அவசர முடிவு

சுவாமிநாதனின் உடல் நிலையில் மாறுதல் எதுவும் அதிகமாக ஏற்பட வில்லை. நாடி நடந்தால் ஆயாசமும் கிறுகிறுப்பும் அவருக்கு ஏற்பட்டது. வீட்டில் சமையலைக் கவனித்துக் கொள்ள வேறொருவர் வந்திருந்தார்.

மனைவியிடம் கோபித்துக் கொண்டு போன மூர்த்தியிடமிருந்து மூன்று நான்கு மாதங்கள் வரையில் தகவலே தெரியாமல் இருந்தது. முதலில் சில நாட்கள் வரையில் ராதா அதிகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. "அவர் தான் முதலில் கடிதம் எழுதட்டுமே. தவறு அவர் பேரில்தானே இருக்கிறது?' என்று வீராப்புடன் மௌனம் சாதித்து வந்தாள். பால்யத்திலிருந்து கூடப் பிறந்த தமையனிடம் கூட மனம் விட்டுப் பழகாமல் போகவே தன் மனசில் இருக்கும் குறைகளை யாரிடம் வெளி யிடுவது என்பது புரியாமல் அவள் திகைத்து. தன் துயரத்தைத் தானே விழுங்கிக் கொள்ள நேர்ந்தது.

அவள் வேளா வேளைக்குச் சாப்பிடாமல் எதிலும் பற்றில்லாமல் இருப்பதை சுவாமிநாதன் தான் கவனித்தார். வாழைக் குருத்துப் போல் மழமழவென்று வாளிப் பாக வளர்ந்திருந்த அந்தப் பெண் நிறம் மாறி இளைத்துப் போய் இருப்பது அவர் மனத்தைப் பிழிந் தெடுத்தது. ராதா குழந்தையாக வளர்ந்து பெரியவள் ஆனது. வீட்டில் சர்வ சுதந்திரத்துடன் அவள் இருந்தது ஸ்ரீதரன் தன் சகோதரியிடம் வைத்திருக்கும் அலாதி அன்பு. இவை யாவும் அவர் சிந்தனையைத் தூண்டி விட்டன.

கூடத்தில் ஒரு பெஞ்சியில் படுத்துக்கொண்டே சுவாமி நாதன் சிந்தனையில் மூழ்கி இருந்தார். மாடியில் ராதாவும் யோசனையில் மூழ்கி, தன்னைச் சுற்றி நடப்பவை எல்லாவற்றையுமே மறந்திருந்தாள்.

கல்யாணம் ஆவதற்கு முன்பு அந்த வீட்டில் அவளுக்கு இருந்த சுதந்திரம், உரிமை யாவும் இப்பொழுது பறிபோய் விட்ட மாதிரி ஒருவித உணர்ச்சி அவளைப் பிடித்து வாட்டியது. அந்த வீட்டிலே வெட்டியாக உட்கார்ந்து தண்டச் சாப்பாடு சாப்பிடு-வதாகவே ராதா நினனத்தாள். மற்றப் பெண்களைப் போல அவள் மனதிலும் பல ஆசைகள் தளிர் விட்டன. கணவன் சம்பாதித்து வருவதை வைத்துக் கொண்டு அழகாக செட்டாக, இன்பமாகக் குடித்தனம் நடத்த வேண்டும். வேளா வேளைக்குச் சமைத்துக் கணவனுக்குப் போட்டு அவனைக் காரியாலயம் அனுப்ப வாசலில் வந்து வழி அனுப்பி, மாலையில் அவன் வீடு திரும்புவதை வழிமேல் விழி வைத்துக் காத்திருக்க வேண்டும் என்று விரும்பினாள் ராதா.

கணவனுடன் கடற்கரை செல்ல வேண்டும்; நாடகம் பார்க்க வேண்டும்; கோவிலுக்குப் போக வேண்டும்; எல்லாவற்றிற்கும் மேலாக 'காதல் இருவர் கருத்தொருமித்து' இல்லறம் நடத்த வேண்டும் என்கிற ஆவள் அவல் மனதை சூழ்ந்து கொண்டு வாட்டியது.

தனக்கும் மூர்த்திக்கும் இடையில் பல மைல்கள் தூரம் இருப்பதையும் மறந்து ராதா சிந்தனையின் வசப்பட்டவளாகச் சட்டென்று பீரோவைத் திறந்து தன் துணிமணிகளை எடுத்துப் பெட்டியில் வைத்தாள். இனிமேல் அந்த வீட்டில் இருக்க விருப்பமில்லாதவள் போல் அவளுடைய முக்கியமான வஸ்துக்கள் யாவையும் பெட்டியில் வைத்துப் பூட்டினாள். அந்த வினாடி அவள் மனத்தில் அந்த வீட்டுக்கும். அவளுக்கும் சம்பந்த மில்லாத ஓர் உணர்ச்சி தோன்றியது. உடனே எப்படி யாவது மூர்த்தியின் இருப்பிடத்துக்குச் சென்று விட வேண்டும் என்கிற ஆசை அவள் மனதில் எழுந்தது.

கடைசியாகப் பணப் பையில் ரூபாயை எடுத்து அவள் வைத்துக் கொண்டிருக்கும் போது அறையின் வாசற்படியில் சுவாமிநாதன் தள்ளாடிக் கொண்டே வந்து நின்றார்.

"என்னம்மா ! எங்கே கிளம்புகிறாய். பெட்டி எல்லாம் எடுத்துத் தயாராக வைத்திருக்கிறாயே? உன் புருஷனிடமிருந்து ஏதாவது கடிதம் வந்ததா?" என்று விசாரித்தார்.

ராதா சிறிது நேரம் சிலை மாதிரி நின்றாள். கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது. நெஞ்சிலே துயரச் சுமை பாரமாக அழுத்தியது. விவரிக்க முடியாத ஒரு கலக்கம் அவள் உள்ளத்தைச் சூழ்ந்து கொண்டிருந்தது.

சுவாமிநாதன் தள்ளாடிக் கொண்டே உள்ளே வந்தார்.

"ராதா! உன்னைப் பார்த்தால் என் வயிற்றைச் சங்கடம் செய்கிறது. எவ்வளவோ விஷயங்களை நீ என்னிடமிருந்து மறைத்து வைத்திருக்கிறாய். துயரங்களை மனசில் வைத்துப் பூட்டி வைத்தால் மட்டும் அவை வெளியே தெரியாமல் போய் விடுமா? உன் மனம் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறது என்பதை உன் முகமே காட்டி விடுகிறதே! வயசிலும் அனுபவத்திலும் பெரியவனாகிய என்னை நீ ஏமாற்றிக் கொண்டே இருக்கிறாய்...."

மேல் மூச்சு வாங்க சுவாமிநாதன் பேசி முடிப்பதற்குள் ராதா தேம்பித் தேம்பி அழுதாள். பிறகு ஒருவாறு சமாளித்துக் கொண்டு, ”அவரிடமிருந்து கடிதமே வரவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்பதும் தெரியவில்லை " என்றாள்.

கணவனின் நன்மையில் அவன் செய்யும் ஒவ்வொரு தொழிலிலும் காண்பிக்க வேண்டிய அக்கறையில் ராதா தவறி விட்டாள் என்பது சுவாமிநாதனுக்கு விளங்கியது. 'இந்தப் பெண் எதற்காக அவசரப்பட்டு விவாகம் செய்து கொண்டாள்?' என்னும் அளவுக்கு அவர் மனம் வருந்தியது.தன் துயரை எல்லாம் அவள் கண்ணீராக வடிக்கும் வரையில் சுவாமிநாதன் ஒன்றும் பேசவில்லை. ராதா ஒருவழியாகக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சமாதானம் அடைந்தவுடன், "ஏனம்மா! மூர்த்தியின் விலாசம் தெரியாமல் நீ எங்கே கிளம்புவதாக இருந் தாய்?" என்று கேட்டார்.

ராதா தன் எதிரில் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த பெட்டியைப் பார்த்தாள். அவள் எங்கே போகிறாள்? அப்படித்தான் மூர்த்தியின் காரியாலயம் மூலமாக அவள் இருப்பிடத்தை அறிந்து கொண்டாலும், ”நீ ஏன் வந்தாய்? உன்னை யார் வரச் சொன்னது?" என்று அவன் கேட்டால், மறுபடியும் ராதா இந்த இடத்துக்குத் தானே வர வேண்டும்? ஒன்றையும் யோசியாமல் அவசரத்தில் செய்த முடிவைப் போல அவள் பெட்டியில் துணிமணிகளை எடுத்து வைத்துக் கொண்டது அவளுக்கே வியப்பை அளித்தது.

அவள் ஒன்றும் கூறாமல் இருக்கவே, சுவாமிநாதனுக்கு அவளுடைய மன நிலை புரிந்தது. பிறந்த வீட்டிலும் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை யில் தான் சுதந்திரம் உண்டு. அங்கே எவ்வளவு இன்ப மாகவும், சுதந்திரமாகவும், அவர்களுடைய பொழுது கழிந்தாலும், அதை அவர்கள் விரும்புவதில்லை. கணவனின் ஆதரவில், அவன் அன்பில் தங்ளை அர்ப்பணிக்கவே பெண்களின் உள்ளங்கள் ஆசைப்படுகின்றன என்பதை உணர்ந்து கொண்டார்.

ராதா பெட்டியைத் திறந்து மறுபடியும் ஒவ்வொரு துணியாக எடுத்துப் பீரோவுக்குள் வைத்தாள். படிப்படியாக அவள் மனம் நிதானமடைய ஆரம்பித்தது. கீழே டாக்டர் ஸ்ரீதரன், வெளியே போயிருந்தவர் வீடு திரும்பி விட்டார் என்பதற்கு அடையாளமாக அவருடைய காரின் ஒலி கேட்டது.