முக்கியமான விஷயம்

டாக்டர் ஸ்ரீதரன் காமாட்சியின் வீட்டுக்குத் தன் மகளுடன் சென்று வந்த பிறகு, வக்கீல் வேதாந்தத்தின் மனம் அமைதியாக இல்லை. ஸ்ரீதரனின் மிடுக்கான தோற்றம், அன்பு நிறைந்த பேச்சு, திறமையாவும் அவர் மனத்தைக் கவர்ந்தன. இவ்வளவு நற்குணங்கள் பொருந்திய ஆண்பிள்ளை, மறுமணம் செய்து கொள்ளாமல் இருப்பது அவருக்கு விந்தையாக இருந்தது. தொழில் முலாயில் பல வருஷங்களாக தம்முடைய மகளும், ஸ்ரீதரனும் பாதி வருவதை அவர் அறிவார். ஆகவே அவர் மனதில் ஒரு விசித்திர எண்ணம் வேர் விட்டு ஊன்றி முளைக்கத் தோண்றியது. எப்படியாவது ஸ்ரீதரனை தனிமையில் சந்தித்து, தாது மகளை மறுமணம் செய்து கொள்ளும்படி கேட்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார். தம்முடைய தீர்மானம் சரியா, தவறா. அதன்படி காமாட்சியும், ஸ்ரீதரனும் நடந்து கொள்வார்களா என்பதையெல்லாம் அவர்

யோசித்துப் பார்க்கவில்லை.

ஒரு தினம் பிற்பகல் சுமார் ஒரு மணிக்கு வேதாந்தம் ஸ்ரீதரனின் வீட்டுக்குப் போனார். பகல் சாப்பாட்டை முடித்துக்கொண்டு ஸ்ரீதரன் முன் கூடத்தில் சாய்வு நாற்காலியில் சாய்ந்து ஏதோ ஒரு வைத்தியப் புஸ்தகத்தைப் படித்துக் கொணடிருந்தார். புதிதாக வந்த சமையற்காரர் பகல் பொழுதை கழிப்பதற்காக வெளியே போய் விட்டார். சுவாமிநாதனுக்கு வீட்டில் வேலை ஒன்றும் கிடையாது. அதிகமாக நடமாட்டம் வைத்துக் கொள்ளக் கூடாது என்பது டாக்டரின் உத்தரவு. பொழுது தேய்கிறதோ அல்லது வளர்கிறதோ அவர் மட்டும் அந்த இரண்டாங்கட்டு பெஞ்சியில் படுத்துக் கிடக்க வேண்டும். எதிரே திறந்தவெளி. அங்கே வாழைப் புதர்கள் மண்டிக் கிடந்தன. சற்றுத் தள்ளி ஒரு பெரிய வேப்பமரம் குளிர்ந்த காற்றை வீசிக் கொண்டு நின்றது. தோட்டக்கார ராமையா, மண்வெட்டியால் பாத்திகள் வெட்டும் ஓசை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

மாடியில் ராதா தன் அறைக்குள் அரைத் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். அவள் மனத்துள் பிருமாண்ட மான கல்கத்தா நகரம் தோன்றியது. அதன் தெருக்களில் மூர்த்தி அலைவது தெரிந்தது. அவன் பக்கத்தில் ஒரு வங்காளிப் பெண் விசுக் விசுக் கென்று நடை போட்டுக் கொண்டு வந்தாள். மூக்கும் விழியுமாக கொடியைப் போலத் துவண்டு அவள் நடந்து வருவது தனி அழகாக இருந்தது. ராதாவின் உள்ளும் புறமும் அனலாகத் தகித்தது . மறுபடியும் ஒரு காட்சி! கல்கத்தாவின் இரவு ’விடுதி' களில் மூர்த்தி மயங்கிக் கிடக்கும் காட்சி அது. ராதா தனக்குள் பேசிக் கொண்டான். பஞ்சமா பாதகங்களில் இரண்டைத் தன் கணவன் செய்து விட்டதாக அவள் மனம் புலம்ப ஆரம் பிக்கிறது. எப்படியும் அவனைக் கண்டு பிடித்து நல்வழிப் படுத்த வேண்டும் என்று மனம் துடிக்கிறது. அதற்கு வேண்டிய ஆற்றலும், துணிவும் தன்னிடம் இருக்கின்ற னவா என்று ராதா யோசிக்கிறாள். தூக்கத்தில்கூட ராதாவின் கண் இமை ஓரங்களிலிருந்து கண்ணீர் கசிகிறது.

ஸ்ரீதரன் கையிலிருந்த புஸ்தகத்தை மார்பின் மீது வைத்துக் கொண்டு அப்படியே அரைத் தூக்கத்தில் ஆழ்ந்து கிடந்தார். வேதாந்தம், காரை விட்டு இறங்கி உள்ளே சென்று டாக்டரின் எதிரில் கிடந்த நாற்காலியில் அமர்ந்தார். சட்டென்று விழித்துக் கொண்ட ஸ்ரீதரன். வேதாந்தத்தை வரவேற்று விட்டு, ”என்ன ஸார்! இப்படி நடு மத்தியான வேளையில் வந்திருக்கிறீர்கள்? வெயில் நேரத்தில் நீங்கள் வீட்டை விட்டு வெளியே வர மாட்டீர்களே?" என்று கேட்டார்.

வேதாந்தம் அசட்டுச் சிரிப்பு சிரித்தார். அவர் ஒன்றும் கூறாமல் இருக்கவே மறுபடியும் ஸ்ரீதரன் “என்ன ஸார்! பேசமாட்டேன் என்கிறீர்கள்? வந்த விஷயம் என்ன? சொல்லுங்கள்" என்று வற்புறுத்தினார்.

வேதாந்தம் தம் வழுக்கைத் தலையைத் தடவிக் கொண்டார். ”ஒன்றுமில்லை டாக்டர்... மிகவும் முக்கியமான விஷயமாக உங்களைப் பார்த்துப் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டு வந்தேன்....” என்று இழுத்தார். ஸ்ரீதரன் தம் இருக்கையில் எழுந்து உட்கார்ந்தார். ”சரி சொல்லுங்கள். இங்கே என்னையும், உங்களையும் தவிர வேறு யாரும் இல்லை" என்று கூறினார். வேதாந்தம் வீட்டை விட்டுக் கிளம்பும்போது

ஏதோ ஓர் அசட்டுத் தைரியத்துடன் கிளம்பினார். தனக்குப் பிறகு காமாட்சியின் தனி வாழ்க்கை. எப்படி யெல்லாமோ வாழ வேண்டிய பெண் மணமிழந்து தனி மரமாக நிற்கும் அவலக்கோலம் யாவும் அவர் மனத்தை நெகிழச் செய்து அவரை ஓர் அவசர முடிவுக்கு அழைத்துச் சென்றது. ஸ்ரீதரனின் வீட்டினுள் நுழைந்தவுடன் அவருக்குத் தாம் தீர்மானித்துக் கொண்டு வந்த விஷயத்திலேயே சந்தேகம் ஏற்பட்டது. ”காமாட்சிக்குக் கிட்டத்தட்ட முப்பது வயது ஆகிறதே அவள் என்ன சின்னக் குழந்தையா, அவளைக் கேட்காமல் நாம் எந்த விஷயத்திலும் இறங்க முடியுமா?" என்கிற சந்தேகம் தான் அது.

’ஸ்ரீதரன் மட்டும் என்ன? வயசில் சிறியவரா? நாற்பது வயசுக்கு மேல், அதுவும் மனைவி இறந்து பல வருஷங்கள் கழித்து அவருக்கு மறு மணத்தில் ஆவல் ஏற்படப் போகிறதா? அந்த ஆவல் பால்யத்திலேயே - எழுந்திருக்க வேண்டியதல்லவா?'

’சரி வந்தது வந்தாகி விட்டது. ஏதாவது பொய்யைச் சொல்லி விட்டுப் போய் விடுவோம். இதற்குத் தான் அதிகமாக வயசானவர்களை பாவம்! வயசாகி விட்டது . இனிமேல் அவர் சற்று முன்னே பின்னே தான் இருப்பார் என்று சொல்கிறார்கள் போல் இருக்கிறது' என்று பலவாறு எண்ணமிட்டுக் கொண்டே வேதாந்தம் உட்கார்ந்திருந்தார். ஆனால், ஸ்ரீதரன் விழித்துக்கொண்டு, "என்ன! எங்கே வந்தீர்கள்?" என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தவுடன் வேதாந்தம் தாம் சொல்ல வந்ததை மறைக்க முடியாமல் சிறிது நேரம் திண்டாடிப் போனார்.

எடுத்ததற்கெல்லாம் பொய் சொல்லிப் பழக்க மடையாதவர்கள் யாவருக்குமே இந்தத் திண்டாட்டம் ஏற்படுவதுண்டு. விஷயத்தை மறைக்கப் போய் எக்கச் சக்கமாக அகப்பட்டுக் கொள்வார்கள். வேதாந்தத்துக்கு. பொய் சொல்லிப் பழக்கமே இல்லை. கட்சிக்காரர்களுக்காக நீதி ஸ்தலத்தில் வாதாடும் போது கூட கூடுமான வரையில் நியாயத்தையும் உண்மையையும் பின் பற்றியே சென்றவர் - அப்படிப்பட்டவர் அற்ப சொற்பத்துக்காக எதற்குப் பொய் சொல்லப் போகிறார்? அவர் மனசிலே ஓர் எண்ணம் எழுந்து விட்டது. அது சரியா தவறா என் றெல்லாம் அவர் சிந்தித்துப் பார்க்கவில்லை. இப்பொழுது அதை மறைத்துப் பேசுவானேன் என்ற தீர்மானத்துடன் வேதாந்தம் தம் அச்சங்களை உதறிவிட்டு விஷயத்தைக் கூறினார் ஸ்ரீதரனிடம்.

”எல்லாவற்றிற்கும் மேலாகக் குழந்தையின் அபிப்பிராயமும் உங்கள் அபிப்பிராயமும் எப்படி இருக்கிறதோ? காமாட்சி என் மகள் தான் இருந்தாலும் ஒரு பெண்ணின் மனத்தை அறிவது மிகவும் கஷ்டமான விஷயம். தகப்பனாக இருந்தாலும், உடன் பிறப்பாக இருந்தாலும் ஒரு பெண்ணின் மனசை லேசில் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஒரு வேளை அவள் தாய்? உயிருடன் இருந்தால் அவளைப் புரிந்து கொண்டிருக்கலாம்" என்றார்.

ஸ்ரீதரன் சிறிது நேரம் ஒன்றுமே பேசவில்லை. அவருடைய மௌனம் வேதாந்தத்துக்கு அச்சத்தைக் கொடுத்தது. ’சொல்லத் தகாததைச் சொல்லிக் கேட்கத் தகாததைக் கேட்டு விட்டோமோ என்னவோ' என்று பயந்தார். பிறகு ஏதாவது ஒன்றைப் பேசித்தான் ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தின் பேரில், "டாக்டர்! நான் கூறியதில் தவறு இருக்கலாம். எனக்குப் பிறகு காமாட்சியின் தனிமையைப் பற்றி நினைத்துத் தான் நான் இந்த முடிவுக்கு வந்தேன். அவள் தனியாக இந்த உலகத்தில் தன் வாழ்க்கையை எப்படி நடத்துவாள் என்கிற வேதனை தாங்காமல் உங்களை வந்து இப்படிக் கேட்கிறேன். அந்த வேதனை என்னை அல்லும் பகலும் நிம்மதியை இழக்கச் செய்து அவதிக்கு ஆளாக்கி விட்டிருக்கிறது. அதிலிருந்து மீண்டு. சாகும் நாடகளிலாவது நிம்மதியுடன் போக வேண்டும் என்ற ஆவலினால் உங்களைத் தேடி வந்தேன்" என்றார் வேதாந்தம் படபடக்கும் குரலில்.

வயோதிகத்தினால் ஆட்டம் கண்டிருந்த அவர் உடல் மேலும் நடுங்கியது. நிலை கொள்ளாமல் தவித்தார்.

ஸ்ரீதரன் புன்முறுவலுடன் வேதாந்தத்தின் கரங்களைப் பற்றிக் கொண்டார். பிறகு நிதானமாக, ”பதட்டமடையாதீர்கள். நீங்கள் கூறியதில் எதுவுமே தவறில்லை. காமாட்சி தனியாக இந்த உலகத்தில் இருக்கிறாள் என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். படித்துப் பட்டம் பெற்று அறிவும் திறமையும் ஒருங்கே அமைந்தவள் உங்கள் மகள். அவளுடைய தொழில் ஒன்றே அவளுக்குத் துணையாக இருக்கிறது. அப்படி அவள் ஒன்றும் சிறு பிராயத்தவள் இல்லை. காமாட்சிக்கு வயது முப்பது இருக்காதா?" என்று கேட் டார்.

”ஆமாம்" என்கிற பாவனையில் தலையை அசைத்தார் வேதாந்தம்.

"தன்னுடைய மறுமணத்தைப் பற்றி அவள் ஏற்கெனவே ஒரு முடிவுக்கு வந்திருப்பாளே, இவ்வளவு நாட்கள் அதில் விருப்பம் செலுத்தாமல் இருக்கும் போதே அவளுடைய மனம் உங்களுக்கு விளங்கி இருக்க வேண்டுமே...."

வேதாந்தத்துக்கு அவர் மகளின் குணச்சிறப்புகளைப் பற்றி பிறத்தியார் கூற வேண்டி இருந்தது. வரும்போது அவருடன் கூட இருந்த அதைரியம், அவநம்பிக்கை . பலஹீனம் யாவும் பறந்து போய்விட்டன. ஒருவிதமான அசட்டுச் சிரிப்புடன் அவர் ஸ்ரீதரனிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு காரில் போய் உட்கார்ந்தார்.