Chapter 7
சித்திக்காரி, வாசலுக்கும், தெருவுக்குமாய் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தாள். பற்கள் ஒன்றை ஒன்று கடித்துக் குதறப் போயின. வாய், செல்வாவை கொண்டு வந்த கணவனையும், அதற்கு உடந்தையாக இருந்த தன்னையும் திட்டிக் கொண்டது. மணி இப்போதே நான்கு. காபி குடித்தால்தான் சமையல் செய்கிற மூடு வரும். குழந்தைகளா அவை? அசல் பேய்கள். அப்பன் மௌனசாமி என்றால், அதற்கு எதிரான குரங்குகள். அம்மா அம்மா' என்று அரற்றினால் கூட, ஆறுதல் பட்டுக்கொள்ளலாம். ஆனால், அண்ணனாம். அண்ணன் - வரட்டும் இந்த அண்ணன் ... வரட்டும் அந்த மனுஷர்...'
நல்லவேளையாக, சித்தப்பாவின் வீட்டிலிருந்து அந்த அரண்மனை வீட்டை பார்க்க முடியாது. இது உள்ளே தள்ளியும், அது வெளியே துருத்தியும் இருந்தன. செல்வா வீதியில் வருவதைத்தான், சித்தி, பார்த்தாள். தட்டுத் தடுமாறி வந்த அவனை நோக்கி, அதுவரைக்கும் பொறுக்க முடியாமல் வேக வேகமாய் நடந்தாள் ஆத்திரத்தில் அவன் உருவம் மட்டுமே அவளுக்கு மங்கலாகப் பதிந்தது. அந்த உருவத்தின் தடயங்கள் தட்டுப் படவில்லை
"நாயை குளிப்பாட்டி நடு வீட்ல வச்சாலும், அது காளு காளுன்னு கத்துற புத்திய விடாதாம். பால் எங்கேடா... பை எங்கேடா..."
செல்வா, தட்டுத் தடுமாறி பதில் அளித்தான். அதில் முன்னெச்சரிக்கையும் உள்ளடங்கி இருந்தது. புரைதீர்ந்த பொய்யே மெய்யாய் பேசியது.
"போகிற வழியில் மயங்கி விழுந்துட்டேன் சித்தி. இன்னும் கூட மயக்கம் முழுசா போகல சித்தி.”
சித்திக்காரி, அப்போதுதான் அவனை ஏற இறங்கப் பார்த்தாள்.
செல்வா முகத்தில் கடிக்காயங்கள். கைகளில் சிறாப்புகள். கழுத்தில் நகக் கீறல்கள். கண்கள் பசுமையற்ற தரிசு நிலமாய் தோன்றியது. சட்டைப் பித்தான்கள் முன்னுக்குப் பின் முரணாக மாட்டப் பட்டிருந்தன. மனச் சிதைவுகளை மறைக்க முடிந்த தன்னால், இந்த உடல் சிதைவுகளுக்கு எப்படி விளக்கம் அளிப்பது என்று அவன் குழம்பியபோது, சித்தியின் கேள்வியிலேயே பதில் கிடைத்தது. அவள் குரல் கனிவாக வரவில்லையானாலும், காய்ப் பழுப்பாய் ஒலித்தது.
"முள்ளுச் செடியில் விழுந்திட்டியாடா."
"ஆமாம். கருவேல முள்ளுச் செடி..."
"எப்போ நடந்தது."
"எது?"
"உனக்கு கிறுக்கு புடிச்சுட்டா... எப்போ மயங்கி விழுந்தன்னு கேட்டேன்."
"பால் வாங்கிட்டு வரும் போதுதான் சித்தி. ஆவின் வேன் லேட்டா வந்துது... பால் வாங்கிட்டு வரும்போதுதான் மயங்கி விழுந்துட்டேன்."
"பால் கிடக்கட்டும்... பால் கார்டு எங்க?”
"எனக்கே தெரியல சித்தி. எப்படி நடந்ததோ.... என்ன நடந்ததோ"
"சரி விழுந்த இடத்தையாவது காட்டித் தொல் ..."
"அதோ அந்த முனையில் முள்ளுச் செடி குவியல் இருக்குதே. அதுலதான் சித்தி.”
"சரி நீயும் வா. தேடிப் பார்க்கலாம்.”
செல்வா, பிட்டத்தைப் பிடித்தபடியே அவள் முன்னால் நடந்தான் இடையில் வயிறு குமட்டியது. குடலே வெளியே வருவது போன்ற வாதையோடு வாந்தி எடுத்தான். வெள்ளை வெள்ளையான வாந்தி கோளையைப் போலவோ இல்லாமல், சாப்பிட்ட உணவுக் குழம்பு போல் அல்லாமல், வெள்ளை வெள்ளையாக, வெள்ளைத் திரள்போல் வெளிப்பட்ட வாந்தி.
எல்லாம் முடிந்த பிறகு, அந்த அறைக்குள்ளேயே மோகனன் உடைகளை சரிப்படுத்திக் கொண்டிருந்தபோது, மோகனனின் கண் முன்னாலேயே, வாய்க்குள் விரல்விட்டு, தொண்டை வரைக்கும் விரல்களை துழவவிட்டு, மஞ்சள் பூசியது போன்ற வெள்ளை திரவத்தை வாந்தி வாந்தியாய் எடுத்தான். வாய்க்குள் விட்ட கையால் மோகனனின் வயிற்றில் குத்தியபடியே, 'தேவடியா மவனே... இதோடயாவது என்னை விடுடா.... நீ நாசமாய் போக.... கவிதா சொன்னது மாதிரி நீ ஒரு காட்டுமிராண்டி அசிங்கம் பிடிச்சவன்னு அவள் சொன்ன அர்த்தத்துக்கு இப்பதாண்டா அர்த்தம் புரியுது. ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் தெரியாத ஒனக்கு தங்கைக்கும் தாரத்துக்கும் கூட வித்தியாசம் தெரியாது. அவளையாவது விட்டு வையுடா... என்னைப் போக விடுடா... புறம் போக்குப் பயலே போக்கிரி நாயே..' என்று பிரமை கலைந்தும், கலைத்தும் கொதித்து கொதித்துப் பேசினான். தலைகுனிந்து நின்ற மோகனன், கதவை திறந்துவிட்டு, கட்டிலில் படுத்து விழியாடாது கிடந்தான்.
அப்போது செயற்கையாக வரவழைக்கப்பட்ட வாந்தி, இப்போது சித்தியின் முன்னிலையில் இயற்கையாக வந்தது. குடலைக் கழுவி விட்டது போல் உணவுக் கூழ்களையும், கத்தரிக்காய் துண்டுகளையும் வெளியே கொட்டியது. அவனுக்கு உடனே, அம்மாவின் ஞாபகம் வந்தது. கிராமத்தில் ஒரு தடவை மஞ்சள் மஞ்சளாய் அவன் பிந்த வாந்தி எடுத்தபோது, அம்மா, இவன் தலையை பிடித்துக் கொண்டாள். முகத்தை நிமிர்த்தி, அதில் படிந்த வாந்தியை தனது முந்தானையால் துடைத்துக் கொண்டு தோளுக்கு மேலே போன தன் பிள்ளையை , தனது தோளில் சாய்த்துக் கொண்டாள் அப்பா ஓடோடி வந்து துடித்துப் போய் நின்றார். அக்காக்கள் அவன் கரங்களை ஆளுக்கு ஒன்றாய் பிடித்துக் கொண்டு அவனை சோகத்தோடு பார்த்தார்கள். பெரிய அக்கா அவன் கலைந்து போன சட்டையை சரிப்படுத்தினாள் சின்னக்கா, அவன் வாயை துடைத்து விட்டாள். இப்படி அவன் நினைத்துக் கொண்டிருந்த போது, சித்திக்காரி அவன் வாந்திக்கு நேர்முக வர்ணனை கொடுத்தாள்.
"கொஞ்சமா தின்னாத்தானே ? வயிறு முட்ட சாப்பிடலாம்... வாய் முட்ட சாப்பிட்டால், இப்படித்தான் வாந்தி வரும்..... சரி. புறப்படு. பால் கார்டை தேடிப் பார்க்கலாம்.”
செல்வா, தெருவில் அப்படியே உட்கார்ந்தான். திக்கித் திக்கி பதிலளித்தான்.
"என்னால் ஒரு அடி கூட நகர முடியல... நீங்க போய் தேடிப்பாருங்க சித்தி.."
"எல்லாம் என் தலைவிதி. வேலியில் போற ஓணானை பிடிச்சு காதுல விட்ட கதை."
சித்திக்காரி, அந்த மூலை முடுக்கு முட்புதர் பக்கம் ஓடினாள். இதற்குள் அந்த தெருவாசிகளில் ஒரு சிலர் வழியில் வாந்தி சாட்சியாக உட்கார்ந்திருந்த செல்வாவை கிட்டத்தட்ட தூக்கிக் கொண்டு போய் வீட்டில் விட்டார்கள். அருணும், சுபேதாவும் அவனை ஓடி வந்து பிடித்துக் கொண்டார்கள். இந்த இரண்டு பிள்ளைகளையும் இடுப்போடு சேர்த்து அணைத்தபடியே அறைக்குள் போனான். கட்டிலில் குப்புறப் படுத்தான். குழந்தைகள் அண்ணா ... அண்ணா ...' என்று அவனை உசுப்பின. அவன், கண்களை மூடிக்கொண்டு, ஒரு அனுமானத்துடன் அந்த பிள்ளைகளை இருபுறமும் இணைத்துக் கொண்டு கேவிக்கேவி அழுதான் குமைந்து குமைந்து புகைந்தான். பிறகு, ஆவேசமாக எழுந்து பேஸ்டை பிரஷ்ஷில் தடவி, பற்களில் தேய்த்தான். உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் தேய்த்தான். வாஷ்பேஷன் தண்ணீரை வாய்க்குள் ஊற்றி தொண்டைக் குழி வரைக்கும் செலுத்தி, கவளம் கவளமாய் துப்பினான். தன் பக்கமாய் ஓடி வந்த பிள்ளைகளை அணைத்துக் கொண்டே கட்டிலில் மல்லாக்க விழுந்தான்.
மோகனன் பயன்படுத்திய வாயை கழுவியாயிற்று. வயிற்றை கழுவியாயிற்று. பின் பக்கத்தை கழுவியாயிற்று. ஆனால், மனதை எப்படி கழுவுவது? இது விபத்து என்று விட்டு விடுவதா? அல்லது சித்தியிடம் சொல்லி புலம்புவதா? சித்தப்பா பஞ்சும் இரும்பும் கலந்து செய்யப்பட்ட மனசுக்காரர். அலுவலகப் போராளி. விவகாரம் தெரிந்தால், அந்த மோகனன் பயலை, கை காலை எடுத்து விடுவார். இல்லயைானால் காவல் துறைக்குப் போவார். விசாரணை, அடிதடி என்று எல்லாமே வெளிப்படும். கவிதா வெளிப்படுவாள். இவன் வெளிப்படுவான். ஏற்கெனவே தாழ்ந்து போன தந்தையின் தலை கழுத்துக்குக் கீழே போகும். சித்தப்பாவின் பாசமே பாதகமாகும். ராம லட்சுமணரான அண்ணன் தம்பிகளுக்குக்கூட மனஸ்தாபம் ஏற்படலாம்.
செல்வா, திகைத்து நின்ற குழந்தைகளின் தோள்களில் கையூன்றியபடியே, படுக்கையில் இருந்து எழுந்தான். பிறகு அப்படியே விழுந்தான். ஒரு சாய்த்து படுத்தான். மீண்டும் அந்த குழந்தைகளை பிடித்துக் கொண்டு ஒப்பாரி குரலில் அழுதான். இதற்குள் சித்திக்காரியும் கூக்குரலோடு வந்தாள். அவள் கை எங்கும் முள் துவாரங்கள். ஒருச் சாய்ந்து கிடந்தவனுக்கு முன்னால் தன் கைகளை நீட்டி நீட்டி பேசினாள்.
"காபி இல்லாமலும் பண்ணிட்டே.... கையிலேயும் முள்ள குத்த வச்சுட்டே... கார்டையும் தொலைச்சுட்டே... இப்போ ஒனக்கு திருப்தி தானடா? ஏ! நாய்ங்களா - இன்னிக்கு மட்டும் காப்பி கீப்பி கேட்டிங்கன்னா... தோலை உரிச்சுடுவன்... எல்லாம் என் தலைவிதி... வீட்டுக்குள்ள ஆமை வந்தது மாதிரி.”
செல்வா, தலையை மட்டும் பாம்பு படம் மாதிரி தூக்கிக் கொண்டு பதிலளித்தான். இதுவரை நேருக்கு நேராய் பார்க்க அஞ்சிய சித்தியை நேரடியாக பார்த்தபடியே பேசினான்.
"வேணுமுன்னா, என்ன ஒரேயடியா வெட்டிப் போடுங்க சித்தி ஏற்கெனவே நொந்து போயிருக்கேன். இந்த பிள்ளைகளுக்காக பார்க்கிறேன். இல்லாட்டா இப்பவே இந்த வீட்டை விட்டு ஓடிடுவேன். எல்லாரும் சாகப் போறதே போறம். இடையில் எப்படி வாழ்ந்தால் என்ன. படிக்காதவன்லாம் வாழாமலா போயிட்டான். ஓடிப் போனவங்களும் உருப்பட்டிருக்காங்க சித்தி.. தப்பா பேசியிருந்தால், மன்னிச்சிடுங்க சித்தி ... என்ன பேசறதுன்னே எனக்குத் தெரியல...”
சித்திக்காரி, வாயடைத்துப் போனாள். அவனுக்குள்ளும் ஒரு மனமும், அந்த மனதிற்குள் ஒரு ரோசமும் இருப்பதை முதல் தடவையாக புரிந்து கொண்டாள். பதில் ஏதும் பேசாமல் அப்படியே சிறிது நேரம் சுய பரிசீலனையில் ஈடுபட்டவள் போல் நின்றாள். அப்போது பார்த்து, 'மேடம்' என்ற குரல். சித்திக்கு அடையாளம் காண முடியாத குரல். ஆனால், செல்வாவிற்கு சிறிது நேரத்திற்கு முன்பு பரிட்சயப்பட்ட குரல்.
சித்தி வெளியே வந்தாள். வந்தவனைப் பார்த்ததும் "உட்காருங்க ஸார்... உட்காருங்க ஸார்....'' என்று பரபரப்பான குரலோடு பேசினாள். அங்குமிங்குமாய் அலை மோதினாள்.
செல்வா , துள்ளிக் குதித்து, வாசல் பக்கமாய் நின்று கொண்டான். காட்டுமிராண்டிப் பயல், உன் சித்தியை டாவடிக்கட்டுமா' என்று தன்னிடமே கேட்ட பயல்... கெட்ட பயல்... என்ன ஆனாலும் சரி... அவனை ஒரே வெட்டாய் வெட்டி சித்தியின் கற்பை காப்பாற்றணும்... செல்வா, அரிவாளை தேடிக் கொண்டிருந்தபோது, மோகனன் குரல் மீண்டும் கேட்டது.
"உங்க பால் கார்டுன்னு நினைக்கேன். வழியில் கிடந்தது."
சித்தி, அந்த பால் கார்டை வாங்கி உற்றுப் பார்த்தபடியே, ''ரொம்ப நன்றி ஸார்" என்றாள். கண்களை சுழலவிட்ட மோகனனுக்கு கதவிடுக்கில், செல்வா, அரிவாளோடு நிற்பது தெரிந்தது. சித்திக்காரிக்கு பதிலளிப்பது போல் அவனுக்கு பதிலளித்தான்.
"ஸார்ன்னு கூப்பிடாதிங்கம்மா... சத்தியமாச் சொல்றேன். உங்களைப் பார்க்கிறதுக்கும் கேட்கிறதுக்கும் எங்கம்மாவைவிட ஒசத்தியாவே நீங்க தோணுது.... நான் இனிமேல் எந்தத் தப்பும் செய்யக்கூடாதுன்னு என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கம்மா...”
மோகனன், செல்வாவை கண் தாழ்த்திப் பார்த்துவிட்டு, தலை தாழ்த்திப் போய்க் கொண்டிருந்தான். சித்திக்காரி, செல்வாவின் அறைக்குள் வந்தாள்.
"ஐ.ஏ.எஸ் ஆபீசர் மகன். பெத்த தாய்கிட்ட பேசுறது மாதிரி பேசுறான். உனக்கு நான் தாய் மாதிரி. நீ என்னடான்னா, சொல்லப் பொறுக்கல ஒன்னை திட்டுறதுக்கு எனக்கு உரிமை கிடையாதா?"
செல்வா, சித்தியின் கைகள் இரண்டையும் பிடித்து, கண்களில் ஒற்றிக்கொண்டு, மாங்கு மாங்கென்று அழுதான்.

