அணிந்துரை

எம். கோபாலகிருஷ்ணன், தலைவர், இந்தியன் வங்கி

அன்று வாஷிங்டனில் திருமணத்தை நடத்திய சாவி அவர்கள், இன்று வடம் பிடிக்க வாங்க, ஜப்பானுக்கு என்று என்னையும் அழைத்தபோது, மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன்.

காரணங்கள் இரண்டு. தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் தம் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட கலைஞர் அவர்கள்தான் வடம் பிடித்து, தேரோட்டத்தைத் துவக்கி வைக்கப் போகிறார்கள் என்பது ஒன்று. மற்றொன்று, தமிழ்நாட்டைப் போலவே ஜப்பானும் கலாசாரப் பெருமை படைத்த நாடு; அன்று வாஷிங்டனில் மேலை நாட்டுக் கலாசாரத்தோடு மாலை மாற்றிக் கொண்ட தமிழ்க் கலாசாரம், இன்று கீழை நாட்டுக் கலாசாரத்தோடு கை கோத்து ஊர்வலம் வருவது நமது கலாசாரப் பெருமைக்குச் சிறப்பு சேர்ப்பதல்லவா!

இத்தகையதொரு கலாசாரப் பரிவர்த்தனையைக் காட்டும் இந் நூல், சுற்றுலா ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள இவ்வாண்டில் வெளியிடப்படுவது மிகப் பொருத்தம். சாவி அவர்கள் இந்நூலில் கலாசாரப் பரிவர்த்தனைக்கு எத்துணை முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பதும், அவரது கனவுலகில் எவ்வளவு பெரிய எதிர் பார்ப்புகள் உள்ளன என்பதும் அவரது எழுத்துக்களில் அழகாக வெளிப்படுகிறது.

'ஆமாம்; வடம் பிடிச்சு இழுக்க ஆயிரக்கணக்கான பேர் தேவைப்படுமே!

ஜப்பான் காரங்களால் முடியுமா? நம்மோடு சேர்ந்து இழுப்பாங்களா?"

"ஒரு பக்கம் வடத்தை ஜப்பான்காரங்க இழுப்பாங்க.

இன்னொரு பக்கம் நாமெல்லாம் இழுப்போம்.

நடுநடுவே வெளிநாட்டுக்காரங்களும் சேர்ந்து இழுப்பாங்க."

"இதுதான் ரியல் கல்சுரல் எக்ஸ்சேஞ்ச்"

மகாகவி பாரதியின் வார்த்தைகளில் அன்று வெளிப்பட்ட,

"நல்ல

பல்வித மாயின சாத்திரத் தின்மணம்

பாரெங்கும் வீசும் தமிழ்நாடு"

இன்று சாவி அவர்களின் ஏக்கமாக, எதிர்பார்ப்பாக, அவரது எழுத் துக்களில் வெளிப்படுவதைப் படிக்கும் போது மனம் நெகிழ்கிறது. அவரது கற்பனைகள் தொடரட்டும்.

வாழ்த்துக்களுடன்,

1 பிப்ரவரி 1991 அன்பன்

எம்.கோபாலகிருஷ்ணன்