Chapter 9
சங்கரி, கண்ணுக்கு மையிடப் போனாள். ஆனாலும் மூக்கு வரை வந்த அந்த வட்டக் குப்பிளை ஒதுக்கி வைத்தாள். பவுடரைக் கூட ஒப்புக்குப் போடுவது போல் முகம் முழுக்க அப்பாமல், அங்கும் இங்குமாய் தடவிக் கொண்டாள். கவரிங் வளையல்களைக் கழட்டி விட்டு, பீரோவில் இருக்கும் தங்க வளையல்களைப் போட நினைத்து கண்ணாடி பீரோவின் டிராயரைத் திறக்கப் போனவள், அதை இருந்த இடத்திலேயே விட்டு வைத்தாள் . மனமோ அல்லது மனசாட்சியோ அறிவுறுத்தியதற்கு அவள் இணங்கினாள். அவள், போவது அலுவலகப் பணிக்குத்தானே தவிர, அழகுப் போட்டிக்கு அல்ல... அதோடு அவரை சவால் விட்டுப் போகவில்லை. இதனாலேயே அவன் பிறந்தநாளில் வாங்கிக் கொடுத்த வாயில் புடவையைக் கட்டிக் கொண்டாள். அவன் வரணும் வரணும் என்பது போல் மாடிப்படி முனைக்குப் போனாள். வரக்கூடாது என்பது போல் திரும்பி வந்தாள்
வேலைக்குப் போவது சம்பந்தமாக ஏற்பட்டத் தகராறுக்கு ஒரு மாத வயதாகிவிட்டது ஆனாலும் அது குழந்தையாய் வளராமல், கிழடாய்ச் சுருங்காமல் அப்படியே இருந்தது. இப்போது அவன் வருவதும் போவதும் அவளுக்கே தெரியாது. அரசங்காப் பயணமா... அல்லது ஒரு மாதிரிப் பேசிக் கொள்கிறார்களே... அப்படிப்பட்ட அலைச்சலா.. அவளும் அலட்டிக்க வில்லை... அவனைப் பொறுத்த அளவில், அவள் மறக்கவில்லை என்றாலும் மரத்துப் போனாள்.
அன்றைக்கு அவளை, உள்ளே போ. அல்லது வெளியே போ..' என்று சொன்ன கணவன், எப்போது வேண்டும் என்றாலும் வீட்டை விட்டுத் துரத்தலாம். துரத்துகிறானோ இல்லையோ.... மாமியாக்காரி துரத்த வைத்து விடுவாள். அண்ணி வேறு ஊருக்குப் போய் விட்டு இன்றுதான் திரும்பியிருக்காள். அவள் விவகாரம் முடிந்ததோ... முடியலையோ பழைய அண்ணியாக இருந்தால் இந்நேரம் இங்கு வந்திருப்பாள் அல்லது இவள், அங்கே போய் இருப்பாள். தாயும் மகனும் அண்ணி எழுதிய கடிதங்களைக் கண்ணில் காட்டியதில்லை அம்மா எழுதும் கடிதங்களைக் கூட பிரித்து, மீண்டும் சிநேகிதியான உமா மூலம் ரகசியமாய்ப் படித்து பழையபடி ஒட்டுவதாக உமாவின் மாமியார் சொன்னாள் இனிமேல் அம்மாவை அலுவலகத்திற்கே கடிதம் எழுதச் சொல்லலாம்.
சங்கரி, புறப்படப் போனாள் கணவனிடம் சொல்லாமல் கொள்ளாமல் போவதை நினைக்கும்போது, வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால், அவன் இரண்டு நாளாக வீட்டுக்கு வரவில்லை. இதுதான் கடைசி நாள். அதோடு நல்ல நாள்..... அஷ்டமி, நவமி கழிந்த தசமி நாள்.... பதினைந்து நாட்களுக்கு முன்புதான் ஆர்டர் வந்தது. அவனிடம் சொல்லியிருக்கலாம் சண்டைக்குப் பயந்தாள். சண்டை போடப் பயந்தாள். அதோடு முந்தா நாள் வரைக்கும் அப்படியா இப்படியா என்று அவளால் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை .
நேற்றுதான் சாஸ்திரிபவனுக்குச் சென்று, தான் வேலையில் சேருகிற அலுவலகத்தை தேடிப் பிடித்தாள். அங்கு நிலவும் சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்க நினைத்தாள். அரசாங்க அலுவலகம் என்றாலே அவளுக்குப் பயம். அந்தப் பயம் இப்போது பெருமிதமாக உருமாறினாலும், நேற்றுவரை பயம்தான். கல்லூரித் தமிழ் பேராசிரியர் ஒருவர் கலாட்டா செய்யும் மாணவனிடம் பார்த்து, கல்லூரி அருமையும் ஆசிரியர் அருமையும் நீங்க வேலையில சேர்ந்த பிறகுதான் தெரியும்..... நன்றாகக் குறித்துக் கொள்ளுங்கள்... அரசாங்கம் கல்லூரி அல்ல.... அது அடிமைக் கூடம்... ஆபீஸர் ஆசிரியர் அல்ல. அவர் ஆண்டான். உங்கள் சகாக்கள் இந்த மாவணர்கள் அல்ல.. உங்கள் அனுகூலச் சத்ருக்கள்... இங்கே நான் நிற்கிறேன். நீங்கள் உட்காருகிறீர்கள்... அங்கே ஆபீஸர் உட்காருவார்... நீங்கள் நிற்பீர்கள்... எனவே, என்று பேராசிரியர் இழுத்தபோது, ஒருத்தன் அல்லது ஒருத்தி மூலம், 'நம்ம அய்யாவை கவர்மென்ட் ஸர்வீஸ்ல இருந்து எவனோ செமத்தியா அடிச்சுத் துரத்தியிருக்கிறான்' என்ற கமென்ட் கேட்டது. ஒரே சிரிப்பு.... ஆசிரியரும் சேர்ந்து சிரித்தார்.... .
இப்போது, சங்கரி அதே வகுப்பறையில் இருப்பது போல் சிரித்தாள். ஆனாலும், அவள் சேரப் போகும் அலுவலகம், ஆசிரியர் பயமுறுத்தியதுபோல் இல்லை தலைமை அதிகாரி, அவளைப் பார்த்து ஆனந்தக் கூச்சலிட்டார். அடேயப்பா... ரெண்டு வருஷ வேகன்ஸிக்கு விமோசனம் வந்துவிட்டது' என்றார். பஸ்ஸரை அழுத்தி, அங்கு வேலை செய்கிறவர்களை வரவழைத்து, அறிமுகம் செய்து வைத்தார். ஆக மொத்தத்தில், ஒரு குடும்பப் பாங்கு சாஸ்திரி பவன் திடலில் இடைவேளையில் வீணையும் கையுமாக பக்திப் பாடல்களை இசைக்கும் பெண்கள். விதவிதமான மனிதர்கள்....
சங்கரிக்கு, தன் சக்திக்கு உட்பட்ட வகையில் மக்களுக்குச் சேவையாற்றப் போவதில் ஒரு பெருமிதம் சொந்தக்காலில் நிற்கப் போகும் கம்பீரம்.
இதற்குள், தெரு ஓரத்தில் கடாமுடாச் சத்தம். சங்கரி, இந்திரனுக்காக மூடிவைத்த பால்கனிக் கதவை திறந்தாள். அவன், தன்னை ஒரு மாதிரி பார்த்திருக்க முடியாது... அப்படிப் பார்த்திருந்தால் அண்ணியின் நிர்பந்தத்தில் வேண்டா வெறுப்பாய் அவன் வீட்டுக்குப் போனபோது, வசனம் பேசியிருப்பான் உஷாராயிருக்கலாம் அதுக்காக சந்தேகப்படக் கூடாது என்ன சத்தம்... குனிந்து பார்த்தாள்
மாமியார் முழங்கினாள். 'நீ ஒரு அற்பக் காய்கறிக்காரன் எனக்குப் பதில் சொல்லாம எப்படிடா போகலாம்... நான் என்ன நாயா.... குலைச்சா குலைக்கட்டுங்கிற மாதிரிப் போறே -'
"ஹலோ. உங்களைத்தான்..."
சங்கரி நிமிர்ந்தாள் எதிர் பால்கனியில் இந்திரன். அவன் பார்வை அண்ணியோடு போகும் போது பார்த்த பொதுப் பார்வையாக இல்லை. பொலிகிடா மாதிரி பல்லை இளித்தான். அவள் கண்களை உயர்த்தி கழுத்தையும் முகத்தையும் நிமிர்த்திய போது, அவன் ரகசியக் குரலில் கேட்டான்.
"உங்களுக்கு வேலை கிடைத்துட்டாமே. அதுக்காக உங்களை பாராட்டறதா... இல்லை நீங்க படுற பாட்டுக்கு அனுதாபப் படுறதான்னு புரியலே. நீங்க அன்றைக்கு மாமரத்துக்கு கீழே சொன்ன விபரத்தை உமா எங்கிட்டே சொன்னாள். பாவம் .."
சங்கரியின் கண்கள் உள்நோக்கிப் பாய்ந்து தொண்டைக்குள் போவது போல் இருந்தது. கை கால்கள் ஆடின. ஒரு நிமிடம்தான். கண்கள் உள்ளே ரத்தத்தில் மூழ்கி மீண்டும் விழிகளுக்குள் வந்தன. கால்களும் கைகளும் போராளியைப் போல் வைரப்பட்டன. அவனை நேருக்கு நேராய்ப் பார்த்தாள் அதையே அவன் ஒரு அனுகூலமாக எடுத்துக் கொண்டு குழைந்தான்.
"அந்த விவகாரத்தில் போயிட்டுதுன்னா போயிட்டதுதான். குணப்படுத்த முடியாதாம்.. பாவம் உங்க பாடு.... ஏதாவது ஒரு முடிவுக்கு வாங்க.. வேலை வேற கிடைச்சிட்டுது. அவங்க, உங்களை என்ன பண்ண முடியும்? குணப்படுத்த முடியாத கேஸை விட்டுடுறதுதான், பெட்டர்...”
சங்கரி, சங்காரம் செய்யப் போகிறவள் போல் அவனைப் பார்த்தாள். விசை கொண்ட வெடிகுண்டாய் வெடிப்பைக் காட்டாமல், இயல்பாகப் பேசுவதுபோல் பேசினாள்.
"முடியுமுன்னு சொல்றாங்களே"
இந்திரனுக்குள் ஆனந்தக் கூத்து. கணவனுக்குச் சாதகமாகப் பேசினாலும், ஒரு அந்தரங்க விஷயத்தை பகிர்ந்து கொண்டாள்... இனிமேல் உடல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியதுதான் பாக்கி. "எந்த லாட்ஜ் நல்ல லாட்ஜ்."
"நீங்க நினைக்கிறது மாதிரி முடியாது."
"முடியுமாம் சார்... ஒவ்வொருவருடைய பிரச்சினையும் ஒவ்வொரு விதமாம்... அவரோட பிரச்சினை என்னைப் பிடிக்காததாலே ஏற்பட்ட பிரச்சினையாம்... உங்க பொண்டாட்டிய அவருக்கு ரொம்ப பிடித்திருக்காம்... அவள் அனுப்பி வைத்தால், அவரோட பிரச்சனை தீர்ந்திடுமாம்... அனுப்பி வைக்கிறியாடா நாகரீகம் தெரியாத நாயே... கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்கள்டா... நான் மதுரைக்காரி.... இனி ஒரு தடவை வாலாட்டினே... ஒன் தலை, ஒன் கழுத்திலே இருக்காது... ஒன் பெண்டாட்டி என்கிட்ட சொன்னதெல்லாம், நான் ஒங்கிட்ட சொன்னால், நீ தூக்குப் போட்டுச் சாக வேண்டியிருக்கும்."
இந்திரன், நிற்குமிடமும், அந்த இடம் இருக்கும் வீடும், அந்த வீடு இருக்கும் தெருவும், அற்றுப்போய் நின்றான். சொர்ணம்மா விற்கு கேட்டிருக்குமோ என்ற பயம். உமா வந்து விடுவாளோ என்ற அச்சம். அவளைப்பார்த்து தலை கவிழ்ந்து கைகளை உயரத் தூக்கினான். சங்கரி அந்தக் கதவே உடைக்கப் போவது போல் ஒரே வீச்சாய் சாத்திவிட்டு அறைக்குள் திரும்பினாள். திரும்பி வந்த கதவை காலால் இடறினாள்.
அங்கே, அவளை எதிர்பார்த்து நிற்பது போல் மனோகர் நின்றான். பேடித்துப் பிரமித்து நின்றான். அவனைப் பார்த்த சங்கரிக்கு ஒரு ஆவேசம். குறைந்தது இவர் அந்தப் பழக்கத்திற்கு வரவில்லை என்றாலும், கூடிப் பேசலாம். இவருடைய பாராமுகம் தான், அந்தப் பயலைப் பார்க்கும் முகமாக்கி விட்டது. இவரோடு இணைந்து போயிருந்தால், அவனுக்கு அப்படிப்பட்ட எண்ணம் வந்திருக்காது. அலுவலகத்திற்கு இவர் என்னைக் கூட்டிச் செல்வதே முறை. இல்லையானால் தாலிக் கயிறைப் பார்ப்பவர் களுக்கு சில சந்தேகங்கள் வரலாம். அதுவே இந்தப்பயலைப் போன்ற சிலரை உற்பத்தி செய்யலாம். இவர் என் கணவர். இவர் என்னோட வரவேண்டும்... வந்தாகவே வேண்டும்.
சங்கரி அவன் கைகளை இரண்டையும் ஒற்றை ஆக்கி தன் கைக்குள் பிடித்துக் கொண்டாள். இன்னொரு கையால் அவன் தோளை உலுக்கி, கத்தினாள்...
"இன்னைக்கு, நான் வேலையில் சேரப் போறேன். சாஸ்திரி பவன்ல... வேலை கிடைத்திருக்கு... நீங்க, என்னை பைக்ல கூட்டிட்டு போகணும்.... நீங்களே என்னை அங்கே வேலையில் சேர்க்கணும்... ஆபீஸ்ல இருந்து திரும்பும்போது என்னை பிக்அப் பண்ணணும்... ஒண்ணா போய் ஒண்ணா வரணும்... புறப்படுங்க..!”
அவள் உலுக்கிய உலுக்கலில், அவன் குலுங்காமல் நின்றான். எதிர்ப் பால்கனிக்காரனிடம், என்ன பேசினாள் என்பது கேட்கவில்லை. ஆனால், ஏதோ பேசினாள். என்னைப் பார்த்ததும் நடிக்கிறாள். அவன் கூட்டிக்கொண்டு போவதாக, இருந்த ரகசிய ஏற்பாட்டிற்கு, நான் பகிரங்கமான மாற்று ஆள்...
மனோகர், ஒரு முடிவுக்கு வந்தவன் போல், அவளை அதட்டாமலும், அன்பைக் கொட்டாமலும் கேட்டான். ஆர்டரைக் காட்டு..'
சங்கரி, வியந்து போனாள்; மகிழ்ந்து போனாள். ஆவேச உணர்வுகள் ஆனந்த உணர்வுகளுக்கு வழிவிடவில்லை. ஆனாலும் அவை அடங்கிப் போயின... கைப்பை இருக்கும் அலமாரிப்பக்கம் அசைந்தாடிப் போனாள். அந்தப் பையைக் கொண்டு வந்து, அதன் விலாவைக் கிழித்து, ஒரு காகிதத்தை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டே அவனிடம் நீட்டினாள். அவன் தோளில் முகம் போட்டபடியே நின்றாள்.
மனோகர், அந்த காகிதத்தின் மடிப்பை நீக்கினான்... அதன் மேலும் கீழுமாய் கண்களைச் சுழற்றினான். அரைக்கணத்தில் அந்த அரசாங்க முத்திரைக் காகிதத்தை இரண்டாகக் கிழித்தான். அதைத் தடுக்கப் போனவளை ஒரே தள்ளாய்த் தள்ளி தரையில் போட்டுவிட்டு, கிழித்தவற்றைக் கிழித்தான். இரண்டை நாலாய், நாலை பதினாறாய்.... சுக்கு நூறாய் கிழித்தான். உள்ளங்கையில் பாதி அளவிற்குத் தேறிய அந்த காகிதச் சில்லுகளை, கீழே கிடந்தவளின் தலையில் போட்டான். முழக்கமிட்டான்.....
''ஒன்னை கூட்டிக்கிட்டுப் போகச் சொல்றியா... கூட்டிக் கொடுக்கச் சொல்றியா... பால்கனியில் கொஞ்சிக் குலாவினியே.... அந்தப் பயலைக் கூட்டிக்கிட்டுப் போகச் சொல்ல வேண்டியது தானே... சொல்லாமலா இருப்பே... இந்த வீட்ல நீ இனிமே ஒரு நொடி கூட, நீ, இருக்கக் கூடாது..."
சங்கரி, குப்பைத் தொட்டியாய் எழுந்தாள். கண்களைச் சரித்துப் பார்த்தாள். இரையை கழுகு பார்க்குமே... அப்படிப்பட்ட பார்வை. அவளுக்குள் பரிபாலனம் செய்த உள்ச்செல் நரம்புகளும் வெளிச் செல் நரம்புகளும் முரண்பட்டுச் செயல்படுவதுபோல் முகத்தைக் கோணலாக்கினாள். மூளையின் உடலாதிக் கத்தையும், மனோ
சு. சமுத்திரம் ஆதிக்கத்தையும், உள்ளுறுப்புகளும், வெளியுறுப்புகளும் கேள்வி கேட்பது போன்ற கோணல். சுழல்வதை காட்டாதது போல், சுழல்கின்ற பூமியாய், அவள் தன்னுள்ளே சுழன்றாலும், சுழலாதவள் போல் நின்றாள். மனோகர், ஏதேதோ பேசிக்கொண்டே போனான். அவள் காதில் விழவில்லை .
திடீரென்று, அவன் மீது பாய்ந்தாள். கராத்தேக்காரி மாதிரி ஒரே தாவாய் தாவி, அவனை வீழ்த்தினாள். அவன் தட்டுத் தடுமாறி எழுந்தபோது, அவன் தலை முடியை பிடித்து இழுத்தாள். அவன் திமிறி விடுபட்டபோது, அவன் சட்டையை இழுத்தாள். அந்தக் காகிதம் போல் சுக்கு நூறாய்க் கிழித்தாள். ைெகவிரல்கள் கம்பிகளாகின... கண்கள் தீக்கட்டிகளாகின... அவன் இந்த எதிர் பாராத தாக்குதலால் சுயத்தை இழந்தான். ஏய்....ஏய் என்று அங்கும் இங்குமாய் ஓடினான். அவள், தலையணையைத் தூக்கி அவன்மீது எறிந்தாள். கையிலிருந்த அவன் சட்டைக் கிழிசல்களை வீசினாள். டெலிபோனைத் தூக்கிக் கீழே போட்டாள்... ஒரு நாற்காலியைத் தூக்கி மல்லாக்கப் போட்டாள்... பீரோ கண்ணாடிக்கு முன்னால் போனாள். அவளது உருவம் அவளுக்குப் பிடிக்கவில்லையோ என்னமோ.... அந்தக் கண்ணாடிக்குள் அவன் உருவமும் தெரிந்ததோ என்னமோ... கண்ணாடியைக் கைகளால் குத்தினாள்.... குத்திக் குத்தி விரல்களுக்கு குருதி வண்ணம் கொடுத்தாள்... அவனையே குறிவைப்பது போல் ரத்தமும் கையுமாய் மீண்டும் பாய்ந்தாள். அப்போது....
சொர்ணம்மா , ஓடிவந்தாள். குய்யோ முறையோ என்று கத்தினாள்.
"அய்யோ - அய்யய்யோ என் பிள்ளையப் போட்டுக் கொல்றாளே நான் உள்ளங்கையிலே ஏந்தி வளர்த்த செல்ல மகனை கொல்லு கொல்லுன்னு கொல்றாளே... கிளியை வளர்த்து பூனை கையிலே ஒப்படைச்சிட்டேனே ஏய் விடுடி அவனை விடுடி என் பிள்ளையை."
சொர்ணம்மா, மருமகளை பிடிக்கவோ அடிக்கவோ , அவள் பக்கமாய் ஓடினாள். ஆனாலும் அவள் பார்த்த பார்வையில் பைசா நகரக்கோபுரம் போல் சாய்ந்து நின்றாள். இதற்குள் காந்தாமணி, ஓடி வந்தாள். காய்கறி வண்டிப் பையன் வந்தான். கட்டிடத் தொழிலாளர்கள், ஓடோடி வந்தார்கள். சொர்ணம்மா, எல்லோரிடமும் முறையிடுவதுபோல் கத்தினாள். 'அய்யோ எங்கேயும் நடக்காத ஒரு அநியாயம் இங்கே நடந்திட்டே"
காந்தாமணி, சங்கரியை முரட்டுத்தனமாகத் தள்ளிவிட்டு, தம்பியை மீட்டினாள். நாத்தனாரை ஒரு சுவரோடு சாத்தி, அவள் மார்புக்குக் குறுக்கே கையை அடைப்பாக்கிக் கொண்டு, தம்பியைப் பார்த்தாள். இடுப்புக்கு மேலே துணிச் சிதறல்களோடும், கிழிசல் பொத்தல்களோடும் ஆண் கவர்ச்சி ஆட்டக்காரன் போல் நின்ற மனோகர், மருவி மருவிச் சொன்னான்.
"வேலைக்குப் போகக் கூடாதுன்னேன். அதுக்கு இந்தப்பாடு படுத்துறாள். எத்தனை வருஷம் ஜெயிலில் இருந்தாலும் சரி. இவளை நான் விடப்போறதா இல்லை"
அவன் மாவீரனாய் மனைவி மீது பாயப் போனபோது, அக்காக்காரி இன்னொரு ஒற்றைக் கையால் அவனைப் பிடித்துக் கொண்டாள். அந்தச் சமயம் பார்த்து உமா ஓடிவந்தாள். லேசாய் அமைதிப்பட்டு நின்ற சங்கரி, அவளைப் பார்த்ததும் பதட்டமானாள்.
"முதல்ல இங்கிருந்து போடி போறியா? இல்லியாடி அடுத்துக் கெடுத்தவளே - நம்பிக்கைத் துரோகி - இந்த வீட்ல உனக்கென்னடி வேலை நான் சொன்னதுமாதிரி ஒன் புருஷன் அனுப்பி வைச்சானா?"
உமா, கைகளைப் பிசைந்து திரும்பி நடக்கப் போன போது, சொர்ணம்மா, அவளைப் பிடித்துக் கொண்டு, பதில் கத்துக் கத்தினாள்.
"இது என் வீடு. இவள், எனக்கு இன்னொரு மகள் மாதிரி... போகமாட்டாள்... என்னடி செய்வே... ஏய்.. உமா. நீ நில்லும்மா..."
உமா, நிற்கத்தான் செய்தாள். ஆனால், இந்திரன் ஓடிவந்து, அவள் கையைப் பிடித்து, நாயை இழுப்பது மாதிரி இழுத்துக் கொண்டு போனான். ஆனாலும், முன்னெச்சரிக்கையாய், சங்கரிக்கு முகத்தைக் காட்டாமல், படிகளுக்குள் உடம்பைப் பதுக்கிக் கொண்டு உமாவோடு ஓடிவிட்டான்.
இருவரையும் இரு கரங்களால் தடுத்து நின்ற காந்தாமணி, தம்பியை ஒருபுறமாய் ஒதுக்கித் தள்ளிவிட்டு, நாத்தனாரைப் பார்த்து... நியாயம் கேட்பது போல் கேட்டாள்....
"என் தம்பியால, அது முடியலைன்னு இந்த உமாகிட்ட கேவலமாப் பேசியிருக்கே.. நான், வலது காதில் வாங்கி இடது காதில் வச்சுட்டு இருக்கேன். நீயே சொல்லு... என் தம்பியைப் பேடின்னு பேசினது மட்டுமில்லாம, இப்போ அவன அடி அடின்னு அடிச்சிறிக்கிறியே. இது ஒரு பொம்பள செய்கிற காரியமா. "
மகள் சொன்னதை சொர்ணம்மா, உன்னிப்பாய்க் கேட்டாள். முதலில் அவளுக்குப் புரியவில்லை . புரியப் புரிய வாயிலும் வயிற்றிலும் அடித்தபடியே அந்த அறையே அதிரும்படிக் கத்தினாள். மருமகள், முன்னால் விரல்களை நீட்டி மடக்கியபடியே பேசத் தெரிந்த மிருகமாய்க் கத்தினாள்....
"அடி சண்டாளி... என் மகனையாடி ஏலாதவன்னு சொன்னே - நீ மதம் பிடிச்சுத் திறிஞ்சா அதுக்கு அவன் என்னடி பண்ணுவான்? இப்போ சொல்றதை நல்லாக் கேளுடி... ஒன் கண்ணு முன்னாலேயே, என் மகனுக்கு இன்னொரு கல்யாணம் செய்துவச்சு, ஒரு வருஷத்துக்குள்ளே... என் பேரக் குழந்தையை நான் மடில வச்சுக் கொஞ்சலைன்னா... என் பேரு சொர்ணம்மா இல்லடி அடிப்பாவி என் பிள்ளையை எப்படிக் கேவலப்படுத்தியிருக்கா..... ராத்திரிலே என்ன பாடெல்லாம் படுத்தினாளோ - அடேய்... இன்னுமாடா நீ, இவள்கூட வாழணும்... இவளை ஒரேயடியாய் மிதிச்சுப் போடாம இப்படி அடிப்பட்டு நிக்கியே... நீயெல்லாம் ஒரு ஆம்பளையாடா?"
காந்தாமணி, அம்மாவின் வாயைப் பொத்தினாள். தாயின் ஆவேசம் தனயனுக்கும் வந்துவிட்டது. இப்போது பசுப்போல் மலங்க மலங்கப் பார்த்தபடியே நின்ற சங்கரியின் மீது மனோகர் பாய்ந்தான். அவள் முடியைப் பிடித்து இழுத்தான். கால்களை இடறி வயிற்றைக் குத்துவதற்காக குதிகால்களைத் தூக்கி கைகளை ஓங்கினான்.
என்றாலும், சங்கரி அவனுக்கு இடம் கொடுக்கவில்லை. தொப்பென்று கீழே விழுந்தாள். பின்பக்கமாய் விழுந்து மல்லாக்கச் சாய்ந்தாள் வாயில் நுரை சோப்புக் குமிழ்களாய் நின்று நிதானித்து, பின்னர் திரிந்துபோன பாலாய் ஓடியது. கண்கள் இடுக்கிக் கொண்டன. கை கால்கள் வெட்டிக் கொண்டன.. வெட்டி வெட்டி ஒன்றை ஒன்று குத்திக் கொண்டன.

