Chapter 12

கவிதா, வந்ததும் வராததுமாக வாக்கிங்' என்ற சாக்கில், அந்த தெருவில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தாள். அப்பாவும் அம்மாவும் தன் கண்ணெதிரில் கொஞ்சுக் குலாவிய தணிக்கையற்ற காட்சிகளை செல்வாவிடம், சொல்லிச் சொல்லி சிரிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். அம்மாவின் பக்கத்தில் தன்னையும், அப்பாவின் பக்கத்தில் அவனையும் கற்பனை செய்து கொண்டதை சொல்ல வேண்டும் என்று நினைத்தபோது, அவள் முகம் சிவந்தது. சொல்கிறோமோ இல்லையோ, உடனடியாக அவனை இப்போது பார்த்தாக வேண்டும்.

பொதுவாக, நைட்டியுடன் காலையிலும் மாலையிலும் அந்தத் தெருவில் நடைபோடுகிறவள், அவன் வந்தால் அவனுடன் சேர்ந்து, போவதற்காக பாவடை தாவணி மாதிரி தனித்தனி நிறத்தோற்றம் காட்டிய கீழே வெளிர் மஞ்சளும், மேலே மஞ்சள் சிவப்புமான புடவையில், இரண்டு சக்கர வாகனத்தை காம்பவுண்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு, அங்குமிங்குமாய் சுற்றினாள். "ஏம்மா! அல்பாய்சு” என்று சொன்ன வேன் டிரைவர், அப்படி சொல்லப்பட்டவள் கவிதா என்பதை உணர்ந்ததும், "மன்னிச்சுடுங்கம்மா" என்று சொன்னான். அவன் சொன்னது காதில் ஏறாமல் நடந்து கொண்டிருந்த கவிதா, ஏதேச்சையாய் வேனுக்குள் எட்டிப் பார்த்து அதிர்ந்து போனாள். அந்த வாகனத்திற்குள் அருணும், சுபேதாவும் இருந்தார்கள். காக்கா பூக்களுக்குள் இருக்கும் வெள்ளை மொட்டுக்களாக பிள்ளைகள் பெரிய மனித தோரணையில் முதுகுச் சுமையோடு உட்காந்திருந்தன.

வேன், அங்கே நின்ற நேரத்திற்கு ஈடு கட்டுவதுபோல் பாய்ந்து பறந்தது. கவிதா அதிர்ச்சியில் தலையை பிடித்துக் கொண்டாள். ஒருவேளை செல்வாவை, அவன் சித்தி துரத்தியிருப்பாளோ? இவனே ஒருநாள் தன்னிடம் சொன்னதுபோல் எங்கேயாவது ஓடிப் போய் இருப்பானோ? அல்லது உடல் நலம் சரியில்லாமல்....

கவிதாவால், பொறுக்க முடியவில்லை. உடனடியாய் ஒரு தீர்மானத்திற்கு வந்தாள் சஞ்சலப்படுகிற மனம் அந்த மனத்துக்காரனை அல்லது காரியை கோழை போல் சித்தரிக்கிறது. பிறகு அந்த சஞ்சலம் உச்ச கட்டத்திற்கு போகும்போது, அதுவே ஆபத்துக்கு பாவம் இல்லை என்று ஒரு முடிவான தீர்மானத்திற்கு வந்துவிடுகிறது அதற்குப் பிறகு எண்ணிப் பார்ப்பது என்பது பொதுவாக இல்லை. இந்த மனோதத்துவ விதிப்படியோ என்னமோ, செல்வா வாடும் அல்லது வாட்டப்படும் வீட்டிற்கு ஏதாவது ஒரு சாக்கில் போயாக வேண்டும். போவது நிச்சயம். சாக்கு என்னவென்றுதான் புரியவில்லை.

பொய் வேடம் போடும் மெய்மைக்கும், சகவாச தோசத்தில் "புரைதீர்ந்த" பொய், வாங்காமலே வந்துவிடுகிறது. அப்பா, அம்மாவை முந்திக்கொண்டு ஒருநாள் முன்னதாக வந்த அவள், இப்போது வீட்டிற்குள் ஓடினாள். பள்ளியில் வகுப்பு பரீட்சை என்று தந்தையின் அனுமதியோடு வந்தவள், அங்கு பிரிட்ஜியில் வைத்தியிருந்த பால் பாக்கட்டுகளை வெயிலில் போட்டாள். அது ஈரம் உலர்வது வரைக்கும் காத்திருக்க முடியாமல், தவித்தாள். கூடவே ஒரு கற்பனை. இன்று வீட்டில் யாருமில்லை. இன்றைக்கு செல்வாவை வீட்டிற்குள் அழைத்து, ஆசை தீராமலே அணைத்து, சுவை தீராமலே பேசி, தனது டூர் அனுபவங்களை சொல்ல வேண்டும். அதற்காகத்தான் முந்திக் கொண்டு வந்தவள்.

அரைமணி நேரம் கழித்து, பால் பாக்கட்டுகள் கையை குளிர்விக்காமல் சூடாக்கியதில், அவள், குளிர்ந்து போனாள். ஒரு எவர்சில்வர் தட்டை எடுத்தாள். அது கண்ணாடி பளபளப்பில் சூரிய ஒளி கற்றைகளை பிரதிபலித்து, அதன் மேலுள்ள ஆப்பிள் பழங்கள், சப்போட்டா பழங்களில் மின்னி, அதிலிருந்த தூக்குப் பையில் ஊடுறுவியது.

கவிதா, காலிங் பெல் குரலோடு ஆன்ட்டி- ஆன்ட்டி” என்று சொந்தக் குரலையும், கொடுத்தபோது, தாளிட்ட கதவு தானாய் திறந்தது. சலிப்போடு வெளியே வந்த சித்திக்காரி லட்சுமி, அவளை பார்த்ததும், சிறிதுநேரம் அப்படியே நின்றாள். வாராத மாமணி வந்ததுபோல், வாயகல நின்றவள், பிறகு வாயெல்லாம் பல்லானாள். உணர்வுகளுக்கு வார்த்தைகளால் ஒலி வடிவம் கொடுத்தாள்.

"என் கண்ணையே நம்ப முடியவில்லையே! ஒரு நாளும் வராத திருநாளா வந்திருக்கே? உன் கால் படுறதுக்கு இந்த வீடு பாக்கியம் செய்திருக்கு. உள்ளே வாம்மா..."

கவிதா, உள்ளே வந்தாள். சித்தி, தூசியும் தும்புமாய் கிடந்த ஒரு நாற்காலியை , தனது முந்தானையை துடைப்பமாக்கி, துடைத்துவிட்டு, கையும் ஓடாமல், காலும் ஓடாமல் நின்றாள். பெரிய இடத்துப் பெண் - இவள் வீட்டுக்காரரை பார்த்தாலேயே தொடை நடுங்க வைக்கும் அந்தஸ்திலிலுள்ள ஒரு பெரிய அதிகாரியின் மகள். சித்திக்காரி, வார்த்தைகள் வராமல் உளறிக் கொட்டினாள்.

"நீ... அய்யய்யோ தப்பு - தப்பு - நீங்க வந்தது எங்க வீட்டுக்குள்ள லட்சுமியே வந்தது மாதிரி இருக்கும்மா... என்னம்மா விஷயம்..."

லட்சுமி என்றதும், சிறந்த நடிகையான லட்சுமியை மனதில் பதிவு செய்தபடியே, கவிதா சத்தம் போட்டே பேசினாள். அந்தச் சத்தம், அவனை அங்கிருந்தால் வெளியே இழுத்துக் கொண்டு வரும் அளவிற்கு பெரிதாக இருந்தது. சாடை மாடையாக வீட்டுக்கு வரும்படி, அவனுக்கு சைகை செய்துவிட்டு போய்விடலாம். சித்திக்காரி, அதிசயப்பட்டு கேட்டாள்.

"தட்டும்... என்னம்மா இதுல்லாம்?"

''ஒருத்தர் வீட்டுக்கு முதல் தடவையா போகும் போது பழங்களோட போகணுமுன்னு அப்பா சொல்வார். இது கொடைக்கானலில் வாங்கினது - எடுத்துக்குங்க ஆன்ட்டி.."

லட்சுமி எடுத்துக்கொண்டே கேட்டாள்.

"இந்த தூக்குப் பையில் என்னம்மா?"

"ஒரு வாரமா வெளியூர் போயிருந்தோமா... எப்படியோ, கரண்டல ஒரு பேஸ் போய் பிரிட்ஜ் கரண் கணைக்ஷன் இல்லாமல் கெட்டுப் போச்சு. அதனால், இந்த தூக்குப் பையில் இருக்கிற, இந்த பால் பாக்கட்டுகளை, உங்க பிரிட்ஜ்ல வைத்துட்டுப் போகலாமுன்னு வந்தேன்."

சித்திக்காரி, தனது ஏமாற்றத்தை கை சொடுக்காகவும், அவமானத்தை கண் கலங்கியும் காட்டினாள். அந்தத் தட்டை கவிதா, தன் வீட்டிற்கு தானமாய் கொண்டு வந்ததாய் நினைத்ததில் ஒரு ஏமாற்றம். அதுகூடப் பெரியதாக தெரியவில்லை . பிரிட்ஜ் இல்லாத ஏழ்மையில் ஒரு அவமானம். தட்டுத் தடுமாறி பேசினாள்.

"ஸாரிம்மா... எங்க வீட்டுல பிரிட்ஜ் வாங்கி வைக்குற நிலமையில் நான் இல்ல... வாங்கக்கூடிய அளவுக்கு சம்பளம் வரத்தான் செய்யுது. ஆனால்... ஊர்ல இருந்து, தூரத்து உறவையும், பக்கத்து உறவையும் சொல்லி, இங்கே டேரா போட்டு, இந்த வீட்டையே சாத்திரம் சாவடி ஆக்கிட்டாங்க. அதோட அவருக்கு சாமர்த்தியம் அவ்வளவு பத்தாது."

கவிதா, இன்னும் அதிகமாய் சத்தம் போட்டே பதிலளித்தாள். செல்வா , இருந்திருந்தால் இந்நேரம் வந்திருப்பார். அவர் எங்கே போனார் என்பதை எப்படி கேட்பது? இவள் தயக்கத்தைப் போல, சித்திக்காரிக்கும் ஒரு தயக்கம் பக்கத்திலிருந்து கொண்டே இப்படிச் சத்தம் போட்டு பேசுகிறாளே, ஒருவேளை, அவளிடம், தன்னை யாராவது செவிடு என்று சொல்லியிருப்பார்களோ? என்ற அல்லாடல். எல்லாவற்றையும் விட, கேவலம் தன் வீட்டில், ஒரு பிரிட்ஜ் வாங்க முடியவில்லையே என்ற கொதிப்பும் தவிப்பும் கூடிய பேரவமானம். இதைப் புரிந்த கொண்டது போல் கவிதா, தலை குனிந்து நின்றவளின் முகத்தை நிமிர்த்தியபடியே, அவள் தோளில் கை போட்டாள். பிறகு, அவளை மாமியாராகவும், தன்னை மருமகளாகவும் பாவித்துக் கொண்டு, மாமனாருக்கு வக்காலத்து வாங்கினாள்.

"மாமாவை நினைத்து நீங்க பெருமைப்படணும் அத்தே..."

ஆன்ட்டி, அத்தையானதில், அவள் அர்த்தம் கண்டுபிடித்து விடக்கூடாதே என்று ஆரம்பத்தில் பயந்த கவிதா , அவள் முகம் மரப்பொம்மையாய் இருப்பதைப் பார்த்ததும், இவளுக்கு தத்துவ உபதேசம் செய்ய தோன்றியது.

"மாமா... ஆயிரத்துல ஒரு அரசு ஊழியர் ஆன்ட்டி அவரோட ஆபீஸ் ஒரு பணச்சுரங்கம். அங்கிள் நினைத்தால் ஒரு நாளைக்கு ஆயிரம் ஆயிரமாய் அடிக்கலாம். பிரிட்ஜ் என்ன... வாஷிங்மெஷின், ஏ.சி., கம்யூட்டர், கார் - இப்படி "கைண்டா " வாங்கலாமாம். இவர் கண் பார்வைக்கு எத்தனையோ பேர் தவம் இருக்காங்களாம். எங்கப்பா சொல்வாரு... அதுவும் தலை குனிஞ்சுக்கிட்டே சொல்வாரு..."

"நீதான் மெச்சுக்கணும். ஆனாலும், எங்க வீட்டு மிஸ்டர் நேர்மையானவர் என்கிறதுல எனக்கும் பெருமைதாம்மா... எனக்கும் ஒரு பெண் இருக்காள்... உன்னை மாதிரியே வளரப்போறாள். இதையும் நான் நினைச்சுப் பார்க்க வேண்டியதிருக்கே. அதோட பெரிய இடத்துப் பெண்ணான உன்னை, ஒரு உருப்படியான சோபா செட்டில் உட்கார வைக்க முடியலையேன்னு ஆன்ட்டிக்கு ஒரு வருத்தம்."

"எளிமையாய் இல்லாமல் நேர்மையாய் இருக்க முடியாது ஆன்ட்டி "

சிறிது இடைவெளி மௌனம்.

இந்த இடைவெளியில் இரவு வீடு திரும்பும் கணவனிடம் கொடுக்க இருக்கும் கோரிக்கை பட்டியலில் சில அயிட்டங்களை கூட்டிக் கொண்டாள் சித்திக்காரி. கவிதா , சுற்றி வளைத்து விசயத்திற்கு வந்தாள்.

"ஒங்க வீட்டுப் பொருளை ஏதாவது பிரிட்ஜ்ல வைக்கணு முன்னா... யார் கிட்டயாவது கொடுத்தனுப்புங்க ஆன்ட்டி எங்க பிரிட்ஜ் இன்னும் ஒரு மணி நேரத்துல ரிப்பேராகி விடும். எங்கப்பா, டூர்ல இருந்தே, எலக்ட்ரிசிட்டி போர்டு சேர்மன் கிட்ட பேசிட்டாரு..."

இருவர் சிந்தனைகளும், தத்தம் உள் உலகிற்குள் சஞ்சரித்த போது, அதை கலைப்பதுபோல் மேற்கு அறைக்கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. அதிலிருந்து எட்டிப்பார்த்த செல்வாவைப் பார்த்து, சித்தி முகம் சுழித்தாள். கவிதா, சித்திக்காரிக்கு தெரியாமல், அவளுக்கு பின்னால் நகர்ந்து கொண்டு, தலைக்கு மேலே கையை வைத்து, அவனுக்கு சமிக்ஞை செய்தாள். செல்வா, கவிதாவை பார்த்ததுதான் தாமதம். ஏற்கெனவே நொந்து போயிருந்த கதவை படாரென்று சாத்திக்கொண்டான். சித்திக்காரி, கவிதாவிடம் ஒருபாடு அழுதாள்.

"என் வீட்லேயே இருந்துக்கிட்டு, எப்படி என்னை மூஞ்சில அறையறது மாதிரி சாத்துறான் பாரு... பால் கொடுக்கிற மாட்ட, பல்ல பிடித்து பார்க்கிறான். நீ, பெரிய இடத்துப் பெண்ணு... ஆனாலும், எப்படி ஒரு ஆம்பள வரான்னு என் பின்பக்கமா மறஞ்சிக்கிடறே - இதுக்குப் பேர்தாம்மா வளர்ப்பு முறை...”

அந்தக் கதவுச் சத்தம், கவிதாவையும் பேயாய் அறைந்தது. ஆனாலும், ஒரு ஆறுதல். அவன் லுங்கியில் இருப்பதை பார்த்துவிட்டு, தனது சமிக்ஞையினால் அவன் பேண்ட், சர்ட்டை போட்டுக் கொண்டு சிறிது காலம் தாழ்த்தி வருவான் என்று அனுமானித்தாள். அவர் சட்டை தொலளதொளப்பாய் இருக்கிற பார்த்தால், என்னை பார்க்காம இளைச்சிட்டார் போலிருக்கே.... சாதாரண இளைப்பல்ல... பாதி இளைப்பு... முக மெலிவில் பற்கள் தான் பெரிதாய் தோன்றின. அவள் கிள்ளி விளையாடிய கன்னங்கள், கிண்ணக் குழிகளாய் தோன்றின. அந்தச் சமயத்தில், அவன் கௌரவத்தில், தன் வீட்டு கௌரவமும் இருப்பதை புரிந்து கொண்ட சித்தி, சிறிது விட்டுக் கொடுத்துப் பேசினாள்.

"ஒரு வாரமாத்தான் இப்படி எதையோ பறி கொடுத்தது மாதிரி இருக்கான். மற்றபடி, நல்ல பையன்தான். இவருக்கு கூடப்பிறந்த அண்ணன் மகன். நான் இவனை என் சொந்த மகன் மாதிரிதான் நினைக்கேன். ஆனால், அவன்தான் இந்த ஒரு வாரமா."

கவிதா, நகைத்தை கடித்தபடியே மெல்லச் சிரித்தாள். அவர் தன்னால் தான் அப்படி இளைத்துப் போயிருக்கிறார். சொல்லாமல் கொள்ளாமல் போனது தப்புத்தான். ஆனால், கதவு மூடித்தானே கிடந்தது. என் மீது இருக்கும் உரிமையான கோபத்தை, இப்படி கதவைச் சாத்தி காட்டுகிறாரா... அல்லது தனக்கும் அவருக்கும் இருக்கும் உறவு சித்திக்கு தெரியக்கூடாது என்பதற்காக, அப்படி கதவை அறைந்தாரா? எப்படியோ, இப்போ பேண்ட், சட்டை போட்டுக் கொண்டிருப்பார். சீக்கிரமாய் தெருவிற்கு வருவார். என்னைப் பார்ப்பதற்காகவே அங்குமிங்குமாய் நடப்பார். ஆசாமியை அலைய விடக்கூடாது. வாசலிலேயே வரவேற்று, வீட்டுக்குள் கடத்த வேண்டும்.

"நான் புறப்படுறேன் ஆன்ட்டி "

"அதுக்குள்ள என்னம்மா அவசரம்? ஒரு ஜுஸ் கொண்டு வாரேன்"

கவிதாவின் பதில் சத்தம் வலுத்தது.

"நான் வீட்ல தனியாத்தான் இருக்கேன் ஆன்ட்டி... ஒரு பிரண்ட் வருவாங்க... நல்லா நேரம் போகும். சீக்கிரமா வாங்க..."

"இப்பவே வேணுமுன்னாலும் வாரேம்மா. ஒன் வீட்ட வெளியிலதான் பார்த்திருக்கேன்."

கவிதாவின், புயல் சத்தம் பூச்சத்தமானது.

"ஸாரி ஆன்ட்டி சீக்கிரமா போகணும்' என்கிறத, வாங்கன்னு என்று சொல்லிட்டேன். வீட்ல சாமான்கள் தாறுமாறா கிடக்குது. நாளைக்கு நானே வந்து உங்கள் கூட்டிட்டுப் போறேன். நான் வாரேன் ஆன்ட்டி ...”

கவிதா, அந்த வீட்டு உள்ளோட்டத்தை திரும்பித் திரும்பி பார்த்தபடியே, வெளியே வந்தாள். சொந்த வீட்டின் இரும்புக் கிராதிகளில் சாய்ந்தபடியே நின்றாள். கண்கள் மட்டும் அங்குமிங்குமாய் சுழன்றன. அவன் டிரெஸ் செய்வதற்கு பதினைந்து நிமிடம் நேரம் கொடுத்து நின்றாள். சித்தியிடம், வாங்கிக் கட்டிக் கொள்வதற்கு இன்னொரு பத்து நிமிடம். ஒருவேளை அவன் தன்னோடு அதிக நேரம் தங்கவேண்டும் என்பதற்காக, அவன் சாப்பிடுவதற்கும் நேரம் ஒதுக்கினாள். பிறகு நகத்தை கடித்தாள் இனிமேல் ஒருவேளை குளிக்கப் போகிறாரோ என்று நேர ஒதுக்கீடு செய்தாள். சித்தி, இன்னும் சமையலை முடித்திருக்க மாட்டாள் என்பதற்காக சிறப்பு நேர ஒதுக்கீடு வழங்கினாள் ஆகக்கூடி இரண்டு மனிநேரம் வரை கத்திருந்தாள். வீட்டுக்குள்ளும் போக முடியாமல், வெயில் நேரத்தில் குறுக்கும் நெடுக்குமாகவும் நடக்க முடியாமல், ால் வலியை சரிசெய்ய, அதை சிறிது முன்னால் நீட்டியபடியே கம்பிக் கிராதிகளில் சாய்ந்தாள். பிறகு, குறுக்கும் நெடுக்குமாய் கோணல் மாணலாய் நடந்தாள்.

அரைமணி நேரத்திற்குள், அவள் முகத்தில் ஒரு புன்னகை. அவன் ஆடை அலங்காரத்தோடு எதிரே வந்து கொண்டிருந்தான். கவிதா, அக்கம் பக்கம் பார்க்காமலே ஓடினாள். அவனை நோக்கி பறப்பது போல் கைகளை ரெக்கையாக்கிக் கொண்டாள். ஒரே நிமிடம். அவள் முகம், அமாவாசையாகியது. கூனிக்குறுகிப் போனாள். தலை தானாக கவிழ்ந்தது. செல்வா, அவளைப் பார்த்து திடுக்கிட்டு, ஒற்றைக் காலில் நின்றான். மோகனனின் பாணியில் அதே ஒற்றைக் காலை திருப்பி, வீட்டின் வெளி வாசல் கதவை மோதி, தன் வீட்டிற்குள் மறைந்து விட்டான்.

கவிதாவுக்கும், சுயமரியாதை கோபமானது. அந்த சுயத்தில், அவளுக்கு, அவள் கொண்ட காதலை தொடரவேண்டும் என்பதைவிட, அவனது பாரா முகத்திற்கு காரணம் கண்டு பிடிக்க வேண்டும் என்ற வேகம் ஏற்பட்டது. சொந்த அம்மாவே தன்னை எப்போது தொலைத்தாளோ, அப்போதே, எல்லோருடைய புறக்கணிப்பிற்கும் ஆயத்தமாக வேண்டுமென்று அடிக்கடி தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறவள். அவன் செய்த காரியத்தைவிட, அதற்கான காரணமே முக்கியமாய் பட்டது.

ஏதோ வெறி உந்த, அவன் போன வீட்டிற்குள்ளேயே போனாள். சித்தி எதிர்பட்டால் அதற்குரிய காரணத்தை சொல்வதற்கும் ரெடியாகி விட்டாள். செல்வா, ஒரு நாற்காலியில் உட்கார்ந்து ஒரு நாட்டியத்தை தொலைக்காட்சியில் பரவசமாய் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த பரவசத்திற்குரியவன், அந்த தொலைக் காட்சி நிகழ்ச்சியில், ஏற்கெனவே நாட்டியப் பதிவு செய்த அவள் அண்ணன் மோகனன். பம்பாய்க்கு திரும்பாப் பயணமாக போவதாய் அவள் பெயருக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு போய்விட்டான். உன் உறவு தொடரட்டும்' என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான். அண்ணனாகிய தன்னை அவள் புறக்கணித்து விடக்கூடாதே என்று அர்த்தத்தில், அப்படி அவன் எழுதியதாக, இவள் அர்த்தப்படுத்திக் கொண்டாள்.

கவிதா, இருமினாள்; செருமினாள் பின்னர், அந்த வீடு முழுவதையும் திருட்டுத் தனமாக பார்த்தபடியே, அவன் முடியை பிடித்து இழுத்தாள். செல்வாவின் முகம் மேல்நோக்கித் திரும்பியது. அவளைப் பார்த்ததும், அதே முகம், கால் கைகளை இழுத்துப் பிடித்து தரையில் நேராக நிறுத்தியது. வலது கை ரிமோட் கட்டுப்பாட்டு கருவியின் சிவப்பு பித்தானை அழுத்தியது கலர் கலரான அந்த வண்ணப் பெட்டி வெறுமையானது.

செல்வா , அவளை ஒரு முறைப்பு முறைத்துவிட்டு, அந்த அறையின் குறுக்கு வெட்டை நீளவாக்கில் நடந்து அறைக்கதவை உடையும்படி சாத்திக் கொண்டான். இதற்குள், சமையலறைக்குள் தொலைக்காட்சியின் ஆட்டத்தை பார்க்க முடியவில்லை யென்றாலும், பாடலை ரசித்துக் கொண்டிருந்த சித்திக்காரி, அது நின்று போனதும், காரணம் கண்டறிய வெளியே வந்தாள் கவிதாவை, மீண்டும் பார்த்த மலைப்பில் நின்றாள் கவிதா, தனது வருகையின் நோக்கத்தை திசை திருப்பிச் சொன்னாள்.

"எனக்கு போர் அடிக்குது ஆன்ட்டி எதிர்பார்த்த பிரண்ட் வர்ல. வரணுமுன்னு அவசியமும் இல்ல... நீங்க வாங்க ஆன்ட்டி ."

"செத்தே இரும்மா. இந்த பேயனுக்கு பொங்கிப் போட்டுட்டு வாறேன். தான் பார்க்காத டிவி. யை, பார்க்க முடியாட்டாலும், காதால் கேட்கப்படாது என்கிற ஆங்காரத்துல ஆப் செய்துட்டு உள்ளே போயிட்டான் பாரு.. இவனல்லாம் உருப்படுவானா?. நீயே

சொல்லும்மா....”

கவிதா, விரக்தியின் விளிம்பில் நின்றாள் ஆகையால், விம்மலோ, தும்மலோ எதுவும் ஏற்படவில்லை. 'நீங்க ஆற அமர என் வீட்டுக்கு வாங்க ஆன்ட்டி நான், உங்களுக்காக காத்திருக்கேன்' என்றாள் பிறகு, அந்த வீட்டையும், வீட்டிற்குள் அவன் இருக்கும் அந்த அறையையும் திரும்பிப் பார்க்காமலே ஒரே போக்காய் வெளியேறினாள்.