பெண்மையின் பலஹீனம்

ஸ்ரீதரனின் மனசில் கெட்டவை நிற்பதில்லை. நல்லவைகள் நிலைத்து நின்று. உருவாகிப் பயன் பெற்று நிலவும். மூர்த்தியைப்பற்றி அவர் மனசிலே ஒன்றுமே இல்லை. தங்கையின் கணவன் நல்லவனா அல்லது கெட்டவனா என்பது ஒன்றும் அவருக்கு விளங்கவில்லை. அதைப்பற்றி அவர் அக்கறை காட்டும்படி ராதாவும் நடந்து கொள்ள வில்லை. 'கணவனும் மனைவியும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அவ்வளவு தான் நமக்கு வேண்டியது என்று இருந்து விட்டார். மூர்த்திக்கு என்ன சம்பளம் வருகிறது? அதை அவன் எப்படி செலவழிக் கிறான்? என்றெல்லாம் அவர் ஏன் ஆராயப் போகிறார்? தங்கைக்கு வேண்டிய புடவைகள், இதர சாமான்களை ஜெயஸ்ரீக்கு வாங்கும்போது வாங்கித் தந்து விடுவார். சில சமயங்களில் அவர்களே வாங்கி வந்து 'பில்'லை மட்டும் அவர் மேஜைக்கு அனுப்பி விடுவதும் உண்டு.

டாக்டர் காமாட்சியிடமும் அவர் இதைப்பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொண்டார். "என் எதிரில் ராதா அவள் கணவனுடன் பேசியே பார்த்ததில்லை. இருவரும் வெட்கப்பட்டுக் கொண்டு என்னைக்கண்டதும் விலகிப் போய் விடுகிறார்கள்" என்றார்.

"அப்படியா? கல்யாணத்துக்கு முன்பு ரொம்பவும் நெருங்கிப் பழகியவர்கள் ஆயிற்றே! இப்படி இருப்பது அதிசயம் தான்" என்றாள் காமாட்சி.

இந்த விஷயத்தை அவள் தன் தகப்பனாரிடம் கூறிய போது அவர் ஆச்சரியம் அடையவில்லை. என்னவோ, அந்தப் பிள்ளையிடம் எனக்கு நம்பிக்கை இல்லை" என்று அசுவாரசியமாகப் பதிலளித்தார்.

சுவாமிநாதனுக்கு மட்டும் மனசிலே ஏதோ ஒரு சந்தேகம் சூழ்ந்து கொண்டிருந்தது. பல இரவுகள் மாடியில் ராதா மெதுவாக விசும்பும் குரலை அவர் கேட்டிருக்கிறார். அவளுடைய கண்கள் சிவந்து முகம் வீங்கி இருந்ததையும் அவர் பார்த்தார்.

"ஏனம்மா! உடம்பு சரியில்லையா?" என்று கூட விசாரித்தார்.

”ஆமாம். நேற்றிலிருந்து ஜலதோஷம்" என்றாள் ராதா.

”ஏதாவது மருந்து சாப்பிடேன்!"

“சாப்பிட்டேன். அண்ணாவின் அலமாரியைத் திறந்து எடுத்துக் காலையிலேயே சாப்பிட்டேனே."

அவள் எதுவும் சாப்பிடவில்லை என்பதும் அவருக்குத் தெரியும். தினம் மூன்று வேளைகள் தலைவாரிப் பின்னிக் கொள்கிறவள் சேர்ந்தாற் போல் இரண்டு நாட்கள் தலைவாரிக் கொள்ளவே இல்லை.

"இன்று வெள்ளிக்கிழமை, தலையைப் பின்னி பூ வைத்துக் கொள் அம்மா" என்று சுவாமிநாதன் புஷ்பச் சரத்தை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தார். அதை மேஜை மீது வைத்து விட்டுக் கவனியாதவள் போல் இருந்தாள் ராதா.

தன்னை அலங்கரித்துக் கொள்வதிலும், விதம் வித மாக உடுத்துவதிலும் விருப்பமுடைய ராதா, இப்படி எதிலும் பற்றில்லாமல் இருப்பது வேதனையாக இருந்தது.

குறுகிய காலத்தில் ராதாவின் போக்கில் பெருத்த மாறுதல் ஏற்பட்டிருந்தது. வெளியில் எதையும் சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே குமைந்து கொண்டிருந்தாள் அவள். ஒரு தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மூர்த்தியிடம் அவள், ”நீங்கள் இப்படியே இருந்தால் எப்படி?" என்று கேட்டேவிட்டாள்.

"நான் எப்படி இருக்கிறேன்?" என்று அலட்சிய மாகக் கேட்டான் மூர்த்தி.

”நமக்குக் கல்யாணம் ஆகி இரண்டு வருஷங்கள் ஆகின்றன. ஒரு நாளாவது உங்கள் சம்பாத்தியத்திலிருந்து எனக்கு ஒரு புடவை வாங்கித் தந்திருக்கிறீர்களா ?”

"பூ! இதற்கென்ன பிரமாதம்! வாங்கினால் போச்சு! நீ என்னைக் கேட்கவில்லை. நானும் வாங்கித் தரவில்லை.

’அப்படியானால், எங்கெங்கோ இருப்பவர்களுக் கெல்லாம் பணம் அனுப்புகிறாரே, அவர்கள் கேட்டு வாங்கிக் கொள்வார்கள் போல் இருக்கிறது' என்று ராதா நினைத்துக் கொண்டாள். பேசாமல் நிற்கும் மனைவியைப் பார்த்தான் மூர்த்தி. பரிவோடு அவள் அருகில் வந்து நின்று, 'ராதா! எனக்கு ஆபீசில் ஒரு தொல்லை ஏற்பட்டிருக்கிறது. வெளியூர் போய் வரும் போது பீஸ் கணக்குகளில் பிசகு நேர்ந்து விட்டது. அதைச் சரிக்கட்டுவதற்குப் பணம் வேண்டும்..." என்று கேட்டான்.

”அண்ணாவைக் கேட்கச் சொல்கிறீர்களா? அது மட்டும் என்னால் முடியாது. தேவையானால் என் நகைகளில் ஏதாவது கொடுக்கிறேன்..."

“உன்னுடைய நகையா?" மூர்த்தி சிறிது நேரம் யோசிப்பவன் போல் தயங்கினான். வேதனை படர்ந்திருக்கும் அவன் முகத்தைப் பார்த்த ராதா தன்னுடைய பீரோவைத் திறந்து முத்தும் செம்பும் பதித்த மாலை ஒன்றை எடுத்து வந்து அவன் கையில் கொடுத்தாள்.

”தயவு செய்து இதைச் சென்னையில் விற்காதீர்கள்! அடுத்த தடவை நீங்கள் வெளியூர் போகும்போது விற்று விடுங்கள்" என்றாள்.

மூர்த்தி மகிழ்ச்சியோடு அதைப் பெற்றுக் கொண்டான். பெண்களுக்கே உரித்தான பலஹீனம் - அதாவது கணவன் ஆபத்தில் இருக்கிறான் என்பதை அறிந்ததும் ஏற்படும் தாராளம் படித்த பெண்ணாகிய ராதாவுக்கும் உண்டாயிற்று . நாலு பேர்களுக்கு வெளியில் தெரியாமல் தன்னுடைய குற்றங்களை மறைத்து விட வேண்டும் என்கிற ஆவலால் உந்தப்பட்டு குற்றங்களை மேலும் செய்யத் தூண்டுவதும் ஒரு பலஹீனம் தான்.

கணவன் உண்மையிலேயே ஆபத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறானா? அந்தத் தவறு ஏதேச்சையாசு ஏற்பட்டதா? வேண்டுமென்று செய்ததா? இவ்வாறெல்லாம் பெண்கள் யோசிக்க மாட்டார்கள். உன் கணவன் ’அயோக்கியன்' என்று யாராவது சொன்னாலும் பொறுக்க மாட்டார்கள், ஏதோ ஒரு பத்தி, உயர்ந்த பண்பு அவர்களை ஆட்கொண்டி-ருப்பதால்தான் அவர்கள் இவ்வளவு தியாகிகளாக இருக்க வேண்டும்.

ஒரு தடவை நகையைக் கொடுத்துப் பழக்கம் ஏற்படுத்திய பிறகு அதே வாடிக்கையாகப் போய்விட்டது. அவளைக் கேட்காமலேயே நகைகளை எடுத்துப் போனான் மூர்த்தி. பண்டிகை பருவங்களில் எங்கே போனாலும் அவள் முன்பே அதிகமாக நகை போட்டுக் கொள்ள மாட்டாள். ஆகவே அதைப் பற்றி யாருமே கவனிக்கவில்லை. கணவனுடைய நடத்தை தெரிந்த பிறகு. அந்த உள்ளத்தில் அபரிமிதமான கசப்பு அவளிடத்தில் வளர்ந்து வந்தது. இருவரும் பேசுவதுகூட நின்று போயிற்று.

ஒரு தினம் ராதா வெளியில் செல்லுவதற்காக ஆடை அணிகள் அணிந்து கொள்ளத் தன் பீரோவைத் திறந்தாள். நகைப் பெட்டியைத் திறந்தபோது அதனுள்ளிருந்த ஒரு ஜோடி வைர வளையல்களைக் காண வில்லை. அந்த வளையல்கள் அவளுடையவை அல்ல. கல்யாணத்தன்று ஸ்ரீதரன் அவளுக்குக் கொடுத்தார். "ராதா! இவை நம் தாயினுடையவை. அவள் முகம் உனக்குத் தெரியாது. ஆகவே அவள் ஞாபகமாக வைத்துக் கொள்" என்றார். முகூர்த்தத்தன்று மாலை அவள் 'ரிஸப்ஷனு'க்குக் கிளம்பும்போது, அவள் கையில் வளையல் பெட்டியைக் கொடுத்துக் கொண்டே.

அந்தப் புராதன சொத்துதான் இப்போது மாயமாக மறைந்து விட்டது.

ராதாவின் உடல் வியர்த்தது. பரபரக்க பீரோ பூராவும் தேடினாள். அங்கிருந்த மேஜை பூராவும் குடைந்தாள். கணவனின் நிஜார் பைகளில் பார்த்தாள். அவனுடைய கோட்டுப் பைகளில் தேடினாள். ஆனால் அவள் தேடிய வஸ்து அகப்படாமல் வேறொரு வஸ்து அகப்பட்டது. அது ஒரு கடிதம்.

ஆங்கிலத்தில் முத்து முத்தான கையெழுத்துக்களில் ஒரு பெண் மூர்த்திக்குக் கடிதம் எழுதியிருந்தாள். அதில் மூர்த்தி நான்கைந்து மாதங்களுக்கு முன்பு வந்து போனவன் அவளை வந்து மணப்பதாகக் கூறிச் சென்றதாகவும் இதுவரையில் தகவல் தெரியாமல் போகவே, காரியாலயவிலாசத்துக்கு அவள் கடிதம் எழுதுவதாகவும் விரைவில் பம்பாய் வரும்படியும் அந்தப் பெண் எழுதி இருந்தாள். இல்லாவிடில், சீக்கிரமே தான் சென்னை வருவதாகக் குறிப்பிட்டு இருந்தாள். பெண்ணின் பெயர் தமயந்தி என்றிருந்தது.

இக்கடிதத்தை ராதா பார்ப்பதற்கு முதல் நாள் அவன் அணிந்து சென்றிருந்த கோட்டுப் பையில் ஒரு இன்ஷர் ரசீது காணப்பட்டது. தமயந்தி பெயருக்கு ஐந்நூறு ரூபாய்கள் அனுப்பியிருந்தான் மூர்த்தி. கடிதம் அதற்குப் பத்து தினங்கள் முந்திய தேதியுடன் வந்திருந்தது.

ராதாவின் கண்கள் கண்ணீரைப் பெருக்கவில்லை. காய்ப்புக் காய்த்துப் போன தசை மாதிரி அவள் நெஞ்சம் காய்த்துவிட்டது. யோசித்தபடியே வெகு நேரம் உட்கார்ந்தி-ருந்தாள் அவள். எவனை உயர்ந்தவன், அன்பு நிறைந்தவன் என்று நம்பி ஏமாந்து தன் உள்ளத்தை அர்ப்பணித்து மணந்தாளோ அவன்-- அவள் கணவன் --கயவன் , ஸ்திரீலோலன், அதற்காக இழிவான செயலில் இறங்குபவன் என்பதை அவள் உணர்ந்தபோது ராதா விவரிக்க முடியாத துக்கத்தில் ஆழ்ந்து போனாள். சற்று முன் கல்லாக உட்கார்ந்திருந்தவளின் கண்களி லிருந்து அருவியைப் போல் கண்ணீர் பெருகிக்கொண்டே இருந்தது.