நம்பிக்கை

நல்ல மனசுடன் அன்று சுவாமிநாதன் செய்த ஆசியிலே அந்தக் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அவருடைய பிரம்புப் பெட்டி ராமாயணப்புத்தகம் மூக்குக் கண்ணாடி விபூதிப்பை யாவும் அவருடைய அறையிலே வைக்கப்பட்டன. அந்தக் கிழவர் எப்பொழுதோ தெரியாமல் காமிராவின் பிடிக்குள் அகப்பட்டுக் கொண்ட போது எடுத்த போட்டோவைப் பெரிதாக்கி அறையில் மாட்டி வைத்தார்கள்.

ஸ்ரீதரனின் உள்ளமும் இனி மூர்த்தி விடுதலை அடைந்து வந்து விட்டால் திருத்தி விடுவான் என்று சொல்லியது. ராதாவும் அவ்விதமே நம்பினாள்.

ஒரு நாள் மாலை பவானி டாக்டர் ஸ்ரீதரனின் வீட்டுக்கு வந்தாள். சமீபத்தில் அவள் பரீட்சையில் தேர்வு பெற்று விட்டாள். அதை ஸ்ரீதரனிடம் கூறி ஏதாவது ஆலோசனை கேட்டுப் போகலாம் என்று வந்திருந்தாள் பவானி.

இடையில் அந்தக் குடும்பத்தில் நடந்த நிகழ்ச்சிகள் யாவையும் அறிந்தவள் அவள். எதிலும் அக்கறை காண்பித்துக் கொள்ளாத அவள் தமையன் நாகராஜன், திடும் என்று மூர்த்தியைப் பற்றி வீட்டில் வந்து கூறியதும் பவானிக்குப் பெரிதும் வருத்தம் ஏற்பட்டது. மூர்த்தியின் குணங்களைப் பற்றிப் படிப்படியாக அவள் நினைத்துப் பார்த்தாள். ஒருத்தியை மணந்து கொண்ட பிறகும் மாறாதவன். அன்று அவளிடம் எப்படியெல்லாம் நடந்து கொண்டான்.

”கோவிலுக்கா போகிறீர்கள்?' என்று அவன் கேட்டுச் சிரித்ததும், தன்னையும் பாலுவையும் தொடர்ந்து டவுன் பஸ்ஸில் அவன் வந்ததும் பிறகு ஒரு நாள் சேஷாத்ரியுடன் அவன் சீர்திருத்தத்தைப் பற்றிப் பேசி, அவரிடம் 'வாங்கிக் கட்டிக்' கொண்டதையும், கடைசியாக ரயிலடிக்குவந்து தன்னிடம் நயவஞ்சகமாக விலாசம் கேட்டதையும் நினைத்துப் பார்த்து ஆச்சரியம் அடைந்தாள் பவானி.

இப்படிப்பட்டவனிடம் ஓர் அணுவளவு தான் பிசகி நடந்திருந்தாலும், என்னவெல்லாம் நேர்ந்திருக்குமோ என்கிற கலக்கம் அவள் மனத்தில் ஏற்பட்டது . ராதாவிடம் அவளுக்கு அனுதாபம் ஏற்பட்டது. நாடகத்துக்கு அவள் டிக்கட் விற்க வந்தபோது இருந்த நிலைமையை யும் இப்பொழுது இருந்த நிலைமையையும் நினைத்துப் பார்த்து வருந்தினாள் அவள். இதைப்பற்றி அனுதாபத் துடன் அவள் தன் மன்னி கோமதியிடம் கூறியபோது 'ஆமாம். நீதான் அவளுக்காகக் கரைந்து போகிறாய். நல்ல இடமாக ”டாக்டர் பார்த்துக் கல்யாணம்பண்ணி வைத்திருக்க மாட்டாரா? எத்தனை பிள்ளைகள் கண்ணியமாக, கௌரவமாக இல்லை . அவனுடன் சுற்றி அவள் தன் பெயரைக் கெடுத்துக் கொண்டாள். விஷயம் மிஞ்சிப்போன பிறகு என்ன செய்ய முடியும்? அவனுக்கே கல்யாணத்தைப் பண்ணிவைத்தார். அப்புறமாவது புருஷனைக் கவனித்துக் கொஞ்சமாவது திருத்தி இருக்கலாம். ஒருத்தர் விவகாரங்களில் இன்னொருத்தர் தலையிடக்கூடாது என்கிற நாகரிகம் புருஷன் மனைவி வரையில் பரவி விட்டதாக்கும். ராதா அவன் போகிற வழிக் கெல்லாம் வளைந்து கொடுத்து அவனுக்கு உடந்தையாக அவளும் ஆடி இருக்கிறாள். அவள் அண்ணா கொடுத்த வைர வளையல்களை விற்கிற வரையில் அவளுக்கே தெரியவில்லை பார்!" என்று கோமதி ராதாவின் பேரில் குற்றத்தைச் சுமத்திப் பேசினாள்.

மன்னியின் கடுமையான வார்த்தைகளைக் கேட்ட பவானியின் மனம் ராதாவுக்காக மேலும் இரங்கியது. அவளைத் தனிமையில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்று நினைத்திருந்தாள். அதற்காக அவர்கள் வீட்டுக் குப்போய்ப் பேசுவதும் சிறந்த முறையாகப் பவானிக்குத் தோன்றவில்லை. ஆகவே சில நாட்கள் வரையில் சும்மா இருந்து விட்டாள். இடையில் சுவாமிநாதன் காலமாகி விட்டார் என்கிற செய்தி தெரியவந்தது. டாக்டரின் குடும்பத்தைத் தாங்கிவந்த பெரிய தூண் ஒன்று நிலை பெயர்ந்த மாதிரி இருந்தது அந்தச் செய்தி.

"ராதா, ராதா என்று அவள் மீது உயிராக இருந்தார் அந்த மனிதர். அவள் சுகத்தோடு வாழ்வதை அவர் இருந்து பார்க்கக் கொடுத்துவைக்கவில்லை! பாவம்..." என்று நாகராஜனும் கோமதியும் வருந்தினார்கள்.

கோமதி இப்பொழுது நோயாளி அல்ல. தன் குடும்பத்தைத்தானே நிர்வகிக்கும் பொறுப்பு அவளிடம் ஏற்பட்டிருந்தது. அத்தை வராவிட்டால் நீ எப்பொழு தும் படுக்கையில் தான் இருந்திருப்பாய். நாத்திக்குப் பயந்துகொண்டு குடும்ப வேலைகளைக் கவனிக்கவே வலிவும் உற்சாகமும் உனக்கு ஏற்பட்டு விட்டது" என்று கேலி செய்தாள் சுமதி.

”நீ இவ்வளவு கெட்டிக்காரியாக இருப்பதும் உன் அத்தையால் தான். அதை மறந்து விடாதே" என்றாள் கோமதி.

”என் சயன்ஸ் நோட்டுப் புஸ்தகம் எங்கே சுமதி? நீ எடுத்தாயா அதை?" என்று கேட்டுக்கொண்டே வந்தான் பாலு.

“நான் எதற்கப்பா அதையெல்லாம் எடுக்கிறேன்? நீ தானே நேற்று ஜெயஸ்ரீயிடம் கொடுத்தாய்! துரைக்கு மறந்து போச்சு போலிருக்கு. அவ்வளவு மயக்கம் இப் பொழுதிலிருந்தே" என்றாள் சிரித்துக்கொண்டே சுமதி.

பாலு சுமதியைக் கோபத்துடன் பார்த்தான்.

”எங்கே மறுபடியும் என்னைப்பற்றி - குரங்கு மூஞ்சி பாலு' என்று எழுதியிருப்பாயோ என்கிற சந்தேகம் வந்துவிட்டது!"

பவானி இவர்கள் இருவரும் விளையாட்டாகச் சண்டையிடுவதைப் பார்த்துக் கொண்டேயிருந்தவள் திடீரென்று, 'பாலு! நான் டாக்டர் ஸ்ரீதரனின் வீட்டுக்குப் போகிறேன். அப்படியே உன் நோட்டுப் புஸ்தகத்தை வாங்கி வருகிறேன" என்று கூறிவிட்டுக் கிளம்பினாள்.

அவள் டாக்டர் வீட்டுக்கு வந்ததும் வீடு வெறிச் சென்று கிடந்தது. முன்பிருந்த களையும், அழகும் அந்த வீட்டில் காணப்படவில்லை. கூடத்தில் ஒருவரும் இராமற் போகவே, பவானி இரண்டாங் கட்டுக்குச் சென்றாள்.

அங்கே உட்கார்ந்திருந்த ராதாவைப் பார்த்ததும் அவள் திடுக்கிட்டுப் போனாள். இளமையின் எழிலோடு விளங்கிய அந்தப் பெண் இப்போது நிறம்மாறி இளைத் துப் போய் இருப்பதைப் பார்த்ததும் அவளுக்குத் துயரம் ஏற்பட்டது.

”வாருங்கள். அண்ணா சற்றைக்கெல்லாம் வந்து விடுவார். உங்களுக்குப் பரீட்சை ’பாஸ்' ஆகிவிட்டதாமே! டாக்டர் காமாட்சி நேற்று வந்திருந்தார். அவர் தான் சொன்னார். மேலே என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று கேட்டாள் ராதா.

மனதுக்குள் குவிந்து போயிருக்கும் துயரச் சுமையை மறைத்துக்கொண்டு பேசும் ராதாவின் அருகில் உட்கார்ந்தாள் பவானி.

சிறிது நேரம் வரையில் இருவரும் ஒன்றுமே பேச வில்லை. பிறகு பவானியே பேச ஆரம்பித்தாள்.

”சுவாமிநாதன் போன பிறகு உன்னை நான் பார்க்கவே இல்லை. பாவம். நல்ல மனுஷர்...." என்று அனுதாபம் தெரிவித்தாள்.

ராதா மள மளவென்று கண்ணீர் பெருக்கினாள்.

”நல்ல மனிதர் என்பதை நான் அன்றே புரிந்து கொண்டு. அவர் சொன்னபடி கேட்டிருந்தால் என் நிலையே வேறாக இருக்கும். அவரை நான் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை. நம்மை வளர்த்த பாசத்தினால் நம்மிடம் அளவுக்கு மீறிய சலுகை காண்பிக்கிறார், வேண்டாத விஷயங்களில் தலையிடுகிறார் என்று நினைத்து அவர் மீது எனக்கு வெறுப்பும் கோபமும் தான் அப்போது உண்டாயிற்று."

பவானி அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"இனிமேல் எனக்கு என்ன கௌரவம் இருக்கிறது? படித்த படிப்பும், மற்றவைகளில் இருந்த சாமர்த்தியமும் வீணாகிப்போன மாதிரிதான். நான் வெளியிலேயே போகிறதில்லை. வெறுமனே வேதாந்த புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன்."

பவானி லேசாகச் சிரித்தாள்.

”ராதா, எனக்கு விவரங்கள் யாவும் தெரியும். வெறுமனே வேதாந்தப் புத்தகங்களைப் படித்துவிட் டால் நீயும் நானும் ஞானிகள் ஆகிவிட முடியுமா? ஆசா பாசங்களை லவலேசமும் துறக்க முடியாத நிலையில் நாம் இருக்கிறோம். அன்று உன் கணவன் வைர வளை யல்களை விற்றதும் நீ வெகுண்டு அழுதாயாம், 'என்னுடைய பிறந்த வீட்டாரால் கொடுக்கப்பட்ட நகை ஆயிற்றே' என்றாயாம். உன்னுடையது என்கிற அகங்காரம் உன்னை விட்டு மறையாமல் இருக்கும்போது வேதாந்த புத்தகங்களைப் படித்துவிட்டால் மட்டும் மனத்திலே தெளிவு வந்து விடுமா? எல்லோரும் ஞானிகளாகவும், வேதாந்திகளாகவும் மாறிவிடுவது அவ்வளவு எளிதல்ல. கூடுமானவரையில் உலகத்தோடு ஒட்டிய வாழ்க்கையைத்தான் நாம் வாழ முடியும்..."

பவானி தன்னைப்பற்றிய விவரங்கள் யாவும் அறிந் திருக்கிறாள் என்பதை உணர்ந்ததும் ராதாவுக்கு வெட்கமும் துயரமும் ஏற்பட்டன.

ராதா மனத்துக்குள் வருந்துகிறாள் என்பது தெரிந் ததும் பவானி பேச்சை வேறு வழிகளில் மாற்றினாள்.