உண்மைச் சொரூபம்
தெரு விளக்குகள் எல்லாம் ’பளிச்' சென்று எரிந்தன. மாடியில் இருந்த வராந்தாக்களின் விளக்குகளைப் போட்டு விட்டு ராமையா ராதாவின் அறைக்குள் எட்டிப் பார்த்தான். பித்துப் பிடித்தவள் போல உட்கார்ந்திருக்கும் அவளைப் பார்த்துவிட்டு. * அம்மா! இருட்டிலே உட்கார்ந்து இருக்கீங்களே. விளக்குப் போடலீங்களா? நான் போடட்டுமா?" என்று கேட் டான்.
”வேண்டாம் ராமையா எனக்குத் தலைவலி. வேண்டும் பொழுது நான் விளக்கைப் போட்டுக் கொள்கிறேன். நீ போ" என்றாள் ராதா. தன்னை ஒருவாறு சுதாரித்துக் கொண்டு, அவன் சென்றதும் அவசரமாக ஸ்நான அறைக்குள் சென்று முகம் கழுவித் தலை வாரிப் பின்னிக் கொண்டாள். மனசில் புதைந்து கிடந்த துக்கங்களை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தாள். ராதாவைச் சற்று நேரம் காணவில்லை யென்றால் தேடிக் கொண்டு வரும் சுவாமிநாதன் அன்று மத்தியானத்தி-லிருந்து மாடிப் பக்கமே வரவில்லை.
நேராகச் சமையற்கட்டுக்குச் சென்று பார்த்தாள் ராதா. அங்கே சாப்பிடும் கூடத்தில் இருந்த பெஞ்சியில் அந்தக் கிழவர் படுத்திருந்தார்.
சாயங்கால வேளைகளில் திருநீறு அணிந்து கடவுளைத் துதிக்கும் அவர். அன்று படுத்துக் கிடந்தது ராதாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அருகில் சென்று குனிந்து பார்த்து விட்டு, ”மாமா" என்று அழைத்தவாறு அவர் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள், ஜுரம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை . நினைவே இல்லாமல் படுத்திருந்தார் அவர். திடீர் திடீர் என்று அவர் படுத்துக் கொள்வதும், சரிவரச் சாப்பிடாமல் இருந்ததும் ராதாவுக்கு நினைவுக்கு வந்தது . அவசரமாகப் போனை எடுத்து ஸ்ரீதரனின் மருத்துவ சாலைக்குப் ’போன்' செய்தாள். சிறிய நேரத்துக்
கெல்லாம் டாக்டர் வந்து சேர்ந்தார்.
சுவாமிநாதனைப் பரிசோதித்து விட்டு, அவருக்கு ரத்த அழுத்த வியாதி ஏற்பட்டிருக்-கிறதென்றும், நல்ல ஒய்வு கொடுக்க வேண்டும் என்றும் அபிப்பிராயப் பட்டார்.
அன்று தான் ராதாவுக்குக் குடும்பம் என்றால் என்ன என்பது புரிந்தது. அடுப்பங்கரையில் பாதிச்சமையல் அப்படியே கிடந்தது. உள்ளே சென்ற ராதா பிரமித்து நின்றாள். ஒருவழியாகச் சமையலை முடித்துப் பாலைக் காய்ச்சி வைப்பதற்குள் அவளுக்குத் திணறி விட்டது.
சூடான பாலை டம்ளரில் எடுத்து வந்து சுவாமிநாதன் அருகில் வந்தாள். அவர் அப்போது தான் கண் விழித்திருந்தார். அருகில் வந்து நிற்கும் ராதாவைப் பார்த்தார் அவர்.
"என்னம்மா இது?" என்று கேட்டுக் கொண்டே மெள்ள எழுந்தார். ராதா அவர் அருகில் உட்கார்ந்தாள்.
"ஒன்றுமில்லை. இந்தப் பாலைச் சாப்பிடுங்கள். நீங்கள் எழுந்திருந்து ஒன்றும் செய்ய வேண்டாம்.”
”நீயாகவே எல்லா வேலைகளையும் செய்தாயா? உனக்கு வழக்கமில்லையே அம்மா..."
”வழக்கப்படுத்திக் கொண்டால் வருகிறது ...."
'ராதாவா இப்படிப் பேசுகிறாள்!' என்று வியந்தார் அவர்.
இதற்குள் டாக்டர் ஸ்ரீதரன் அங்கு வந்தார். அடுத்த நாளிலிருந்து வேறு ஒருவர் வீட்டுக்கு வருவதாகவும், எல்லா வேலைகளையும் அவரே செய்து விடுவார் என்றும், சுவாமிநாதன் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தால் போதும் என்றும் தெரிவித்தார்.
சுவாமிநாதன் அந்தக் குடும்பத்தினரின் அன்பைக் கண்டு வியந்தார். தம்மிடம் அவர்கள் கொண்டிருந்த அன்பின் ஆழத்தைப் பற்றி நினைத்துக் கொண்டே மெய்ம்மறந்திருந்தார் அவர்.
அன்றிரவு எட்டு மணிக்கு மூர்த்தி காரியாலயத்திலிருந்து வீடு திரும்பினான், மாடிக்குச் சென்று அவசரமாகத் தன் பெட்டியில் துணிகளை எடுத்து வைத்துக் கொண்டான். முகம் கழுவி, தலையை வாரி. மறுபடியும் உடுத்திக் கொண்டிருக்கும் போது ராதா மாடிக்கு வந்தாள். கணவன் எங்கோ போபதற்குத் தயார் செய்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் ”எங்கே புறப்படு கிறீர்கள்?" என்று கேட்டாள்.
"கல்கத்தாவுக்குப் போகிறேன்" என்றான் மூர்த்தி.
”என்ன விஷயம்? காலையில் என்னிடம் சொல்லவே இல்லையே..."
”உன்னிடம் சொல்லி விட்டுத்தான் நான் எதையும் செய்யவேண்டுமா?"
“அப்படிச் சொல்லவில்லையே. எனக்குத் தெரிந்தும் சில காரியங்களை நீங்கள் செய்யலாமே..."
”அப்படி உனக்குத் தெரியாமல் என்ன செய்துட்டேனாம்...?"
ராதாவுக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது. ”’நீங்கள்..” என்று தடுமாறினாள் சிறிது நேரம்.
”சொல்லேன். நீ படித்தவள்! என் தயவு உனக்கெதற்கு...? உன்னை வைத்துக் காப்பாற்ற நிறையச் சம்பாதிக்கும் தமையன் இருக்கிறார். உன்னிடம் அன்பு செலுத்த அந்தச் சுவாமிநாதன் வேறு இருக்கிறார்”.
”யார் இருந்தால் எனக்கு என்ன பிரயோசனம்? ஒழுங்காக இருக்க வேண்டியவர் சரியாக இருப்பது தான் எனக்கு முக்கியம்......"
”சுற்றி வளைத்துப் பேசுகிறாய் ராதா? சொல்ல வந்ததைச் சொல்லி விடு..." என்று சொல்லியவாறு மூர்த்தி அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தான்.
ராதாவுக்கு துணிச்சல் ஏற்பட்டது.
"என்னுடைய வைர வளையல்களைக் காணோம்! மத்தியானம் பூராவும் தேடினேன்! அந்த நகை குடும்பச் சொத்து. அண்ணா அதை எனக்குக் கொடுக்க இஷ்டமில்லை யென்றால் ஜெயஸ்ரீக்கு கொடுத்திருக்கலாம். அவர் அப்படிச் செய்யாமல், எனக்குக் கொடுத்தார். அதை இழக்க நான் சம்மதப்பட வில்லை."
மூர்த்தி திகைத்து நின்றான். சட்டென்று தன் பெட்டியைத் திறந்து கத்தை கத்தையாகக் கட்டி வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகளை எடுத்து வெளியே எறிந்தான்.
”உன் வைர வளையல்களை விற்ற பணம் தான் இது. இந்தா! இதை எடுத்துப் போய் மறுபடியும் நீ வைர வளையல் வாங்கிக் கொள்ளலாம்" என்று கூறியவாறு கையில் ஒரு சிறு பெட்டியுடன் வீட்டை விட்டுப் புறப் பட்டான் மூர்த்தி. மாடியின் பின்புறமாக இறங்கி அவன் வேகமாகச் சென்று மற்றொரு ’கேட்' வழியாக வெளியில் செல்வதைக் கவனித்தாள் ராதா. கீழே கிடந்த ரூபாய் நோட்டுக்களை எடுத்து அவசரமாக எண்ணிப் பார்த்தாள் அவள். மூவாயிரத்து ஐந்நூறு ரூபாய்கள் இருந்தன; அந்த நகை குறைந்தது ஐயாயிரம் பெறுமே.
புதிதாக வாங்கப் போனால் மேலேயே ஆகலாம். மூர்த்தி தன் கைச் செலவுக்குச் சில நூறுகளை வைத்துக் கொண்டு தான் பாக்கியை வீசி எறிந்து விட்டுப் போயிருக்க வேண்டும் என்று ஊகித்தாள் அவள். மிச்சப் பணமாவது மிகுந்ததே என்று தான் அவள் நினைத்தாள். ’எந்தத் தமயந்தியோ, ரோகிணியோ அடைந்துவிட்டுப் போகட்டும்' என்று தியாகம் புரிய அவள் சித்தமாக இல்லை. நோட்டுக்களை எடுத்து, பீரோவில் வைத்துப் பூட்டினாள். சுவாமிநாதன் எப்படி இருக்கிறார் என்று பார்த்து வர அவள் கீழே வந்தபோது அவர் நிம்மதியாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.
ஜெயஸ்ரீக்கும் ஸ்ரீதரனுக்கும் உணவு பரிமாறி விட்டு ராதா தான் சாப்பிடாமலேயே மாடிக்குச் சென்றாள். மாடி வராந்தாவில் ஸ்ரீதரன் அவளைப் பார்த்து "ராதா! உன் புருஷன் இன்னும் வீட்டுக்கு வரவில்லையா? சற்று முன் உன் அறையில் பேச்சுக் குரல் கேட்டதே. வந்து விட்டான் என்றல்லவா நினைத்தேன்?" என்று கேட்டார்.
”வந்திருந்தார் அண்ணா, அவசரமாக வெளி யூருக்குப் போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டு உடனே புறப்பட்டுப் போய்விட்டார்..."
"சாப்பிட்டானா?"
"இல்லை, பசிக்கவில்லை என்று சொன்னார்….”
ராதா வெகு சாமர்த்தியமாக நடந்தவற்றை மறைத்துக் கூறினாள். அதற்கு மேல் ஸ்ரீதரன் பேச்சை வளர்த்தவில்லை.
தன் அறைக்குள் சென்ற ராதா சிறிது நேரம் மேஜை அருகில் உட்கார்ந்து ஏதோ புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தாள். அவளுக்கு எதுவுமே செய்யத் தோன்ற-வில்லை. கணவன் வெளியே கோபமாகச் சென்ற போது அவள் அதைப் பொருட் படுத்தவில்லை. அவன் சென்ற பிறகுதான், தான் செய்த தவறை உணர்ந்தாள். கோபத்தினால் அவன் ஏதாவது இசைகேடாக நடந்து கொண்டானானால் என்ன பண்ணுவது என்று பயந்தாள் ராதா, அங்கிருந்து எழுந்து சென்று பீரோவைத் திறந்து பார்த்தாள், அவள் வைத்த இடத்திலேயே அந்த ரூபாய் நோட்டுக்கள் காணப்பட்டன. பெரியவர்கள் எவ்வளவோ ஆசையுடன், சிரமப்பட்டுச் செய்த வளையல்களை ஒரு நொடியில் விற்றது மல்லாடல், வேண்டுமானால் வளையல்களைத் திரும்பவும் வாங்கிக் கொள்' என்று வீராப்புப் பேச்சு வேறே அவருக்கு வேண்டியிருக்கிறதா என்று அவள் யோசித்தாள்.
இப்படிப் பலவாறாக எண்ணமிட்டுக் கொண்டே அன்றிரவைக் கழித்தாள்.

