வாசகர்களுக்கு
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நான் எழுத்துலகில் ஈடுபட்ட காலத்தில் எழுதிய கதைகள் சில "மௌனப் பிள்ளையார்" என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப் பட்டது. இப்போது அதையே திரு. கோபுலுவின் அற்புதமான சித்திரங்களுடன் இரண்டாம் பதிப்பாக மங்கள் நூலகத்தார் கொண்டு வந்துள்ளார்கள். திரு. கோபுலுவுக்கும் மங்கள நூலகத்தாருக்கும் என் நன்றி.
இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ள கதைகளைச் சமீபத்தில் ஒரு முறை படித்துப் பார்த்தேன். சில இடங்களில் இவ்வளவு நன்றாக எழுதியிருக்கிறோமே?" என்றும், சில இடங்களில் "இந்தக் கதையை இப்போது எழுதியிருந்தால் இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம்" என்றும் தோன்றியது.
இப்புத்தகம் முதன் முறை வெளியான போது இதைப் படித்த ரசிகமணி டி. கே. சி. அவர்கள் என் எழுத்துத் திறமையைப் பாராட்டி மிக அருமையான கடிதம் ஒன்று எழுதியிருந்தார்கள். எதிர் காலத்தில் நான் ஒரு சிறந்த நகைச்சுவை ஆசிரியராக விளங்குவேன் என்றும் அந்தக் கடிதத்தில் அவர்கள் என்னை வாழ்த்தியிருந்தார்கள்.
இச்சமயம் அவரை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகிறேன்.
மயிலாப்பூர்
12-4-64 சாவி

