ஆண்டவனின் குரல்
டாக்டர் ஸ்ரீதரனின் யோசனையைப் பவானி தன் தமையனிடத்திலும் மன்னி-யிடத்திலும் தெரிவித்தாள். தனக்கும் அதில் ஆவல் இருப்பதாகச் சொன்னாள். இந்த விஷயத்தைப் பற்றி விசாரிக்க நாகராஜன் ஸ்ரீதரனின் வீட்டுக்குச் சென்றான்.
”அவளுடைய பணம் ஐந்தாயிரம் என்னிடம் இருந்தது. அது இப்பொழுது பத்தாயிரமாக வளர்ந்திருக்கிறது. அதில் கிடைக்கும் வட்டியைக் கூட நான் அவளுக்காகச் செலவழிப்பதில்லை. 'எல்லாச் செலவு களையும் நானே பார்த்துக் கொள்கிறேன். பாலுவின் படிப்பின் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். அவள் வேலைக்குப் போய்த் தான் ஆகவேண்டும் என்பதில்லை. எவ்வளவோ வசதிகளுடன் சந்தோஷமாக இருக்கலாம்" என்றான் நாகராஜன்.
தமையனுடன் பவானியும் சென்றிருந்தாள்.
"அண்ணா ! உன்னுடன் இருப்பதில் எனக்கு எந்த விதமான குறையும் இல்லை. மற்றப் பெண்களுக்கு குடும்பம் குழந்தைகள் என்றெல்லாம் கடமைகள் இன்பங்கள் இருக்கின்றன. என்னுடைய மனசிலே சூன்யம் நிறைந்து போகாமல் இருக்கவே இப்படி என் பொழுதைக் கழிக்க விரும்புகிறேன் அண்ணா " என்றாள் பவானி.
நாகராஜன் எந்த விஷயத்தையுமே ஆழ்ந்து நோக்குபவன் அல்ல. ஆகவே தங்கையின் அபிப்பிராயத்தை ஆமோதித்தான்.
அடுத்த சில நாட்களில் பவானி நர்ஸ்கள் கல்லூரியில் சேர்ந்தாள். முதல் நாள் அவள் கல்லூரியிலிருந்து திரும்பியதும் சுமதி, அத்தையின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் என்னென்ன புத்தகங்கள் படிக்கிறாள், நோட்டுப் புத்தகங்கள் எத்தனை வாங்கி இருக்கிறாள் என்று அறியும் ஆவலுடன் கூடத்தில் உட்கார்ந்து இருந்தாள் அந்தப் பெண்.
அவள் எதிர்பார்த்தபடி பவானி ஒரு சுமைப் புஸ்தகங்களைத் தூக்கிக்கொண்டு வரவில்லை. "அத்தை பெரிய வகுப்பிலே படித்தால் புத்தகச் சுமை குறைந்து போகுமா?" என்று விசாரித்தாள்.
”ஏனம்மா அப்படி கேட்கிறாய்? தினம் இரண்டு மூன்று புத்தகங்கள் கொண்டு போனால் போதும். அவசியமானவற்றை நோட்டுப் புத்தகம் ஒன்றில் குறித்துக் கொண்டு வருவேன்" என்றாள் பவானி சிரித்துக் கொண்டு.
”எனக்கு இருக்கும் புத்தகங்களைச் சுமந்து கொண்டு போயே என் முதுகு வளைந்து விட்டது அத்தை" என்று கூறி முதுகை வளைத்து அவள் எதிரில் நடந்து காண்பித் தாள் சுமதி.
கூடத்தில் இருந்தவர்கள் எல்லோரும் சிரித்தார்கள். கோமதி உள்ளேயிருந்து பவானிக்குச் சிற்றுண்டியும் காப்பியும் கொண்டு வந்து கொடுத்தாள். பவானி அந்த வீட்டுக்கு வந்த பிறகு கோமதியின் குணத்தில் பல மாறுதல்கள் ஏற்பட்டு விட்டன. படிப்படியாக அவளிடமிருந்த சோம்பல் நீங்கிவிட்டது. 'தான் ஒரு நோயாளி' என்று சதா டாக்டரைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தவள், இப்போது தெம்புடன் இருந்தாள். வீட்டில் ஓடி ஆடி வேலைகளை செய்வதால் உடலுக்குத் தெம்பும் உள்ளத்துக்கு மகிழ்ச்சியும் ஏற்படுவதை உணர்ந்தாள். பவானிக்கு மன்னியின் திறமையைப் பார்க்கும் போது சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருந்தது.
சிற்றுண்டி சாப்பிட்டு முடித்த பிறகு உடை மாற்றிக் கொண்டு கொல்லையில் மலர்ந்திருந்த மலர்களை மாலையாகத் தொடுத்து படங்களுக்குப் போட்டாள் பவானி. அவள் உள்ளத்திலே உவகையும், களிப்பும் நிரம்பி இருந்தன.
கண்ணை மூடிக்கொண்டு தன் இஷ்ட தெய்வமாகிய நடராஜப் பெருமானின் படத்தின் முன்பு கரங்குவித்து நின்றிருந்தாள் பவானி. அமைதி நிலவும் அப்பெரு மானின் முகத்தில் இருக்கும் புன்னகையைக் கவனித்தாள் ஒரு விநாடி. கண்களைத் திறந்து, டாக்டர் ஸ்ரீதரனுக்கு அந்த அமைதியும், கருணையும் இருப்பதாக அவள் மனத்துக்குத் தோன்றியது.
"அம்மா பவானி!" என்று அவர் அழைத்த குரலில் ஆண்டவனின் குரலும் கேட்டது அன்று. தான் நம்பி இருக்கும் நடராஜன் தான் தன்னை இந்தத் தொழில் செய்யும்படிப் பணித்திருக்கிறான் என்று பவானிச்குத் தோன்றியது.
டாக்டர் ஸ்ரீதரனைப்பற்றி அவள் மனத்திலே ஓர் உயர் தரமான எண்ணம் எழுந்தது. அவ்வெண்ணம் தன்னை ஈன்ற அன்னையிடத்திலும் தந்தையிடத்திலும் காட்ட வேண்டிய பக்தியை விட ஒரு படி உயர்வாகத் தாற்றமளித்தது. அந்தப் புனிதமான எண்ணம் எழுப்பும் இன்பத்தில் லயித்திருந்தாள் பவானி.

