Chapter 10

காரிலிருந்து இறங்கிய செல்வா, முன் நடக்க, மோகனன் பின் நடந்தான். பிள்ளைகளை பள்ளிக்கூடம் கொண்டு செலுத்த செல்வா வருகிறானா என்று தெருமுனை வரை கண்ணோட்டிய சித்திக்காரி, செல்வாவை பார்த்ததும் பல்லைக் கடித்தாள். அவனிடம் காட்டிய பச்சாதாபம் ஒரு நாள் கூத்தாக முடிந்தது. கணவர் சிவனுப்பாண்டி, மனைவியின் சுபாவத்தை புரிந்து வைத்திருப்பவர் போல் எங்கண்ணன் மகன் பார்வையே ஒரு தினுசா இருக்குறது நீ ஏதும் தாறுமாறா நடந்துக்கிட்டியா என்றார். படுக்கையறையில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்ளாமல், அந்த அறைக்குள்ளேயே அவர் அப்படி கேட்டது அவளை பழைய சித்திக்காரியாய் ஆக்கிவிட்டது. 'நான் வேணுமுன்னா செத்துத் தொலையுறேன்' என்று கணவனுக்கு பதிலடி கொடுத்தாள். தன் தவறை உணர்ந்து கொண்ட அவரும், அதற்குப் பிராயச்சித்தமாக அவளை அணைக்கப் போனார். அவள் அவரது கைகளை உதறிவிட்டு செத்துப் போனவள் போலவே கிடந்தாள். இப்போது செல்வாவைப் பார்த்ததும், மரித்தெழுந்தாள். நாக்கே, நரம்பாய் முறுக்கேற நின்றவள், மோகனனைப் பார்த்ததும் குளிர்ந்து விட்டாள். இதனால் பெரிய இடத்து சாவகாசம் வைத்திருக்கும் செல்வா மீது கூட பாசம் வரவில்லையானாலும், கோபம் குறைந்தது நடை வாசலில் இருந்து உள்ளே ஓடி கணவனை வெளியே கொண்டு வந்தாள். அவர், செல்வாவின் கையைப் பிடித்தபடியே, மோகனனிடம் கண்களால் விளக்கம் கேட்டார்.

"ஒண்ணுமில்ல அங்கிள். நான் நேற்று சொன்னேன் பாருங்க... அதே கேஸ்தான்... ரெண்டு தடவை ஊசி போட்டார். இப்ப சரியாயிட்டு. இனிமே குண்டோதரன் மாதிரி சாப்பிடுவான் பாருங்க."

"மஞ்சள் காமாலை இல்லியே?"

"டாக்டர் டெஸ்ட் செய்து பார்த்தார் அங்கிள். இல்லவே இல்லை ."

"ஏங்க.... பிள்ளைகளுக்கு ஸ்கூலுக்கு நேரமாவுதே. வேன்காரன் இன்னைக்கு வரமாட்டானாம்."

"என்னாலயும் முடியாதே லட்சுமி. ஆபீசுக்கு நேரமாயிட்டுது. இரண்டும் எதிர் எதிர் திசையில் இருக்குதே...”

'அப்படியானால் செல்வாவை... '

"அறிவு கெட்டத் தனமா பேசுறியே. அவனால முடியுமா? எவ்வளவு வீக்கா இருக்கான் பார்"

மோகனன் முன்னால் தன்னை இழிவுபடுத்திய கணவனை அங்கேயே பதிலடி கொடுக்கப் போனாள். அதற்காக அவள் வாயெடுக்கும் முன்பே, மோகனனின் வார்த்தைகள் விழுந்துவிட்டன.

"நான் இந்தக் காரிலேயே குழந்தைகளை கொண்டு போய் விட்டுட்டு வாறேன் அங்கிள்"

சித்திக்காரி உச்சி குளிர்ந்தாள். அந்தப் பணக்காரப் பிள்ைைளயை, பல்லிளித்துப் பார்த்தாள். ஆனால், மோகனனோ அவளை கடுமையாகப் பார்த்தான். நேற்றைய இரவுக்கும் பகலுக்குமான இடைவேளையில் செல்வா, அவனிடம் தனது சுய வரலாற்றை கூட்டாமல் குறைக்காமல் சொல்லியிருந்தான். சித்தப்பாவின் வாஞ்சையும், சித்தியின் வாட்டலும் அந்த வீட்டையே ஒரு கூண்டாகவும், செல்வாவை அதற்குள் மாட்டிக் கொண்ட கிளியாகவும் அனுமானித்தான் ஆகவே அந்தக் கிளியின் இறக்கைகளை வெட்டி விடுகிறவளை, தன் அம்மாவை பார்ப்பது போலவே பார்த்தான். அதேசமயம், அவள் கணவரை விருப்போடு பார்த்து, இறுதியில் விருப்பையும் வெறுப்பையும் தாழ்த்திக் கொண்டே பேசினான்.

"அங்கிள் நீங்களும் கார்ல ஏறுங்க.... உங்களையும் ஆபீசுல கொண்டு விட்டுடுறேன்."

"ஒனக்கு எதுக்குப்பா சிரமம்? ரெண்டும் எதிர் எதிர் திசை"

"பாசிட்டிவும் நெகட்டிவும்தான் ஒண்ணா சேரணும். உங்கள் பற்றி செல்வா நிறையச் சொன்னான். அப்படிப்பட்ட உங்களை என் காரில் ஏற்றிக் கொண்டு போய் விடுறது எனக்கு கிடைக்கிற கௌரவம் அங்கிள். என் அப்பா என்கிறவர் மட்டும்..."

மோகனன், மேற்கொண்டு ஏதும் பேசாமல், முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டபோது அவனது இரு கரங்களும் அந்த காரின் வைப்பார்கள் போல் செயல்பட்டன. செல்வாவின் வருகைக்காக அலுவலக ஆடையுடனும், கூடையுடனும் காத்து நின்ற சித்தப்பாவிற்கு, மோகனனின் தழுதழுத்த குரலோ, முக நனைவோ, தெரியவில்லை. செல்வாவை பார்த்து துள்ளி ஓடி வந்த சுபேதாவையும், அருணையும் காருக்குள் தள்ளி விட்டார். அவர்களோ காருக்குள் நுழைய மறுத்து "எங்கே போனே அண்ணா .... ஏன் நைட்ல வர்ல அண்ணா ...'' என்று அவனை மொய்த்தபோது, சித்திக்காரி , "டைம் ஆயிட்டு... அண்ணாகிட்ட அப்புறமா வந்து கொஞ்சுங்க...'' என்று சொல்லிவிட்டு, செல்வாவிடம் ஒட்டிக் கொண்ட பிள்ளைகளை பிய்த்தெடுத்து காருக்குள் போட்டாள். முன்னால் ஓடிய கார் திரும்பாமலே பின்னோக்கி ஓடி வந்தது. சித்தப்பாகாரர் கார் ஜன்னலை தாழ்த்தி வைத்து, அதில் முகத்தை கொக்காக்கி, மனைவிக்கு ஒரு ஆலோசனை சொன்னார்.

"நம்ம கொல்லைப்புறத்துல இருக்குதே பசலிக் கீரை. அதைக் கழுவி... நல்லா அரைத்து.... இவனுக்கு கொடு.. வயித்துல புண் இருந்தால் கேட்கும். கூழ் மாதிரி ஆக்கி நீயும் குடி. இந்த பசலி எதிர்கால வயித்து நோய்க்கும் ஒரு இன்சூரன்ஸ் மாதிரி. அதனால் பசலிக் கீரையை பறித்து நல்லா கழுவி..."

"பறிக்கிறதை கழுவணுமுன்னு எனக்குத் தெரியாதா? அரைச்சால், கூழ் மாதிரி ஆகும் என்கிறத நீங்க சொல்லிக் கொடுக்கணுமா?"

சிவனுப்பாண்டி, எதுவும் பேசவில்லை. ஆனாலும், இதன் எதிரொலிப்பு செல்வா மீது விழுமோ என்று அச்சப்பட்டார். அலுவலக அவசரத்தில் அது பெரிதாக தெரியவில்லை . அவளை தாஜா செய்வதாக நினைத்துத்தான், நீயும் குடி ' என்றார். ஆனால், அவளோ குடிகாரி மாதிரியே பேசுறாள் 'அறிவு கெட்டத் தனமா பேசுறியே?" என்று இவன் முன்னால் கேட்டது தப்புத்தான் இரவில் வந்து எப்படி மன்னிப்பு கேட்பது என்று மனதில் ஒத்திகையாக பேசிக் கொண்டார்.

அந்தக் கார் போய்க் கொண்டிருக்கும் போதே, செல்வா, வீட்டிற்குள் போனான். அவனை துரத்துவது போல் பின்னால் ஓடிவந்த சித்தி, காட்டுக் கத்தலாய் கத்தினாள்.

"இப்போ ஒனக்கு திருப்திதானே? நீயுன்னுகூட அதிர்ந்து பேசாத மனுஷரை ஒரு அந்நியன் முன்னால திட்ட வச்சுட்டே... இதனோடயாவது நிற்பியா? இல்ல, இன்னும் திட்டு வாங்கிக் கொடுப்பியா?

செல்வா, சித்தி சொல் கேட்காவதன் போல் தனது அறைக்குள் போனான். அன்று தனது அறையாக தெரிந்த அந்த இடம், இப்போது பிள்ளைகளின் அறையாய் தோன்றியது. எவ்வளவு திமிர் இருந்தால் தப்புத்தான் சித்தின்னு சொல்லாமே போவே... எல்லாம் என் தலைவிதி' என்று அவள் தலையில் அடிக்காமலே கத்தியபோது, அந்த அறைக்கதவு தாளிட்டுக் கொண்டது. இது சித்தியின் கோபத்தைக் கூட்டியது. என் வீட்ல இருந்துக்கிட்டே என் ரூமையே பூட்டுறியா? கதவைத் திறடா களவாணிப் பயலே...' என்று அவள் கதவை டாம் டூம் என்று கையால் இடித்தாள் காலால் உதைத்தாள். அந்தக் கதவு, தட்டியும் திறக்கப்படவில்லை.

செல்வா , கதவு தட்டலோ - சித்தியின் ஏச்சோ எதுவும் கேட்காமல், கண் திறந்திருந்தும் பார்க்க முடியாமல், காது மடல் விரிந்தும் கேட்க முடியாமல் கிடந்தான். ஒரு ஆற்றின் மணல் மேல் குறுக்காய் நடப்பவர்களை திடீர் வெள்ளம் அடித்துச் செல்வது போல், இக்கட்டான - அதேசமயம், யதார்த்தமான வாழ்க்கை மண்ணில் நடந்தவனை, அனுபவ வெள்ளம் விழுங்காமல் விழுங்க வைத்ததை நினைத்து பிரமித்துக் கிடந்தான். உள்ளுருப்புகள் மட்டுமே இயங்க, வெளி உறுப்புகள் சூனியமாக, மல்லாக்கக் கிடந்தான்.

சித்திக்காரிக்கு கை வலியும், வாய் வலியும் ஏற்பட்டு கதவுச் சத்தம் ஓய்ந்த பிறகுதான், அவனுக்கு பிரக்ஞை ஏற்பட்டது. கூடவே அது பல்வேறு விபரீதங்களை கற்பித்துக் கொண்டது அந்த ஓரின ஆடுதளத்தில் சில சிறுவர்கள் வாய் கவ்வி கிடந்தது நினைவுக்கு வந்தது. அந்த நினைவு சித்தப்பா பிள்ளை அருணை, இந்த மோகனன் சில்மிஷம் செய்வானோ என்று எண்ண வைத்தது. அந்த எண்ணம் சுய அனுதாபத்தில் கரைய வைத்தது. காரில் சித்தப்பா இருக்கிறார் என்ற வடிகால் கிடைத்தது. அந்த வடிகாலில் சித்தப்பாவும் மூழ்கிப் போவாரோ என்ற பயம் பிடித்தது அதுவே பீதியானது. அந்த பீதி தலையணையை விசிறி அடித்தது. கைகளை தரையை அடிக்க வைத்தது. கெட்டுப் போன வாய்க்குள் கைவிட்டு நாக்கை வெளியே எடுக்கப் போனது. நாக்கு வலிக்க வலிக்க அவனுக்கு கோபம் கோபமாக வந்தது. சுய கோபம். சென்னைக்கு அனுப்பிய அப்பா மேல் கோபம். அவன் மீது பாசம் வைத்திருக்கும் சித்தப்பா மீது அதே எதிர் விகிதாச்சார கோபம். இந்த வீட்டை விட்டு ஓடிப்போகாமல் கட்டாமல் கட்டிப்போட்டிருக்கும் பிள்ளைகள் மேல் கோபம். சித்தி மேல் கோபக்... கோபம். சென்னை மேல் கோபம். எல்லாவற்றிக்கும் மேலாக -

கவிதா மேல் கோபம். அவளை நினைக்கவும் முடியவில்லை. மறக்கவும் முடியவில்லை. இந்த கேடு கெட்டவளுக்கு ஒரு காதல் கடிதம் தேவை. அதற்கு கிடைத்த இளிச்ச வாயன் இவன், சரியான கள்ளி. இவன் உள்ளதை உள்ளபடி ஒன்றுவிடாமல் அவளிடம் சொல்லிவிட்டான். ஆனால், அவளோ , அம்மா ஓடிப்போன விவகாரத்தை சொல்லவில்லை. இவன் கௌரவத்தை இழக்க வைத்து, தன் கௌரவத்தை விட்டுக் கொடுக்காத பாவி. அவள் மனதிற்குள் இன்னும் என்னென்ன ரகசியங்கள் கிடக்குதோ? வீட்டிற்கு வரச் சொன்னவளே அந்த பழிகாரிதான். அப்பனுடன் டூரில் போவதை சொல்ல நினைத்திருந்தால் அவள் சொல்லி யிருக்கலாம். மனமிருந்தால் மார்க்கமுண்டு. மனமற்றவள். இவளைவிட இந்த மோகனன் எவ்வளவோ மேல். அவனுக்கு மட்டும் இந்தக் கெட்டப் பழக்கம் இல்லையானால் அவனைவிட நல்லவனை காணமுடியாது.

கெட்ட பழக்கம் மட்டும்தானா அது? தானும் கெட்டு பிறத்தியாரையும் கெடுக்கும் பழக்கம். ஒரு தொற்று வியாதி. அவனிடம் இந்த கவிதாவுக்கு எழுதிய கடிதம் இருக்கும் வரை வாய் கெட்டுக் கொண்டே இருக்கும். ஒரு வாயா? இல்லை. இரண்டு வாய்கள். இந்தக் கடிதத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும். சித்தப்பாவிடமோ, பிள்ளைகளிடமோ வாலாட்டக்கூடாது என்று அந்தப் பொட்டப் பயலை கத்தியோடு போய் எச்சரிக்க வேண்டும். நேற்று வாக்களித்தபடி அந்த மோகனன் மட்டும் தலையெழுத்தாய் மாறிப்போன தன் கையெழுத்திலான கடிதத்தை மட்டும் கொடுக்காது போனால் –

செல்வாவின் கைகளே ஆயுதங்கள் போல் நீண்டன. விரல்கள் திரிசூலப் பாணியில் பத்து சூலங்களாய் ஆகிப்போயின. பின்னர் அவன் சிந்தனையில் தேக்கம் ஏற்பட்டது அப்படியே தூங்கிப் போனான். எவரோ அடித்துப் போட்டது மாதிரியான தூக்கம்