Chapter 14

செல்வா, தலைவிரி கோலமாக நடந்து நடந்து, சொந்த ஊருக்கே நடக்கப் போவதாக அனுமானித்தான். அந்த நடைவேகத்தில், அடையாரின் விளிம்பில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை இருக்கும் பிரதானச் சாலைக்கு வந்தபோது, இளைத்துவிட்டது. அயோத்தி நகரை தாண்டிய உடனே, காடு எங்கே இருக்கிறது என்று சீதை கேட்டாளாமே - அப்படிப்பட்ட இளைப்பு ஊருக்கு நடந்து போகமுடியாது என்பது புரிந்து விட்டது. தனக்குத்தானே ஒரு சமாதானமும் செய்து கொண்டான் ஊருக்குப் போய் சித்தப்பாவிற்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்கக்கூடாது. எதிரற்று போன எதிர்காலத்தைப் பற்றி, எங்கேயாவது உட்கார்ந்து யோசிக்கவேண்டும்.

இந்தியாவின் விஞ்ஞான மூளையான ஐ.ஐ.டி. க்கு அருகே உள்ள கிளைச்சாலையில் நடந்தான். வழக்கம்போல், குழந்தைகள் பூங்காவிற்குள் இந்தத் தடவை டிக்கெட் வாங்காமலே கண்மூடித்தனமாக நுழையப் போனான். வாட்ச் அண்டு வார்டு மேன் டிக்கெட் என்றான். வழக்கம்போல், ஒவ்வொரு தடவையும் தன்னை இப்படி கேட்க வைக்கும் அவன் மீது வார்டு எரிச்சலானான். அதேசமயம், அந்த குழந்தை முகத்தைப் பார்த்ததும், எரிச்சல் அனுதாபமானது. அதோடு, தான் கடமையில் கண்ணுமாய் இருப்பதை "கவுண்டனுக்கு” நிரூபித்துக்காட்ட பல வாய்ப்புக்களை வழங்கும் செல்வாவை, நன்றியுடன் நினைத்துக் கொண்டான்.

செல்வா, கவுண்டரில் போய் டிக்கெட் வாங்கிக் கொண்டு, அதை வாட்ச்மேனிடம் கிழிக்கக் கொடுத்துவிட்டு, கிழிப்பில் பாதியை வாங்காமலே உள்ளே போனான். ஓங்கி வளர்ந்த அத்தி, ஆல, அரச மரங்களின் அடிவாரங்களில் ஒவ்வொன்றிலும் கைகளை மட்டும் பிடித்துக் கொண்டிருந்த பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள், லுங்கியோடு திரிந்த இவனைப் பார்த்து சிறிது அச்சப்பட்டார்கள். அதேசமயம் தங்களைப் போலவே கல்லூரிக் கோடு தாண்டிய, கல்லூரி "மேட்டுகள்" அருகில் இருப்பதால், அச்சம் தவிர்த்தார்கள்.

செல்வா, அங்குல அங்குலமாக நகர்ந்து, அடி அடியாய் ஊர்ந்து, மீட்டர் மீட்டராய் தாவி, ஒரு ஆலமரத்தின் அருகே உள்ள கரையான் புற்றில் சாய்ந்து கால்களை நீட்டிக் கொண்டான். புற்றுமண் உரசலில் அவன் படிப்பும், பந்த பாசமும் கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபோன பழமொழியை நினைவுக்குக் கொண்டு வந்தது. அந்த புற்றின் உச்சி உடைந்து, சல்லடை போட்டது போன்ற குருத்து மண் துகள்கள், அவன் தோள் வழியாய் உருண்டோடிக் கொண்டிருந்தன. எதிரே சிறுவர் - சிறுமியர் சாய்வாய் போடப்பட்ட சறுக்குப் பலகையில் வழுக்கி வழுக்கி விழுந்து கொண்டிருப்பதை பார்த்ததும், சித்தப்பா பிள்ளைகளின் நினைவு வந்தது. கூடவே கண்ணீரையும் கொண்டு வந்தது. அந்த நினைவோடு, கவிதாவின் நினைவு வெறுப்புக் குரியதாகவும், மோகனனின் நினைவு "லவ் - கேட்' எனப்படும் விருப்பும் வெறுப்பும் கலந்த கலவை உணர்வாகவும் அவனை பிழிந்தெடுத்தன. சித்தியை, அடிக்கப் போவது போல், அவளை நெருங்கி மிரட்டியதற்காக, நாக்கை பற்களால் துண்டாக்கப் போனான்.

செல்வா, அந்த புற்றின் மேல் சாய்ந்தான். சாயச் சாய அது சரிந்தது. இதை புதை குழியில் கிடப்பது போல் கிடந்தான். ஆங்காங்கே கேட்ட சிரிப்பும், கும்மாளமும் தன்னை நையாண்டி செய்வதுபோல் தோன்றியது. கணக்கிலும், விஞ்ஞானத்திலும் நூற்றுக்கு நூறாய், தொன்னூறாய் வாங்கியவன் கல்லூரி வகுப்புக் கணக்கில் பத்துக்கு பத்தாய் வாங்கியவன், இப்போது மனிதன் என்ற "ஒன்று" போய் சைபராய் கிடந்தான். அந்த எதார்த்தத்தை உள்வாங்க முடியாமல், சிறிது நேரத்தில் பிணத் தூக்கம்.

"செல்வா .... செல்வா ...."

பதில் கிடைக்காததை கண்ட கவிதா, அவனை உலுக்கினாள். அவன் அருகே உட்கார்ந்து அங்குமிங்குமாய் ஆட்டினாள். அவன் மூக்கில் கை வைத்த பிறகுதான், அவளுக்கும் சுவாசமே இயங்கியது. அவனுக்குத் தெரியாமலே அவன் பின்னால் நடந்து, அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தளர் நடையாகி, அவன் தலை திரும்பிய பாதையில் நடந்தாள். பாம்புப் பண்ணையில் தேடினாள். பிறகு, ஒரு அனுமானத்தோடு இங்கே வந்தாள் மூச்சடைக்க அலைந்தாள். எப்படியோ கண்டுபிடித்து விட்டாள்.

"செல்வா... செல்வா.."

செல்வா, அவள் உலுக்கலில் இருந்து கண் விழித்தான் கோபத்தை காட்டுவது போல் பல் கடித்து எழுந்தான். ஆவேசக் குரலில் கேட்டான்.

"உன்னை யார் என் பின்னால் வரச்சொன்னது?" ''நான் ஒன்றும் உங்கள் பின்னால் வரல. நீங்கதான் என் முன்னால போனீங்க.”

கவிதா, சூழலை எளிமைப்படுத்த நினைத்தபோது, அவன் கடுமைப்படுத்தினான்

"ஒன்னால நான் பட்டது போதும். நீ ஒரு புழுகிணி.. மோசடிக்காரி. கூட்டிக் கொடுக்கிறவள். போடி..."

கவிதா, இந்த மாதிரி வார்த்தைகளை எப்போதும் எவரிடம் வாங்கி அறியாதவள். அவன் கோபம், அவளையும் தொற்றிக் கொண்டது.

"லுக் மிஸ்டர் செல்வா! நீங்க என்னை வெறுக்கிறதனால, நான் செத்துடமாட்டேன். வாழ்ந்து காட்டுவேன். ஆனால், உயிருக்கு உயிராய் பழகிய என்னை ஏன் வெறுக்கிறீங்க என்பதற்கு காரணங்களை கேட்க, எனக்கு உரிமை உண்டு. நீங்க சொல்லித்தான் ஆகணும்."

"சொல்றேன். உன்கிட்ட, என் மனசே நினைக்க பயப்படுற அந்தரங்கங்களை, சொன்னேன். ஆனால், நீ இப்போதைய உன் அம்மா, ஒரு டூப்ளிகேட் என்கிறதை சொல்லல."

"வயசுக்கு வருகிற பருவத்துல இருக்கிற மகளையும், நன்றாக படிக்கிற மகனையும் விட்டுட்டு, ஒருத்தி ஓடிப் போறான்னா - அவள், அம்மா இல்ல. பச்சைத் தேவடியாள். ஆனால், என் அப்பாகிட்ட வந்தவள் குழந்தை குட்டி இல்லாதவள். எங்க அப்பாவுக்கு ஆறுதல் சொல்வதற்காக வந்தவள், எனக்கு அம்மாவாகிப் போனாள். நீங்கள் சொல்கிறீர்களே டூப்ளிகேட் அம்மா, இந்த அம்மா என்னை பெற்ற அம்மாவைவிட பல மடங்கு பெரியவள். அம்மா என்றால் எனக்கு இவள்தான். இந்த அம்மாவை உங்களிடம் களங்கப்படுத்த நான் விரும்பவில்லை. இந்த அம்மாவா? நீங்களா? என்றால் எனக்கு இந்த அம்மாதான் முதலில் அவளால்தான், என் அப்பனின் ஆடாத ஆட்டத்தை சகித்துக் கொண்டிருக்கிறேன். நான் போட்ட நகைகள் பொதுச்சொத்து. அதனால், என் அம்மாவின் ஆலோசனைப்படி அப்பனை கழட்ட முடியாது என்பதால், நகைகளை கழட்டி விட்டேன். இதுதான் நீங்கள் என்னை வெறுப்பதற்கு காரணம் என்றால், நீங்கள் தாராளமாக என்னை வெறுக்கலாம்."

"இதுகூட எனக்குப் பெரிசில்ல... நாலு நாளைக்கு முன்னால என்னை பார்க்கிறதுக்காக கெட்டுப் போகாத பிரிட்ஜ் சாக்குல வரத் தெரிந்த உனக்கு, அதே மாதிரி ஏதாவது ஒரு சாக்கில் எங்க வீட்டுக்கு வந்து, நீ டூரில் ஒழியறதை சொல்லியிருக்கலாமே."

''கதவு மூடிஇருந்தால் வரவேண்டாமுன்னுதான் சொல்லியிருந்தேனே?"

"கதவு எங்க மூடி இருந்தது? முழுசா திறந்திருந்தது. உள்ளே போனால்.... உங்கண்ணன், நான் உனக்கு எழுதின லெட்டரை கைப்பற்றிட்டான். கடைசில உங்க அண்ணனுக்கு என்னை கூட்டிக் கொடுத்திட்டியேடி..”

கவிதா, சுருண்டு விழப்போனாள். அண்ணனைப் பற்றி, பிறர் சொல்லக் கேட்டிருக்கிறாள். என்ன நடந்திருக்கும் என்பதை அவளால் யூகிக்க முடிந்தது. அப்படி யூகிக்க யூகிக்க, அவள், ஆலமர விழுதை பிடித்துக்கொண்டே விம்மினாள். அந்த மரத்தின் தூணில் குப்புற சாய்ந்தபடியே, ஒப்பாரியாய் ஒப்பித்தாள்.

"நான் பாவி - படு பாவி - உங்களை இந்த கதிக்கு கொண்டு வந்த, அந்தப் பயலும் ஒரு அண்ணனா? கூடப் பிறந்த தங்கையோட காதலன்னுகூட தெரிஞ்சும், உங்கள விட்டு வைக்கலியா? உடன் பிறந்தே கொல்லும் வியாதியாய் போனானே..."

"மோகனனை திட்டாத... அவரு ரொம்ப ரொம்ப நல்லவரு."

கவிதா, செல்வாவை அதிர்ந்து போய், உடல் திருப்பிப் பார்த்தாள். அந்த மரத்தின் தூரிலிருந்து கீழ் நோக்கி சரிந்தாள். அவன் பேசியதின் தாத்பரியம் புரியப் புரிய அவளுக்கு, தான் அவனை இழந்ததை விட, அவன் தன்னைத்தானே இழந்ததே பெரிய கொடுமையாக தோன்றியது. இப்போது, அவன் திட்டியதும், முன்பு அவளைப் பார்த்த உடனேயே பின் வாங்கியதும் குறைந்த பட்ச எதிர்வினையாகவே தோன்றியது. அவளுக்கு மூச்சு முட்டியது. உள்ளுக்குள் ஏதோ ஒன்று சுழன்று சுழன்று சுற்றுவது போலானது. நினைத்து நினைத்து, நினைவற்றாள். மனம் சூன்யமானது. உடல் மரக்கட்டையாது. கண்கள் வெளிறிப் போயின. அந்த சுற்றுப்புறச் சூழல் ஒரு மயான காடுபோல தோன்றியது. ஆங்காங்கே நடமாடிய காவலாளிகள் வெட்டியான்கள் போல் பட்டனர். அருகருகே இருந்த ஜோடிகள் மோகினி வடிவங்களாய் தோற்றம் காட்டின.

இதற்குள், சுயத்திற்கு வந்த செல்வா, அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தான். அவள் அப்படியே அவன் மார்பில் சாயப் போனபோது, அவளை விலக்கி வைத்தவன் போல் ஆலமர அடிமர அடிவாரத்தில் அவளை சாய வைத்துவிட்டு யதார்த்தத்தை சுட்டிக் காட்டினான்.

"நல்லதோ கெட்டதோ - நடந்தது நடந்துவிட்டது. என் மனசில இருந்த உன்னை, ஒங்கண்ணன் துரத்திட்டான். அவனை நினைக்கும் இந்த மனம், இனிமேல் யாரையும் நினைக்காது இப்போதும் உன்னை நேசிக்கிறேன். காதலியாக அல்ல... பெண்ணாகக்கூட இல்லை. தனிமையில் விடப்பட்ட ஒரு மனித ஜீவியாக நினைக்கிறேன். அதனால..."

"போதும் நிறுத்துங்க. எதிர்காலத்துல ஒரு நல்லவனா பார்த்து கல்யாணம் செய்துக்கன்னு சொல்லுவீங்க. அவ்வளவுதானே?"

"அப்படிச் சொல்ல எனக்கு உரிமையில்ல. உண்மையைச் சொல்லப்போனால், ஒங்கண்ணனோட எனக்கு கிடைத்த முதல் அனுபவத்தில் எப்படி எனக்கு குமட்டிக் கொண்டு வந்ததோ, அப்படி உன்னோட உரசல்களும், முத்தங்களும் இப்ப எனக்கு குமட்டுது.”

"ஏய்.. பாவி. நீ உருப்படுவியா? என்னையும் இவரையும் இந்த நிலைக்கு ஆளாக்கிட்டு எங்கேயோ போயிட்டியேடா- நீ நிச்சயம் நல்லா இருக்க மாட்டா "

"நல்லாத்தான் இருப்பார். அவரோட முகவரிய அவர் கிளப்ல போய் வாங்கிட்டேன். நானும் உருப்படுறதுக்கு ஒரு வழி இருக்கு. உங்கண்ணன் நிரந்தரமாய் போன பம்பாய்க்கு, நானும் போகப் போறேன். என் கையில பைசா இல்லை. நாம பழகின தோசத்துக்காக, நீ மட்டும் டிக்கெட்டும், செலவுக்கும் பணம் கொடுத்தால், நான் கரையேறிடுவேன்."

கவிதா, பிரமித்தாள். பித்துப் பிடித்தவளாய் தலையை அங்குமிங்குமாய் சுற்றினாள். சுற்றும் முற்றும் சூழ்ந்த வேடிக்கைக் கூட்டம், அவள் கண்ணில் கூட பதியவில்லை . கைகளை உதறினாள். கண்களை உருட்டினாள். முன் பல்லால் பின் உதடுகளை கடித்தாள். அய்யோ அய்யய்யோ என்றாள். அந்த கூட்டத்தின் தலைகளையும் மீறிப் பார்த்த செல்வாவின் கண்களில், எதிர்ப்புற உதிய மரத்தின் ஒதுக்குப் புறத்தில், அறுபதைத் தாண்டிய ஒரு பெரியவர், கண்பட்டார். ஆடை அலங்காரம் கச்சிதம். வாலிபன் போல் பொம்மை சொக்கா போட்டிருந்தார். சந்தேகம் இல்லை. மோகனன் அழைத்துச் சென்ற அந்த கிளப்பில், நிர்வாணமாக நின்றபடி, தன்னை நிர்வாணப்படுத்திக் கொண்டிருந்தவர். அவரை ஒட்டினாற் போல் ஒரு பத்து வயதுச் சிறுவன். அவனது ஒரு கரம், பெரியவரின் தொப்புளுக்கு கீழே போயிருந்தது.

செல்வா, எழுந்தான். வீர அபிமன்யூ போல வேடிக்கை கூட்டத்தை கிழித்தபடியே எதிர்ப்புறம் கால் கிலோ மீட்டர் வரை, குதிகால்கள் தலையில் தட்டாக் குறையாய் ஓடி, அந்த பெரியவர் முன்னால் மூச்சடைக்க நின்றான். அவர், அவனை ஆசுவாசப் படுத்திப் பேசினார்.

"ஹலோ.. நீங்க மோகனனோட பார்ட்னர் செல்வாதானே? ஐ அம் தாமோதரன் அன்றைக்கு கிளப்ல பார்த்திருப்பீங்களே?"

"அதிருக்கட்டும். அந்தப் பையன் யார்?"

"இதுவெல்லாம் சொல்லியா தெரியணும். என் பக்கத்து வீட்டு குடிசைப் பையன். அவனுக்கு பிடித்தமான குலோப் ஜாம், கட்லட், சென்னா பூரி - இதுங்கல வாங்கிக் கொடுப்பேன். கை நிறைய காசும் கொடுப்பேன். அவனுக்கு பிடித்ததை நான் கொடுக்குறதால, எனக்கு பிடித்ததை அவனும் செய்யுறான். அவ்வளவுதான்."

செல்வா, அந்த சிறுவனை தூக்கி நிறுத்தினான். கன்னத்தில் மாறி மாறி அடித்தான். தலையில் கை நிறைய குட்டினான். பிறகு, கத்தினான்.

"இந்த அயோக்கியன்கிட்ட மாட்டிக்காதடா. பெண்டாளப் பிறந்தவங்கள மாதிரி.. இவன் ஆணாளப் பிறந்த அயோக்கியன் திரும்பி பாராமல் வீட்டுக்கு ஓடுடா. முதல்ல ஒன் வீட்டு அட்ரஸை சொல்லு."

"அப்பா பேரு ஜெயபால். மயிலாப்பூர் கபாலித் தோட்டத்துல மூனாவது சந்துல எட்டாம் நம்பர் வீடு"

அந்தப் பெரியவர். பெரியவர் என்ன பெரியவர்.. கிழட்டுப் பயல். அவசர அவசரமாக பேண்ட் பட்டன்களை மூடியபோது, செல்வா, அந்த பையனின் பிடரியில் ஒரு அடி போட்டான். "இனிமேல் இந்த மாதிரி காரியத்துக்கு சம்மதிப்பியா? சம்மதிப்பியா?" என்று கேட்டபடியே அடித்தான்.

"அடிக்காதண்னா - அடிக்காதண்னா - மாட்டேன் மாட்டேன் மாட்டவே மாட்டேன் "

அந்தச் சிறுவன், பையை உப்ப வைத்த பைவ் ஸ்டார் சாக்லேட்டுகளையும், பூமர் பப்லுகாம்களையும், அந்த கிழவரின் முகத்தில் கல்லெறிவது போல் எறிந்தான். பிறகு கைகளே காலாகும்படி, அவற்றை தொங்க போட்டபடியே ஓடினான். ஓடிக்கொண்டே இருந்தான்.

இன்னும் பிரமிப்பிலிருந்து மீளாத தாமோதரக் கிழவன் மேல், செல்வா பாய்ந்தான். அவரை மல்லாக்கத் தள்ளி வயிற்றில் ஏறிக்கொண்டு முகத்திலும் கழுத்திலும் மார்பிலும் குத்தினான். கால்களால் இரண்டு காதுகளையும் நசுக்கினான். கூப்பாடு போடப்போன அவர் வாயில் மண்ணை அள்ளிப் போட்டு குத்து குத்தாய் குத்தினான். தாமோதரனின் வாய் உரலானது. அதற்குள், கிடந்த மண், தானியமானது. செல்வா, கை உலக்கையானது.

கவிதா, ஓடோடி வந்தாள். அவள் பின்னால் வேடிக்கை கூட்டமும் ஓடி வந்தது. அதற்குள் பூங்காவின் வாட்ச் அண்டு வார்டு வீரர்கள், செல்வாவை கீழே தள்ளி முன் கைகளை பின்புறமாய் வளைத்துப் பிடித்தார்கள். அந்தக் கிழவர் சிறிது நேரம் வெட்கத்தால் தலை கவிழ்ந்தார். அந்த தலையை நிமிர்த்துவதுபோல், "இவனை ஒரு வாரமா வாட்ச் பண்ணிகிட்டிருக்கேன். சரியான பைத்தியம். மேலதிகாரிகள் கிட்ட சொன்னால், 'பைத்தியத்துக்கு, எல்லாரும் பைத்தியம் மாதிரி தெரியுமுன்னு' என்னை நக்கல் பண்றாங்க..." என்றான் ஒரு வார்டு.

தாமோதரன் கிழவருக்கு தப்பிக்க வழி கிடைத்தது போல் தோன்றியது. மண் கலந்த கையோடு செல்லுலார் போனை எடுத்தார்.