கல்யாணப் பேச்சு

நிலவின் அமுத வெள்ளத்தில் மூழ்கியிருந்த தோட்டத்தில் விருந்து நடைபெற்றது. அங்கங்கே வர்ணவிளக்குகள் சுடர் விட்டன. ஆனால் கூட்டம் - அதாவது விருந்தினர்கள் - அதிகம் இல்லை. பவானியுடன் படித்தவர்கள் டாக்டர் காமாட்சி. இன்னும் சில முக்கியமான நண்பர்கள் மட்டுமே வந்திருந்தனர். ராதாதான் பெண்களை வரவேற்க நின்றிருந்தாள். உள்ளத்தில் கொண்டிருந்த துயரத் தீயை அணைக்க முயன்று கொண்டிருந்தாள் என்றும் சொல்லலாம். அந்தப் பெண் ஊராருக்குப் பயந்து கொண்டு சில மாதங்கள் வெளியில் எங்குமே போகாமலிருந்தாள். படிப்படியாக அவள் மனம் மாற ஆரம்பித்தது. அவள் அப்படி வீட்டோடு அடைபட்டுக் கிடப்பதால், மூர்த்தியின் தரம் சமூகத்தின் கண்களில் உயர்ந்து காணப்படாது என்கிற உண்மையை ராதா புரிந்து கொண்டாள். அவன் புரிந்த குற்றங்கள் எல்லோருக்கும் தெரியும். இனி தான் மட்டும் வீட்டி னுள் பதுங்கிக் கிடப்பதில் என்ன லாபம் என்று தீர்மானித்து ராதா அவ்வப் போது வெளியில் போய் வர ஆரம்பித்தாள். பவானிக்காக விருந்து நடப்பதை எண்ணி ராதா அகமலர்ச்சியுடன் அதில் கலந்து கொண்டாள்.

விருந்து அமர்க்களமாக நடந்தது. பவானிக்கு இவை யாவுமே புதுமையாக இருந்தன. சங்கோஜத்தினால் அவள் குன்றிப் போனாள்.

கூட்டத்தைப் பார்த்துப் பிரமித்து உட்கார்ந்திருந்த அவள் அருகில் காமாட்சி வந்தாள். அன்புடன் அருகில் உட்கார்ந்து, 'பவானி! நீங்களும் டாக்டரும் சம்பந்திகள் ஆகப் போகிறீர்களாமே?" என்று விசாரித்தாள்.

”ஆமாம் டாக்டர். எனக்கு நேற்று வரையில் ஒன்று தெரியாது! நேற்று ராத்திரி அண்ணா வெளியே போய்விட்டு வந்ததும், விஷயத்தை என்னிடம் சொன்னார்" என்றாள் பவானி.

பெண்மணிகள் இருவர் முகத்திலும் சந்தோஷம் நியாபியிருந்தது. விருந்து முடிந்ததும், முக்கியஸ்தர்கள் வீட்டாரிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றார்கள். மிஞ்சியிருந்தவர்கள் மிகச் சிலரே. தோட்டத்தில் ஒரு கல் பெஞ்சியில் நான்கைந்து பேர்கள் உட்கார்ந்தார்கள். நாகராஜன் அருகில் கிடந்த மேஜை இருந்த வெற்றிலைத் தட்டிலிருந்து ’பீடா' ஒன்றை வாயில் போட்டுக் கொண்டான். அவன் பீடாவை கையில் எடுத்ததும் டாக்டர் காமாட்சி அவனைப் பாடத்துச் சிரித்தாள்.

”மிஸ்டர் நாகராஜன்! நீங்கள் இத்துடன் ஆறு தடவைகள் பீடாவை மென்று விட்டீர்கள்" என்றாள்.

”எப்படி அவ்வளவு கணக்காகச் சொல்லுகிறீர்கள்?" என்று ஸ்ரீதரன் கேட்டார்.

”இங்கு இருக்கும் ஒவ்வொருவரையும் நான் கவனித்து வருகிறேன். பவானி இந்த விருந்தில் சரியாகவே சாப்பிடவில்லை. ராதா இலையில் உட்கார்ந்ததைப் பார்த்தேன். மறுபடியும் திரும்பிப் பார்ப்பதற்குள் அவள் கை அலம்பிக் கொண்டு வந்து விட்டாள். நாகராஜ்ன் வெறுமனே பீடாவை மென்றே வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்கிறார். ஜெயஸ்ரீதான் கல்யாணப் பெண் ஆயிற்றே! அவளுக்குச் சாப்பாட்டின் மீது நினைவே இல்லை. கோமதிக்கு எதிலுமே மனம் செல்லவில்லை. நாத்தி ஊருக்குப் போவதைப் பற்றிக் கவலையில் மூழ்கி இருக்கிறாள்" என்றாள் காமாட்சி.

பவானி ஊருக்குப் போவதைப் பற்றி கோமதி ஒருத்திக்கு மட்டும் துயரம் ஏற்பட வில்லை. எல்லாருமே மனம் வருந்தினர்.

கடைசியாக பவானி, டாக்டர் ஸ்ரீதரனிடம் தான் ஊருக்குப் போய் வருவதாக அறிவித்துக் கொண்டாள்.

ஸ்ரீதரன் சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் இருந்தார். ஒரு விநாடிக்குள் அவர் தன்னைச் சுற்றி இருப்பவர்களை மறந்தார். ஆழ்கடலுக்குள்ளே முழுகி எழுந்து முத்துக் குளிப்பவன் கையில் பலரகச் சிப்பிகள் கிடைக்கின்றன. அவற்றிலே ஒரு சிப்பிக்குள்ளிருந்து அழகிய முத்தைக் கண்டு பிடிக்கிறார்கள். அப்புறம் அந்த முத்து சமூகத்திலே ஓர் உயர்ந்த ஸ்தானத்தை அடைகிறது. சமூகத்தில் கணவனை இழந்தவர்கள், கணவனால் புறக்கணிக்கப்பட்டவர்கள், வாழ வகை தெரியாத வர்கள், வாழ்க்கைச் சூதில் தம்மையே சூதாட்டக் காய் களாக வைத்து இழந்தவர்கள் என்று எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். அவர்களும் இந்த உலகத்தில் வாழ வேண்டியவர்கள் தாம்.

அவர்களுக்கு உலக வாழ்வு இருண்டு போகாமல் இருக்க அநேக உழைப்பாளிகள் தேவை. அந்தத் தொண்டர்களின் உள்ளம் மாசு மருவற்று இருக்க வேண்டும். தன்னுடையது என்கிற பற்று நீங்க வேண் டும். அவளுடைய கண்ணீரைத் துடைக்க அவர்கள் உள்ளம் பண்பட்டிருக்க வேண்டும். நோயிலும் துன்பத் திலும் இன்னல்களிலும் பங்கெடுத்துக்கொண்டு ஆற்றும் பணியே கடவுள் பணி என்னும் உண்மையை உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அத்தகைய பல நல்முத்துக்களை இந்தப் பாரத நாடு ஈன்றிருக் கிறது. அவர்கள் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்ளாமல் ஆழ் கடலின் கீழ் ஒளிந்து வாழும் முத்துச் சிப்பிகளைப் போல மறைந்து கிடக்கிறார்கள். அவர்களில் ஒரு முத்துச்சிப்பியைத் தான் ஸ்ரீதரன் கண்டெடுத்து உலகப் பணிக்கு அர்ப்பணிக்க முன் வந்தார்.

அந்த ஆனந்தத்தில் லயித்து அவர் தம்மையே மறந்திருந்தார்.

”டாக்டர்! நாளைக்கு நான் பசுமலைக்குக் கிளம்புறேன்..." பவானி உள்ளம் நெகிழ மறுபடியும் டாக்டரிடம் பேசினாள்.

”போய் வருகிறீர்களா? சற்று முன் நீங்கள் என்னிடம் சொல்லிக்கொண்டபோது நான் ஏதோ யோசனையில் மூழ்கி இருந்தேன்" என்றார் அவர்.

ராதா அவர் அருகில் வந்து நின்றாள்.

"அண்ணா ! நானும் பவானியுடன் பசுமலைக்குப் போகிறேன். சில வருஷங்கள் அங்கே இருக்கிறேன்" என்றாள்.

"ஏன் அப்படி?" என்று கேட்டார் அவர்.

“இல்லை அண்ணா ! அவர் இல்லாமல் இந்த வீட்டில் எனக்கு இருக்கப் பிடிக்கவில்லை. சில காலம் நான் என்னை மறந்து இருக்க ஆசைப்படுகிறேன்."

ஸ்ரீதரன் அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை. விருந்தினர் யாவரும் தத்தம் வீடுகளுக்குச் சென்று விட்டார்கள். ஸ்ரீதரனும் ராதாவும் அன்று இரவு வெகு நேரம் வரை தூங்கவில்லை. பவானியின் சிறப்பான குணங்களைப்பற்றி அவர் தம் தங்கையிடம் கூறிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்.

"ராதா அவளை என் மனம் ஓர் உயர்ந்த முத்துக்கு ஒப்பிட்டுப் பார்க்கிறது. இத்தகைய நற்குணங்கள் நிரம்பிய பெண்மணிகள் எத்தனை பேர் நம் சமூகத்தில் இருக்கிறார்கள் தெரியுமா?" என்று சிலாகித்துப் பேசினார் அவர்.

ராதா வாய் திறவாமல் அவர் கூறுவதையே கேட்டுக் கொண்டிருந்தாள்.