குற்றச்சாட்டு
கதையின் முதல் பாகத்தில் முக்கிய இடம் பெற்ற பசுமலை கிராமத்தைப் பற்றி நாம் நினைவுபடுத்திக் கொள்வோம். மப்பும் மந்தாரமும் நிறைந்த மத்தியான வேளை: கல்யாணராமனும், பார்வதியும் முன்னைவிட வயது சென்றவர்களாக இருந்தார்கள். இருவரிடமும் எந்தவிதமான மாறுதல்களும் ஏற்படவில்லை. அன்று அவர்கள் வீட்டில் ஏதோ விசேஷம் நடந்தது. சாப்பாட் டுக்குப் பிறகு வெற்றிலைத் தட்டை எடுத்து வந்து கூடத்தில் உட்கார்ந்திருந்த தன் கணவரின் அருகில் வைத்து விட்டு உட்கார்ந்தாள் பார்வதி. கணவரிடம் வெற்றிலையை மடித்துக் கொடுத்துக்கொண்டே “எனக்கு என்னவோ இந்த மாதிரி தனியாக இருப்பது பிடிக்கவில்லை. எங்காவது நாலு ஊர்களுக்குப் போய் வரலாமே?" என்று கேட்டாள்.
கல்யாணம் மெதுவாகச் சிரித்தார்.
"ஊர் ஊராகப் போகிற வயசா நமக்கு? தலையைக் காலை வலித்தால், முன் பின் தெரியாத ஊர்களில் உன்னையும் என்னையும் யார் கவனிப்பார்கள்?"
"போகிற இடத்தில் நமக்கு வியாதி வரவேண்டுமா என்ன? முதலில் பட்டணம் போகலாம். அங்கே நம் மூர்த்தியையும், அவன் மனைவியையும் பார்த்துவிட்டு அப்புறம் எங்காவது போகலாம்.
கல்யாணம், பார்வதியை உற்றுப் பார்த்தார்.
”ஏன்? மூர்த்தியும் ராதாவும் தான் உனக்கு உயர்வாகப் போய்விட்டார்களா? பவானியையும் பாலுவை யும் மறந்து விட்டாயாக்கும்?" என்றார்.
”அவளை நான் மறந்தா போனேன்? வாரம் தவறினாலும் பவானி எனக்குக் கடிதம் போடத் தவறுவதில்லையே! பாலு பெரியவனாக வளர்ந்து விட்டானாம். பசுமலைக்கு வரவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறானாம்...."
"அதெல்லாம் சரி. மூர்த்தியைப் பற்றி ஏழெட்டு மாசங்களாக ஒரு தகவலும் தெரியவில்லையே! அவன் ஊரில் இல்லை என்றும் அவன் மனைவி மாத்திரம் அங்கே இருப்பதாகவும் யாரோ சொன்னார்கள். சேஷாத்திரியின் பிள்ளை ராமு வந்திருக்கிறானே கல்கத்தாவிலிருந்து. அவனைக் கேட்டால் விவரம் ஏதாவது தெரியும்."
பார்வதி வெற்றிலைத் தட்டை நகர்த்தி வைத்து விட்டு எழுந்தாள்.
”எனக்கு வேலைகள் முடிந்துவிட்டன. நானே போய்த் தகவல் கேட்டு வருகிறேன்" என்று சொல்லியவாறு சேஷாத்திரியின் வீட்டுக்குப் போனாள் பார்வதி.
அவள் அங்கிருந்து திரும்ப அரைமணி நேரமே பிடித்தது. இவ்வளவு சடுதியில் திரும்பிவிட்ட தன் மனைவியைப் பார்த்த கல்யாணம் திகைப்பு மேலிட "என்ன அவசரமாக வந்து விட்டாய்? வீட்டில் ராமு இல்லையா?" என்று கேட்டார்.
”இருந்தான். இல்லாமல் என்ன?"
“ஏதாவது சொன்னானா? கேட்டாயா?"
”சொன்னான். உங்கள் தங்கைக்கு இந்த மாதிரி ஒரு பிள்ளை பிறந்திருக்க வேண்டாம். அவள் புண்ணிய சாலி. இதையெல்லாம் கேட்டும் பார்த்தும் கஷ்டப் படாமல் கண்ணை மூடிவிட்டாள்."
கல்யாணம் பதட்டமே அடையவில்லை. பொறுமையுடன் உட்கார்ந்திருந்தார்.
”மூர்த்திக்கு வேலை போய்விட்டதாம். அதோடு இல்லை. சொல்லவே மானக் கேடாக இருக்கிறது . ஆபீஸ் பணத்தைக் கையாண்டு விட்டதாக அவனைப் போலீசில் பிடித்து அடைத்து வைத்தார்களாம்."
பார்வதி வளர்த்த பாசத்தினால் மளமளவென்று கண்ணீர் பெருக்கினாள்.
"ஹும்.......... ஈசுவரா!" என்று பெருமூச்சு விட்டார் கல்யாணராமன்.
”சம்பந்தி வீட்டார் இதை நமக்குத் தெரிவிக்க வில்லை பார்த்தீர்களா? எனக்கு அப்பொழுதே தெரியும். ரொம்பப் பெரிய இடத்தில் கல்யாணம் செய்திருக்கிறான். இவனை அவர்கள் மதிக்கமாட்டார்கள் என் பது எனக்குத் தெரியும்." பெண்களின் சுபாவப்படி பார்வதி சம்பந்தி வீட்டார் மீது குற்றம் சாட்டிப் பேச ஆரம்பித்தாள்.
”கொஞ்சம் பேசாமல் இரு. தனக்கு இருக்கும் கஷ்ட சுகங்களைப் பிறரிடம் சொல்லி அதை நீக்கிக் கொள்ள அவன் முனைந்திருக்க மாட்டான். டாக்டருக்கே இதைப்பற்றித் தெரிந்திருக்காது. தெரிந்திருந் தால் கூடப் பிறந்தவளுக்காகவாவது அவர் ஏதாவது செய்திருக்க மாட்டாரா? விட்டுக் கொடுப்பாரா?"
"ஆமாம் தாயும் தகப்பனும் இருக்கிற மாதிரி வருமா இதெல்லாம்?" என்று சலித்தவாறு பேசினாள் பார்வதி. அவளுடன் பேச்சுக் கொடுப்பதில் பலனில்லை என்று தெரிந்த கல்யாணம் தாமே விவரங்களை அறிந்து வர ராமுவைத் தேடிப் போனார்.
ராமு கூறியவற்றைக் கேட்ட பிறகு வீட்டுக்குத் திரும்பியதும் அவர் அன்றே தபாலில் ஸ்ரீதரனுக்கு இதைப்பற்றி விசாரித்துக் கடிதம் எழுதினார்.

