முத்துச்சிப்பி
ரயிலில் பவானியும், ராதாவும் உட்கார்ந்திருந்தார்கள். நானும் மதுரை செல்வதற்காக அன்று அதே ரயிலில் பிரயாணப்பட்டேன். எழும்பூர் ரயில் நிலையத்தில் வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் ஒரு சிறு கூட்டம் என் பெட்டியின் அருகில் வந்து நின்றது. தூய வெள்ளை ஆடை உடுத்திய இரு பெண்கள் வண்டியில் ஏறிக்கொண்டார்கள். நடுத்தர வயதை உடைய ஒருத்தி மங்கலத்தை இழந்தவள் என்பதை அவள் நெற்றியே எனக்குக் காட்டி விட்டது. இன்னொருத்தி இளம் பெண்: வந்திருந்த கூட்டம் குதூகலமாகச் சிரித்து அவர் களுடன் பேசியது . சுருண்ட கேசமும் அகன்ற விழிகளும் உடைய வாலிபன் ஒருவன் நடுத்தர வயதினனான பெண் மணியிடம், "அம்மா அடிக்கடி கடிதம் போடு" என்று கேட்டுக் கொண்டான்.
”அத்தை ! திரும்பவும் நீங்கள் சமீபத்தில் இங்கு வராவிட்டால், நான் பசுமலைக்கே வந்து விடுவேன்" என்று ஒரு பெண் பயமுறுத்தினாள்.
”பவானி! கல்யாணராமனையும், பார்வதியையும் நாங்கள் மிகவும் விசாரித்ததாகச் சொல் அம்மா" என்று தம்பதி இருவர் கேட்டுக் கொண்டனர். டாக்டரைப் போல் தோற்றமளித்த பெண்மணி ஒருத்தி. பவானி யிடம் ஒரு புத்தகத்தை அளித்தாள். 'ஆசிய ஜோதி' என்னும் தலைப்பு புத்தகத்தின் மீது அழகாக அச்சிடப் பட்டிருந்தது. அவள் இடுப்பில் இருந்த இரண்டு வயதுப் பெண் குழந்தை, உலகத்தின் இன்பங்களை-யெல்லாம் தன் பொக்கை வாய்ச் சிரிப்பால் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.
சென்னையில் பிரபல டாக்டரான ஸ்ரீதரன் தம் மகளுடன் காரிலேயே ரயில் நிலையத்துக்குள் அவசரமாக வந்தார்.
"என்ன அம்மா ! நீங்கள் எந்த மட்டும்?" என்று அன்னை விசாரித்தார்.
”மதுரைக்குப் போகிறேன்..." என்றேன்.
”அப்போது உங்களுக்குப் பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்து விட்டது" என்றார் அவர். வண்டிக்குள் உட்கார்ந்திருந்த இரு பெண்களையும் பார்த்து.
”இவள் உங்கள் பெண் ஜெயஸ்ரீதானே? பார்த்து நாள் ஆயிற்று."
”ஆமாம், பெரியவளாக வளர்ந்து விட்டாள். கல்யாணம் பண்ணிவிட வேண்டும் என்று நினைத்திருக்கிறேன் ..."
"அப்படியா? மிகவும் சந்தோஷம். வரன் தகைந்து விட்டதா?" என்றேன்.
”அநேகமாகத் தகைந்த மாதிரிதான்" என்று கூறி விட்டு .. போலு! இங்கே வா" என்று அழைத்தார் அவர்.
சுருண்ட கேசத்தையுடைய அந்த அழகிய வாலிபன் பெட்டிக்குள் வந்தான்.
"இவன் தான் அம்மா எனக்கு வரப்போகும் மருமகன். அந்த அம்மாள் தான் இவன் தாய். அந்தப் பெண் என் தங்கை" என்று அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார் டாக்டர்.
ரயில் கிளம்புவதற்கு அறிகுறியாக கார்டு பச்சைக் கொடியை உயர்த்திப் பிடித்து ஆட்டினார். வெளியே நின்றிருந்தவர்களின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந் தது. பவானி தன் கைகள் இரண்டையும் கூப்பி அனைவ ரிடமும் விடைபெற்றுக் கொண்டிருந்தாள்.
ரயில் வேகமாக நகரத் தொடங்கியது. மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி, பரங்கிமலை என்று ஊர்கள் நகர்ந்து கொண்டே வந்தன. தாம்பரத்தையும் தாண்டி ரயில் வேகமாகச் சென்று கொண்டிருந்தது.
என் எதிரில் உட்கார்ந்திருந்த பவானி என்னைப் பார்த்து “ஏதாவது பள்ளிக்கூடத்தில் வேலையாக இருக்கிறீர்களா? கையில் ஏகப்பட்ட காகிதங்களை வைத்துக் கொண்டிருக்கிறீர்களே! பரீட்சை விடைத்தாள்களா அவை?" என்று கேட்டாள்.
நான் லேசாகச் சிரித்தேன்.
"அதெல்லாம் ஒன்றுமில்லை. ஏதாவது இப்படி மனசில் தோன்றுவதை எழுதப் பார்க்கிறேன்" என்றேன்.
பவானி சிறிது நேரம் ஏதோ யோசித்தாள். பிறகு அவன் அருகில் வந்து உட்கார்ந்து, அம்மா! எனக்குத் தெரிந்த ஓர் அனுபவத்தைக் கூறுகிறேன். எழுதிப் பாருங்கள்" என்றாள்.
பவானியை முந்திக்கொண்டு அந்த இளம் பெண் ராதா கதை சொல்ல ஆரம்பித்தாள். கதை வளர்ந்து கொண்டே வந்தது. இருவரும் மாறிமாறிக் கூறினார்கள்.
பசுமலையின் அழகிய கோபுரம் என் கண் முன்னே தெரிந்தது.
சீறி எழுந்து அலைமோதும் கடலுக்குள் பாய்ந்து சென்ற ஒருவன் கடலின் அடித்தளத்தில் துழாவித் துருவிக் கண்டு பிடித்தான் ஒரு முத்துச் சிப்பியை. முத்தை வெளியில் எடுத்தான். பசுமையும் நீலமும் வெண்மையும் கலந்த அந்த முத்துக்குத்தான் எவ்வளவு ஒளி? அதைப் பத்திரமாகக் கையில் எடுத்துக்கொண்டு கோயிலுக்குள் நுழைந்தான் அவன்.
குருக்கள் கர்ப்பூரம் காட்டிக்கொண்டிருந்தார் இறைவனுக்கு. தகதகவென்று அவன் அளித்த முத்து இறைவனின் நெற்றியில் துலங்கிக் கொண்டிருந்தது. கடலின் ஆழத்தில் ஒளிந்திருந்து அது செய்த தவம் அன்று பலித்தது.
பொழுது விடிந்தது. சொக்கநாதர்- மீனாட்சியின் ஆலயம் தெரிந்தது.
பவானியும், ராதாவும் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.இளம்பரிதியில் பவானியின் முகம் முத்தைப் பாலப் பிரகாசித்தது.
கற்பனையில் நான் கண்ட முத்துச் சிப்பி முழு பருவத்துடன் என் முன் துயின்று கொண்டிருந்தாள்
(முற்றும்)

