அவள் செய்த பாக்கியம்
பிறருடைய வாழ்க்கையில் நேரிடும் இன்னல்கள் நம்மை அவ்வளவாக வருத்துவதில்லை. அப்படிச் சிறிது கலக்கம் ஏற்பட்டாலும் அது நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிவதில்லை; ஸ்ரீதரன் தம் கண்களால் எத்தனையோ துயரங்களைப் பார்த்தவர். எவ்வளவோ அவமானங் களைப் பற்றிக் கேட்டவர். ஆனால் அவரை அவை அவ்வளவாக வருத்தவில்லை.
அன்று வைத்திய சாலையில் அவர் பெயருக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. வீட்டுக்குப் புறப்படும் போது அதை ஜேபியில் வைத்துக் கொண்டு கிளம்பினார். வீட்டிற்கு வந்ததும். தம் ஜேபியில் இருந்த கடிதத்தைப் பற்றி மறந்து விட்டார். சாப்பிட்டு விட்டு ஓய்வு பெறும் போதுதான் காலையில் ஜேபியில் வைத்த கடிதத்தைப் பற்றி நினைவு வந்து அதை எடுத்துப் படித்தார். அவர் முகபாவம். சட்டென்று மாறிக் கொண்டே வந்தது. மிகுந்த வேதனையுடன் அப்படியே சமைந்து உட்கார்ந்து விட்டார் அவர்.
விஷயம் முற்றிப் போகும் வரை அசட்டுத் தைரியத் துடன் தன்னிடம் யாவற்றையும் மறைத்து வைத்த ராதாவைக் குற்றம் சொல்வதா? இம்மாதிரி ஒரு கணவனைத் தேர்ந்தெடுத்து மணந்து கொண்டவளை பற்றி என்ன சொல்வது?
விதியின் கொடூரமான பிடிக்குள் அகப்பட்டுத் தன் சகோதரி தவிப்பதைக் கண்ட ஸ்ரீதரன். அவளிடமிருந்து உண்மையை அறிய அவளைத் தேடிச் சென்றார்.
அவள் மிகவும் இளைத்திருப்பதை அன்றுதான் ஸ்ரீதரன் கவனித்தார். கையில் கடிதத்துடன் பரபரப் படைந்து காணப்பட்ட தமையனைக் கவனித்த ராதா ஒன்றும் பேசாமல் இருக்கவே, ”ராதா! உன் புருஷன் வேலையில் இருப்பதாக என்னிடம் நீ சொன்னதெல்லாம் பொய்தானே?" என்று கேட்டார் வருத்தம் தொனிக்கும் குரலில்.
அவருக்கு உண்மை தெரிந்து விட்டது என்பதை அறிந்த அவள் ”ஆமாம் அண்ணா ! அவரைப் பற்றி சமீப காலத்து விவரங்கள் எனக்குத் தெரியாது. உங்களுக்கு ஏதாவது கடிதம் எழுதினாரா?" என்று கேட்டாள் கண்களில் கண்ணீர் பெருக.
"எனக்கு ஏன் அவன் கடிதம் போடப் போகிறான்? அவனைப்பற்றி இன்று வரையில் எனக்கு ஏதாவது தெரிந்திருந்தால் தானே? நீதான் எல்லாவற்றையும் மறைத்து விட்டாயே, அவன் சிறைக்குப் போவதைக் கூடப் பார்த்துக் கொண்டு இருந்து விட்டாய், அவ்வளவு தன் மானம் உடையவள் நீ. உடன் பிறந்தவனிடம் கூட விஷயமெல்லாவற்றையும் ஒளித்து விட்டாயே?" மூர்த்தி யால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தைச் சகிக்க முடியாமல் வெறுப்புடன் தன் சகோதரியைச் சுட்டுப் பொசுக்குவது போல் பார்த்தார் ஸ்ரீதரன்.
”அண்ணா! என்னை ஒன்றும் சொல்லாதீர்கள். தாய் தந்தையின் முகம் தெரியாமல் இருந்த பாவியை தாயும், தந்தையுமாக இருந்து வளர்த்த உங்களிடம் நான் நடந்து கொண்ட முறையை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அண்ணா! அவர் எத்தனையோ தவறுகள் செய்திருக்கிறார். அவருக்கு எத்தனையோ பெண்களிடம் நட்பு. அதற்காக பணம் தேவைப்பட்டது. என் நகைகளைக் கூட விற்று எடுத்துக் கொண்டிருக்கிறார். என் நகைப் பெட்டியை என் அனுமதி இல்லாமல் திறந்து எடுத்துப் போயிருக்கிறார். இதைத் திருட்டு என்றுகூடச் சொல்லலாம்?" ராதா ஸ்ரீதரின் கரங்களைத் தன் கண்களில் புதைத்துக் கொண்டு கோவென்று கதறினாள்.
அந்தப் பிரபல டாக்டர் தம் கடமையே கண்ணாகக் கருதுபவர். சமூகத்தில் மிக உயர்ந்தவராக எல்லோராலும் மதிக்கப் பெற்றவர். எப்பொழுதும் மனதில் உயர்வான எண்ணங்களையே வைத்திருப்பவர், யாரோ ஒருவன் புரிந்த குற்றத்திற்கு அவர் தலை குனிய வேண்டி இருந்தது. உண்மையிலேயே டாக்டர் ஸ்ரீதரன் தம் தலையைக் குனிந்து கொண்டார். நீதிபதியின் முன்பு மூர்த்தி தலை குனிந்தானோ இல்லையோ. ஸ்ரீதரன் இப்போது தம் வீட்டில் தலை குனிந்து உட்கார்ந்து சிந்தனையில் மூழ்கி இருந்தார்.
ஆத்திரம் அடங்கியவுடன் ஸ்ரீதரன், 'இனிமேல் நான் என்ன அம்மா செய்ய முடியும்? விசாரணைக்கு முன்பாவது ஏதாவது செய்திருக்கலாம். விசாரணை யெல்லாம் முடிந்து விட்டதாம். குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டானாம் உன் புருஷன். தண்டனையும் சற்றுக் கடுமையாகத்தான் இயக்கும் என்று அவன் மாமா கல்யாணராமன் தகவல் விசாரித்து எனக்கு எழுதியிருக்கிறார். ' விஷயத்தை இவ்வளவு தூரத்துக்குக் கொண்டு வந்து விட்டீர்களே! உங்கள் செல்வாக்கைப் பயன் படுத்தி இருக்கலாமே. ஒரு வேளை உங்களுக்கே தெரியாதோ?' என்று கேட்டிருக்கிறார். என் செல்வாக்கை நான் உபயோகிப்பதா? பணக்காரர்கள் எல்லாம் செல்வாக்கை உபயோகித்துக் கொண்டே இருந்தால், நீதியின் முனை மழுங்க வேண்டியது தான். அவன் தலை யெழுத்து! நீ செய்த பாக்கியம் இப்படி இருக்கிறது!" என்றார்.
ராதா சிலை மாதிரி நின்றிருந்தாள். அவள் எதுவுமே பேசவில்லை. பேச்சுக்கும் செயலுக்கும் அப்பாற்பட்ட நிலையில் அவள் இருந்தாள்.

