனை கிஜிமா அங்கேதான் காத்திருக்கச் சொன்னாள். வெகு நேரமாய்க் காத்திருந்தும் அவள் வரவில்லை. நின்று நின்று கால் வலித்தது. லேசாகப் பசி எடுத்திருந்தது. எதிரில் ’மாக்டோனல்' M தெரிந்தது.

கலகலவென்று கிண்கிணிச் சிரிப்பு. ’ஒரைட் ஒரைட்...’ என்ற கொச்சை ஆங்கிலம். கண்களை மறைக்கும் கூந்தல் கற்றையை அவ்வப்போது தள்ளிவிட்டுக் கொள்ளும் நளினம் - ஒரு விநாடி அந்த அழகி அவன் நினைவில் தோன்றி மறைந்தாள்.

எதிரிலிருந்த 'வாக்கோ' கட்டடத்தைப் பார்த்தான். அப்போதுதான் அவள் சாலையைக் கடந்து 'ஸனாய்' பக்கம் வந்துகொண்டிருந்தாள்.

”ஸாரி, ஸாரி, பிரைம் மினிஸ்டர் அவசரமாக நாலு லெட்டர் டைப் அடிக்கச் சொல்லிவிட்டார். ’மிக முக்கியமான லெட்டர். அவசரம்!' என்றார். அந்த வேலையை முடித்துவிட்டு வருவதற்கு நேரமாகிவிட்டது" என்றாள். அவள் கையிலிருந்த சின்ன ஸிக்கோ க்வார்ட்ஸ் 7-20 காட்டியது.

அந்த இளைஞனின் முகம் வக்கிரமாக மாறியது. அந்த முக்கியமான லெட்டரைப் படித்துவிடத் துடித்தான். 'அது அவ்வளவு சுலபமா?' என்று யோசித்தான்.