Chapter 11

எந்தப் பேருந்து நிலையத்திலிருந்து ரகசியமாய் ஏறினார்களோ, அதே இடத்திற்கு அருகே மனோகரும், கங்காவும் ஆட்டோவில் இருந்து பகிரங்கமாய் இறங்கினார்கள். இரவு மரித்துக் கொண்டிருக்கும் போது புறப்பட்டு, பகல் விடியல் குழந்தையாய் பிறந்தபோது, அந்தக் குழந்தையின் தொப்புள் கொடி போல் ஆகாயத்தில் செஞ்சிவப்பாய் ஒளிக்கற்றை. அந்தப் பிறப்பை அறிவிக்கும் குலவைச் சத்தம் போல் பறவைகளின் சத்தங்கள்.

கங்கா, மனோகரை கண்கூசிப் பார்த்தாள். அந்த அறையில் நடந்த அமர்களத்திற்குப் பிறகு இருவருமே பேசவில்லை. முகத்துக்கு முகம் பார்க்கவில்லை. இப்போதுதான் பார்த்துக் கொண்டார்கள். தலைகளைத் தாழ்த்திக் கொண்டார்கள். மவுனம் பேசிற்று. பார்வைகள் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டன. அவன் பேன்ட் பையில் கையிட்டு ஐந்து இருபது ரூபாய் நோட்டுக்களை வெறுமையாய் புரட்டிய அவள், கைகளுக்குள் திணித்தான். அவள், அந்த நோட்டுக்களை, அவன் பைக்குள் சொருகியபடியே, ஆற்றாது அரற்றினாள்.

அந்தப் பசங்க கிட்ட நானு அப்படிப்பட்டவள் இல்லேன்னு நீ சொன்னப்போ - பெருமைப்பட்டேன். ஆனால், இப்போ நானு அப்படிப்பட்டவள்தான்னு நினைக்கிறது மாதிரி பணத்த நீட்டுறியே சாரே ..."

மனோகர், அவளை, அவள் கண்கள் வழியாய்ச் சந்தித்தான் கூடவே அவள் நினைவூட்டும் சம்பவக் கோர்வைகள் தானாய் மனதில் மோதின. இப்போதே அந்த நிகழ்ச்சிகள் அங்கேயே நடப்பது போல் கண்கள் பார்த்தன. காதுகள் கேட்டன.

போதை தெளிந்து பயந்து நின்ற கங்காவை, தன் உடம்போடு உடம்பாய் இணைத்துக்கொண்டு, அவன் சூளுரைக்கிறான்.... வயது வந்த ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபடுவது குற்றமில்லை .... ஒருத்தி உடலை விற்றால்தான் குற்றம்... அதை நட்புக்காக விட்டுக் கொடுத்தால் அதில் தப்பில்லை... இவள் என்னோட தோழி... நாங்கள் உறவாடுவது எங்கள் சொந்த விவகாரம்.. வேணுமின்னா ஒன் போலீஸை வரச் சொல்லைய்யா...' என்று சவால் இடுகிறான். உடனே கமால் சிரித்தபடியே... சட்டந் தெரியாதவன்தான்யா போலீஸ் அதத் தெரிஞ்சு வச்சிருந்தால், அதை எப்படி வளைக்கனுமுன்னு அவங்களுக்குத் தெரியும்...' என்கிறான்.

உடனே மனோகர் ஆகாயமும் பூமியும் ஆனவன் போல் கர்ஜிக்கிறான்... இந்தா பாருங்கப்பா... நீங்களும் போலீசுமா சேர்ந்து என்னைக் கட்டிப் போட்டுட்டோ இல்லை கொலை செய்துட்டோ இவள, மானபங்கப்படுத்த முடியும்... அப்புறம் என்ன நடக்கும்... கொலைக் கேஸ்ல உள்ள போவீங்க.... இல்லாட்டி நான் நியாயம் கிடைக்கறது வரைக்கும் அதாவது ஒங்க கைல காப்பு மாட்டறது வரைக்கும் ஓய மாட்டேன்.... உண்ணா விரதம் இருப்பேன்... ஊரக் கூட்டுவேன்... மறியல் செய்வேன்.. எதுவும் பலி க்காட்டி.... தீக்குளிப்பேன்... எங்கே அவளத் தொட்டுப் பாருங்க... எங்கே டெலிபோன் செய்யுங்க...' என்று அதட்டுகிறான், மிரட்டுகிறான். அவர்கள் அடங்கிப் போகிறார்கள். அப்படியும் அவன் தங்கச் செயினையே பார்க்கிறார்கள். மனோகரோ 'இந்த அறைக்கு ஏற்பட்ட சேதாரத்துக்கு முன்பணத்துல கழித்துக்கலாம்... இப்ப மொதல்ல வெளில போங்க.. இல்லாட்டி நானே போலீஸுக்கு போன் செய்வேன்.... உங்களுக்கு இன்ஸ்பெக்டரத்தான் தெரியும்... எனக்கு ஐ.ஜியையே தெரியும்... என்கிறான். அவளை ஆக்கிரமிக்கப் போனவர்கள், ஆக்கிரமிக்கப் பட்டவர்களாய் வெளியேறுகிறார்கள்.

மனோகர், ஒரு மாவீரன் போல் அவளைப் பார்க்கிறான். அவள் நீட்டிய ரூபாய் நோட்டுக்களை தனது பைக்குள் திணித்துக் கொண்டே ஆட்டோவுக் காவது' என்று ஒரு வார்த்தையை ஒரு வாக்கியமாய் இழுக்கிறான். அவளோ, 'நான் நடந்தே போயிடுவேன் சாரே - நடந்து நடந்தாவது வழி குறையுறது மாதிரி என் பாரம் குறையுறதான்னு பார்க்கிறேன் சாமி...' என்கிறாள். அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்தே, நடக்கிறாள். மீண்டும் அவனிடம் திரும்புகிறாள். ஆகாயத்தைச் சாட்சியாக வைத்துச் சொல்வது போல், அந்த ஆகாயத்தைப் பார்த்துவிட்டு, அவனிடம் பேசுகிறாள்.

"நீ ஆம்பளைங்களுலேயே பெரிய ஆம்பளை ஸாரே. உன்ன மாதிரி ஆம்பளைய இப்பதான் நான் பாக்கேன் ஸாரே பொம்மனாட்டிக்கிட்டே போறவன் சாதா ஆம்பளைன்னா அவளை கட்டிக் காக்கிறவன் பெரிய ஆம்பிளை... நீ மட்டும் என்ன விட்டுட்டுப் போயிருந்தே... என்ன பீஸ் பீஸா ஆக்கி இருப்பாங்க... நானு ஒரு கபிரிச்சி.... என்னெல்லாமோ பேசியிருப்பேன்... ஆடியிருப்பேன். என்ன மன்னிச்சேன்னு... ஒரே ஒரு வார்த்தை .... எனிக்கி ஒன் ஆபீஸ்ல கூட்ற வேலை வேணாம்.... கம்பெனி வேலையும் வேணாம்... என்ன மன்னிச்சேன்னு... ஏன்னா... இனிமேங்காட்டி நாம பாக்கப் போறோமோ இல்லியோ... சொல்லு

ஸாரே.. என் வவுத்துல பால் வாரு சாரே..."

அழப்போன கங்கா, பின் பக்கமாக லேசாய்ச் சாய்ந்தாள். அப்படியும் கண்ணீர் தெரித்தது... அவன், அவளை அழுத்தமாகப் பார்த்தான். அடக்கி வைத்திருந்த உணர்வுகளை கொட்டினான்....

"இந்தா பாரு கங்கா! மன்னிப்புன்னு வந்தால், நீதான் என்னை மன்னிக்கனும். கலங்காத குளமா இருந்த உன்னை, குட்டையாய் கலக்கிட்டேன். ஆனால், ஒன்னோட நட்பு என் ஆயுள் வரைக்கும் நெனப்பா இருக்கும். பிரியப்போறதா நெனச்சுச் சொல்லல, நாம பிரியப் போறதும் இல்ல... ஆனா... அதேசமயம் நம்ம ரெண்டு பேரோட நடவடிக்கையும்.... வேற மாதிரி இருக்கும்.... இருக்கணும்... நான் நம்பிக்கைத் துரோகியுமில்ல... நிச்சயம் ஒரு நல்ல செய்தி வீடு தேடி வரும்... ஆபீஸுக்கு வாரத மட்டும் நிறுத்திடாதே... ஆபீஸ்ல நான் அதிகாரியில்லே ... நீ பெருக்குறவள் இல்லே ... நான் மனுஷன்.... நீ மனுஷி... சரி... போய்வாம்மா.... சீக்கிரமா ஆபீஸ்ல போய் வேலையப் பாரு..."

"அழ வைக்கிறியே ஸாரே... அழ வைக்கிறியே... ஒன் நெலமய நினைச்சா எனிக்கு மனசு கேட்க மாட்டேங்குதே..."

கங்கா, உதடுகளைக் கடித்தபடியே, அவனை உற்றுப் பார்த்தாள். அவளை தனக்குள் உள்வாங்குவது போல், அசைவற்ற கண்ணாடி போல் சலனமின்றி நின்ற மனோகர், எதிர்திசையில் நடந்தான். இலக்கு நோக்கிச் சென்றான். சங்கரியைப் பார்க்க வேண்டும். அவள் கண்களைத் துடைத்து விடவேண்டும். அவளுக்கு எது தேவையோ அதை ஈடேற்ற வேண்டும். அவளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

மனோகர், நடையில் ஒரு மிடுக்கு... பார்வையில் ஒரு கம்பீரம்... கால்கள் தரையில் அழுந்தப் பதிந்தன. சாய்வாய் நடக்காமல் நேராய் நடந்தான். கெட்டதைப்போல் நல்லதும் தொடர்ந்து வரக்கூடியது... ஒரு நல்ல குணம் இன்னொரு நல்ல குணத்தைத் தொற்றிக் கொள்ளக் கூடியது. அழுகையும், சிரிப்பும் இப்படித்தான். இனிமேல் சிரிக்க முடிகிறதோ இல்லையோ, அழப்போவதில்லை. அழ வைக்கப் போவதும் இல்லை. எப்படி இருக்காளோ. எப்படி யெல்லாம் நடந்திருக்கேன். கங்காவை காப்பாற்றியது போல் சங்கரியையும் காப்பாற்ற வேண்டும்... எல்லா வகையிலும் காப்பாற்ற வேண்டும்.

மனோகர், பெரு விரலைப் பார்த்தபடியே நடந்தான். அக்கம் பக்கம் எந்தப் பெண்ணும் இயங்குவது அறியாமல், நடந்து கொண்டிருந்தான். தன்னைத்தானே தரிசித்ததில் ஒரு பெருமிதம். இந்த உணர்வையும் குணத்தையும் ஆவியாக்காமல் மனதுக்குள்ளேயே

கட்டிப் போட வேண்டும் என்ற வைராக்கியம்.

அந்த மருத்துவமனையின் நுழை வாயிலுக்குள் சென்றதும், மனோகரின் கால்கள் லேசாய்த் தளர்ந்தன. கால்களோடு சேர்ந்து தலையும் தாழ்ந்தது. எந்த முகத்தோட அவளைப் பார்ப்பது? தரையைப் பார்க்க மனமில்லாமல், அண்ணாந்து பார்த்தான். அந்தக் கட்டிடத்திற்கு மேலே தலை நீட்டிய அசோக மரங்களை அண்ணாந்து பார்த்தபடியே நடந்தான். ஏதோ ஒன்று மோதுவது கண்டு, கண்ணிறக்கினான். அவனிடம் முட்டுப்பட்ட கட்டுப் போட்ட மனிதர் ஒருவர், இயல்பாகச் சொல்வதுபோலவும், தன்னை நினைத்துக் கொண்டது போலவும் வலி அடக்கிப் பேசினார்...

"அண்ணாந்தும் பார்க்கப்படாது... குனிந்தும் நோக்கப்படாது.... நேராப் பார்க்கணும். நேரா நடக்கணும். நம்மோட சிரமம், பிறத்தியாரைச் சிரமப்படுத்தக் கூடாது..."

மனோகர் நின்றான். தன்பாட்டுக்குப் போய் கொண்டிருந்த மனிதரின் முதுகைப் பார்த்தான் அந்த முதுகு புறமுதுகல்ல. அவனுக்கு ஒரு கேடயம்... அந்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல. அசரீரி வார்த்தைகள்.

மனோகர், லிப்டில் ஏறி, மூன்றாவது மாடிக்கு வந்தான். அதுவே தரைத்தளம் மாதிரியான வரவேற்பறை. பார்வையாளர்கள் இருக்கைகள். அரசாங்க மருத்துவமனை காணாத பளபளப்பான தரை. இந்த மருத்துவமனை இவன் சக்திக்கு அப்பால் பட்டதுதான். போலீஸ் வழக்கு வம்பு வரக்கூடாது என்பதற்காக, தெரிந்தவர் ஒருவர் மூலம் கிடைத்த இடம்.

சங்கரியின் அறைக்கு முன்னால் நாலு பேர் அம்மா, அக்கா, மாமனார், மாமியார் அக்கா, அவ்வப்போது பேசுகிறாள். அம்மாவின் கை வீச்சுக்களுக்கிடையே முகமிட்டு, அவளுக்குச் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ பேசுகிறாள் மாமனார், தலையை ஒருச்சாய்த்து நிற்கிறார் மாமியார் இரண்டு கைகளையும் தலையில் குவித்துக்கொண்டு தடுமாறுகிறாள்.

இந்த சொர்ணம்மா அவர்கள் வந்ததும் பயந்து போனவள்தான். போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்திடாதீங்கன்னு கெஞ்சப் போனவள்தான். ஆனால் சம்பந்திகள் என் மகள் தெரிஞ்சும் தெரியாம ஏதாவது செய்திருந்தால், நீங்கதான் பெரிய மனசு பண்ணி மன்னிக்கனும்.'' என்று அழுதபோது, அவளது பயம், பயமுறுத்தலானது. கடந்த மூன்று நாட்களில் அவள் எகிறல் மூன்று மடங்காகி, முப்பரிமாணம் பெற்றது. மனோகர் பின்னால் நிற்பதை அந்த நால்வருமே கவனிக்கவில்லை. நாயகியான சொர்ணம்மா, சுடச்சுடக் கொடுத்தாள்….

"இன்னியோட எங்க பொறுப்புத் தொலைஞ்சது. நீங்க ஆயிரம் சொன்னாலும் கேட்கப் போறதாய் இல்லை..... இனிமேல் நீங்க யாரோ- நாங்க யாரோ - ஊருக்குக் கூட்டிப் போகணுமுன்னாலும் கூட்டிப் போங்க.... இங்கேயே வச்சு அழகு பார்க்கணு-முன்னாலும் பாருங்க... ஏய் காந்தாமணி - புறப்படு."

"அண்ணி! அப்படியெல்லாம், பேசாதீங்க.... நாங்க எந்த முகத்தோட அவளக் கூட்டிட்டுப் போவோம்.?"

சும்மாச் சும்மா பினாத்தாதே - எங்கேயாவது பெண்டாட்டி, புருஷன அடிப்பாளா....? இவள் அடிச்சிட்டாளே... இவளைச் சேர்த்தால்.... ஒருநாள் ராத்திரியிலே என் மகனைக் கொலை செய்ய மாட்டாள் என்கிறதுக்கு என்ன நிச்சயம் .?”

"எம்மா... என்ன இதுல்லாம்."

மனோகர், ஓங்கிக் கத்தினான். நால்வரும் திரும்பினார்கள். கண்களில் நீர் கோர்த்த மாமியாரையும், யோகி போல் கைகட்டி நின்ற மாமனாரையும் மாறி மாறிப் பார்த்தான். மாமியார் அவனைப் பார்த்துவிட்டு, இயல்பிலேயே ஒடுங்கிப்போன உடம்பை ஒடுக்கினாள். மாமனார், அவன் கையைப் பிடித்து தேக்கி வைத்த உணர்வுகளைத் திரவமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். இருவரும் ஆரம்பப் பள்ளிக்கூட ஆசிரியர்கள். குழந்தைகளோடுப் பழகிப் பழகி குழந்தையானவர்கள். மாமியார், மருமகனைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டாள். அம்மாவைப் போல் அவன் திட்டி விடக்கூடாதே என்கிற பயம். அவள் உடம்பு ஆடியது. சரணாகதியாய் ஆடியது. கும்பிட்ட கையை எடுக்காமலே மருமகனைப் பார்த்து மன்றாடினாள்.

"அவள் நடந்துக்கிட்டது தப்புத்தான் மாப்பிள்ளே - எங்க குடியைக் கெடுக்கிறதுக்கின்னே பிறந்திருக்காள். ஒரே பெண்ணாச்சேன்னு தலையிலே தட்டி வளர்க்காமப் போயிட்டோம். எங்க வீட்ல இருந்தது மாதிரியே ஓங்க வீட்லயும் இருப்பான்னு நினைத்தோம். இப்படி ஒங்களைச் சீரழிப்பான்னு நினைக்கலே... ஏங்கி ஏங்கி அழுகிறா மாப்பிள்ளே. நீங்களே சொல்லுங்க அவளை ஊருக்குக் கூட்டிட்டுப்

போக முடியுமா? அப்படிப் போய் உயிரோடதான் இருக்க முடியுமா - ஒரே ஒரு சந்தர்ப்பம் அவளுக்குக் கொடுங்க மாப்பிள்ளே - அப்பக்கூட நீங்க அவளை அடிப்பீங்களோ... பிடிப்பீங்களோ... அவள் ஓங்க பொருளு. அவளை என்ன வேணுமின்னாலும் செய்யுங்க நாங்க ஏன்னு கேட்கமாட்டோம்."

சம்மந்தியம்மா பேசி முடிப்பது வரைக்கும் பொறுமை காட்ட முடியாமல் சொர்ணம்மா, கைகளை ஆட்டிய போது, காந்தாமணி, அவற்றைப் பிடித்துக் கொண்டாள். இப்போது அந்தம்மா கைகளை நீட்டாமலேயே கத்தினாள்....

"இந்த மாதிரி பசப்பற வேலையெல்லாம் வேண்டாம். என் மகனை அவராவோட ராவா குத்திக் கொலை பண்ணணும். அப்பப்பா - என்ன நல்லெண்ணம் உனக்கு".

சொர்ணம்மா, மகளிடமிருந்து கையை எடுத்து விட்டு, அங்குமிங்குமாய் ஆடிக் காட்டியபோது, மனோகர், அம்மாவை முறைத்தபடியே கத்தப் போனான். அதற்குள் வாசல் கதவு திறக்கப்பட்டது. சங்கரியை எட்டிப் பார்க்கப்போன மனோகரின் கண்களை இரண்டு உருவங்கள் மறைத்தன. ஸ்டெதஸ்கோப் மனிதருக்கு ஐம்பது வயதிருக்கலாம். கூட நின்ற பெண்ணுக்கு இருபத்தேழு வயதிருக்கலாம்... டாக்டர் கத்தினார்....

"இப்படி சந்தைக்கூட்டம் போட்டால் எப்படி ? ஏம்மா நீ இங்க வரக்கூடாதுன்னு சொன்னேனே... எதுக்காக வந்தே...”

"காசு செலவளிக்கிறவள் நான். வரப்படாதா…”

மனோகர் எம்மா' என்று ஒரு அதட்டல் போட்டுவிட்டு, டாக்டரைக் கேட்டான்...

"இப்போ என் ஒய்புக்கு எப்படி இருக்கு டாக்டர்..."

"கன்கிராசுலேஷன் மிஸ்டர் மனோகர்.."

மனோகர் அந்த இளம் பெண்ணை புரியாமல் பார்த்தான். அவள் தனது பாராட்டுக்கு விளக்கமளித்தாள்.

அந்தம்மா, ஒங்க பெண்டாட்டி, என்கிற நினைப்பு வந்திருக்கே... இப்போவாவது பார்க்கணுங்கிற எண்ணம் வந்திருக்கே... அதுக்குத்தான் பாராட்டினேன்..'

அந்தப் பெண்ணின் கோபத்தைச் சந்திக்க முடியாமல், மனோகர், டாக்டரிடம் அடைக்கலமானான்.

"அவளுக்கு எப்படி இருக்கு டாக்டர்...”

"நல்லாத்தான் குணமாகி வந்தாங்க..... ஆனால் இந்தம்மா... ஒங்கம்மாவா - நல்ல அம்மா- இவங்க, இந்த ரெண்டு பேரையும் படுத்தின பாட்டுல பாவம் ஒங்க மனைவிக்கு பழையபடியும் கைகால் வெட்டிட்டு"

டாக்டர் மேற்கொண்டு பேசமுடியாமல் வாயடைத்துப் போனார். மனோகரின் மாமியாரும், மாமனாரும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு விம்மினார்கள். அதுவும் நல்லதாய்ப் போயிற்று. தனித்தனியாய் அழுதிருந்தால் கீழே விழுந்திருப்பார்கள். ஒருவரையொருவர் எதுவும் பிடிபடாமல், பிடித்துக் கொண்டார்கள். ஒருவர் தோளில் இன்னொருவர் முகம் போட்டு முதுகுகளை ஈரமாக்கினார்கள்.... தலைகள் இறங்கி முண்டமான இரு உடம்புகளாய் ஆகிப்போனார்கள்.

மனோகர், பொங்கிய கோபத்தை திசை திருப்பினான். எதிர்மறை உணர்வை ஆக்கமாக்கினான். அம்மாவின் தோளில் கை போட்டபடியே அவள் முகத்தைத் தூக்கிப்பிடித்து நெகிழ்ந்து பேசினான்.

"எம்மா... ஒன் மகளாயிருந்தால், இப்படிப் பேசுவியா...? இவங்க ஒன் தம்பி தங்கச்சியாயிருந்தால், இப்படி நோகடிப்பியா? ஒன்னையும் என்னையும் நம்பித்தானேம்மா சங்கரியை ஒப்படைத்தாங்க. ஏம்மா இந்த மாதிரி எல்லாரையும் நோகடிக்கிறே... அக்காவுக்கு, சங்கரி மாதிரி வெட்டு வந்திருந்தால், நீ அவள் புருஷனை விட்டு வைப்பியா... என் பெண்டாட்டியையும் ஒன் மகளா நெனச்சுப் பாரும்மா."

சொர்ணம்மா, கண்களால் அரைவட்டம் போட்டாள். விழி பிதுங்கப் பார்த்தாள். பிறகு முகத்தை மூடிக் கொண்டாள்..... உச்சி முதல் பாதம் வரை குலுங்கியது. காந்தாமணி அவள் கைகளைப் பிடித்தபோது, அம்மாக்காரி அவள் தலையில் முகம் போட்டு மருவினாள்... ஊமை அழுகையாய் அழுதாள். மகன் அப்படிப் பேசிவிட்டானே என்று அழுகிறாளா..... மருமகள் பழையபடியும் வீட்டுக்கு வருவது நிச்சயம் என்று நினைத்து அழுகிறாளா... அல்லது அன்று முதல் இன்றுவரை தான் நடந்து கொண்டதைப் பற்றி குற்ற உணர்வில் அழுகிறாளா - குற்றஞ்சாட்டி அழுகிறாளா.. அந்த சொர்ணமாவுக்கே அது தெரியாது.

இதற்குள் டாக்டர் அதட்டுவதுபோல் பேசினார்.

இடத்தை காலிபண்ணுங்கம்மா வேடிக்கை பார்க்காங்க பாரு - இப்போ அந்தப் பொண்ணுக்கு டைசிபார்ம் ஊசி போட்டுட்டு, வந்திருக்கோம். இன்னும் நாலுமணி நேரம் அரை மயக்கத்திலேயே இருப்பாங்க. அப்பா அம்மா மட்டும் இங்கேயே இருக்கட்டும்...'

'நானும் இருக்கேன் டாக்டர்...'

'நோ மிஸ்டர் மனோகர் - ஸாரி... இன்னும் ஒரு வாரத்திற்கு நீங்க அவளைப் பார்க்கக்கூடாது .... நாங்க ஒங்க ஒய்பை அப்ஸர்வேஷன்ல வச்சிருக்கோம்... எப்போ பார்க்கச் சொல்றோமோ... அப்பப் பார்த்தால் போதும்.... இந்தாம்மா... பெரியம்மா.. வீட்டுக்குப்போய் எவ்வளவு அழணுமோ... அவ்வளவு அழு... இனிமேலாவது யாரையும் அழவைக்காதே... இல்லாட்டி ஒனக்கும்.. மிஸ்டர் மனோகர் - என்னோட வாங்க..'

அந்த அறைக்குள் முண்டியடித்த சொர்ணம்மாவை, காந்தாமணி இழுத்துக்கொண்டு போனாள். மனோகர், மாமனாரின், மடித்து வைத்த கரங்களில், லேசாய் பிடித்து அழுத்திவிட்டு, டாக்டரோடு போனான். கூடவே அவனைச் சாடிய அந்தப் பெண்ணும் போனாள்.

அந்த அறையில் சுழல் நாற்காலியில் மேலே கதிர் விரிந்த சூரியப் படம். எதிர்ச் சுவரில் வட்டங்களை உள்ளடக்கிய பெருவட்டப் படம். அதன் மையத்தில் ஒரு புள்ளி. அதற்குக் கீழே மெத்தையிட்ட கட்டில்.

"இப்போ என் ஒய்புக்கு எப்படி இருக்கு டாக்டர்.."

"ஒய்ப் இருக்கட்டும்.. ஒங்களுக்கு இப்ப எப்படி இருக்குது.... நோயின்னு அனுமானித்தால், அது ஒங்களுக்குத்தான். ஒங்க ஒய்புக்கு இருக்கிறது அதோட அறிகுறிகள்..... ஒங்களுக்கு மனக்காய்ச்சல்... அந்தப் பெண்ணுக்கு நெறி கட்டியிருக்கு... அந்தப் பொண்ணு கிட்டே பேசிப் பார்த்தோம்... ஓங்க செக்ஸ்லைப் பற்றி சொன்னாங்க. ஏன் அப்படிப் பார்க்கறீங்க டாக்டர்களான நாங்க தாயுமானவங்க... ஓடம் போட நிர்வாணம் மட்டுமில்லே... மனசோட நிர்வாணமும் எங்களுக்குத்தான் தெரியும்.."

அந்தப் பெண், இடைமறித்தாள். சூரிய காந்திப் பூ நிறம். அதன் விதை போலவே கன்னத்தில் ஒரு மச்சம்.

"ஆனால் உங்களுக்கு இவ்வளவு ஆணாதிக்கம் கூடாது சார். அந்த ஆர்டரை எப்படி சார் கிழிச்சுப் போடலாம்? பெண்டாட்டின்னா அடிமையா பச்சத்து வீட்டுக்காரன் ஏடாகூடமாப் பேசினான்னு அவனக் சேட்காத கேள்வியை கேட்டிட்டு, திரும்பி வரும்போது, நீங்க ஒரு கணவன், கேட்கக்கூடாத கேள்வியைக் கேட்கலாமா? ஒரு கேள்வி முறை இல்லையா? கோளாறை ஒங்ககிட்ட வச்சுக்கிட்டு குறையை அவங்ககிட்ட கண்டா என்ன அர்த்தம்? கற்புப் பெருமிதத்தோட வந்த மனைவியை நீங்களே மானசீகமா, அதே மனிதனை கற்பழிக்கச் செய்தீங்க.... ஆனாலும் ஆண்மைக்குறைவு உள்ளவங்களுடைய நடத்தையைப் பற்றி விளக்கி, நீங்க தற்கொலை செய்தாலும் செய்துக்கலாம் என்று அவங்ககிட்டச் சொன்னபோது, அந்தம்மா, தனக்காக அழுகிறத நிறுத்திட்டு, உங்களுக்காக அழுகிறாங்க சார். இதுதான், இந்த நாட்டுப் பெண்களோட பண்பாடோ. அல்லது சுயத்தைத் தொலைக்கும் சீரழிவோ…."

பாக்டர் சந்திரசேகரன் அந்தப் பெண்ணை கண்களால் அடக்கினாரோ கெஞ்சினாரோ. அவள் அடங்கினாள்.

"ஏம்மா.... நீ வந்தது கவுன்சிலிங் செய்யுறதுக்கு... வக்கீலா மாறினால் எப்படி....? சங்கரிகிட்டேயும் கோளாறு இல்லாம இல்லை... பக்கத்து வீட்டுக்காரன் ஒரு மாதிரிப் பார்த்ததை.... அது தனக்கு பிடிக்கல என்கிறதை... இவர்கிட்ட பகிரங்கமா சொல்லியிருக்கணும்... செக்ஸ் லைப் பற்றி, படித்த பெண்ணுக்கு தெரிந்திருக்கணும்... இவரு ஆயத்தமா நெருங்கும் போதெல்லாம், அந்தம்மா , தெரிந்தோ தெரியாமலோ, சில வார்த்தைகளைக் கொட்டியிருக்காங்க... ஆனாலும், மிஸ்டர் மனோகர் ! கூட்டிக் கழிச்சுப் பார்த்தால், தப்பு ஒங்க மேல தொண்ணூறு சதவீதம்.... மீதி பத்து சதவீதம், அந்த பொண்ணு மேல.."

"நான் என்ன செய்யனும் டாக்டர்..? நீங்க என்ன சொன்னாலும் கட்டுப்படுறேன் - டாக்டர்..."

"நாம் பிரச்சினையை நேருக்கு நேராய்ச் சந்திப்போமா? இந்தப் பிரச்சினைக்கு முழுக்காரணமே, உங்களோட ஆண்மைக் குறைவுதான். அந்தக் குறைவு மனோரீதியாலானதா? அல்லது ஆர்கானிக் அதாவது உடல் ரீதியாலானதா? என்கிறதை இனிமேல் தான் கண்டுபிடிக்கணும் மனோரீதியா கண்டுபிடிக்க உங்க மனசுல என்னல்லாம் உறுத்துதோ, அதை எல்லாம் எழுதுங்க எத்தனை பக்கமானாலும் சரி. எழுதுறதை என் கிட்ட கொடுங்க. அதோட சில பிஸிகல் டெஸ்டுகளுக்கும் எழுதிக் கொடுக்கிறேன். இரண்டையும் வைத்து ஒரு முடிவுக்கு வரலாம்.”

"நல்ல முடிவு கிடைக்குமா டாக்டர்..?"

"இப்போதைக்கு நான் எதுவும் சொல்ல முடியாது... நீங்க உண்மையை - அது எதுவாயிருந்தாலும் சந்திக்கத் தயாராகணும்...”