பொம்மைக் குதிரை
மனிதனை விருத்தாப்பியம் அணுகும்போது அவன் பால்யத்தில் எப்படியெல்லாம் இருந்தான் என்பதைச் சிந்தித்துப் பார்த்துக் கொள்கிறான். சிறு பிராயத்தில் அவன் விளையாடிய விளையாட்டுக்கள். பிறகு அவன் கல்வி பயின்று, மணம் புரிந்து கொண்டு இல்லறம் நடத்தியது, மக்களைப் பெற்று வளர்த்தது. யாவும் ஒன்றன் பின் ஒன்றாக அவன் நினைவுக்கு வருகின்றன. தன் மனசில் இருப்பதை யாரிடமாவது கூறி ஆறுதல் பெற விரும்புகிறான்.
வக்கீல் வேதாந்தம் எழுபது வயசை எட்டிப் பிடித்துக் கொண்டிருந்தார். அதிகமாக வெளியே போவதில்லை. சட்டப் புஸ்தகங்களும் அந்தத் தொழிலும் அவருக்கு அலுத்துப் போய் நாலைந்து வருஷங்கள் ஆயின. எதிலும் ஒரு சலிப்பு. உலகத்தில் வாழ்ந்தும், அந்த வாழ்க்கையில் தாம் செய்ய வேண்டிய முக்கியமான கடமை ஒன்றைத் தவற விட்டு விட்ட மனப்பான்மை யாவும் அவரிடம் காணப்பட்டன.
டாக்டர் காமாட்சி உற்சாகமாகத்தான் இருந்தாள். தொழில் முறையில் அவள் பெயர் மிகவும் பிரபலமாக இருந்தது. ஏற்கெனவே தகப்பனாரின் சொத்து ஏகப் பட்டது இருந்தது. அத்துடன் அவளுக்கே வருமானம் அதிகமாக வர ஆரம்பித்தது. ஏழைகளுக்கு இலவசமாக னைத்தியம் செய்தாள்.
அந்தச் சேவையிலேயே அவள் மனம் இன்பத்தையும். அமைதியையும் அடைந்திருந்தது. ஆனால் ஒன்றே ஒன்று அவள் மனத்தை வருத்திக் கொண்டிருந்தது . தள்ளாத கிழவரான தன் தகப்பனார் இப்படி ஒண்டிக் கட்டையாக அவ்வளவு பெரிய வீட்டில் உட்கார்ந்து பொழுதைக் கழிக்கும்படி ஆகிவிட்டதே என்கிற வருத்தம் அவளுக்கு ஏற்பட்டது. அந்த வயசிலே பேரன்களும். பேத்திகளும் . அந்த வீட்டில் விளையாடி, அவர்களுடன் இன்பமாகப் பொழுகைக் கழிக்க வேண்டியவர். இப்படி நடமாடும் பொம்மையாக அவர் வாழ்க்கை அமைந்து விட்டதே என்று அவள் வருந்துவாள். தனக்கு ஒழிவு ஏற்படும் (போதெல்லாம் தகப்பனாரின் அருகிலேயே இருந்து வேடிக்கையாகப் பேசி அவருக்கு ஆனந்த மூட்டுவாள்.
ஒரு தினம் காமாட்சி வெளியிலிருந்து வரும்போது ஒரு குதிரைப் பொம்மையை வாங்கி வந்தாள். காரை விட்டு மகள் இநங்குவதை வேதாந்தம் தாழ்வாரத்தில் நின்று கவனித்தார். ஒரு கையில் குதிரைப் பொம்மையை எடுத்து வந்து கூடத்தில் வைத்து, ”அப்பா! இங்கே பாருங்கள்? இது எப்படியெல்லாம் ஆடுகிறது?" என்று அவரை அழைத்துக் காண்பித்தாள்.
வேதாந்தம் அவளையும் குதிரையையும் மாறி மாறிப் பார்த்தார். அவர் மனத்தை வேதனை பிழிந்தெடுத்தது. இப்படியெல்லாம் நாலு குழந்தைகளைப் பெற்றெடுத்து விளையாட்டுச் சாமான்கள் வாங்கிக் கொடுத்து மகிழ வேண்டிய பெண் அல்லவா இவள்? பாவி! அவள் வாழ்க்கையை நான் எப்படிப் பாழாக்கி விட்டேன்!' என்று இடிந்து போய் கூடத்தில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார் அவர்.
”ஏனப்பா பேச மாட்டேன் என்கிறீர்கள்?" என்று ஒரு குழந்தையைப் போலக் கேட்டாள் காமாட்சி குதிரையை இப்படியும் அப்படியும் ஆட்டிக்கொண்டே.
”யாருக்காக அம்மா இதை வாங்கி இருக்கிறாய்?"
”நமக்குத் தான் இருக்கட்டுமே! நாலு நாளைக்கு வைத்துக்கொண்டிருப்பது. அப்புறம் எங்கள் ஆஸ்பத்திரியில் குழந்தைகள் விடுதிக்குக் கொடுத்து விடுகிறேன்..."
தகப்பனாரை இப்படி யெல்லாம் மகிழ்விக்க வேண்டும் என்று மகள் ஆசைப்பட்டாள். பெண்ணின் மனசிலே இப்படியெல்லாம் ஆசைகள் எழுகின்றனவே அந்த ஆசைகளை அவள் எப்படி நிறைவேற்றிக்கொள்ள முடியும்?' என்று தகப்பனார் மனத்துக்குள் குமைந்தார்.
அந்தக் குதிரை கூடத்திலேயே ஐந்தாறு நாள் கிடந்தது. ஒரு தினம் காமாட்சி அதை எடுத்துத் தன் கார் டிரைவரின் குழந்தையிடம் கொடுத்து விட்டாள்.
"என்னம்மா இது? பொம்மையை வாங்கி வந்தாய்? ஏன் திரும்பக் கொடுத்து விட்டாய்" என்று கேட்டார் வேதாந்தம்.
”எந்தெந்தப் பொருள் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருந்தால் தான் அதன் தரம் உயரும் அப்பா. நான் என்ன விளையாட்டுக் குழந்தையா?"
"எனக்கென்ன குழந்தைகள் இருந்து பாழாய்ப் போகிறது!' என்கிற வருத்தம் அவள் குரலில் தொனித்த மாதிரி இருந்தது அவருக்கு.
"மகா பாவி நான்!" என்று தமக்குள்ளேயே மறுகினார் அந்தக் கிழவர்.
தகப்பனாரின் மனத்தில் தன்னைப் பற்றி ஏதோ போராட்டம் நடக்கிறது என்பதைக் காமாட்சி அறியவே இல்லை. எப்பொழுதும் போலவே அவள் தன் அலுவல் களில் ஈடுபட்டிருந்தாள்.
ஒரு தினம் பிற்பகல் சுமார் மூன்று மணிக்கு மேல் டாக்டர் ஸ்ரீதரன் அவர்கள் வீட்டுக்கு வந்தார். அவருடன் ஜெயஸ்ரீயும் வந்திருந்தாள். கூடத்தில் உட்கார்ந்திருந்த வேதாந்தம் சிறிது நேரம் ஜெயஸ்ரீயை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
”உங்கள் பெண்ணா?" என்று கேட்டார் அவர் டாக்டரைப் பார்த்து.
"ஆமாம். ஜெயஸ்ரீ தான். உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா! நன்றாக வளர்ந்திருக்கிறாள்" என்று சொல்லிக் கொண்டே ”ஏனம்மா! இந்தத் தாத்தாவை உனக்கு தெரியுமா!" என்று கேட்டார்.
”தெரியாமல் என்ன அப்பா? வக்கீல் தாத்தா தானே? நாலைந்து வருஷத்துக்கு முன்னே எனக்கு இவர் ’லேடி' பொம்மை வாங்கித் தரவில்லையா? அதை இன்னமும் வைத்திருக்கிறேனே!" என்றாள் ஜெயஸ்ரீ. காமாட்சி இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவள் எழுந்திருந்து உள்ளே போனாள். அழகிய குழந்தைப் பொம்மை ஒன்றை எடுத்து வந்தாள்.
"இந்தா அம்மா! இதையும் வைத்துக்கொள்" என்று கூறி ஜெயஸ்ரீயிடம் கொடுத்தாள் அதை.
ஜெயஸ்ரீக்குத் தயக்கமாக இருந்தது. ’பொம்மை வைத்துக் கொண்டு விளையாடும் வயசெல்லாம் தாண்டி விட்டதே இது நமக்கெதற்கு' என்று அவள் யோசித்துக் கொண்டு சற்றுத் தயக்கத்துடன் கையை நீட்டினாள் பொம்மையை வாங்க.
வேதாந்தம் இதை பார்த்துக் கொண்டே உட்கார்ந் திருந்தார். பிறகு டாக்டரின் பக்கம் திரும்பி, ”டாக்டர்! காமாட்சிக்கு ஆறு மாசங்களாக ஒரு பைத்தியம். விளையாட்டுப் பொம்மைகள், சிறு கார்கள். குழந்தை சைக்கிள் . என்று இப்படி வாங்கி வருகிறாள். இரண்டு மூன்று நாட்கள் வீட்டில் வைத்துக் கொண்டிருந்து விட்டு பிறகு தனக்குத் தோன்றியவர்களுக்கு அவற்றைக் கொடுத்து விடுகிறாள். அவளுடைய இந்தப் போக்கு எனக்குப் புரியவே இல்லை ...."
காமாட்சி தகப்பனார் கூறியதைக் கேட்டபடி முறுவலித்துக் கொண்டே நின்றாள்.
டாக்டர் ஸ்ரீதரன் இதற்குப் பதில் அளித்தார் :
”மனிதனுடைய மனம், சிந்தனையெல்லாம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இருந்தார். பல ரகச் சீட்டுக் கட்டுகளை வாங்கி மேஜை மீது வைத்திருப்பார். அப்படி அவருக்குச் சீட்டாட்டம் நன்றாகத் தெரியும் என்றோ அதில் விருப்பம் கொண்டவர் என்றோ கூற முடியாது. யாராவது குழந்தைசள் வந்து கேட்டாலும் கொடுத்து விடுவார். எதற்கு வாங்குகிறார். எதற்காகக் கொடுக்கிறார் என்பது பலருக்குப் புரியாது. இப்படி ஒரு போக்கு" என்றார்.
வேதாந்தம் தலையை ஆட்டிக்கொண்டு உட்கார்ந் திருந்தார்.

