Chapter 8

அன்றிரவு, சித்திக்காரியே, அவனுக்கு அறைக்குள்ளேயே தட்டோடு உணவை கொண்டு வந்தாள். "சாப்பிடுப்பா" என்று ஊட்டி விடாத குறையாக, "டா" வை , "பா"வாக்கினாள் உடனே, சாப்பாட்டு மேஜையிலிருந்த குழந்தைகளும் தட்டுக்களோடு உள்ளே ஓடி வந்தன. சித்தியிடம் ஏற்பட்ட மாற்றத்தை புரிந்து கொள்ளும் நிலையில் செல்வா இல்லை. ஆனாலும், குப்புறக் கிடந்தவன், அவளுக்கு மரியாதை காட்டுவது போல் பரபரப்பாக உடல் நிமிர்த்தி எழுந்தான். கடந்த ஆறு மாத காலத்தில் அம்மா ஊட்டிய சாதத்தை குழந்தைகள் வேண்டா வெறுப்பாய் உண்டுவிட்டு, அண்ணனோடு தூங்கி விட்டன.

செல்வா, தன்னையே சித்தி பார்த்துக் கொண்டிருப்பதை ஓரக் கண் போட்டுப் பார்த்தான். அவசர அவசரமாக கத்தரிக்காய் சாம்பாரை வெள்ளை சாதத்தில் பிசைந்து இலை தளை கலவையாக்கி ஒரு கவளத்தை வாய்க்குள் கொண்டு போனான். அவனை அறியாமலேயே வாய்க்குள் சோறு போன போது, மத்தியானம் நடந்தது சோற்றோடு கலப்படமானது. குமட்டிக் கொண்டு வந்தது. இதற்குள் சித்திக்காரி , தானும் நல்லவள்தான் என்ற நினைப்போடு திருப்தியோடு போய்விட்டாள். அவள் போனதும் செல்வா, பத்து நிமிடம் வரை சோற்று தட்டையே வெறித்துப் பார்த்தான்.

பின்னர், முன்னெச்சரிக்கையாக, கதவை தாளிட்டுக் கொண்டான். மேற்குப் பக்கமாக உள்ள ஜன்னல் வழியாக ஒவ்வொரு கவளமாக எடுத்து வெளியே வீசினான். ஒரு பக்கம் வீசினால், வாசல் பெருக்கும் வேலைக்காரம்மாவுக்கு சந்தேகம் வரலாம் என்று நினைத்தது போல், இன்னொரு பக்க ஜன்னல் வழியாக எஞ்சியவற்றை பன்னீர் தெளிப்பதுபோல் அங்கு மிங்குமாய் வீசினான். முழுமையான முட்டையை கசக்கி சிதைத்து வெளியே வீசியபோது, சித்தியின் உழைப்பை வீணாக்குவது போன்ற குற்ற உணர்வு ஏற்பட்டது. பின்னர், உச்சி முதல் பாதம் வரை மூடிக் கொண்டு உருத் தெரியாமல் கிடந்தான்.

இரவு பத்து மணி அளவில் வந்த சித்தப்பா சிவனுப்பாண்டி, காலையில் காபியோடு அவனை எழுப்பினார். உடம்புக்கு என்னடா என்று கேட்டபடியே, காபி டம்ளரை அவன் பக்கம் நீட்டினார். தாட்சண்யம் கருதியும், சித்தப்பா மீது வைத்திருக்கும் பய பக்தியாலும் அந்த காபியை குடிக்கப் போனான். மீண்டும் குமட்டல். ஒரு சொட்டு காப்பியும் உதடோரத்தில் நீர்க் கோடுகளாய் வெளிப்பட்டன. ஒல்லியானாலும் சாட்டைக் கம்பு போல் உறுதியான உடல் படைத்த சித்தப்பா பதறியபடியே கேட்டார்.

"என்னடா செய்யுது."

"சாப்பிடவோ குடிக்கவோ நினைத்தால் வாந்தி வருவது மாதிரி இருக்குது சித்தப்பா - என்னால் உங்களுக்கும், சித்திக்கும் சிரமம் சித்தப்பா ...''

"எங்கண்ணன் - அதான். உங்கப்பா எனக்காக பட்டிருக்கிற சிரமங்களில் இது ஆயிரத்துல ஒண்ணாக்கூட வராதுடா... வயிறு எதையும் ஏற்க மாட்டேங்குதுன்னா, அது மஞ்சள் காமாலையாய் இருக்கலாம். லட்சுமி - கொஞ்சம் வாயேன். "

சித்திக்காரியான லட்சுமி வாசல் காலில் நின்றபடியே, கணவனை புருவச் சுழிப்போடு பார்த்தாள். அவர் விளக்கினார்.

"இவனுக்கு மஞ்சள் காமாலை வந்திருக்கும் போல தோணுது. எதுக்கும் கொஞ்சம் பழைய சாதத்த எடுத்துட்டு வா இவன் சிறுநீர கலந்து பார்க்கலாம்.”

"நேற்று ராத்திரி நல்லாத்தானே சாப்பிட்டான்."

"நேற்று ராத்திரி கிடக்கட்டும். இப்போ சாப்பிட நினைச்சாலே வயிறு குமட்டுதாம்."

"என்ன வயிறோ."

சித்திக்காரி, பழையபடியும் - அதேசமயம் பாதியளவு மட்டுமே முருங்கை மரத்தில் ஏறினாள். நேற்று கணவரிடம் எதிர்பார்த்தது கிடைக்காததால் அந்தக் கோபத்தை இப்படிக் காட்டினாள். என்றாலும், ஒரு தேங்காய் சிறட்டையில், பழைய சாதத்தை வைத்து குளியலறையில் வைத்து விட்டுப் போனாள். அவள் வெளியே வந்ததும், செல்வா உள்ளே போனான். பத்து நிமிடம் கழித்து சித்தப்பா போனார். வெள்ளைச் சாதம் மஞ்சளாகவில்லை. அவன் இமைகளை விலக்கி, விழிகளைப் பார்த்தார். மஞ்சள் நிறம் இல்லை. காமாலை இல்லை என்று கண்டறிந்ததும் அவருக்கு மகிழ்ச்சி. ஆனாலும், டாக்டரிடம் அவனைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டார். உடல் நிலை என்று வரும்போது, சுய அனுமானமும் சுய மருந்தும் தவறானவை என்பதை புரிந்து வைத்திருப்பவர். அண்ணன் மகனுக்கு சிறிது அதட்டலாக ஆணையிட்டார்.

"சீக்கிரமா டிரெஸ் பண்ணுடா. எனக்குத் தெரிந்து, மஞ்சள் காமாலை இல்லை. ஆனாலும், டாக்டர்கிட்ட டெஸ்ட் செய்து பார்க்கலாம்."

வேறு வழியில்லாமல், செல்வா, அவசர அவசரமாய் லுங்கியில் இருந்து விடுபட்டு, பேண்ட் சட்டைக்குள் போனான். சித்தப்பா, அவனை கைத்தாங்கலாக நடத்தியபடியே , லட்சுமி. இவனை டாக்டர்கிட்ட காட்டிட்டு வாறேன்' என்ற விளக்கத்திற்கு, ஆங்காரமாக ஊங் கொட்டினாள்.

வீதி வழியாக, அவளை விலாவோடு சேர்த்து அணைத்தபடி நடத்திக் கொண்டு வந்த சித்தப்பா, அந்த ஸ்கூட்டர் ஸ்டாண்டு வரைக்கும் தம்பிடிச்சு நடந்திடு' என்றார் போவோர் வருவோர் அந்த இருவரையும் போய்க் கொண்டும், நின்றும் பார்த்தார்கள். செல்வாவிற்கு என்ன என்பது மாதிரி கண்களால் கேட்டார்கள். சிலர் வாயால் கேட்டார்கள். அந்தத் தெரு வாசிகருக்கு செல்வா மிகவும் பிடித்துப் போன பையன். அவர்களுக்கு அவசர அவசரமாக விளக்கமளித்துக் கொண்டே சித்தப்பாக்காரர், அந்த அரண்மனை வீட்டுப் பக்கம் வந்தபோது, ஒரு இண்டிகா கார் வெளிப்பட்டது.

அவர்கள் அருகே நின்றது. மோகனன் கேட்டான்.

"எங்க போறீங்க அங்கிள்?"

"என்ன மோகனனா! ஒன்னை ஆடிக்கொரு தடவை, அமாவாசைக்கொரு தடவைதான் பார்க்க முடியுது. இன்னிக்கு நிச்சயம் மழை வரும்."

"அப்போவும் புழல் ஏரி பெருகாமல், நம்மை சிரமப்படுத்தும். இவனோட எங்க அங்கிள் போறீங்க....”

"இவனுக்கு சாப்பாட்டை, நினைத்தாலே வாந்தி வருதாம். அதனால மஞ்சள் காமாலையான்னு கண்டுபிடிக்க டாக்டர்கிட்ட போறேன்."

"நல்லவேளை என்கிட்ட சொன்னீங்க அங்கிள்! எனக்கும் சாப்பாட்ட நினைத்தால் குமட்டுது. இதனால எங்க பேமிலி டாக்டருக்கு போன் செய்தேன். சென்னையில் மெட்ராஸ் ஐ மாதிரி, இது ஒரு விதமான வயிற்று நோயாம். நிறைய பேருக்கு வந்திருக்காம். ஆனால், மஞ்சள் காமாலை போல, நாற்பது நாள் தங்காமல் ஒரு ஊசியோட போயிடுமாம். நானும், இப்ப டாக்டர்கிட்ட போறேன். இவனையும் வேணுமுன்னா கூட்டிட்டுப் போறேன். உங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும். டோண்ட் ஒர்ரி இவனை என்கிட்ட ஒப்படைச்சுடுங்க. மாமுலாயிடுவான்."

செல்வா, மிரண்டான். அரண்டான். மோகனன் அவனை தானாக காரில் ஏறிக் கொள்ளும்படி பேசினான்.

"சும்மா சொல்லப்படாது அங்கிள். உங்கப் பையன் ரொம்பவும் நல்லவன். ஒரு தடவை அவன் நோட்டுப் புத்தகத்தைப் பார்த்தேன். முத்து முத்தான கையெழுத்து. மனசுல எந்த கல்மிஷமும் இல்லாதவங்களுக்குத்தான், எழுத்துக்கள் அச்சடிச்சது மாதிரி வருமாம்."

''டி.டி.பி. போட்டது மாதிரின்னு சொல்லு என்னோட எழுத்தும் முத்து முத்தாத்தான் இருக்கும்"

"நீங்களும் கல்மிஷம், இல்லாத மனிதர்தானே. ஒங்க இலாகாவிலேயே கை நீளாத ஒரே ஊழியர் நீங்கதானே. ஆனால், ஒங்களுக்கும் சேர்த்து எங்கப்பன் கொள்ளை அடிக்கான்."

"ஆயிரந்தான் இருந்தாலும் அவர் ஒன்னை பெத்தவரு.... அவன் இவன்னு பேசப்படாது.. டேய் செல்வா! காருல ஏறுடா.. சித்தப்பாவுக்கும், கொஞ்சம் ஆபிஸுல வேலை காத்திருக்கு"

இயக்குநர் இருக்கையில் மோகனனையும், அதே மாதிரியான இடது பக்க முன்னிருக்கையில் செல்வாவையும் சுமந்து கொண்டு, அந்தப் கார் பறந்தது. மென்மையான ஏ.சி. குளியல். அது உடம்பு முழுவதும் குவிந்த சுகம். உள்ளே இருந்து பார்த்தால் வெளியே தெரியப்படுத்தியும், வெளியே இருந்து பார்த்தால் உள்ளே இருப்பவர்களை காட்டாததுமான பச்சைக் கண்ணாடி கண்ணாடியின் அருகே செஞ்சதுரமாய் இருந்த ஒரு சின்ன பெட்டியிலிருந்து மல்லிகை செண்டு, ஏ.சி. காற்றோடு கலந்து முகத்திற்கும் மனதிற்கும் மோகனத்தை கொடுத்துக் கொண்டிருந்தது. செல்வா, தலைக்கு மேல் சாணும் முழமுமாய் போன விரக்தியில், எடுத்த எடுப்பிலேயே திட்ட வட்டமாகக் கேட்டான்.

"என்னை என்ன செய்யப் போறடா பாவி?”

"சத்தியமாய் என்னை நம்பு. மறப்பாய் மன்னிப்பாய்ன்னு ஒன்கிட்ட மன்னிப்பு கேட்கிறதுக்குத்தான் ஒன்னை காரில் ஏற்றியிருக்கிறேன். உன்னிடம் நான் நடந்து கொண்டது காட்டு மிராண்டித்தனம்தான். உன்னை நான் மிஸ் யூஸ் செய்தது தப்புத்தான்."

"நீ செய்தது மிஸ் யூஸ் இல்ல. அபியூஸ்."

"இந்த ரெண்டு வார்த்தைக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கிற அளவுக்கு நான் படித்தவனில்ல. எல்லாம் வெளி வேடந்தான். நீ என் தங்கையை கட்டிக்கப் போற மைத்துனன் என் தங்கை மீது எவ்வளவு வாஞ்சை இருக்குதோ, அவ்வளவு வாஞ்சை உன்கிட்டயும் எனக்கு இருக்குது. நீ என்னை மாதிரி ஆயிடக்கூடாது என்கிறதுல நான் கறாரா இருக்கேன். தங்கைக்கு உதவாக் கரையா போன நான், அவளுக்கு உன்னையும் உதவாக் கரையாய் போக விடமாட்டேன் இது சத்தியம்."

"இதை நிரூபித்துக் காட்டுறதுக்கு கவிதாவுக்கு நான் எழுதுன லெட்டரை இப்பவே என்கிட்ட தா."

"ஐ எம் ஸாரி பிரதர் இன் லா. வீட்ல, என் நெம்பர் லாக் சூட்கேஸ்ல வைத்திருக்கேன். சத்தியமா... நிச்சயமா... உண்மையாய்.. உறுதியாய்.. தந்துடுறேன். நான் ஒரு ஹோமாசெக்ஸ்காரன்தான் அதுவும் குடும்பச் சூழலில், என் கதையை உன்கிட்ட சொல்லி எப்படி ஒருத்தன் சந்தர்ப்ப வசத்தால் ஓரினச் சேர்க்கையாளனாய் ஆகிறான் என்பதை உன்கிட்ட சொல்லப்போறேன். இதன் மூலம் கேய் பாய்ஸ் மீது விதிவசமா உனக்கு ஏற்பட்டிருக்கிற வெறுப்பை, நீக்கப் போறேன் அந்த லெட்டரை உன் கிட்டயே கொடுத்துட்டு, என்கிட்ட இருந்து, உனக்கு ஒரு விடுதலை உணர்வை தரப் போறேன் ஒருவேளை, நான் சொல்றது ஒனக்கு ஒரு மெண்டல் சிகிச்சையாக்கூட இருக்கலாம். சரி. அதோ அந்த மோட்டலுல போய் மரத்தடி இருக்கையில் உட்கார்ந்து சாவகாசமா பேசலாம். பேசி முடித்ததும் உன்னை உன் வீட்டுலயே டிராப் செய்றேன் ஒப்புக்கு வழியில் சில வைட்டமின் மாத்திரைகளை வாங்கித் தாரேன். இப்ப, நீதான் என் பாஸ். மோட்டலுக்கு போகலாமா?"

"வேண்டாம். காரை ஓட்டியபடியே உன் கதையைச் சொல்லு..."

"சொல்றேன். மோட்டலுல ரூம்ல, ஒன்னை, நான், பழைய படியும் மிஸ்யூஸ் பண்ணிடுவேன்னு நீ பயப்படுறது நியாயம்தான். அதனால் காரை ஓட்டிக்கிட்டே பேசுறேன் ஏதாவது விபத்து வந்தா நீதான் பொறுப்பு.

"என்னைத்தான் ஏற்கெனவே விபத்தாக்கிட்டியே..."

''உன் காலுல வேணுமுன்னாலும் விழுகிறேன். என் தங்கையோட எதிர்கால கணவனிடம் அப்படி நடந்துக்கிட்டது தப்புதான். நீ என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன். அதுக்கு முன்னால் என் கதைய கேளு."

செல்வா, மௌனமாக இருந்தான். கார் ஒரே சீராக ஓடிக் கொண்டிருந்தது. சில சமயம் தாறுமாறாகவும் ஓடியது. ஏ.சி. கார் என்பதால் முன்னாலும் பின்னாலும் போகும் லாரிக்காரர்களும், இரண்டு சக்கர வாகனக்காரர்களும் திட்டோ திட்டோ என்று திட்டுவது, இவர்களுக்கு கேட்கவில்லை. மோகனன், ஒரு கேள்வியோடு தன் கதையைத் துவக்கினான்.

"எங்க பேலஸ்ல இருக்கிற எங்கம்மாவை நீ பார்த்திருக்கியா?”

"இது என்ன கேள்வி? ஒரே தெருவுல இருக்கிறவங்கள் பார்க்காம இருக்க முடியுமா? ஒங்கம்மாவ பார்த்தால், கையெடுத்துக் கும்பிடலாம் போலிருக்கு அப்படிப்பட்டவளுக்கு இப்படி ஒரு பிள்ள.. சீ...”

"ஒனக்கு அப்படி ஆனால், எனக்கு அந்த நாயை கல்லால் அடிச்சுக் கொல்லலாம் போலத் தோன்றும்."

"பெற்ற தாயை இப்படியா பேசுறது? தாய்கிட்ட அன்பு செலுத்தாத எவனும், வேறு யார் கிட்டயும் அன்பு காட்ட முடியாது அதனாலதான் ஒனக்கு நான் பலியாயிட்டேன்."

"நான் தான் ஸாரி சொல்லிட்டேனே... பிரதர் இன் லா... அந்த மேனா மினுக்கி எங்கம்மாவே இல்ல. டூப்ளிகேட் அம்மா.."

"அய்யய்யோ ”

"என்னைப் பெற்றவள் இன்னொருத்தனோட இருக்காள்."

"அடக் கடவுளே"

"முழுசாக் கேள். இந்த பெரிய மனுஷன் வேணுகோபால் ஐ.ஏ.எஸ். இருக்கானே, அவனோட மகனான நான், ஏ.சி.கார்லேயே கான்வெட்டுக்கு போய்கிட்டு இருந்தேன். பரத நாட்டியத்துல இவன் தான் சேர்த்தான். அந்த சாக்குல நான் கதக், ஒடிசி போன்ற நம் நாட்டு நாட்டியங்களையும், வெஸ்டன் டான்ஸ்களையும் கத்துக்கிட்டேன் இங்கிலீஷ் பேச்சுப் போட்டியிலயும், கட்டுரைப் போட்டியிலயும் முதலாவது வந்தேன். பதினாலு வயசிலேயே முதலமைச்சர் தலைமையில் என் பரதநாட்டியம் அரங்கேறியது. அதை செய்தியாய் போடாத பத்திரிகை இல்லை.... டிவி. இல்லை. விமர்சனம் செய்யாத இதழ்கள் இல்லை."

"எங்கம்மா என்கிறவள் ரெண்டு பிள்ளை பெற்றாள். எனக்கு பதினாலு வயசுல, எங்க வீட்டு மாடியில் ஒரு சினிமாக்காரன் குடி வந்தான். கட்டுன பெண்டாட்டிய விட்டுட்டு இன்னொருத்தியோட வாழ்ந்துகிட்டு இருந்தான். இது தெரிஞ்சும், எங்கப்பன் பணத்துக்கு ஆசைப்பட்டு அவனுக்கும், அவன் கள்ளக் குடும்பத்துக்கும் வீட்ட வாடகைக்கு விட்டான் அம்மா என்கிறவள் நாட்டுப்புறப் பாடல்ல கெட்டிக்காரி. எங்கப்பனோ பொம்பள பொறுக்கி. அதனால மனைவியோட டேலண்ட அமுக்கி வச்சான். நான் அவளுக்கும் நியாயம் வழங்கணும் பாரு... அதனால சொல்றேன். எப்படியோ மாடியிலிருந்த சினிமாக்காரனுக்கும் எங்கம்மாவுக்கும் தொடர்பு உண்டாயிட்டு. ஒருநாள் ரெண்டு பேரும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிட்டாங்க"

"அந்த சினிமாக்காரனோட கீப்பு நேரா எங்கப்பன்கிட்ட வந்திருக்காள். 'ஒங்க பெண்டாட்டி ஒங்கள விட்டு ஓடிட்டாள். என்கூட வாழ்ந்தவன் என்னை விட்டுட்டு ஓடிட்டான். அதனால நாம ரெண்டு பேரும், ஏன் ஒன்றாய் சேரக்கூடாதுன் னு வாதிட்டிருக்காள். அவளும் கிளாஸ் ஒன் ஆபீசர். அதாவது பெரிய அதிகாரி. அவர் சம்பளத்துக்கு ஆசைப்பட்டோ அல்லது அவளுக்கு ஆசப்பட்டோ, இல்லன்னா எங்கம்மா கூட்டிகிட்டு போனவனை பழி வாங்கிறதுக்காகவோ, இவனும் அவளை சேர்த்துக்கிட்டான். ரெண்டு பேருக்கும் ஒரே குடி. ஏச்சு பேச்சு... எப்படியோ எல்லா ஐ.ஏ.எஸ். பிள்ளைகளையும் போல, நல்லா இருக்க வேண்டிய நான், குறைந்த பட்சம் நாட்டியத்தில் இரண்டாவது தனஞ்செயனாக உலகம் முழுவதும் சுற்ற வேண்டிய நான், இப்போ ஒவ்வொரு பயல்கள் பின்னாலயும் சுற்றிக்கிட்டு இருக்கேன்."

"அய்யோ... இதுக்கு மேல சொல்லாதப்பா என்னால் தாங்க முடியாதுப்பா .''

"என்னை நீ இனிமேல் பகிர வேண்டாம். என் பாரத்தையாவது பகிர்ந்து கொள். எவளுக்கும், ரெண்டு பிள்ள பிறந்த பிறகும், கணவனை டைவர்ஸ் பண்றதுக்கு உரிமை உண்டுதான். ஆனால், அதுக்கு முன்னால் பிள்ளைகளை பற்றி ரெண்டு பேரும் ஒரு செட்டில்மெண்டுக்கு வரணும். இப்படி இல்லாமல் பிள்ளை களுடைய எதிர்காலத்தைப் பற்றி கொஞ்சம்கூட கவலைப்படாமல், ஒரு தாய், ஓடிப் போகிறாள் என்றால், அவள் அசல் தேவடியாளத்தான் இருக்கணும். காரணம், பெண்மை என்பதே தாய்மை. அந்தத் தாய்மைக்கு மிஞ்சி ஒருத்திக்கு திமிர் - செக்ஸ் திமிர் ஏற்பட்டால், அவள் பெண்ணே இல்ல.... இப்படி ஓடிப்போனவளுக்கு நானும் கவிதாவும் பிறந்தது நிசம். ஆனால், அம்மா என்கிறவள் எங்கள் இந்த லஞ்சப் பேர்வழி வேணுகோபாலுக்கு பெத்தாளோ, இல்ல வேறு யாருக்காவது பெத்தாளோ..."

"அப்படி இருக்க முடியாது. உங்கப்பா சாயல் தான் ஒனக்கும், கவிதாவுக்கும் இருக்குது...”

"அப்படி இருந்தால் வெட்கப்படுறேன். டூப்ளிகேட் அம்மாவ, கவிதாவால ஏற்க முடிஞ்சுது. ஆனால், என்னால முடியல. எங்கப்பன் லஞ்ச வாங்குறதுல சமர்த்தன். இவளும் பணம் வாங்குறதுல ஒரு பழைய பெருச்சாளி இயல்பிலேயே நேர்மை யானவன் நான். எங்கப்பன நினைத்தாலே, ஒனக்கு குமட்டுறது மாதிரி எனக்கும் குமட்டுது. வேலை போட்டு தருகிறேன் என்கிற வாக்குறுதியை நம்பி வந்தவள்கள், அலுவலக சகாக்களை பழி வாங்குவதற்காக இவனோடு படித்தவள்கள் - எல்லாம், எங்க கண் முன்னாலேயே நடந்தது. இந்த லட்சணத்துல எங்களுக்கு ஒழுக்கத்தின் உயர்வு பற்றி போதிப்பான் இந்த யோக்கியன்."

"எனக்கு டூப்ளிகேட் அம்மாவை ஏற்றுக்க முடியல. அந்தச் சமயத்துல திரைப்படங்களுல எக்ஸ்ட்ரா வேடம் கிடைச்சுது. பெரிய பெரிய கதாநாயகர்களெல்லாம் டான்ஸ் ஆடுறது மாதிரி காட்டுவாங்களே அது குளோசப்பாக இருக்கும். லாங் ஷாட்ல ஆடுறது என்னை மாதிரி டூப்ளிகேட்கள் தான். அவங்களுக்கு லட்ச லட்சமா பணம். எங்களுக்கு நாயே பேயேன்னு திட்டு. இந்தச் சமயத்துல, தமிழ் திரைப்படக் காட்சிய பார்க்க வந்த ஒரு ஐரோப்பியருக்கு, என்னை ரொம்ப பிடித்துப் போச்சு. நல்ல டிரெஸ் வாங்கிக் கொடுத்தார். நல்ல சாப்பாடு போட்டார். நல்ல படுக்கையில் போட்டார். அதுவும் ஸ்டார் ஓட்டல்ல. அப்போ அவனோட ஏற்பட்ட சேர்க்கையை நான் தட்ட நினைத்தாலும் முடியல. ஒன்னை மாதிரிதான் வாந்தி எடுத்தேன். அப்புறம் அதுவே ஒரு டேஸ்ட்டாயிட்டுது. ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு விதமான பையன் தேவைப்படுது; தேவைப்படுறேன். அப்போ பிடித்த இந்த ஓரினச் சேர்க்கை, இப்போ ஒரு போதை மாதிரி ஆயிட்டுது. என் தங்கையின் எதிர்கால கணவனுக்கு, என்னை மாதிரி ஒரு நிலமை ஆகிவிடக் கூடாதுன்னுதான், ஒனக்கு இதைச் சொல்றேன்."

'கவிதா, ஒங்கம்மாவைப் பற்றி என்கிட்ட ஒருவார்த்தை சொல்லுலியே."

"பாவம் அவள் நான், என் அம்மாவை ஒரு தாசியாக நினைத்து ஒதுக்கிட்டேன்; ஒதுங்கிட்டேன். அவளுக்கோ ரெண்டு அம்மாக்கள். ஓடிப்போன அம்மாவை சொல்வாளா? ஓடிவந்த அம்மாவைச் சொல்வாளா? நல்லவேளை, ஒன்னோட காதல் அவளுக்கு கிடைத்திருக்கு. இல்லன்னா என்னை மாதிரி அவள் சீரழிந்திருப்பாள். லிம்போ மேனியாக்கா, அதாவது ஒரு நாளைக்கு ஒருத்தன தேடுறவளாய் ஆகியிருப்பாள். இல்லன்னா லெஸ்பியனா மாறியிருப்பாள்."

"யாரைச் சொன்னாலும் கவிதாவைச் சொல்லாதே."

"ஒன்னைவிட அனுபவத்திலும் வயதுலும் பெரியவன் என்கிற முறையில் நான் சொல்றதை கேளு. ஒரு காதலுலயோ அல்லது காமத்திலேயோ செக்ஸ் என்கிறது கால்வாசிதான். முக்கால்வாசி உள்ளத்தால் ஒன்றுபடுதல். அதேசமயம், தம்பதிகளுக்குள்ளே செக்ஸுவல் அட்ஜெஸ்மெண்ட் இருக்க வேண்டும். இல்லை யானால், புருஷன் கொடுமைக்காரனாவான். மனைவி பத்தினியா வாழ நினைத்தால் ஸ்டீரியாவுல தவிப்பாள். இல்லாட்டால், பலரோட படுப்பாள். இப்படி படுப்பது கூட செக்ஸ் அல்ல. கணவனின் இயலாமைக்கு அல்லது அவனது கொடுமைக்கு அல்லது அவன் பிற பெண்களோடு உறவாடுவதற்கு காட்டுகிற எதிர்ப்பே இந்த கள்ள உறவின் முதல்படி அல்ல செக்ஸ். இரண்டாம் படிதான். ஆக மொத்தத்துல பலரோடு படுக்கைகளை பகிர்ந்து கொள்வதும், ஓரினச் சேர்க்கையும், ஒரு நோயின்

அறிகுறியே தவிர நோய் அல்ல."

"உங்க கதையை கேட்கிறதுக்கு மனசுக்கு சங்கடமா இருக்குது. ஆனாலும், ஆயிரம் சங்கடங்கள் வந்தாலும், அதனால ஒழுக்கச் சிதைவு ஏற்படக்கூடாது."

'முதல்ல எது ஒழுக்கம்? எது சிதைவு? இதை தீர்மானிக்கவே பல பட்டி மன்றங்கள் நடத்தணும். இந்திரனால் கற்பழிக்கப்பட்ட அகலிகையையும், நளாயினியாய் இருக்கும் போது தனக்கு ஐந்து கணவர்கள் வேண்டுமென்று கேட்டு, மறுபிறவியில் நெருப்பில் பிறந்த திரௌபதியையும், ராவணன் படத்தை வரைந்த சீதையையும், சுக்ரீவனோடு கூடிக்குலாவிய வாலியின் மனைவியான தாராவையும், கணவன் போக்கு தவறென்று நினைத்த மண்டோதரியையும் பஞ்ச பத்தினிகள் என்று நமது புராணங்கள் கூறுகின்றன முதலில் இதற்கு பதில் சொல். கற்பு என்பது என்ன? ஒழுக்கம் என்பது என்ன? இந்த ஐந்து பெண்களின் அடிப்படையில் பதில் சொல் பார்க்கலாம். இந்த ஐவரில் மண்டோரிதான் விதிவிலக்கு. அவளையும் ஆராய்ந்து பார்த்தால், ஒருவேளை தேறமாட்டாள். ஆகையால், நமது புராணங்கள் பத்தினித் தன்மையை கற்போடு இணைக்கவில்லை. உன்னை மாதிரி ஆசாமிகள் தான் இணைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஓரினச்சேர்க்கை என்பதும் புராணச் செய்திகள் தான்."

"அய்யோ எனக்கு தலை சுத்துது... காரை வீட்டைப் பார்த்து திருப்புங்க."

"வந்ததே வந்துட்டோம். பக்கத்துல இருக்கிற கிளப்புக்கு போயிட்டு போகலாம். கேய் பாய்ஸ் - அதுதான் ஓரினச் சேர்க்கைக் காரர்கள் கிளப். நான் அந்த கிளப்போட பொதுச் செயலாளர். இதுவரைக்கும் வந்துட்டு, அங்கே போகலன்னர் என்னுடைய பதவியும், எனக்கு கிடைக்கிற வெளி நாட்டுப் பணமும் போயிடும்."

"பார்த்தியா... பார்த்தியா..... உன் செயலுக்கும் பேச்சுக்கும் வித்தியாசம் தெரியுதோ. அங்கே கொண்டு போய் என்னை என்ன செய்யப்போறே?"

"தட்டுக் கெட்ட முண்ட எங்கம்மா மேலேயோ, பொம்பள பொறுக்கியான எங்கப்பன் மேலயோ சத்தியம் செய்ய முடியாது இதோ என் தலையிலேயே சத்தியம் செய்றேன் ஒன்மேல ஒரு துரும்பு கூடப் படாது. நீ கார்லேயே இரு நான் கால் மணி நேரத்துக்குள்ள திரும்பி வந்துடுறேன் நாளைக்குத்தான் எங்க ஐரோப்பிய பாஸ் வரார். அப்போ மட்டுந்தான் பிஸியா இருப்பேன்."

"எப்படியோ சதி செய்து என்னை கூட்டிட்டு வந்துட்டே"

"இதுக்குத்தான் பத்து கிலோ மீட்டருக்கு முன்னால் உள்ள மோட்டலுல பேசிட்டு திரும்பலாமுன்னு நினைத்தேன் காரியத்த கெடுத்ததே நீதான். என்னை மீறி ஒனக்கு எதுவும் நடக்காது. நான், நாட்டியக்காரன் மட்டுமல்ல குஸ்தி கத்துக்கிட்டவன் பயப்படாதே."

செல்வா மௌனமானான். அந்தக் கார், கேய் பாய்ஸ் கிளப்பை நோக்கி போகலாமா? வேண்டாமா? என்பது போல் தள்ளாடித் தள்ளாடி ஓடியது.