Chapter 15
குய்யோ முறையோ கூப்பாடோ, ஒப்பாரியோ கேட்க முடியாத இருண்டு அறையில், செல்வா, போய்ச் சேர்ந்தான். முழங்கால் இரண்டிலும் ரூல் தடியை வைத்து உருட்டல், கை நகங்களில் குண்டூசிகளால் குத்தல், காதுகளை நெட்டெடுத்தல், முகக் குத்து, உச்சி முடி இழுப்பு, லத்திக் கம்படி, ஐசில் கிடத்தல் போன்ற அத்தனை தடாலடிகளுக்கும் உட்பட்ட செல்வா, மீண்டும் லாக்கப் அறையில் ஜட்டியோடு நிறுத்தப்பட்டான். ஆரம்பத்தில் கொடாக்கண்டனாக இருந்ததால், விடாக் கண்டரான இன்ஸ்பெக்டரின் ஆணையின் பேரில், காவலர்கள் நடத்திய விசாரணையில்; செல்வா கக்கிய உண்மைகள் பொய்களைவிட பயங்கரமாய் தோன்றின. புகார் கொடுத்த தாமோதரன், புள்ளிகளிலே முக்கியமான புள்ளி. அவரா அந்தச் சிறுவனிடம் அப்படி நடந்து கொண்டார் என்பதை இன்ஸ்பெக்டரால் ஜீரணிக்க முடியவில்லை. இவனுங்க தாய்யா இப்படி நடப்பானுங்க என்று காவலர்கள் அவரிடம் சொன்னபோது, அந்த இன்ஸ்பெக்டருக்கு, செல்வா மீது சிறிது அனுதாபம் ஏற்பட்டது சட்டப்படி பெரிய குற்றவாளியான ஒருவர், சின்னக் குற்றவாளி மீது புகார் கொடுத்ததும், அந்த விசாரணையின் போக்கு எதில் கொண்டு போய்விடும் என்பதைப் பற்றி அவர் கவலைப்படாததும், இன்ஸ்பெக்டருக்கு குழப்பத்தைக் கொடுத்தது
புள்ளியோ பெரிய புள்ளி. அதோடு கரும்புள்ளி. ஆகையால், கிரைம் இன்ஸ்பெக்டரான இவர், இது லா அண்டு ஆர்டர் பிராப்ளம்' என்று அருகே உள்ள இருக்கையில் இருந்த எல் அண்ட் ஓ இன்ஸ்பெக்டரிடம் சொன்னார். அந்த எல் அண்ட் ஓ வோவோ, பப்ளிக்கா நடப்பதாலேயே, லாவும் ஆர்டரும் சிதைந்ததாக அர்த்தம் இல்லை. இது கிரைம். ஆகையால், கிரைம் இன்ஸ்பெக்டரான நீதான் இதை விசாரிக்கணும். என்னை விடுப்பா...' என்றார்.
லாக்கப் அறையில், வழக்கமாக வாடிக்கையாளர்கள், வம்படித்து சிரித்தபோது, தான் மட்டும் ஜட்டியோடு நிற்பது செல்வாவிற்கு அவமானமாகத் தோன்றியது. ஆனாலும், லுங்கி கிடைத்தால் எப்படியாவது தூக்குப் போட்டோ, இல்லையானால் எப்படியாவது தப்பித்து தண்டவாளத்தில் தலை வைத்தோ, பஸ் முன் பாய்ந்தோ , தீக்குளித்தோ, சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்ப தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவிற்கு வந்துவிட்டான். இதனால் அவன் முகம் உறுதிப்பட்டது. இதயம் வலுப்பட்டது. பார்வை தீட்சண்யமானது சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரமும் காலளவு என்ற பழமொழியை நிரூபிப்பவன் போல் நெஞ்சு நிமிர்த்தி நின்றான். உடலெங்கும், வரிக்குதிரை மாதிரி வரி வரியாய், லத்திக் கம்பு தடயங்கள், ஒரு விரல் பரிமாணத்திற்கு குறுக்கும் நெடுக்குமாய் கோடுகள் போட்டிருந்தன. கண் இமைகள் வீங்கிப் போயிருந்தன காதுகளில் ரத்தச் சிதைவுகள். ஆனாலும், இவற்றை பற்றி கவலைப்படாதவன் போல் கைகளை வீரக்கட்டு என்பார்களே விவேகானந்தர் கட்டு அப்படி கட்டிக்கொண்டு, நின்றான்.
ஒரு டெலிபோன் கூச்சலை மௌனமாக்கிய காவலாளர் ஒருவர், அதன் குமிழை அப்படியே வைத்துவிட்டு, இன்ஸ் பெக்டரின் காதில் கிசுகிசுத்தார் அவரும் அலறியடித்து, பேசவேண்டிய குமிழின் பொந்திற்குள் காதை வைத்தும், கேட்க வேண்டிய குமிழில் வாய் வைத்தும், "எஸ் ஸார்.” என்று சொல்லி விட்டு, எதிர்முனை ஆணைக்கு காத்து நின்றார். உடனே, கான்ஸ்டபிள் வாலிபர், அந்த டெலிபோன் கருவியை பலவந்தமாய் பிடுங்கி, உள்ளபடியே வாய்க்கும் காதுக்கும் வைத்து பொருத்தியபோது, கோபக்கார இன்ஸ்பெக்டர், "என்னடா செய்யுறே நாய்ப்பயலே' என்றார். எதிர்முனையில் என்ன கிடைத்ததோ? இன்ஸ்பெக்டரின் காக்கிச் சட்டை நனைந்தது. வேர்வையா? சிறுநீரா? என்று அனுமானிக்க முடிய வில்லை. பிறகு, "கான்ஸ்டபிளைத்தான், நான் திட்டினேன் ஸார். தப்புத்தான் ஸார். கான்ஸ்டபிளையும் அப்படி திட்டக்கூடாதுதான் ஸார்" என்று கெஞ்சினார்.
எதிர்முனைக்காரர், 'ரிலீஸ் த பாய் செல்வா. நோ எப் ஐ ஆர். எங்கே நான் சொன்னதைச் திருப்பி சொல்லு' என்று கேட்டிருக்க வேண்டும் உடனே இன்ஸ்பெக்டர், "ரிலீஸ் த பாய் செல்வா. நோ எப்.ஐ.ஆர்' என்று சத்தம் போட்டு கூவினார். எதிர்முனையில் இருந்து என்ன கிடைத்ததோ, எஸ் ஸார்' செல்வாவை விடுதலை பண்ணிடுறேன். கேஸ் புக் பண்ணல ஸார். அந்த தாமோதரன் பெரிய புள்ளி ஸார். நீங்கதான் அவர் கிட்டயும்... ஓகே.... ஓகே... ஸார்... உங்க உத்தரவுதான் முக்கியம். அப்புறம், என் மேல் போட்ட சார்ச்சீட்டு விசாரணை அறிக்கை உங்க டேபிள்லதான் இருக்குதாம். தப்புத்தான் ஸார்.... சமய சந்தர்ப்பம் தெரியாம பேசுறேன் ஸார்.' என்று சொல்லிவிட்டு, ஆயாசத்தோடு போனை கீழே வைத்தார். முன்பெல்லாம் டெலிபோனில், எஸ் ஸார்' என்று சொல்லிவிட்டு, பிறகு, தனது ஜுனியர் சகாக்களிடம், சம்பந்தப்பட்ட ஐ பி.எஸ். அதிகாரி தனது ஆலோசனையை கேட்டதாக தம்பட்டம் அடிக்கும் இவர், இப்போது குட்டு வெளியானதால் குட்டுப்பட்டவர்போல் கிடந்தார். எவ்வளவு பெரிய பதவியிலும் இருக்கும், தப்புத் தண்டா ஆசாமி எவருக்கும், மேலதிகாரி என்று வந்துவிட்டால், வேர்வை சுரப்பிகள் விரைந்து செயல்படும் என்பதும், அசல் பிச்சைக்காரர்கள் மாதிரி கெஞ்சுவார்கள் என்பது போலவும் இன்ஸ்பெக்டர் ஒரு நாடமாடும் வெறும் காக்கித் துணியானார்.
காலவர்கள் திறந்தால் நேரமாகும் என்று நினைத்தவர் போல், சுவரில் அடித்த பித்தளை கம்பிகளில் தொங்கிய சாவிகளில் ஒன்றை எடுத்து லாக்கப் அறையை திறந்தார். கான்ஸ்டேபிள் ஒருவர், மொபைல் போலீஸ் ஒப்படைத்த செல்வாவை, பய பக்தியோடு பார்த்தார். எங்கிருந்தோ கொண்டு வந்த லுங்கியை அவனை அணியும்படி கெஞ்சினார். ரத்தம் பிசிறிய சதைக் கோடுகளை மறைப்பதற்கு சட்டை இல்லை. அடித்த அடியில் அது நூல் கற்றைகளாகி விட்டன. எதிர்முனைக்காரரின் மகள் வரப் போகிறாளாம். அதற்குள், இந்த பயலின் இடுப்புக்கு மேல் நிர்வாணமான பகுதியை எப்படி மறைப்பது?
இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டரின் காதில் கிசுகிசுத்தார். அவர் லாக்கப்பிற்குள் போய் அங்கே நின்று கொண்டிருந்த ஒருத்தனின் சட்டையை கழட்டி, செல்வாவிற்கு அவரே மாட்டி விட்டு, அவனை வி.ஐ.பி. போல் சர்வ சலாம்களுடன் வைத்துவிட்டு, தனது ஆபீஸ் முதலாளி பார்த்த திசையை பார்த்தார். ஒரு அழகான பெண். அநேகமாக எதிர்முனைக்காரரின் மகளாக இருக்கவேண்டும். அவளோடு, நாற்பது வயது மதிக்கத்தக்க பிள்ளைக்குட்டி தம்பதியினர்.
இன்ஸ்பெக்டர், தானே கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியேறியவர் போல், உடனடியாய் எழுந்து அவர்களை நோக்கி நடந்து, வரவேற்றார்.
"நீங்க மிஸ் கவிதாதானே?”
"ஆமாம் ஸார்."
"என்ன மேடம்? நான் இன்னார் மகள்னு நீங்களே சொல்லியிருந்தால் இவனை எப்பவோ திருப்பி அனுப்பியிருப்பேன்."
“நானும், நீங்க சொன்னது மாதிரி இன்னார் மகள்னு போன் செய்தேன். யாரோ ஒருத்தன் வைடி போனைன்னு சொன்னான்"
அப்படிச் சொன்னது யாராக இருக்கும் என்பது போல், கடுமையாய் பாவலா செய்தபடியே இன்ஸ்பெக்டர், காவலர்களைப் பார்க்க, அவர்கள் "நீதான் நீயேதான்" என்பதுபோல் எதிர்பார்வை பார்த்தார்கள். ஆனாலும், இன்ஸ்பெக்டர் சமாளித்தார். இங்கே யாரும் அப்படி பேசுறவங்க கிடையாது மேடம். நீங்க கேட்டது டெலிபோன் கிராஸ் டாக்கா இருக்கும்."
இதற்குள், இரும்பாய் உட்கார்ந்திருந்த செல்வா, மெழுகாய் குழைந்து எழுந்து, நின்றான். சித்தப்பாவின் காலில் அப்படியே விழுந்து, "உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன் சித்தப்பா என்னை மன்னிச்சிடுங்க சித்தப்பா" என்று காலைக் கட்டி அழுதான். அவர், அவனை தூக்கி நிறுத்திவிட்டு, தனது கண்களை துடைத்தபோது, செல்வா, சித்திக்காரியின் தோளில் சாய்ந்து, "சித்தி! எங்கம்மா திட்டாத திட்ட, நீங்க திட்டல... எங்கம்மா போடாத அளவுக்கு எனக்கு சோறு போட்டீங்க... நான் உங்ககிட்ட நன்றியில்லாம நடந்துட்டேன். நீங்களும் என்னை மன்னிக்கணும். உங்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும்படியா பண்ணிட்டேனே" என்று விம்மினான். கவிதாவையும் நன்றியோடு பார்த்தான். அந்த பார்வையில் நளினம் இல்லை. ஆனாலும், எல்லோரையும் மோசடி பண்ணிட்டேனே' என்று, கவிதாவை பார்த்தபடியே, கண்களை கைகளால் மறைத்துக் கொண்டான். குழந்தைகளை இருபக்கமாக அணைத்துக் கொண்டான்.
கவிதா, மட்டும் சிறிது விலகிப்போய் துப்பாக்கி அப்பிய சுவர் பக்கம் முகம் போட்டு, அந்தச் சுவரில் கண்ணீர் கோடுகளை போட்டுக் கொண்டிருந்தாள். இவளை, நோட்டமிட்ட இன்ஸ்பெக்டர், எல்லா விவகாரத்தையும் சொன்ன பயல், இவள் காதல் விவகாரத்தை மட்டும் சொல்லாமல் விட்டதில் திகைத்தார். "ஒருவேளை விசாரிப்பு சரியாக கிடைக்கவில்லை என்று பொருளா? அல்லது ஒரு பெண்ணின் பெயரை அம்பலப்படுத்தக்கூடாது என்ற பெருந்தன்மையா? என்று ஆய்வு செய்தார்.
எல்லோரும் பேசி, இடக்கு மடக்காய் விவகாரம் விகாரமாகி விடக்கூடாது என்று நினைத்த இன்ஸ்பெக்டர், பொதுப் படையாகக் கேட்டார்.
"நீங்க தானே இவரோட சித்தப்பா சிவனுப்பாண்டி? அந்தம்மா உங்க ஒய்ப் லட்சுமி. இது அருண், அவள் சுபேதா, சரியா..."
சரிதான் என்பதுபோல், குழந்தைகள் உட்பட எல்லோரும் தலையாட்டினார்கள். இன்ஸ்பெக்டர், மீண்டும் கேட்டார்.
"மோகனன் என்கிறவன் யாரு?"
செல்வா, குடும்பத்தினர் மெளனமாய் நின்றபோது, கவிதா, கண்ணீரை துடைத்துக்கொண்டு, "அவன் ஒரு சமூக விரோதி. என் கூடப்பிறந்த அண்ணன்." என்றாள்.
இன்ஸ்பெக்டருக்கு, போன மூச்சு திரும்பி வந்தது. இந்த மோகனனை வைத்தே, எதிர்முனை கொம்பனை மடக்கி விடலாம். தனக்கு எதிராக போடப்பட்ட சார்ச்சீட்டும், விசாரணை அறிக்கையும், பதவி உயர்வாக மாறும் என்பதில் அவருக்கு சந்தேகம் இல்லை ஆனாலும், அந்த சமயத்தில், அவர் மனிதனாகவே பேசினார் சிவனுப்-பாண்டியை நேரடியாகவும், கவிதாவை மறைமுகமாகவும் பார்த்தபடியே பேசினார்.
"இந்தப் பையன் உங்க எல்லார் மேலயும் உயிரையே வைத்திருக்கான். விதி வசத்தால் தன்னையும் மீறி இப்படி ஆயிட்டான். இவன் வேணுமுன்னே உங்கள நோகடிக்கல. இப்போ .... இவன் கிட்டத்தட்ட ஒரு மனநோயாளி மாதிரி"
செல்வா, குறுக்கிட்டான்
"எல்லா விஷயத்தையும் சொல்லிடுங்க இன்ஸ்பெக்டர் ஸார். இல்லாட்டி, எங்க சித்தியாலதான் இப்படி ஆயிட்டேன்னு, எங்க சித்தப்பா எங்க சித்தியைத் திட்டுவார்.”
"பேசாம இருடா. பெரியவங்க பேசும்போது குறுக்கிடப்படாது என்கிற பண்பாட்டை கத்துக்கோ மிஸ்டர். சிவனுப்பாண்டி! இவன் எல்லா விஷயங்களையும் என்கிட்ட சொல்லிட்டான். இவன் ரோசமா ஓடிப்போனதும், செல்லமாய் பழகின குழந்தைகளை வெறுத்ததும், இவன் தானாய் செய்ததல்ல. அதுக்கு காரணங்கள் இருக்கு அது உங்களுக்கு தெரிய வேண்டாம். அதற்கு உரியவர்களை கவனிக்க வேண்டியது என்னோட பொறுப்பு. இப்போது, இவனுக்கு தேவை மனோதத்துவ ரீதியான சிகிச்சை என் தங்கை சத்தியா, கிளீனிக்கல் சைக்காலஸிஸ்ட் அவள் கிட்ட ஒரு கேசை கொடுக்கிறதா நினைக்காதிங்க. பையனோட சிக்கல்கள்களை சரிப்படுத்திடுவாள். இல்லையானால், அப்பாய்மெண்ட் வாங்கவே ரெண்டு மாதம் ஆகும்"
இன்ஸ்பெக்டர், டெலிபோனில், தங்கையிடம் பேசினார். பிறகு, இவர்களிடம், ''நாளைக்கு காலையில் பத்து மணிக்கு அப்பாய்மெண்ட் கொடுத்திருக்காள். இந்த விசிட்டிங் கார்டுதான் அவளுடைய அட்ரஸ். என்னுடைய மைத்துனரும், அதாவது தங்கையின் கணவரும் மனோதத்துவத்தில் லண்டனில் டாக்டர் ஆப் லெட்டர்ஸ்' என்று பட்டம் பெற்ற இரண்டு இந்தியர்களில் ஒருவர். ஆனாலும், தொழிலுக்கு மதிப்பு கொடுக்காத தேசமாச்சே நமது நாடு. எதுக்காக சொல்றேன்னா, என் தங்கையால முடியாட்டாலும், அவர் சரிப்படுத்திவிடுவார் என்கிறதுக்காகத்தான் சொன்னேன் நீங்க எல்லாரும் இந்த மேடம் கவிதாவுக்கு நன்றி சொல்லணும். இவங்க அப்பாதான் இந்த மேடத்தோட பெயரை என்கிட்ட சொன்னவரு . செல்வா ! ஆயிரம் மனச்சிக்கல்லயும் நீ கிரேட்டுடா என்று கவிதாவையும், அவனையும் மாறி மாறி பார்த்தபடி, பேசினார். கவிதா, புரிந்து கொண்டாள். செல்வா, வலி க்கிற தசைக்கோடுகளை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
சித்திக்காரி, ஒரு லா பாயிண்டை கிளப்பினாள்.
"அந்தம்மாகிட்ட இவனுக்கு என்ன சிக்கலுன்னு நீங்க சொல்லலியே அய்யா.''
"உங்களுக்கு தெரியக்கூடாது என்கிறதுக்காகத்தான் சொல்லல இனிமேல் என் தங்கைபாடு... இந்தப் பையன் பாடு.... உங்ககிட்ட எந்த பணமும் வாங்க மாட்டாளாம். காரணம்.... இவன் பிரச்சினை, அவள் தொழிலில் ஒரு சவாலாம். சரி... போயிட்டு..."
குழந்தைகள் தவிர, எல்லோரும் முகத்தில் ஈயாடாமல் போனார்கள் வாசலுக்கு போய்க் கொண்டிருக்கும்போது, இன்ஸ்பெக்டர், "மிஸ் கவிதா.. இங்க வாறீங்களா - நீங்க மட்டும்." என்றார்.
கவிதாவும், இன்ஸ்பெக்டரும் பாதி வழியில் சந்தித்துக் கொண்டார்கள்.
"மிஸ் கவிதா! இவனை நீங்க நண்பனாகவோ இல்ல காத... ஸாரி அண்டை வீட்டுக்காரனாகவோ அடைந்ததற்கு பெருமைப் படணும். நீ காதலித்த பெண் யாருடான்னு ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அடி என்கிற மாதிரி அடி கொடுத்தோம். அப்படியும் அவன் மூச்சு விடல. ஆனால், உங்கண்ணன் மோகனன் மேல, நான் ஆக்ஷன் எடுக்கலாமுன்னு யோசிக்கேன்."
"எடுத்தாலும் நான் கவலப்படமாட்டேன். செல்வாவை, எங்கிட்ட இருந்து பிரித்த கொடியவன் அவன்."
இன்ஸ்பெக்டர், சிறிது ஏமாந்தார். சுருதி மாற்றிப் பேசினார்.
"தட்ஸ் ஆல் ரைட் நான் ஆக்ஷன் எடுக்கிறதாய் இல்ல. இப்போ அது முக்கியமில்ல. உங்க காதலுக்காக நீங்க பெருமைப்படலாம். பையனை, என் சிஸ்டர் உங்ககிட்ட முன்னால எப்படி இருந்தானோ, அப்படி ஒப்படைத்துடுவாள் 'பை தி பை' என் பிரமோஷன் பைலும், விசாரணை அறிக்கையும் உங்கப்பா டேபிள்ல இருக்கு.”
"கண்டிப்பா அப்பா உதவுவார் ஸார். நீங்களும் ஒங்க சிஸ்டர்கிட்ட பழையபடியும் அழுத்தமாகப் பேசி.."
"கவலைப்படாதீங்க மேடம். உங்கள மாதிரி . என்ன மாதிரி நல்லவங்களுக்கு நல்லதே நடக்கும். நான் செய்த நல்ல காரியத்தை, நானே உங்க அப்பாகிட்ட டெலிபோன்ல சொல்லட்டுமா? இல்ல நீங்க சொல்றீங்களா?"
"நானே சொல்லிடுறேன் ஸார். அதுதான் அவர் டேபிள்ல இருக்கிற உங்க பைலுக்கு எபெக்டா இருக்கும் தேங்க் யூ ஸார்."
கவிதா, மனதிற்குள் சிரிப்பும் அழுகையுமாய் தேக்கி வைத்துக்கொண்டு, கால்களை தேய்த்து தேய்த்து நடந்தாள்.

