தொழிலும் கடமையும்

"பார்த்தா ! மூன்றுலகத்திலும் எனக்கு யாதொரு கடமையுமில்லை. பெற்றிராத பேறுமில்லை: எனினும், நான் தொழிலிலே தான் இயங்குகிறேன், ஆதலால் எப் போதும் பற்று நீங்கிச் செய்யத்தக்க தொழிலைச் செய்து கொண்டிரு. பற்றில்லாடல் தொழில் செய்து கொண் டிருக்கும் மனிதன் பரம் பொருளை எய்துகிறான்."

கீதையின் இந்த அரும்பெரும் உரை சுவாமி நாதனுக்கு மனப் பாடம். சுமார் இருபது. இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்பு ஸ்ரீதரனின் வீட்டை அடைந்த அவர் தம்முடன் பிரமாதமான மூட்டை முடிச்சுக்கள் ஒன்றும் கொண்டு வரவில்லை. பிரம்பால் ஆன பெட்டி ஒன்றில் மாற்றிக் கட்டுவதற்காக வேட்டி இரண்டும் துண்டுகள் இரண்டுமே இருந்தன. பழனி ஆண்டவன் திரு நீறு கமகமவென்று ஒரு பொட்டலத்தில் மணம் வீசிக் கொண்டு இருந்தது. சிறிய வால்மீகி ராமாயண புத்தகம் ஒன்றும், பகவத் கீதை மொழி பெயர்ப்பு ஒன்றும் இருந்தன. அப்பொழுது அவருக்கு வெள்ளெழுத்து ஆரம் டமாகி விட்டதால் வெள்ளெழுத்துக் கண்ணாடியும் வைத்திருந்தார்.

அன்று அவர் தனியாகத்தான் வந்தார். இன்றும் தனியாகத்தான் இருக்கிறார். நாளை தனியாகத்தான் போகப் போகிறார். ஸ்ரீதரன் தம் இளம் மனைவியுடன் இன்பமாக வாழ்ந்த சொற்ப காலத்தைப் பார்த்துப் பிரும்மானந்தம் கொண்டவர் அவர். கணவன் மனைவி முப்பது வருடங்கள் இருந்து வாழ்ந்து காண வேண்டிய மன ஒற்றுமையை, அன்பை அவர்களிடம் மிகக் குறுகிய காலத்தில் கண்டவர். ராதா சிறு பெண்ணாக மிகச் சிறியவளாக பாவாடை கட்டுவதிலிருந்து படுக்கை போடு வது வரை அவர் துணையால், உழைப்பால் வளர்ந்தவள். ஜெயஸ்ரீக்குப் பால் புகட்டியதே அவர் தான். அவளும் பெரியவளாக வளர்ந்து விட்டாள். தாயைப் போன்ற குணங்களும், தந்தையைப் போன்ற கல்வி அறிவும் அவளுக்கு ஏற்பட்டு வருவதை மிக மகிழ்ச்சி யுடன் பார்த்தவர் கிழவர். இந்த மனிதர் தனக்கென்று அந்த வீட்டில் ஒரு விதமான உரிமையையும் ஸ்தாபித்துக் கொண்டவர் அல்ல.

அவர் வந்து முதல் மாதம் முடிந்ததும், டாக்டர் ஸ்ரீதரன் அவரிடம் முப்பது ரூபாய்களை மாதச் சம்பளம் என்று சொல்லிக் கொடுக்கப் போனார்.

”உங்களிடம்தான் இருக்கட்டும்? தேவைப்பட்ட போது வாங்கிக் கொள்கிறேன்" என்று கூறி விட்டார் சுவாமிநாதன்.

ஏதோ ஒன்றிரண்டு தடவைகள் சில நூறு ரூபாய்கள் வாங்கி எங்கோ ஆதரவு இல்லாமல் தவிக்கும் தன் ஒன்றுவிட்ட சகோதரிக்கு அனுப்பி வைத்தார். பிறகு அவர் ஒன்றும் கேட்கவில்லை. ஸ்ரீதரன் மட்டும் சுவாமிநாதன் பேரில் பாங்கில் மாதா மாதம் பணம் கட்டி வந்தார். சில ஆயிரங்கள் அவர் பேரில் சேர்ந்திருந்தன.

சில நாட்களுக்கு முன்பு வீட்டில் நடந்த நிகழ்ச்சிகள் யாவையும் சுவாமிநாதன் ஒரு வரும் கூறாமலேயே அறிந்து கொண்டார்.

"என்ன ஐயா ஊரெல்லாம் பேசிக்கறாங்களே. நம்ப மூர்த்தி ஐயா ஏதோ தண்டாவில் மாட்டிக் கிட்டா ராமே..." என்று தோட்டக்காரன் ராமையா அவரை விசாரித்தான்.

"எனக்கு ஒன்றும் தெரியாதப்பா..." என்றார் அவர். தமது கண்களில் கசிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே.

"இந்த மாதிரி கவுரவம் வாய்ந்த மனிதருக்கு வந்து வாய்த்தானே! எங்கே பார்த்தாலும் அவனைப் பற்றித் தான் பேச்சு" என்றார் புது சமையற்காரர்.

அப்புறம் கார் டிரைவர் அவரிடம் தன் மனத்தாங்கலை வெளியிட்டார். வைத்தியசாலை - கம்பவுண்டர்' வந்து கூறி அலுத்துக் கொண்டார்.

டாக்டர் மட்டும் ஏதும் கூறவில்லை . ஆனால் அவர் உள்ளம் குமுறிக்கொண்டு இருக்கிறது என்பது சுவாமி நாதனுக்குத் தெரிந்து விட்டது.

ராதா தன் எதிரில் வரும் போதெல்லாம் சுவாமிநாதன் கோபமும், வருத்தமும் அடைந்தார். ஒரு பெண்ணால் ஒரு குடும்பத்துக்கு எவ்வளவோ நன்மைகள் விளைய வேண்டியிருக்க, அவமானம் நேர்ந்து விட்டதே என்பதுதான் அவர் வருத்தத்துக்குக் காரணம்.

அந்தக் குடும்பத்தின் நலன் ஒன்றிலேயே கருத் துடைய சுவாமி நாதனுக்கு மூர்த்தியைப் பற்றித் தெரிந்ததும், ஏதோ எக்கச்சக்கமாக நடக்கப் போகிறது என்பதை முன்பே அறிந்தவர் போல் வாய் திறவாமல் மௌனமாக இருந்தார்.

அவராகவே ஏதாவது கேட்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். . எனக்கு இனிமேல் எதுவும் புதிதாகத் தெரியவேண்டாம்' என்று சொல்வது போல் இருந்தது அவர் மௌனம்.

தோட்டக்கார ராமையா மட்டும், "என்ன ஐயா இப்படி ஆகிவிட்டது? நம்ப ஐயா குணத்துக்கும். ராதா அம்மாவின் செல்வாக்குக்கும் இப்படி ஒரு தலை குனிவு ஏற்பட வேண்டுமா!" என்று அவரிடம் கூறி அங்கலாய்த்தான்.

”ராமையா! எனக்கு அப்பவே தெரியும். கண்ணைத் திறந்து கொண்டு கிணற்றில் விழுகிற மாதிரி இந்தப் பெண் தானாகத் தேடிக் கொண்ட வினை அப்பா இது. இனிமேல் சட்டியா பானையா மாற்றிக் கொள்வதற்கு? ஆயுள் பூராவும் அவதிப்பட வேண்டியது தான் போ ..."

"ஐயா! உங்க வாயால் அப்படிச் சொல்லாதீங்க. ராதா அம்மா வளர நீங்க எவ்ளவோ கஷ்டப்பட்டீங்க. மனம் நிறைஞ்ச வார்த்தையா ஏதாவது சொல்லுங்க. பாவம்! பின்னாலாவது அந்தப் பெண் சுகமாக இருக்கட்டும்" என்றான் ராமையா. ”படித்த பெண் தவறி நடக்கமாட்டாள். அவள் சுதந்திரத்தில் தலையிடக் கூடாதென்று டாக்டர் அவளைக் கவனிக்காமல் விட்டு விட்டார் அப்பா. பவானி அம்மாவை உனக்குத் தெரியாதா? அந்தப் பெண். பாவம் எப்படியெல்லாம் இருக்க வேண்டியவள். அவளுக்கு நல்ல முறையில் வாழ யாரப்பா சொல்லிக் கொடுத்தார்கள்? இந்த வருஷம் படிப்பு முடிந்து விடுமாம். பாலுவும் படிக்கிறான். இனி மேல் அவர்களைப் பற்றிக் கவலை இல்லை."

அவர்கள் அந்த வீட்டின் உப்பைத் தின்று உடலை வளர்த்தவர்கள். ஆகவே தங்களுக்குள்ளேயே குமைந்து போய் பேசிக் கொண்டார்கள். வெளியாரிடம் ஒரு வார்த்தை கூட மூச்சு விடவில்லை. வேலைக்காரர் களில் இப்படி ஒரு ரகம் உண்டு. நடக்காத விஷயங்களைக் கயிறு திரித்துக் கூறி கதை பேசுபவர்களும் உண்டு. இதில் எஜமானர்களுக்கும், ஊழியர்களுக்கும் இருக்கும் நல்ல அபிப்பிராயமும் அடங்கி இருக்கிறது.

ஸ்ரீதரனின் குடும்பத்தில் வேலை பார்ப்பவர் ஒவ் வொருவரையும் அந்தக் குடும்பத்தினர் மாதிரியே அவர் பாவித்து வந்தார். இதனால் தான் அவர்களிடையே நல்ல அபிப்பிராயமே நிலவி வந்தது.