Chapter 17

டாக்டர். சத்தியா, குறிப்பிட்ட அதே வாரம், அதே நாளில், அதே நேரத்தில், செல்வா, அவளைச் சந்தித்தான். அவள் கேட்கும் முன்பே , இப்போ பரவாயில்லை மேடம்.....! என்னை நானே வெல்லமுடியும் போலத் தோணுது என்றான். உடனே அவள், அழகாய் பேசுறீங்களே... அப்புறம், கவிதா எப்படி இருக்காள்...? என்று போகிற போக்கில் கேட்கிறவள் போல் கேட்டாள்.

"பொதுப்படையாய் பேசிக்குவோம் தனித்து சந்திக்கல ஆச்சரியமாய் இருக்கு. அவளும் மாறிட்டாளோ என்னமோ..?"

"உண்மையான பெண், ஒருவனை நினைத்தால், அது குரங்குப் பிடிதான் நான் சொல்வது வரைக்கும், உன்னோட தனித்துப் பழகக்கூடாதுன்னுதான் அந்தப் பெண்ணுகிட்ட சொல்லி இருக்கேன்."

இப்போது, செல்வாவின் பூட்டிய உதடுகளில், ஒரு கீறல். டாக்டர். சத்தியாவும், காரியத்திற்கு வந்தாள். அவனை, அருகே உள்ள கட்டிலில் படுக்கும்படி சைகை செய்தாள் அந்த சைகையை, அவன் செயலாக்கியதும், அவன் அருகே சென்று, நின்றபடியே பேசினாள்.

"இப்போ கால், கைகளை விரித்துப் பரப்புங்கள். உச்சி முதல் பாதம் வரை ரிலாக்ஸ் செய்யுங்கள். நான் சொல்லிக் கொடுத்தபடி உங்கள் கவனம், பாதங்களிலிருந்து உச்சிக்கு ஒவ்வொரு உறுப்பையும் மென்மைபடுத்தியே வரட்டும். பிறகு, அதே கவனம் பிடரி வழியாய், முதுகுத் தண்டு மூலமாய், கால் பதங்களுக்கு போகட்டும். உடம்பை அப்படியே மிதக்க விடுங்கள். ஆழ்ந்து மூச்சு விடுங்கள். உள்வாங்கும் மூச்சுக்கு ஒரு நிமிடம் என்றால், வெளிவாங்கும் மூச்சுக்கு இரண்டு நிமிடம் ஆகட்டும். ஆழ்ந்து, வயிற்றை விம்மியும், எக்கியும்... ஆமாம்... இப்படித்தான்... இப்படியேதான் மூச்சு விடவேண்டும். இப்போது அஞ்சுவதும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை' என்ற இரண்டு வரிகளுக்கு இடையே இருக்கக்கூடிய வட்டத்தை பாருங்கள். அந்த வட்டத்தில் இருக்கும் மையத்தைப் பாருங்கள். அந்த மையத்தை மட்டுமே பாருங்கள்."

செல்வா, அவள் சொன்னபடியே செய்தான். கண்ணுக்கு வந்த வரிகள் மறைந்தன. வட்டமடித்த வட்டம் மறைந்தது மையம் மட்டுமே நின்றது. அதுவும் சிறுகச் சிறுக சென்றது அப்படிச் செல்லச் செல்ல, அவன் இறப்பிற்கும் பிறப்பிற்குமான இடைவெளியாய், தூக்கத்திற்கும் கனவிற்குமான எல்லையாய் கண்களை மூடியபடி, அரை மயக்க நிலையில் கிடந்தான்.

சத்தியாவின் குரல், இசை நிபுணர் போல ஏற்ற இறக்கத்தோடு குழைவாகவும், உறுதியாகவும் தோழியாகவும், தாயாகவும் பல்வேறு விதங்களில் ஒலித்தது.

"இப்போது உன் ஆழ்மனம் விழிக்கிறது. அந்த மனம் என் வசமாகிறது. என் சத்தத்தைத் தவிர, எந்த சத்தமும் உனக்கு கேட்காது. நான் சொல்லுகிறபடி நீ செய்யப்போறே சரியா?"

"சரிதான்."

"இப்போ உனக்கு வயசு எட்டு. தோட்டத்துக்கு போற... யாரோடு போறே...?"

"எங்க மாமா மகன் குமாரோட போறேன்."

"தோட்டத்துல என்ன செய்றீங்க?"

"பரணுல ஏறி காக்கா குருவிகளை கல் கட்டுன கயிற்றுக் கம்பை சுழற்றி சுழற்றி துரத்துறோம்.”

"அப்புறம்?"

"அம்மா அப்பா விளையாட்டு விளையாடினோம்."

"அப்படின்னா ?"

"கொஞ்ச நேரம் அவன் கீழே படுப்பான். நான் மேல் படுப்பேன். அப்புறம், நான் கீழே படுப்பேன், அவன் மேலே படுப்பான்."

"அப்புறம்?"

"அவனுக்கு குழந்தை பிறக்கிறது மாதிரி ஒரு பொம்மையை எடுத்து ரெண்டு பேருக்கும் மத்தியில் போட்டுக்கிறோம். அதைத் தாலாட்டுறோம். கொஞ்சுறோம்... குலாவுறோம்..."

"இந்த மாதிரி, அப்பா - அம்மா விளையாட்டுக்கள நீங்க மட்டும்தான் செய்வீங்களா? இல்ல எல்லாரும் செய்வாங்களா?"

"மத்த பசங்க எங்களைவிட மோசம். ஆடு, மாடுன்னு அதுங்க மேல ஏறி, அட்டூழியம் பண்ணுவாங்க"

"அப்போ நீ அவங்களைவிட மேலு... சரியா?"

"சரிதான்."

"எல்லாக் குழந்தைகளும் ஏதோ ஒரு வகையில் செய்கிற, இந்த மாதிரி காரியம், சிறுபிள்ளை விளையாட்டு. இதை பெரிசா எடுத்துக்க கூடாது. எடுத்துக்குவியா?"

"மாட்டேன்."

டாக்டர் சத்தியா, சிறிது இடைவெளி கொடுத்தாள். அவனையே உற்றுப் பார்த்தாள். மீண்டும் ஆணைக்குரலில் பேசினாள்.

"இப்போ உனக்கு பதினெட்டு வயசு. உங்கப்பா சீட்டு போட்டு நொடித்திட்டார். ஆனாலும், நிலம், புலனை விற்று சீட்டுப் பணத்தை கொடுத்திட்டு என்ன செய்யுறார்?"

ஒரு பெட்டிக் கடைக்குள் சிறைப்பட்டு கிடக்கார்"

"நீ என்ன செய்யுறாய்?”

"அழுகிறேன்."

"எப்படி அழுதே?"

செல்வா, அழுது காட்டினான். தலையில் அடித்துக் காட்டினான். முகத்தை மோதிக் காட்டினான். "எப்பா... எப்பா..." என்ற ஒற்றைச் சொல்லால் புலம்புகிறான்; ஆர்ப்பரிக்கிறான்.

"சரி அழுகையை நிறுத்து நீ சிறுமைப்படவேண்டியவன் இல்லை. உங்கப்பாவை பார்த்து பெருமைப்பட வேண்டியவன். இந்த சென்னையில் சிட் பண்ட் நடத்தியவர்கள், தங்கள் பணங்களை வேண்டியவர்களுக்கு மட்டும் கொடுத்துவிட்டு, திவாலாகி விட்டதாக நாடகம் போடுகிறார்கள். கோடி கோடியாக சம்பாதித்த ஹர்ஷத் மேத்தா இன்னும் கம்பீரமாய் திரியுறான். ஆனால், சொத்தையும், நகையையும் விற்று அத்தனை பணத்தையும் அடைத்த நவீன அரிச்சந்திரன் உங்கப்பா. இதுக்கு நீ பெருமைப் படணுமா? சிறுமைப்படணுமா?"

"பெருமைப்படணும்."

"நல்லது. அப்படித்தான் எடுத்துக்கணும் இப்போ உனக்கு பத்தொன்பது வயது. சென்னையில் இருக்கே. பக்கத்து வீட்டு கவிதாவை எப்படி பிடித்தே?"

"நான் பிடிக்கல... அவள்தான் பிடித்தாள்."

"சரி யார் பிடித்தீர்கள் என்பது முக்கியமில்ல. கவிதா நல்லவளா? கெட்டவளா?"

"ஆக மொத்தத்தில் நல்லவள்."

"அது என்ன ஆக மொத்தம்?"

"டூப்ளிகேட் அம்மாவ பற்றி சொல்லல"

"கவிதா, ஓடிப்போன தன் அம்மாவைவிட இந்த அம்மாவை உசத்தியாய் நினைத்திருக்கலாம் இல்லியா? பெற்று போட்ட கடமைய முடிக்கும் முன்னால, ஓடிப்போனவளவிட, வலிய வந்து இவளுக்கு தானே அம்மாவான ஒருத்தி மேலானவள்தானே..?"

"ஆமாம்... ஆமாம்..."

"கணவன் மனைவியாய் இருந்தால் கூட, ஒவ்வொருவருக்கும் ஒரு அந்தரங்கம் இருக்கலாம். தாயாய் பிள்ளையாய் இருந்தாலும், வாயும் வயிறும் வேறதானே? சொந்த அம்மாவாய் ஒன்றிப்போன ஒரு பெண்ணைப் பற்றி உன்னிடம் மாற்றிப் பேச, அவளுக்கு மனம் இல்லாமல் இருந்திக்கலாம். இதனால் மறைத்திருக்கலாம். இப்படி மறைப்பதற்கு அவளுக்கு உரிமை உண்டா இல்லையா?"

"உண்டு. ஆனால், மோகனன் கிட்ட என்னை கூட்டிக் கொடுத்தாள். வீடு திறந்திருந்தால் வரச்சொல்லிவிட்டு, டூர் போயிட்டாள்."

"அவள் அண்ணன், வீட்டுக்கு வருவதை அவள் எதிர்பார்த்திருக்க மாட்டாள். பூட்டிய கதவை அவன் திறந்தது அவளுக்கு தெரியாது. இது அவள் வேண்டுமென்றே செய்த காரியமா?"

"இல்லை ... இல்லை ..."

"நான் சொல்வது மாதிரிச் சொல். கவிதா வேண்டுமென்றே செய்யவில்லை ."

"கவிதா வேண்டுமென்றே செய்யவில்லை."

"அப்போ அவளை வெறுக்கலாமா?"

"கூடாது. கூடாது... கூடவே கூடாது."

"சரி... இப்போ உன்னை மோகனன், உன் அறைக்கு கூட்டிட்டு போகிறான். என்ன செய்யுறான்?”

"நான் கவிதாவுக்கு எழுதிய லெட்டரை காட்டி மிரட்டுனான். நான் நடுநடுங்கி போறேன். என்னைக் காட்டிக் கொடுக்காமல் இருக்க ஒரு உதவி கேட்கிறான். நான் வாயைத் திறக்கிறேன்."

"அப்புறம்... அந்த வெள்ளைக்காரனோட உறவாடும்போது?"

"முதலில் கஷ்டமாய் இருந்தது. அப்புறம் நான் இயங்கும் போது ஒரு சுகம் கிடைத்தது"

"அப்புறம் மோகனனோடு டீலக்ஸ் நிரோத்தோட ஈடுபடும்போது?"

"ஒரு தனி வாசனை; தனிச் சுகம். என்னையும் மதித்து அவன், செண்பக வாசனை டீலக்ஸை கொடுத்தான். நான் அவனானேன். அவன் நானானான்.'

"உனக்கு இப்போ யாரை அதிகமாய் பிடிச்சிருக்கு?"

"மோகனனை."

"ஓ.கே. அவனோட அந்த உறுப்பு புண்ணாகி, சீழ்பிடித்து, நாற்றம் அடித்து, புண் புண்ணாய் இருக்கிறதாய் கற்பனை செய்து பார் செய்துட்டியா?"

"செய்துட்டேன். அய்யோ ! சகிக்கல."

"இப்போ புழு அரிக்கும் உறுப்பை கொண்ட அவனை, நீ காலால் உதைத்து, மல்லாக்க கிடத்துறே. கிடத்துறியா?"

செல்வாவின் கால்கள், கட்டில் சட்டங்களை உதைக்கின்றன. கைகள் அங்குமிங்குமாய் ஆகாயத்தில் குத்து விடுகின்றன. லட்சுமி, இதமாகக் கேட்கிறாள்.

"இப்போ இப்படி சீழ் பிடித்து கண்டதே காட்சி, கொண்டதே கோலமாகி' உன்னைக் கெடுத்த அந்த மோகனனுக்கும், நீ உதைத்தியே அந்த தாமோதரன் கிழவனுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்குதா?"

"இல்ல.... இல்லவே இல்ல.... அவன் பொறுக்கி... இவன் புறம்போக்கு."

"மீண்டும் பெயர் சொல்லி திட்டு." "தாமோதரன் கிழவன் பொறுக்கி. மோகனப் பயல் புறம்போக்கு."

"மோகனனை இன்னும் நல்லாத்திட்டு."

"அயோக்கியப் பயலே- திருட்டுப் பயலே- பொறுக்கி நாயே.. புண் பிடிச்ச பிசாசே - சீழ்வடியும் சிறங்கா"

"சரி... இப்போ நான் பத்து எண்ணுவதற்குள் நீ எழுந்து விடுவாய். நான் சொன்னது எதுவும் உன் உள் மனதில் பதியுமே தவிர, வெளி மனதிற்கு வராது. சரி. ஒன்று - இரண்டு... மூன்று – "

செல்வா, மெல்ல எழுந்தான். அங்குமிங்குமாய் கண்களை சுழற்றினான். சத்தியா, அந்த பெயருக்குரிய பொருள் போல், அமைதியாய்ச் சிரித்தாள். பிறகு ஒரு கேள்வி கேட்டாள்.

"இப்போ எப்படி இருக்குது தம்பி?"

"உடம்பு முழுக்க ஏதோ ஒரு சுகம். ஆகாயத்தில் பறக்கிறது மாதிரியான லகு. நடந்ததை நினைக்க மறுக்கும் மனம். நல்லதை மட்டுமே நாடும் இதயம். நான் கவிஞனாயிட்டேன் இல்லியா மேடம்?

"நீ கவிஞனேதான். கவிதாவைப் பற்றி மட்டும் கவிதை எழுதாதே. சமுதாயப் பிரச்சினைகளைப் பற்றியும் எழுது. உன் பெயரை வெளியிடாமல் ஓரினச் சேர்க்கையால் ஏற்படும் கேடுகளைப் பற்றி கட்டுரை எழுதி எனக்குக் கொடு. நான் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, ஏதாவது ஒரு நல்ல பத்திரிகையில் வெளியிடுறேன். சரி . வெளியில் உனக்காக உன் சித்தப்பா குடும்பமும், கவிதாவும் கண்ணீரும் கம்பலையுமா நிற்கிறாங்க. உனக்கு சுகமாயிட்டுதுன்னு சொல்லு.”

"அப்பா நான் இனிமே வரவேண்டியதில்லியா மேடம்?"

"மனம் என்பது ஒரு மாயப் பிசாசு. என் முன்னால் உன் மனம் ஆரோக்கிய வேடம் போடும். ஆனால், சில சமயம் அது அற்ப ஆயுளில் முடிந்து, மீண்டும் அதே மனம் பேயாட்டம் போடும். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்துல, நீ வேறு, மனம் வேறுன்னு நினைத்துக்கோ. இது ஒரு செஷன்ல முடியுற மெஸ்மரிசம் ட்ரீட்மெண்ட் இல்ல. குறைஞ்சது ஐந்தாறு தடவையாவது நீ வரவேண்டியதிருக்கும். ஏன் மூஞ்சை தூக்குறே? நல்லவேளை உன்னுடைய அனுபவம் ஒரு வாரம் என்கிறதுனால தேறிடுவே. பார்க்குல பார்த்தியே அந்தப் பையன். அவன் வயசுல துவங்கி இருந்தா உன்னை திருத்தியிருக்கவே முடியாது. அப்புறம், எய்ட்ஸோடதான் திரிய வேண்டியதிருக்கும். "நல்லவேள் ஒன் ரத்தத்த டெஸ்ட் பண்ணியதில் உனக்கு அது இல்ல. இனிமேலும், இதையே தொழிலா வச்சா நீ உருப்பட மாட்டேன்னு புரியுதா?"

"புரியுது, மேடம். இப்போ அதுமேல் அதிகமாய் ஆசையில்ல. திருந்திடுவேனா மேடம்?"

"திருந்திட்டே... திருந்திட்டே ... சில திருத்தங்கள் தான் செய்யணும். சரி உனக்கும் வேலை இருக்கும். எனக்கும், ஆட்கள் காத்திருக்காங்க. அப்புறம்..."

செல்வா, சத்தியாவின், பேச்சு இழுப்பை ஊன்றுகோலாய் ஆக்கியது போல் எழுந்து, வெளியேறினான். பிறகு, திரும்பிவந்து, ஒரு கேள்வி கேட்டான்.

"கவிதாவோட பழகலாமா மேடம் ?"

"லேசு- லேசாய்…"