Chapter 1

சென்னைப் பெருநகரின் இதயப்பகுதி; அதற்குப் பைபாஸ் சர்ஜரி செய்தது போன்ற கட்டிடத் தொகுதிகள். அத்தனையும் வானம் அளப்பவை. இதில் முக்கோணமாய் முகம் காட்டும் மூன்று திரையரங்குகள். இந்தக் கட்டிடத் தொகுதிக்குப் பின்னால் விரிந்து பரந்த ஆள் நடமாட்டம் இல்லாத வளாகம். பென்ஸ், டாடா சுமோ, மாருதி, சான்ரோ, இண்டிகா போன்ற பல்வேறு கார்கள், கிழித்த கோடுகளை மீறி நின்றன. இவற்றின் அருகே பல்வேறு வண்ணத்திலான இரண்டு சக்கர வாகனங்கள்; ஒரு ஓரத்தில் சைக்கிள்கள்.

இந்த வளாகத்தின் உள்முனையில் பத்து படிக்கட்டுக்கள். கீழே இறங்கிப் போனால் 'அண்டர் கிரவுண்டான' அடிவாரத் தளம். பளபளப்பான கடப்பா மேனித் தரை நடந்தால் காலுக்கு ஒரு சுகம்; உள்ளே வருகிறவர்களை வரவேற்பதற்காக, ஒரு காதில் மட்டும் கடுக்கன் போட்ட விரிந்த சடை இளைஞர்கள் இரண்டு பேர், கோட்டும் சூட்டுமாய் நின்றார்கள் 'ஹலோ' என்பதற்கு பதிலாக ஒவ்வொருவரிடமும் "ஹாய் கேய்" என்றார்கள்.

அடிவாரத் தளத்தில் வடக்கு முனையில் அலங்கரித்த மேடை மிருதங்க, வீணை, வயலின், கடம் முதலிய வித்தகர்கள் தத்தம் கருவிகளோடு அவற்றை செல்லத் தட்டாய் தட்டியபடியே இருந்தார்கள். இவர்கள் மத்தியில், ஒரு இளம் பாடகன். மேடையின் மேட்டுப் பகுதியில், காகிதப் பூக்களால் தோரணமாய் சுருள் சுருளாய் கட்டப்பட்டிருந்தன பின் தளத்தில் தில்லை நடராஜருக்குப் பதிலாக, அர்த்த நாரீஸ்வார் சிலை அதன் ஒரு கண்ணில் நளினப் பார்வை. இன்னொன்றில் சுடலைத் தீப்பொறி. ஒ றை மார்பகம் ; இடுப்பில் ஒரு பக்கத்தை காணவில்லை. கால்கள் ஒன்றில் லாவகம். இன்னொன்றில் ஆடு தளத்தை அழுந்தப்பிடித்த - நாட்டிய பாணியில் சொல்லப்போனால் "தரைத்தட்டு”க் கோலம்.

நடுநிசி வந்துவிட்டது.

திடீரென்று மிருதங்கத்தின் அலாரிப்பும், அந்த அர்த்த நாரீஸ்வரர் சிலைமீது பூக்களும் ஒரே சமயத்தில் உராய்ந்தன. பக்கவாட்டில், நீளவாகு தேக்குப் பலகையில் விஸ்கி, பிராந்தி, ரம், ஒயின், ஓட்கா, பிளடி மேரி போன்ற குடி வகையறாக்கள். இடது பக்கத்து நீளவாக்குப் பலகையில் பிஷ் பிங்கர் , பிங்கர் சிப்ஸ், மட்டன், சிக்கன் வறுவல்கள், முந்திரிக்கொட்டை, வேர்க்கடலை, நனைந்த பருப்பு, நனையாத பருப்பு, உருளை வடிவமான வெங்காயம், அதேமாதிரியான வெள்ளரிக்காய், பிரியாணி, சப்பாத்தி, சமாச்சாரங்கள். இவை அத்தனையையும் ஓரங்கட்டிப் பார்த்தபடியே நின்றவர்கள், இரண்டு வரிசையாகப் போடப் பட்டிருந்த நாற்காலிகளில் உட்காரப் போனார்கள்.

அதுவரை, மனித குரோசோம்களில் நாலு கோடியே பத்து லட்சம் கேரக்டர்கள் இருப்பதை கண்டு பிடித்த லண்டன் மருத்துவ விஞ்ஞானிகளின் பிரமிக்க வைக்கும் கண்டுபிடிப்பை அலசிக் கொண்டிருந்தவர்கள் - வீட்டில் வெள்ளைக் கோட்டை தூக்கிப் போட்டுவிட்டு வந்திருந்த இவர்கள், முன் வரிசையில் இடது பக்கம் நட்புக்கு ஏற்ற வகையிலும், மேடைப் பார்வைக்கு ஏற்ற வகையிலும் உட்கார்ந்தார்கள். தர்மபுரியில், மூன்று மாணவிகளை, உயிரோடு கொளுத்திய கொடுமையை அரசியல் சாசனத்தின் வழியாகவும், இ.பி.கோ. மூலமும், அலசிக் கொண்டிருந்தவர்கள், வலது பக்கம் உட்கார்ந்தார்கள். இவர்களும் கருப்பு அங்கிகளை கார்களுக்குள் போட்டுவிட்டு வந்தவர்கள். பொறியாளர்களிடம், தான் வரைந்த கட்டிடப் பிளானை தலைகளாகப் பிடித்த கார்ப்பரேஷன் கிளார்க்கிடம் அதைச் சுட்டிக் காட்டினால் உடனே அவர் தவறுக்கு வருந்தாமல் எனக்குத் தெரியும்' என்று திமிராக பதிலளித்ததை விளக்கிக் கொண்டிருந்த சீனியர் பொறியாளரை விட்டுவிட்டு, ஜுனியர் பொறியாளர்கள் இருக்கைகளில் ஓடிப்போய் உட்கார்ந்தார்கள் சாதிச் சண்டைகளை, சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக கருத வேண்டும் என்று வாதாடி போராடிக் கொண்டிருந்த ஐ ஏ எஸ், ஐ.பி.எஸ். காரர்களும், சமூகப் பிரச்சினையாக கருத வேண்டும் என்று பதிலளித்த அரசியல் வாதிகளும் அவசர அவசரமாய் ஓடி உட்கார்ந்தார்கள் இவர்கள் அல்லாது கம்பெனி நிர்வாகிகள், மாணவர்கள், டாக்சி டிரைவர்கள், என். ஜி ஓ எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனர்கள், லுங்கிக்காரர்கள் உள்ளிட்ட கலப்புக் கூட்டமாக, அந்த இருக்கைகள் மாறின. ஆனாலும், மருந்துக்குக்கூட ஒரு பெண் இல்லை.

திடீரென்று. அந்தத் தளத்தின் மேடை, வெள்ளை வாழைத் தண்டு விளக்குகளும், வண்ண பல்புகளும் அணைய அணைய, செஞ்சிவப்பு விளக்குகளால் பிரகாசித்தது. மிருதங்கம் மட்டும் பெரிதாய் ஒலிக்க, இதர இசைக்காரர்கள் தத்தம் கருவிகளுக்கு சுதி சேர்த்தார்கள். எங்கிருந்தோ ஒரு பின்னணிக் குரல்.

"ஹாய்! கேய்.. பாய்ஸ்... வணக்கம். இப்போது நமது சங்கத்தின் பொதுச் செயலாளரும், பெரிய இடத்துப் பிள்ளையும், நடன சிகாமணியுமான மோகனனின் பரத நாட்டியமும், கதக் நாட்டியமும் நடைபெறும்."

மோகனன் என்ற பெயர் வந்தபோது நமது தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர்கள் வி.ஐ.பி. பேர்களுக்கு ஒரு அழுத்தம் கொடுப்பார்களே, அப்படிப் பட்ட அழுத்தம் அந்த பெயருக்கு கிடைத்தது. நிகழ்ச்சி அறிவிப்பு முடிந்ததும், மேடை விளக்குகள் திடீரென்று அணைந்தன. அந்த இருள் மயத்தில் மெல்லிய இசைகூட பேயோசையானது. இரண்டு நிமிடங்களில் அதே மேடை விளக்குகள் மீண்டும் ஜொலித்தன.

மேடையின் மையப் பகுதியில், மோகனன் நடனக் கச்சிதமாய் காணப்பட்டான். செம்பச்சை வேட்டி இறுகக் கட்டப்பட்டிருந்தது. இடுப்பிற்கு மேல் இடது பக்கம் மட்டும் ஒரு தாவணி போன்ற துணி தோளைத் தொட்டு, முதுகை வருடிக் கொடுத்தது. ஒருகால், லேசாய் தூக்கியும், இன்னொரு கால், நளின வளைவோடும் நின்றன. காதுகள் ஒன்றில் வளையம். இன்னொன்றில் கடுக்கன். முகத்தில் ஒரு பகுதி சிவப்பு. மறுபகுதி கரும்பச்சை கீழ் உதட்டில் மட்டும் லிப்டிக்ஸ். பரதநாட்டிய இலக்கணப்படி, அவன் இரண்டு தோள்களும் ஒரே நேர்கோடாய் இணைந்தன. கழுத்து அதன் முடிச்சானது. இடுப்பின் நடுப்பகுதி ஒரு முக்கோண வடிவமாகவும், இடுப்புக்கு கீழே இருந்து பாதம் வரை இன்னொரு முக்கோண வடிவமாகவும் தோன்றின. அவன் கைகளை நீட்டி வளைத்து, அவற்றில் ஒவ்வொன்றும் முட்டிகளில் முட்டியபோது அவையும் இரண்டு முக்கோணங்களாகின.

மோகனன், ஒரு காலை மேலே தூக்கி, பிறகு பக்கவாட்டிற்கு கொண்டு வந்தான் கால்களை சலங்கை சத்தத்துடன் முன்னால் வந்து தரைத்தட்டு செய்தான். பின்னர், குதிகாலில் நின்று அப்படியே திரும்பி அர்த்த நாரீஸ்வரரை வணங்கி அதே காலோடு குருவான நட்டுவனாரை கைகூப்பி , அப்படியே திரும்பிய இடத்திற்கு திரும்பி, அவைக்கு வணக்கம் போட்டான். பின்னர் உடம்பின் நடுப்பகுதியில் பூமத்தியரேகை மாதிரியான ஒரு கற்பனைக் கோட்டை வரைந்து "சம பங்கமாய்" நின்றான். அப்போது தாள லயத்துடன் பாடல் அனுபல்லவியாய் ஒலித்தது.

பல்லவி

"ஆணும் ஆணும் உறவு கொண்டால் - நீங்கள்

அலட்டிக்க என்னய்யா இருக்குது?

ஓரின உறவு, எங்களின் உரிமை - இந்த

உரிமையை பறிப்பது, உங்களின் மடமை!

அனுபல்லவி

என்னய்யா நியாயம்?

இதுதான் அநியாயம்!

பலத்த கைத்தட்டலுக்கு இடையே இப்படி பாட்டு ஒலித்த போது, மோகனன் ஒரு பக்கம் சாய்ந்தாடி, 'அபங்கம்" செய்தான். முக்கோணமாய் உடலாட்டி "திரிபங்கம்" போட்டான். பின்னர் அய்யப்ப சாமிபோல் குத்துக்காலில் உட்கார்ந்து அவற்றில் இரு கைகளையும் வேலியாக்கி வேக வேகமாய் உட்கார்ந்தான். அப்படியே அவன் எழுந்தபோது, இன்னொருவன் அலங்கார மேடைக்கு வந்தான். இவனை அடிக்கப் போவது போல் துரத்திக் கொண்டே கையை ஓங்கினான். மோகனன், அவனுக்குப் பயந்தவன் போல் கை நடுங்கி, கால் நடுங்கி மேடையின் மறுமுனைக்கு அபிநயமாய் போனான். உடனே, உச்ச கட்டத்தில் இசையொலி - விடாதே பிடி என்பது மாதிரி ஒலித்தது. அவ்வளவுதான். மோகனன் அடிக்க வந்தவனை காலை வாரி குப்புறப் போட்டான். அவன் மேல் கவிழ்ந்து படுத்தான். அய்யோ அய்யோ” என்று சிறிது நேரம் கீழே கிடந்தவன் அலறினான். பிறகு ஆகா ஆகா” என்று மகிழ்ச்சி ஆரவாரத்தில் குப்புறப்படுத்த மோகனனின் கழுத்தை பிடித்துக் கொண்டான். உடனே பேரவையில் இருந்து "ஒன்ஸ்மோர்” என்று பல "மோர்கள்" ஒலித்தன. அதற்குள் அது முடிந்து, மீண்டும் மோகனனின் தனித்துவ நாட்டியம்.

பல்லவி பல தடவை ஒலித்தது ஒவ்வொரு தடவைக்கும் ஒவ்வொரு விதமாக மோகனன் ஆடினான் "வர்ணம்" என்ற நாட்டிய இலக்கணப்படி சுழன்றான்; சுற்றினான்; சாணத்திற்கு ஏற்ப பாடுவதுபோல் வாயசைத்தான்.

ஓரினச் சேர்க்கை ஒருத்தரின் உரிமை

ஈரினச் சேர்க்கையால் என்னத்தை கண்டீர்? - மனித

உயிரினம் பெருகினால் உயிருக்கே ஆபத்து - எங்கள்

ஓரினச் சேர்க்கைதான் உடனடி மருந்து.

மக்கள் பெருகினால் வெள்ளம், எரிமலை,

பூகம்பம், புயல், போரென்று வருமாம்.

மாபெரும் நிபுணன் மால்தஸின் கூற்று.

ஓரினச் சேர்க்கையே இந்தக் கூற்றுக்கு கூற்று.

கருப்பை இல்லாத சேர்க்கை

உருவம் பிறக்காத சேவை....

இருப்பினும் எங்களை வெறுக்கிறீர்

என்னய்யா நியாயம்? இது அநியாயம்...

மோகனன், பாடலுக்கு ஏற்ப அபிநய ஆட்டம் ஆடிவிட்டு, கால்களை லேசாய் ஆட்டி ஆட்டி பலமாய் நின்றான். அப்போது ஒரு பின்னணிக் குரல்.

"மோகனனின் பரத நாட்டியத்தால் நீங்கள் பாலியல் ரீதியாக பரவசப்படுவது புரிகிறது. ஆகையால், தில்லானா இல்லாமல், இப்போது கதக் ஆட்டத்தை ஒரு சாம்பிளாக ஆடிக்காட்டுவான் நம் மோகனன்."

மோகனன் எழுந்து, சபைக்கு சிரம் தாழ்த்தி கைகூப்பி வணக்கம் செய்து கொண்டே, உள்ளே போய்விட்டான். கீழே கிடந்தவனும் இரண்டு குதி குதித்துவிட்டு போய்விட்டான். ஆடும் மேய்த்தாயிற்று... அண்ணனுக்கும் பெண் பார்த்தாயிற்று ..' என்பது போல், மோகனன் இளைப்பாறுவதற்கும், ஆடை மாற்றத்திற்கும் ஏதுவாக, ஒவ்வொரு இசைக்கருவியும் தனி ஆவர்த்தனம் செய்தது. முப்பது நிமிடங்களில் மோகனன் திரும்பி வந்தபோது, கைதட்டு வலுவா? இசையோசை வலுவா? என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.

இப்போது, மோகனன் பட்டுக் கச்சை கட்டியிருந்தான். கழுத்தில் வெவ்வேறு அளவிலான விதவிதமான நகைகளை போட்டிருந்தான். கால் சதங்கையிலும், கை மணிகளிலும் மாற்றம் இல்லை. ஒரு பக்கத் தாவணியைக் காணவில்லை. பத்தம் பசலியாக ஒலித்த அதே இசைக்கருவிகள், இப்போது அட்டகாசமாய் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டன. மோகனனின் உடல் ஒற்றை நேர்கோடாய் நின்றது கால்கள் சமபாத நிலையில் ஊன்றின. இசைக்கு ஏற்ப அவன் இரு கால்களையும் மூன்றடி அளவிற்கு மேலே தூக்கி எம்பினான். எம்பி எம்பி குதித்தான். கை தட்டல்கள் வலுத்தன. மேடை குலுங்கியது. பின்னர் ஒரு காலை தரையில் ஊன்றிக் கொண்டே கண் புருவங்கள் வேக வேகமாய் அசைய அசைய, இன்னொரு காலை வட்ட வட்டமாய்ச் சுற்றி உடம்பையே பம்பரமாக்கினான். பூவாய் விரிந்தாடினான். மொட்டாய் குவிந்தாடினான். அந்தரத்தில் பல்டி அடித்தான். குறுக்கு நெடுக்குமாய் துள்ளினான்.

மோகனன், ஆட்டத்தை முடித்துவிட்டு, அவையோரைப் பார்த்தான். அங்குள்ள அனைவருக்கும் சீருடை வேலைக்காரர்கள் ஒவ்வொரு வெள்ளைக் கிளாசிலும் கால்வாசியை ரத்தக் கலராக்கி கொடுத்தார்கள். இன்னும் சிலர் கிளாஸ்களோடு வரிசையில் அமர்ந்தவர்கள் முன்னே , தட்டுக்களோடு பணிந்து குனிந்து நகர்ந்தார்கள். அப்போது, மோகனன் அவைக்கு ஒரு அறிவிப்பு கொடுத்தான்.

"பெண்ணாதிக்கதிலிருந்து விடுபட்ட "கேய்" தோழர்களே! இப்போது உங்களுக்கு, ஒரு நல்லவரை வல்லவரை அறிமுகப் படுத்தப்போகிறேன். ஆனால் அவர் “கேய்” இல்லை. கேய்களோடு நட்பாக இருப்பவர். தமிழக அரசின் எய்ட்ஸ் பிரிவில் இணை இயக்குநராக இருந்த, சிறந்த பேச்சாளர். இப்போது அரசாங்க பொது மருத்துவமனையில் எஸ்டிடி - அதுதான் பாலியல் நோய் பிரிவிற்கு தலைவராக இருக்கிறார். ஒரு முன்னாள் அமைச்சரின் தம்பி. இவர் நினைத்திருந்தால், அமெரிக்காவிற்கு என்ன, அண்ணனின் உதவியால் நிலவுக்கே போயிருக்கலாம். ஆனாலும், சுயமரியாதைக் காரர். இன்னும் டெப்டி டைரக்டர் அந்தஸ்துலேயே இருப்பவர். இவர் எய்ட்ஸ் நோயில் ஒரு அதாரிட்டி. நமது தோழர். பார்ப்பதற்கு அழகாக இருப்பார். அவரை ஏதும் செய்து விடாதீர்கள். இப்போது அவர் மேடைக்கு வரப்போகிறார். அவர்தான் டாக்டர் காந்தராஜ். காந்தராஜ் அவர்களே! மேடைக்கு வாருங்கள்.''

டாக்டர். காந்தராஜ், மேடையில் போடப்பட்டிருந்த அலங்கார நாற்காலியில் விட்டு விட்டுத் தட்டப்பட்ட கைதட்டுக்களோடும், விசில் சத்தங்களோடும் உட்கார்ந்தார். அவையைப் பார்த்தார். அவருக்கு பழக்கப்பட்ட டாக்டர்களும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., வகையறாக்களும் இருப்பதைக் கண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார். அத்தனை பேரும் மிளகாய் பஜ்ஜி, மீன் வறுவல், சிக்கன் பிரைகள் சாட்சியாக மதுக் கிண்ணத்தை வாயில் சொருகியபோது, டாக்டர் காந்தராஜ், முன்னால் இருந்த மைக்கில், பொதுப்படையாகப் பேசினார்.

"ஓரினச் சேர்க்கை என்பது இயற்கைக்கு விரோதமானது. ஒரு முழுமையான ஆண் என்கிற முறையில், எனக்கு முழு இன்பம் கிடைக்கிறது. என் பெண் பார்ட்னருக்கும் கிடைக்கிறது. இதை வெறுத்து ஒதுக்கிவிட்டு.."

அவையினர் அத்தனை பேரும் அவரைப் பகைப் பார்வையாக பார்த்தபோது, ஒருவர், அதுவும் சரியான பெரிசு, எங்கிருந்தோ வந்தவர் போல் இடையே குறுக்கிட்டார்.

''லுக் டாக்டர் காந்தராஜ்! உங்களை பொம்பள சுக உபதேசத்திற்காக இங்கே கூப்பிடல... அதனால ஹோமோ செக்ஸ் தப்பானதா? சரியானதா? என்ற ஆராய்ச்சி உங்களுக்கு அனாவசியம். இனிமேலும் பேசினால் எங்களின் ஒருவரின் மேலேயோ அல்லது கீழேயோ கிடத்தப்படுவீர்கள் ! எங்களால் சமுதாயத்திற்கு எந்தக் கேடும் இல்லை. நாங்கள் உண்டு. எங்கள் ஹோமோ செக்ஸ் உண்டு என்று இருக்கும் வாயில்லா ஜீவன்கள் நாங்கள். இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. ஆனால், எங்களுக்குத்தான், இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை ஆனாலும் எங்களுக்கு அமெரிக்காவில் சுதந்திரம் கிடைச்சுட்டுது.. பம்பாயில் பத்திரிகை வெளியிடுகிறோம். இந்த டர்ட்டி தமிழ்நாட்டில் தான் இன்னும் சுதந்திரம் கிடைக்கல. வந்த வேலையை கவனியுங்க டாக்டர் காந்தராஜ்."

இன்னொருத்தவரும் எகிறினார்.

"ராமன் கெட்டதும் பெண்ணாலே. ராவணன் கெட்டதும் பெண்ணாலே என்று உங்களுக்கு புரியாதா காந்தா."

காந்தராஜ் பயந்து போனார். தன்னை காந்தா என்று அழைத்ததில், அப்படி ஆக்கிவிடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டது. பெரிய இடத்துப் பிள்ளையான மோகனனின் ஐ.ஏ.எஸ்., தந்தை, இவருக்கு அறிமுகமானவர். அதன் மூலம் இந்த மோகனனின் பரிச்சயம் கிடைத்தது இவனுக்காகவே வந்தார். ஆனால், இங்கே என்னடா என்றால்...

என்றாலும், டாக்டர் காந்தராஜ் சுதாரித்துக் கொண்டார். அவருக்கு இயற்கையின் அசலை சொல்லாமல், தான் மட்டும் அசலாய் வெளியேறினால் போதும் என்றாகிவிட்டது பதமாக இதமாகப் பேசினார்.

"தம்பிகளா... அண்ணன்களா. சக வயதுக்காரர்களா... உங்களை நான் குறை சொல்லவோ நிறை சொல்லவோ போவதில்லை. ஒரு வீடி. டாக்டர் என்கிற முறையில், உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராய் இருக்கிறேன் சீக்கிரமாய் கேள்வி கேட்டு சீக்கிரமாய் என்னை அனுப்பினால் உங்களுக்கு கோடி புண்ணியம். சரி... கேளுங்கள்."

குடிமகனான ஒரு தடிமகன், ஒரு கேள்வி கேட்டான்.

"ஓகே டாக்டர்! ஓரல் செக்ஸ்ஸால் எய்ட்ஸ் வருமா?"

"பொதுவாக வராது. ஆனால், வாயில் புண் இருந்தால், உறுப்பிலும் புண் இருந்தால் இந்த இருவரில் ஒருவர் எய்ட்ஸ் நோயாளியாக இருந்தால், இது வருவதற்கு வாய்ப்புண்டு."

"இந்த ஓரல் செக்ஸ்ல, எய்ட்ஸ், வீடி, ஆபத்துக்கள் வராமல் இருக்க நாங்கள் என்ன செய்யணும்..."

"ஓரல் செக்ஸ்சுகுன்னே தனி ரக காண்டோம் இருக்குது. பனானா... பைன் ஆப்பிள்... மல்லிகை... ஆரஞ்சுன்னு விதவிதமாய் இருக்குது..."

"ஏன் இந்த மாதிரி பேரு வச்சாங்க”

"அப்படிக் கேளுங்க.... இதுல ஒரு உரையை மாட்டினால் அது வாழைப்பழம் போல் வாசனை கொடுக்கும். இன்னொன்றை மாட்டினால் ஆரஞ்சு போல் சுக வாசனையை நுகரலாம். இதனால், ஆக்டிவ் பார்ட்னர் இதை போட்டுக் கொள்ளும்போது, பாசிட்டிவ் பார்ட்னருக்கு, ஒரு இனிமையான வாசனை கிடைக்கும்.”

"டாக்டர் அய்யாவுக்கு ஒரு விண்ணப்பம். இந்த பனானா, பைன் ஆப்பிள் உறைகளில் ஒன்றை தாங்கள் போட்டுக் கொண்டு எங்களுக்கு டமான்ஸ் ஸ்டிரேட் செய்ய வேண்டும்."

"எப்பா... நான் பிள்ளைக் குட்டிக்காரன். என்னை அப்படியே விட்டுடுங்க. மோகனன் கூப்பிட்டான்னு வந்தேன். வேற எந்த பாவமும் அறியேன். ஆனால், வாயிலோ அல்லது எதிலோ செக்ஸ் நோய் வந்தால், என்னை நீங்கள் எப்போது வேண்டு-மானாலும் சந்திக்கலாம். இந்த மாதிரி விவகாரங்களில் நான் நீதிபதி அல்ல. வெறும் சாட்சிதான்...”

“நீங்க ரொம்ப ரொம்ப அழகு. எங்களுக்குன்னே பிறந்தவர் மாதிரி தோணுது. கிளப்ல சேர்ந்துடுங்க காந்தா."

டாக்டர் காந்தராஜ், வெலவெலத்துப் போனார். இந்த மோகனன் சொன்னானென்று ஒரு மாறுதலுக்காக வந்த தன்னை, எங்கே ஒருவழி ஆக்கிவிடுவார்களோ என்று பயந்து போனார். பேண்டையும் சட்டையையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். இரண்டு கைகளையும் பின்புறமாக வளைத்து பிட்டத்தில் வளைத்துக் கொண்டார். இந்த "கேய்" பையன்களைப் பற்றி ஆய்வு செய்து தனது துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்கலாம் என்ற அவர் எண்ணம் "சம்பில் விழாத கார்ப்பரேஷன் தண்ணீர்” போல் ஆனது. ஆளை விட்டால் போதும்.'

மோகனன், நிலமையை புரிந்து கொண்டான். இந்தக் கூட்டத்தை பொறுத்தவரை, காதலுக்கு கண் உண்டு. பெண் இல்லை. இந்த ஐம்பதிலும் அழகாக தோன்றும் காந்தராஜை எவனும் எதுவும் செய்து விடக்கூடாதே என்று எச்சரிக்கையானான். அவரை மேடைக்குப் பின்புறமாய் அழைத்துச் சென்று எப்படியோ அவரது காருக்குள் ஏற்றி விட்டான்.

இதற்குள் மது மயக்கத்தில் எல்லோரும் கிறங்கிப் போனார்கள். சிலர் பேண்டை அவிழ்த்து அண்ட்ராயரோடு சேர்த்து தூக்கி எறிந்தார்கள். பலர் சிலரை துகிலுரிந்தார்கள். அத்தனையும் அம்மணங்கள். அதில் ஆனந்த பரவசமானார்கள். ஒருவரை ஒருவர் இழுத்துப் போட்டு கவிழ்த்துக் கொண்டார்கள். கவிழ்ந்து கொண்டார்கள்.