Chapter 6

செல்வா, மத்தியானம் பன்னிரண்டு மணி வரை, கவிதாவைப் பற்றி, தான் எழுதிய உரை வீச்சை அடித்தும் திருத்தியும் அல்லோ கலப்படுத்தினான். சுமாரான காகிதங்களில் எழுதப் பட்டதை நல்ல காகிதங்களில் நகல் எடுத்தபோது, "உனக்குன்னு தனியா பறிமாறணுமா?” என்ற சித்திக்காரியின் சத்தம் அவன் காதுகளில் குத்தியது. அவன், அந்தக் காகிதங்களை பயபக்தியோடு தனது நோட்டுப் புத்தகத்தில் வைத்தபோது "தனியா சாப்பிட்டால் என்ன நாய்களா?" என்று, பிள்ளைகளுக்கு குரல் கொடுத்தாள் சித்தி.

செல்வா, அவசர அவசரமாக சாப்பாட்டு மேஜைக்கு ஓடினான். குழந்தைகள் ஏற்கெனவே அங்கே உட்கார்ந்திருந்தன. சித்திக்காரியும் உட்கார்ந்திருந்தாள். ஞாயிற்றுக்கிழமை என்றாலும் அலுவலகத்திற்குப் போய்விட்ட கணவன் மீது கடும் கோபமாக இருப்பது, அவள் சாதத்தை பிசைந்து கஞ்சியாக்குவதிலிருந்து தெரிந்தது. செல்வா, ஒரு கவளத்தை சுபேதாவுக்கு ஊட்டிக் கொண்டே மறு கவளத்தை தனது வாயில் போட்டுக் கொண்டான். சித்திக்காரி அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு, ஒரு செம்பு தண்ணீரையும் மடக் மடக் என்று தொண்டைக் குழிக்குள் அருவியாக்கிவிட்டு போய்விட்டாள்.

செல்வாவும், குழந்தைகளும் சாப்பிட்டு முடித்தபோது, சித்திக்காரியின் குறட்டைச் சத்தம் தோசைக்கல்லில் ஊற்றப்பட்ட ஈர மாவு மாதிரியான ஒலியை எழுப்பியது. செல்வா, சுபேதாவின் கையையும் வாயையும் கழுவிவிட்டு, அருணையும் அப்படி கழுவச் செய்துவிட்டு தங்களுக்கு என்று ஒதுக்கிய மேற்குப் பக்கத்து அறைக்கு வந்தான். குழந்தைகளை மெத்தைக் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு, அவன் அந்த இருவர்களுக்கிடையே படுத்துக் கொண்டான். அந்த இருவரும் தூங்குவதற்கு உந்துகோலாக ஒவ்வொரு கையாலும் ஒவ்வொருத்தர் தலையையும் கோதி விட்டான்.

இந்த முடிக்கோதல் ஒரு அலாதி இன்பம். அதுவும் மிகவும் வேண்டியவர்கள் வருடி விடும் போது, அது ஒரு தனித்துவ சுகத்தை கொடுக்கிறது. மகிழ்ச்சித் திரள்கள் ஒன்றாய் திரள்கின்றன. ஆறுதலுக்கு ஆறுதல். நெருக்கத்திற்கு நெருக்கம். உடலெங்கும் சுக மயம். உள்ளமெங்கும் நிர்மலம். இதனால்தான், குரானில் ஒருவரின் துக்கத்தை குறைப்பதற்கு அவரது பிடரியை தடவி விட வேண்டும்' என்று விஞ்ஞான பூர்வமாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த விஞ்ஞானம், அந்த இரு குழந்தைகளிடமும் எடுபடவில்லை. அவன் கை இரண்டையும் பிடித்துக் கொண்டு 'கதை சொல்லுங்க அண்ணா ' என்றன. சுபேதா பஞ்ச தந்திரக்கதை வேண்டும் என்பது மாதிரி கேட்டாள். அருண் சக்திமான் டைப்பில் கதை கேட்டான். இந்தப் போட்டியில் இரண்டு குழந்தைகளும் அண்ணன் மார்புக்குமேல் பாய்ந்து ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டன அருணை முறைத்துக் கொண்டும், சுபேதாவின் கண்ணீரை துடைத்துக் கொண்டும் அவர்கள் இருவரையும் தன் மார்பில் தலைசாய்க்க செய்து முதுகைத் தட்டிக் கொடுத்தான்.

குழந்தைகள் தூங்கி விட்டன. செல்வா, மெல்ல அவர்களின் தலைகளை படுக்கைக்கு இறக்கி, அவர்கள் விழிக்கிறார்களா என்று நோட்டம் போட்டான். 'அண்ணா ' என்ற குரல் எழுப்பி குழந்தைகள் தன்னை காணாமல் அலறி விடக்கூடாதே என்ற அச்சம். மணியை பார்த்தான். சரியாக பிற்பகல் ஒன்று. உடனே அணிச்சையாக ஆவின் நினைவு வந்தது. பால் கார்டை எடுத்துக் கொண்டு , சமையலறையிலிருந்த பிளாஸ்டிக் கூடையையும் தூக்கிக் கொண்டு புறப்பட்டான். சித்தி விழிப்பதற்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்பதும், ஆவின்காரன் பிற்பகல் மூன்று மணிவரை இருப்பான் என்பதும் அவனுக்கு ஆறுதல் கொடுத்தது.

செல்வா, தெருவுக்கு வந்து, அடுத்த வீட்டை தாண்டி, அதற்கு அடுத்த வீட்டின் கேட்டை நெருங்க நெருங்க இதயமும் மூளையும் ஒன்றை ஒன்று நெருக்கிக் கொண்டன. கால்கள், பின்னியபடியே நடந்தன. மனம் "போ" என்றும் மூளை "போகாதே" என்றும் மாறி மாறி ஆணையிட்டன. இன்றைக்கு மட்டும்தான் என்று மூளைக்குச் சொன்னான் 'இன்றைக்கு பேச வேண்டியதையெல்லாம் பேசிவிடுவோம் என்று மனதிற்குச் சொன்னான். இந்த மனதிற்கும் மூளைக்கும் இடைப்பட்ட குரல் எதுவாக இருக்குமென்று எண்ணிப் பார்த்தான். மனசாட்சியோ என்னவோ - தன்னை நம்பும் சித்தப்பாவிற்கு துரோகம் இழைப்பது போன்ற நெருடல். மகன் மீது மகத்தான பாசமும் நம்பிக்கையும் கொண்டிருக்கும் தந்தை முன்னால் வந்து தடுப்பது போல் ஒரு பிரமை. கூடவே சித்திக்காரியின் திட்டுக்கள். என்றாலும், இதுவரை உயிரோடும் படிப்போடும் இருக்கிறான் என்றால் அதற்கு, அந்த வேலைக் காரம்மாவும் இந்த கவிதாவும்தான் காரணங்கள் என்று நினைக்க நினைக்க, அவனது பின்னிய கால்கள் பிரிந்தன.

செல்வாவின் மனம் துள்ளியது. மணிக்கணக்கில் பொறுத்த வனால் வினாடிக் கணக்கில் கூட பொறுக்க முடியவில்லை. கம்பௌண்ட் கதவில் ஒன்று திறந்திருந்தது. அக்கம் பக்கம் பார்த்தபடியே உள்ளே ஓடினான் கவிதா, அவனுக்காக முன்வாசல் வளாகத்தில் காத்திருக்காதது லேசாய் வலித்தது. முன்னெச் சரிக்கையாக இருக்கும் என்று அந்த வலியை வருடலாக மாற்றிக் கொண்டான்.

ஆறு கிரவுண்டுகளை ஆக்கிரமித்த அரண்மனை வீடு. சுவர்களுக்கு நான்கு புறத்திலும் ஒரு பனை உயரத்திற்கான ஏழெட்டு வெண்மையான தூண்கள். இவற்றிற்கு இடையே அலங்கார வளைவுகள். இரண்டு மாடி கட்டிடம் என்றாலும், அது மூன்று மாடியாய் தோன்றியது. பர்மா தேக்குகள் மாதிரி அதேசமயம் நவீனப் பாங்கில் செய்யப்பட்ட கதவு. பழமையும் புதுமையும் இணைந்த அது சொக்கத் தங்க நிறத்தில் மின்னியது. நுணுக்கமான நெளிவு சுளிவுகளோடு கோபுரமாய், தேராய், சின்னஞ்சிறு பதுமைகளாய் தோன்றிய அந்த கதவில் வெறுமையான பகுதி என்று எதுவும் காணமுடியாது.

கதவு திறந்திருந்தது. உள்ளே எட்டிப் பார்த்தால் கவிதாவைக் காணவில்லை. ஒருவேளை சினிமாக் காட்சிகளில் வருவதுபோல் மறைந்திருந்து தாவுவாள் என்று நினைத்துக் கொண்டான். பைக்குள் இருந்த உரைவீச்சை தட்டிக் கொடுத்தான் இதுவரை அதிகமாய் சொல்லாத சுமைகளை கொண்ட அந்தக் கடிதத்தை படித்துவிட்டு, கவிதா ச மாக அழுதுவிடக்கூடாதே என்ற ஆதங்கம். அதேசமயம் அவள் அழுகைக் கண்ணீரில், தனக்கு ஆனந்தக் கண்ணீர் வரும் என்றும் நினைத்தான். தன்னை நேசிக்கும் ஒருவரிடம் தனது பாரங்களை ஏற்றிவிட்டு ஏற்றப்பட்டவர்களின் பாரங்களை திருப்பி வாங்கிக் கொள்ளும் போது எப்படிப்பட்ட சுகமும், நன்றி உணர்வும், பெருமிதமும் கிடைக்குமோ அப்படிப்பட்டவை அவனுக்குக் கிடைத்தன.

செல்வா, உப்பிப் போன தனது சட்டைப் பை யை அழுந்தப் பிடித்தபடியே, "கவிதா. கவிதா..." என்று காந்தக் குர லாடு சோபா செட்டுகளை கொண்ட வரவேற்பறையின் நடுவில் நின்று கூவினான்.

உடனே கதவில்லாதது போல் தோன்றிய பிளைவுட்டால் ஆன கிழக்கத்திய தடுப்பிலிருந்து ஒரு தேக்குப் பலகை திறந்தது. மோகனன், இரண்டு ஆண்கள் கட்டி அணைக்கும் முத்திரை படம் கொண்ட பனியனோடு நின்றான். லாகவமான உதட்டோரப் புன்னகை. சுருள் சுருளான புல்தரை மாதிரியான கிராப்பு. பிடரியைத் தாண்டிய முடி ஒற்றைக் கடுக்கன். கையில் ஒற்றை வளையம். நீளவாக்கு முகம், மாம்பழ நிறம், முகத்தில் கொய்யாக்காய் போன்ற வடுக்கள்.

செல்வா, வெலவெலத்துப் போனான். எங்கே நிற்கிறோம், யார் முன்னால் நிற்கிறோம் என்பது கூட தெரியாத அதிர்ச்சி. ஒரே ஓட்டமாய் ஓடிவிடலாம் என்பதுபோன்ற திருப்புமுனை பார்வை. அதுவே குற்றத்தைக் காட்டி கொடுக்கும் என்ற ஞானம். ஆனாலும், மோகனன் அவனை சிரித்தபடியே பார்த்தான். அந்த சிரிப்பை புன்னகையாக்கியபடியே, அவன் மெல்ல நடந்து வந்தபோது, செல்வாவின் பயம் லேசாய் தெளிந்தது. கூடவே சிரிப்பாய் வரவேற்கும் மோகனன் மீது அன்பும், இப்படித் தன்னை மாட்ட வைத்த கவிதா மீது கோபமும் வந்தது.

மோகனன், செல்வாவை நெருங்கி, ஐ எம் மோகனன் என்று கையை நீட்டினான் இடுப்போடு ஒட்டிக் கிடந்த செல்வாவின் வலது கையை பிடித்துக் குலுக்கினான். "நீ யார்" என்று அவனை கேட்காததிலிருந்து, அவனை அவன் தெரிந்து வைத்திருக்கிறான் என்பது புரிந்தது. செல்வாவின் கையை பிடித்த மோகனன், சிறிது நேரம் அதை வருடிக் கொடுத்தபடியே நின்றான். செல்வாவிற்கு பயம் போய்விட்டது. இவன் ஜென்டில்மேன். இவனைப் போய் கவிதா அசல் போக்கிரி என்றாளே. அதோடு அசிங்கம் பிடித்தவன் என்றும் கத்தினாளே..'

மோகனன், செல்வாவின் கரத்தை விடுவித்துவிட்டு, அறைக் கதவை நோக்கிப் போட்ட ஒற்றைச் சோபா இருக்கையில் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்தான் எதிரே உள்ள சோபா செட்டில் செல்வாவை உட்காரும்படி சைகை செய்தான்.

அவன் உட்கார்ந்து முடித்ததும், மோகனன் தோழமையோடு கேட்டான்.

"நீங்க பக்கத்து வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற கிச்சன் வீட்டு பையன்தானே?'

செல்வாவிற்கு கோபமும் வந்தது. ரோசமும் வந்தது. அவன் சித்தப்பா நேர்மையானவர். கடனே என்று கட்டிய வீடு. அதாவது அரசாங்கக் கடனில் கட்டிய வீடு. சித்தியின் நகைகளை அடகு வைத்து சுமாராக கட்டப்பட்ட அந்த வீட்டை, இவன் கிச்சன் வீடு என்று சொன்னது என்னவோ போல் இருந்தது. இவன் அப்பன் ஐ.ஏ.எஸ். காரனைப் போல் கொள்ளையடித்துக் கட்டிய வீடல்ல. இப்படி சொல்லி விடலாமா என்று கூட அவன் நினைத்தான். உடனே காரியம் பெரிதா... வீரியம் பெரிதா.... என்ற கிராமத்துப் பழமொழி அவனுக்கு நினைவுக்கு வந்தது. அதோடு இவன், அவன் உயிருக்குயிரான கவிதாவின் அண்ணன் தமாஷ் பேர்வழி. மனதில் எந்த விகற்பமும் இல்லாமல் அப்படி கேட்டிருப்பான்.

"ஏன் யோசிக்கிறே? பதில் சொல்லு?"

"ஆமாம் ஸார். அது எங்க சித்தப்பா வீடு. ரொம்ப ரொம்ப நேர்மையானவர். அவரால் கிச்சன் வீடுதான் கட்ட முடியும். நான், அவரோட அண்ணன் மகன். கிராமத்துல அப்பாம்மா இருக்காங்க... நான் இங்கே சித்தப்பா வீட்ல தங்கி காலேஜ் படிக்கிறேன்.

"ஒன்னைப் பார்த்தால், படித்தவன் மாதிரி தெரியலியே?"

"நோ... நோ... சார்.. நான் பி.எஸ்.ஸி. பிசிக்ஸ் ஸார்... கிளாஸ்ல பஸ்டு ஸார்.... பல கல்லூரிப் பேச்சுப் போட்டிகள்ல பஸ்ட்ல வந்திருக்கேன் ஸார்...”

"குட்... அப்படித்தான் இருக்கணும். ஆனா டிரெஸ்லேயும் கவனம் செலுத்தணும்... நான் ஒரு ஐ ஏ.எஸ். ஆபீசர் மகனாய் பிறந்தாலும், பத்தாவது வகுப்புக்கு மேல புத்தி போகல.... ஆனாலும் எவ்வளவு ஸ்டைலாக இருக்கேன் பார். ஒன் நன்மைக்காகத்தான் நான் சொன்னேன். தப்பா பேசியிருந்தால் மன்னிச்சுடு..."

"மன்னிக்கும்படியாய் நீங்க எதுவும் பேசல ஸார்.... உங்கள ரெண்டு மூணு தடவதான் பார்த்திருக்கேன். நீங்க விதிவிலக்கான இளைஞராம். டான்ஸ் மாஸ்டராம். ஸ்டண்ட் பயிற்சியாளராம். டி.வி.யில நிகழ்ச்சிகளுல அந்தர் பல்டி அடிச்சுக்கிட்டே பாடுவீங்களாம். ஆக மொத்தத்துல சகலகலா வல்லவராம். ஆனாலும், ஐ.ஏ.எஸ். அப்பாக்கூட மட்டும் ஒத்துப் போனால் எங்கேயோ போயிருப்பீங்களாம். இதனால உங்க டேலண்ட் வேஸ்ட் ஆகுதாம்."

"இப்படி சொன்னது யார் உனக்கு?"

"எங்க சித்தி ஸார். உங்க அம்மாவோட பிரண்டு ஸார்."

"அப்போ உங்க சித்தியை நான் டாவ்' அடிக்கட்டுமா? உட்காருடா.. எழுந்துட்டதாலேயே நீ போகமுடியாது. இப்படிச் சொன்னது என் சிஸ்டர் கவிதாதானே... நேரா உண்மைக்கு வரவேண்டியது தானடா..."

செல்வா, தலை குனிந்தபடியே , மோகனனுக்கு முகம் காட்டாமல் கிடந்தான் போதாக்குறைக்கு எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பது போல் இடது பக்க சட்டைப் பையை வலது கையால் மூடினான் அது துருத்திக் கொண்டிருப்பதை ஏற்கெனவே கவனித்த மோகனன், அவனை உச்சி முதல் பாதம் வரை பார்த்தான் மானசீகமாக பருகினான் மோப்பக் குழையும் அனிச்ச முகம். நாட்டுக் கட்டை உடம்பு என்றாலும் அதில் ஒரு நளினம் மன்மதனின் மனைவியான ரதியக்கா தன்னைப்போல் ஒரு மனிதச் சதையை செதுக்கியது போன்ற தோரணை. கருப்பும் மின்னும் என்பது போல் காட்டிய உடம்பில் சந்தனக் குழைவு. இரண்டுக்கும் பயன்படுவான்."

இப்போது, மோகனனின் புன்னகை போலித்தனமான கோபமானது. நாட்டியக்காரன் என்பதால் கண்கள் உருண்டு திரண்டு ஒரே நிலையில் நின்றன.

"கவிதாவை பார்க்கத்தானே வந்தே?"

"ஆமாம் ஸார். இனிமேல் இந்தப் பக்கம் வரமாட்டேன் ஸார்"

"நான் காதலுக்கு எதிரியில்லை மச்சி.... பையில் இருக்கிற அந்த லவ் லெட்டரை எடு. எனக்குத் டமிழ்ன்னா உயிரு... அதோட ஒன்னை மாதிரி காலேஜ் பசங்களோட டமில் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்."

"லவ் லெட்டர் இல்ல ஸார்... ஆவின் கார்டு ஸார்..."

"எனக்கு காதுல பூ வச்சு பழக்கமே தவிர, வைக்க விடுறதில்ல. மரியாதையா கையில் இருக்கிறத நீட்டு... இல்லன்னா போலீஸுக்கு போன் பண்ண வேண்டியது வரும். ஒரு மைனர் பெண்ணை கடத்த வந்த குற்றத்திற்கு, போலீஸ்ல லத்தியால லொத்து லொத்துன்னு வாங்குவாங்க. ஒரு ஐ.ஏ.எஸ் ஆபீசர் மகன் போலீஸுக்கு போன் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா? கம்பி எண்ணனுமா.... லெட்டர தாரீயா.."

"லவ் லெட்டர்தான் ஸார்.. கவிதாவுக்குத் தெரியாமல் நானே எழுதின டர்டி லெட்டர் ஸார்...”

"டர்டின்னு சொல்லாத மச்சி.... ஸ்வீட் நத்திங்ஸுன்னு சொல்லு. நான் காதலுக்கு எதிரியில்லை அதை ஆதரிப்பவன். நீ எப்போ என் தங்கைய லவ் பண்றதா தெரிஞ்சிதோ, அப்பவே, நான் ஒனக்கு மச்சான். நீ எனக்கு மச்சி. சரி லெட்டரை எடு..."

"இது ஒருதலைக் காதல் ஸார்.... கவிதா என்கிட்ட பேசினதே கிடையாது ஸார்..."

"அத, ஒன் லெட்டரைப் பார்த்து தெரிஞ்சுக்கிடுறேன்... அப்புறம் ஒன்னை போக விடுறேன். ஏன்னா... கொலை மிரட்டல் மாதிரி எதுவும் எழுதியிருக்கப்படாது பாரு... சரி.. கொடு..."

செல்வாவின் உடல் வேர்வையில் நனைந்தது. தலை சுற்றியது. ஆகாயத்தில் தூக்கி எறியப்பட்டு, தரைக்கு வராமல் தவிப்பது போல் இருந்தது. தயங்கித் தயங்கி ஆவின் கார்டையும் கவிதாவிற்கு எழுதிய கடிதத்தையும் கை நடுங்க, கால் ஒடுங்க மோகனனிடம் கொடுத்தான். அவனோ ஆவின் கார்டை பின் அட்டை போல் வைத்துக் கொண்டு அந்தக் கடிதத்தை மேலெழுந்த வாரியாகப் படித்துவிட்டு, பிறகு கண்ணூன்றி படித்தான்.

"என் இனிய சுமை தாங்கியே!"

"வணக்கம். வணக்கமம்மா. நீ கடற்கரையில் ஆணையிட்டதால் மட்டும் இந்தக் கடிதத்தை எழுதவில்லை. எனக்கு ஏற்பட்ட ஆசையாலும், இதை எழுதுகிறேன். இதை வாசிக்க வாசிக்க, நீ மகிழ்ந்தால் நானும் மகிழ்வேன். ஆனாலும், இந்தக் கடிதம் உன்னை அழ வைக்குமோ என்று அஞ்சுகிறேன். ஒருவர் மனதில் இருப்பதை அப்படியே எழுதினால் பிரச்சினையில் பாதி குறையும் என்பார்கள்."

"எனக்கு காலில் முள் குத்தினால் உனக்குக் கண் வலிக்கும். இதே போல் தான் எனக்கும். மன அலையோ.... உள்ளுணர்வோ ... முற்பிறவியோ ஏதோ ஒன்று நம் இருவரையும் இனிமையாக கட்டிப் போட்டிருக்கிறது. அது மலையையும் பாதாளத்தையும் இணைக்கும் ஏதோ ஒரு காதல் சங்கிலி. இந்தச் சங்கிலியிலிருந்து நீ கீழே இறங்கக் கூடாது. நான் தான் மேலே ஏறி வரவேண்டும். பி.எஸ்.ஸி. முடித்ததும் வேலையில் சேர்ந்தபடியே நிச்சயம் எம் எஸ்ஸி. படித்து ஐ.ஏ.எஸ். எழுதி உன்னை கைப்பிடிப்பேன் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை இருக்கிறது. எல்லாம் அடியேனின் உழைப்பில் எழும் ஆண்ட வன் சித்தம்."

"உன்னை நான் சுமைதாங்கி என்று அழைத்தற்கு, வேறு ஒரு சாதாரண பெண்ணாக இருந்தால் கொச்சையான பொருளில் எடுத்துக் கொள்வாள். ஆனால், நீயோ அசாதாரணமான பெண். தாய்மையின் உருவம். எல்லோர் மீதும் படரும் உன் தாய்மை, எனக்கு மட்டும் காதலாக கவிழ்ந்தது. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், நீ எல்லோருக்கும் தாய் மாதிரியான அமைதியும் அன்பும் ஊடாடும் மௌனப் பார்வைக்காரி என்னைத் தவிர்த்து, மற்றவர்களிடம் நிதானமாக உதடு அசைத்து, மெல்லவும், அதே சமயம் உறுதியாகவும் பேசக் கூடியவள். ஆடை அலங்காரத்தில் ஆசை கொள்ளாதவள். பிறர் துன்பத்தை தன் துன்பமாய் எடுத்துக் கொள்கிறவள். என் துன்பத்தை நீ பகிர்ந்து கொண்டதால், அது எவ்வளவோ குறைந்திருக்கிறது. நீ என் தோளைத் தட்டும் போதெல்லாம், அந்தத் தோளுக்கு ஒரு வலிமை கிடைத்தது. கண்களை துடைத்த போதெல்லாம் என் கண்களுக்கு பிரகாசம் கிடைத்தது."

இருக்கை விளிம்பில் கையூன்றி திரிசங்கு நிலையில் நடுங்கிப் போய் நின்ற செல்வாவை ஏற இறங்கப் பார்த்த மோகனன் எனக்கு டமில் புரியாது. பத்து வரைக்கும் கான்வெட்டில் படிச்சவன் இதுக்கு பேர்தான் ஒருதலைக் காதலோ என்றான்.

செல்வா, அவனை கையெடுத்துக் கும்பிடப் போனபோது, அதற்குள்ளேயே மோகனன் கடிதத்துள் மூழ்கினான்.

"நம் காதலுக்கு, முதலில் எங்கள் வீட்டு வேலைக்காரம்மாவிற்கு நன்றி சொல்ல வேண்டும். நான் அங்கே படும் பாடுகளை அவள் உன்னிடம் சொல்லாவிட்டால் உனக்கு என்னிடம் ஈர்ப்பு ஏற்பட்டிருக்காது. அதே வேலைக்காரம்மா என் கதையை கேட்டு நீ கண்ணீர் சிந்தியதாக சொல்லாவிட்டால், பெரிய இடத்துப் பெண்ணான உன்னிடம் என் மனம் நிச்சயமாக ஈடுபட்டிருக்காது.”

"ஆக பலருக்கு, காதல் கண்ணீ ரில் முடியும். நமக்கோ , கண்ணீரில் துவங்கியது. நிச்சயமாகச் சொல்கிறேன். தற்செயலாக உனது காரில் எனக்கு நீ லிப்ட் கொடுக்காமல் இருந்தால், நான் தற்கொலை செய்திருப்பேன். அதற்காகத்தான் அந்தப் பூங்கா பக்கம் போனேன். என்னைப் பற்றி எல்லாம் தெரியும் என்பது போல் நீ பேசிய பேச்ச என் வாழ்க்கைக்கு ஒரு திருப்பு முனையாகிவிட்டது. நீ என் காதலிதான். கண்ணம்மா என் காதலி என்று பாரதி பாடினாரே அப்படிப்பட்ட காதலி நீ"

''உன் அறிவுரைப்படி பலர் முன்னிலையில் என்னை இழிவுபடுத்தும் சித்தியின் பிள்ளைகளாக அந்த குழந்தைகளை அனுமானிக்காமல், அண்ணன் மகனை முன்னுக்கு கொண்டு வரத் துடிக்கும் சித்தப்பாவின் அருமை செல்வங்களாக நினைத்து நினைத்து, இப்போது அவர்களை என் குழந்தைகளாக நினைக்கிறேன். இதற்கு பெருமைப்-படாமல் சித்தி, பொறாமைப் படுகிறாள். ஆனாலும், அவள் என்னை ஏச வேண்டும். அதை நான் உன்னிடம் ஒப்பிக்க வேண்டும். நீ வழக்கம்போல் ஆறுதல் கூறவேண்டும் என்று என்னை அறியாமலேயே ஒரு எண்ணம் வருகிறது. சித்தியையும் அதிகமாக குறை சொல்ல முடியவில்லை. என்னை திட்டுவது போலத்தான், தான் பெற்ற குழந்தைகளையும் திட்டுகிறாள். வஞ்சகம் இல்லாமல் எனக்கு உணவளிக்கிறாள். ஆபீசர் சித்தப்பாவிடம் அதிக எதிர்பார்ப்புகளோடு வந்தவளுக்கு, அவரது நேர்மை விலங்கிட்டிருக்குமோ என்று ஐயப்படுகிறேன். சித்தப்பா மீது காட்ட முடியாத கோபத்தை என் மீது காட்டுகிறாளோ என்னவோ. ஆனாலும், சித்தி என்னை திட்டும் போதெல்லாம், நீ அங்கே தோன்றி அவளிடம் எதிர் கேள்வி கேட்டு அடக்குவது போல் கற்பித்து கொள்கிறேன். யதார்த்தமான நிசத்திலிருந்து தப்பிக்கத் தோன்றும் முட்டாளின் சொர்க்கம் என்று நினைக்காதே. நீதான் என் சொர்க்கம்."

"எதை நீக்க முடியாதோ, அதை சகித்துக் கொள்ள வேண்டும் என்பது ஆங்கிலப் பழமொழி. சித்தியின் ஏச்சான எச்சிக்கல் பயலே வாங்கிக் குடித்த பய மவனே... எறப்பாளி...' என்பன போன்ற வார்த்தைகளை நீங்கள் நேர்மையானவர்... வெள்ளந்தி... எதிர்கால வி.ஐ.பி.' என்று நீ சொல்லும் வார்த்தைகள் சித்தியின் வார்த்தைகளை துரத்தி விடுகின்றன.

"சித்தியின் ஏச்சை நான் பொறுத்துக் கொள்வதால், நான் சுயமரியதைக்காரன் அல்ல என்று பொருள் அல்ல. என் பெற்றோர், என்னை அப்படியும் வளர்க்கவில்லை. நாங்கள் வாழ்ந்து கெட்ட குடும்பம். என் தந்தை, தனது தம்பியான என் சித்தப்பாவை சக்திக்கு மீறி படிக்க வைத்தவர் இதர சித்தப்பாக்கள் அவனை ஏன் படிக்க வைக்க வேண்டும் என்று கேட்டபோது, அவர்களுக்கு வாயால் சூடு போட்டவர். எப்போதுமே வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையுமாய் ஒரு தூசி தும்பு படாமல் இருப்பவர். விவசாய உழைப்பாளி அல்ல. அதேசமயம் பத்தாயிரம், இருபதாயிரம், ஐம்பதாயிரம் என்று சீட்டுப் போட்டு, அதில் மாதா மாதம் கிடைக்கும் ஏழாயிரம், எட்டாயிரம் ரூபாயை சேமித்து தனது இரண்டு தங்கைகளை கரையேற்றியவர். இதனாலேயே ஊரில் அவருக்கு நல்ல பெயர்.”

"ஆனாலும், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட சாதித் தீ, எங்கள் கிராமத்தையும் பற்றிக் கொண்டது. இந்தச் சாக்கில், சீட்டுப் பணத்தை ஏலத்தில் எடுத்த பிற சாதியினர், மீதி பணத்தை கட்டவில்லை. அப்பாவிடம் சீட்டுக் கட்டியதற்கான எந்தவித ரசீதும் இல்லாததால், அவரால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதேபோல், அவரும் ஆதாரம் இல்லை என்ற சாக்கில் சீட்டை ஏலத்தில் எடுக்காதவர்களுக்கு பட்டை நாமம் போட்டிருக்கலாம். அப்படி அவர் செய்ய மனம் வரவில்லை. சீட்டு கட்டியவர்கள், தத்தம் மகள்களை கரையேற்றுவதற்காக பணம் போட்டவர்கள். இக்கட்டான நிலையில் இருந்த அப்பாவுக்கு, வசதியான கிராமத்து சித்தப்பாக்கள் உதவிக்கு வராமல் தங்களது சீட்டுப் பணத்தையும் அவர் தந்தாக வேண்டுமென்று அரிவாள் கம்போடு வந்தார்கள். அத்தைமார்களோ, உதவப் போன கணவன் மார்களை ஏலத்தில் குரல் எழும்புவது போல் திட்டித் தீர்த்தார்கள் எனக்கு ஒரு புதிராகவே இருக்கிறது கவிதா. பொதுவாக வறுமைப்பட்ட ஒரு குடும்பத்தில் அனைவரையும் கரையேற்றும் மூத்த அண்ணன் அல்லது மூத்த சகோதரி கடைசியில் அதே குடும்பத்தாரால் உதாசீனப்படுத்தப்படுகிறார். இது எங்கப்பாவுக்கு மட்டும் நேருவது அல்ல. பலருக்கு நடந்திருக்கிறது. சமூக இயல் நிபுணர்களும், மனோதத்துவ நிபுணர்களும்தான் இத்தகைய உதாசீனத்திற்கு காரணங்கள் கூற வேண்டும். சரி விஷயத்திற்கு வருகிறேன்."

"என் தந்தையிடம் மஞ்சள் கடிதாசு கொடுக்கும்படி சண்டைக்கு வந்த சாதிக்காரர்களே ஆலோசனை சொன்னார்கள். ஆனாலும் என் தந்தை கொஞ்ச நஞ்சமிருந்த சொத்தையும் அம்மாவின் நகைகளையும் விற்று, அத்தனை பேருக்கும் கட்டிய பணத்தை திருப்பிக் கொடுத்தார். இப்போது ஒரு சின்னப் பெட்டிக் கடை வைத்திருக்கிறார். ஆனாலும் அவரது குனிந்த தலை குனிந்தபடியே இருக்கிறது. அந்த தலையை நிமிர்த்துவதுதான் என் முதல் பணி. இரண்டாவதுதான் நீ. இதை நீ தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது. காரணம் மூன்றாவதுதான் நான்."

"ஊருக்கு வந்த பிறகுதான், சித்தப்பாவுக்கும் சித்திக்கும் விவகாரமே தெரியும். மாதச் சம்பளக்காரரான சித்தப்பாவாலும் ஏதும் பெரிதாய் உதவ முடியவில்லை . தனது பங்குக்கு உரிய சொத்தையும் விற்கும்படி சொன்ன சித்தப்பாவை, அப்பா கண்ணீர் மல்கி கட்டித் தழுவி அழுதார். ஆனால், மறுத்துவிட்டார். அப்பா அழுவதை அப்போதுதான் பார்த்தேன். ஒரு தாய் மக்கள், பங்காளிகளாக மாறும்போது எனது தந்தையும் சித்தப்பாவும் ராம லட்சுமணர்கள். ராமரும், லட்சுமணரும், வெவ்வேறு தாய்க்கு பிறந்தவர்கள். ஆகையால், அவர்களால் ஒற்றுமையாக இருக்க முடிந்தது. ஆனால், ஒருதாய் மக்கள் என்றைக்குமே ஒற்றுமையாக இருந்ததில்லை. இதற்கு விதிவிலக்கு என்னுடைய அப்பா - சித்தப்பா பிளஸ் டூ முடித்த என்னை கல்லூரியில் படிக்க வைப்பதாக சித்தப்பா அப்பாவிடம் கேட்டுக் கொண்டார் அதுவும் அழுதபடியே கேட்டார். சொத்து என்று வந்தபோது அழுது மறுத்த அப்பா, எனது படிப்பு என்று வந்தபோது 'உன் பிள்ளை எடுத்துக்கோ ' என்றார். சித்தியும், "நீ, நான் பெறாமல் பெற்ற பிள்ளை" என்றாள். இந்த சென்னைக்கு வந்த பிறகுதான் தெரிந்தது. சித்திக்கு நம்பிக்கையான ஒரு வேலைக்காரன் வேண்டும் என்று. பால் கொடுக்கும் மாட்டை பல்லை பிடித்து பார்க்கக்கூடாதுதான். ஆனாலும், உன்னிடம் மட்டுமே இதை தெரிவித்தேன். தெரிவிக்கிறேன்."

"இன்று, உன் வீட்டில், நான் உன்னை சந்திப்பது இதுவே முதலாவதாகவும் கடைசியாகவும் இருக்க வேண்டும். அதேசமயம், புனைப் பெயர்களில், நீ , என் கல்லூரி முகவரிக்கும், நான் உன் பள்ளி முகவரிக்கும் கடிதம் எழுதிக் கொள்வோம். உன் பெயர் கவியரசன். என் பெயர் செல்வி. நான் நம் இருவருக்கும் சூட்டியிருக்கும் பெயர்களின் பொருள் புரிகிறதா மக்கே.... காதல் என்று வரும்போது காதலன் காதலியாகிறான். காதலி காதலனாகிறாள்."

"உன் அண்ணன் மோகனனைப் பற்றி அதிகமா நீ அலட்டிக்க வேண்டாம். அவரை வெறுக்கவும் வேண்டாம். எனக்கு என்னமோ, அவர் நல்லவர் போலவே படுகிறது. நீயும் உன் தந்தையும் கௌரவத்தை பார்க்காமல் அவரிடம் கனிவாக பேசினால் அவரும் கனிந்து விடுவார். இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த விவகாரத்தை நான் எழுப்புவது உனக்கு எரிச்சலை கொடுக்கலாம். ஆனால், என் மைத்துனர் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் எனக்கு மட்டும் ஆசை இருக்காதா என்ன?

இப்படிக்கு முத்தங்களுடன்,

செல்வா.

மோகனன், கடிதத்தின் முன்னுரையை படித்துவிட்டு கண் கலங்கினான். சுழித்த புருவங்கள் இறங்கின. செல்வாவை பாசத்தோடு பார்த்தான். கொடுமைக்குள்ளாகும் பெரிய இடத்துப் பெண்களுக்கு திரௌபதி வேடம் போடுகிறவன் மீது ஒன்றிப்பு ஏற்படுவதுபோல, இவனுக்கும் செல்வாவிடம் ஒரு ஒன்றிப்பு ஏற்பட்டது. ஆனால், செல்வாவோ –

"என்னை விட்டுடுங்க ஸார்... வேணுமுன்னால் அடியுங்க ஸார்.. இப்படி எழுதுனது தப்புதான் ஸார்.... இதை மட்டும் நீங்க என் சித்தப்பா கிட்டயோ, சித்தி கிட்டயோ சொன்னால், என் படிப்பு கெடும். அதைப் பற்றிக்கூட நான் கவலைப்படல ஸார். ஆனால், சித்தப்பா, நம்பிக்கைத் துரோகம் பண்ணிட்டனேன்னு என்னைப் பார்க்கிற பார்வையையோ , என் பெற்றோர் தலைகள் மேலும் தாழ்வதையோ பார்த்துகிட்டு நான் உயிரோட இருக்கமாட்டேன் ஸார்... நீங்கதான் ஸார் என்னை காப்பாத்தணும்.."

எதிர்பாராத விதமாக, செல்வா, மோகனனின் காலில் விழுந்தான். அந்தக் காலை கட்டிக்கொண்டே தலையை முட்டினான், மோதினான். மோகனனும், எந்தவித விகற்பமும் இல்லாமல், மனித நேயத்தோடு செல்வாவை தூக்கி நிறுத்தினான். அவன் கண்ணீரை துடைத்து விட்டான். தலையை கோதிவிட்டான் அழாதடா.. அழாதடா... நீ நினைக்கிறபடி எதுவும் நடக்காதுடா...' என்றபோது செல்வா, விம்மி வெடித்து அவன் மார்பில் சாய்ந்தான்.

மோகனனின் அகமும் புறமும் தீப்பற்றியது. இதயத்திலிருந்து ரத்தம் கீழ்நோக்கிப் பெருகி ஓடியது. நரம்புகள் புடைத்தன. ரத்தக் கோளங்கள் அகலமாகி, ஆழமாயின. மோகனன் பயப்படாதடா.. பயப்படாதடா... என்னால் உன் காதலுக்கோ படிப்புக்கோ தடங்கல் வராது... வா கண்ணு ... உள்ளே போய் விலாவாரியாய் பேசலாம்...' என்றான்.

மோகனனின் அறைக்கதவு, அவனையும் செல்வாவையும் உள்ளே அனுப்பியபடியே, தானாக ஒட்டிக் கொண்டது. அப்படிப்பட்ட பூட்டு கொண்ட கதவு. அதாவது ஆட்டோமேடிக் கதவு சாதாரண கதவல்ல.. அசாதரணமாய் தாளிடும் கதவு.