பணமேதான் ஜீவநாடி
பல மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதரன் பவானியிடம் உங்களிடம் சில விஷயங்கள் தனியாகப் பேச வேண்டும் என்று தெரிவித்திருந்தார் அல்லவா? அதன் பிறகுதான் ராதாவுக்குக் கல்யாணம் நடந்தது. புது மாப்பிள்ளை வந்த மகிழ்ச்சியில் கொஞ்சம் திளைத்தார் ஸ்ரீதரன் . இரண்டு மாதங்கள் ஜெயஸ்ரீயுடன் வெளியூர்களுக்குச் சென்றிருந்தார் அவர்.
திரும்பி வந்ததும் ஓய்ச்சல் ஒழிவில்லாமல் வேலைகளில் ஈடுபட்டார். அப்பொழு-தெல்லாம் ஒன்றிரண்டு தடவைகள் தான் பவானியை அவர் பார்க்க நேர்ந்தது. அப்பொழுதெல்லாம் அவருக்கு அவளிடம் நிதானமாகப் பேசச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.
அன்று என்னவோ அவருக்கு ஒழிவாக இருந்தது. மாடியில் ராதாவும் மூர்த்தியும் 'செஸ்' விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஜெயஸ்ரீ தோட்டக்காரன் ராமய்யாவுடன் செடிகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சுவாமிநாதனுக்கு உடம்பு முன்னைப் போல் இல்லை. வேலைகள் முடிந்து விட்டால் படுத்துத் தூங்கப் போய் விடுவார் அவர்.
ஸ்ரீதரன் தெரு வராந்தாவில் சோபாவில் உட்கார்ந்து யோசனையில் மூழ்கியிருந்தார். கல்யாணத்துக்கு முன்பே ராதா அவரிடம் நெருங்கிப் பழகுவதில்லை. இப்போது அவள் தன் அண்ணாவுடன் அதிகமாகப் பேசி எத்தனையோ மாதங்கள் ஆகிவிட்டன.
ஜெயஸ்ரீ வளர வளர தகப்பனாரிடம் பிரத்தியேக மரியாதை காண்பித்தாள். ஏதாவது கேட்டால் பாத்திரம் பதில் கூறுவது. இல்லாவிட்டால் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாள்.
டாக்டர் காமாட்சியைப் பார்த்து சிறிது நேரம் பேசிவரலாம் என்று நினைத்தார். அவர் அன்று கிராம் சேவிகா சங்கத்தில் பேசப்போவதாகக் கூறியது நினைவுக்கு வந்தது. எங்கே போகலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது பவானியின் வீட்டு கோபாலன் தன் குழந்தையை எடுத்துக் கொண்டு ராமய்யாவைப் பார்க்க வந்தான். டாக்டரை அங்கு பார்த்து விட்டு வணக்கம் செலுத்தினான்.
”ஏனப்பா! உன் குழந்தையா? என்ன பெயர் வைத்திருக்கிறாய்?" என்று கேட்டார் ஸ்ரீதரன்.
"நடராஜன் என்று பெயர். பவானி அம்மாதான் வெச்சாங்க. அந்த அம்மாவுக்கு அந்தப் பெயரிலே ஒரு பைத்தியம்."
”நல்ல பெயர்தான் அப்பா" என்று கூறிவிட்டு டாக்டர் பவானியின் வீட்டுக்குக் கிளம்பினார் பல மாதங்களுக்கு முன்பு தான் சொன்னதை நினைத்துக் கொண்டு,
நாகராஜனின் வீடு நிசப்தமாக இருந்தது. அன்று தம்பதி இருவரும் ஏதோ சினிமாவுக்குப் போயிருந்தார்கள். அதற்கு முன்பாக ஏகப்பட்ட தகராறுகள் சில்லறைச் சண்டைகள்.
"மன்னியை அழைத்துக் கொண்டு சினிமாவுக்குப் போய் விட்டு வாயேன் அண்ணா ?" என்று பவானி கோமதிக்காகப் பரிந்து பேசினாள்.
”நீதான் போயேன் மன்னியை அழைத்துக் கொண்டு. நான் ’பிஸினஸ்' விஷயமாக ஒருத்தரைப் பார்க்க வேண்டும்" என்றான் அவன்.
பவானி பக் கென்று சிரித்தாள்.
”நல்ல பிஸினஸ்! பணம் எதற்கண்ணா சம்பாதிப் பது? வாழ்க்கையை அனுபவிக்கத்-தானே?"
நாகராஜன் தன் ஈழல் நாற்காலியில் இப்படியும் அப்படியுமாக மூன்று முறைகள் சுழன்றான்.
"இப்போது நாம் என்ன பணத்தை சம்பாதித்து அனுபவிக்காமல் தான் இருக்கிறோமா! மேலே மின்சார விசிறி சுழல்கிறது. கூடத்தில் ரேடியோ பாடுகிறது. ப்ரிஜி டேடர் வாங்கிப் போட்டிருக்கிறேன். வைர நெக்லெஸ் வாங்கி இருக்கிறேன்."
"ஆமாம் இத்தனையும் வைத்துக் கொண்டு சிறை வாசம் பண்ணச் சொல்கிறீர்-களாக்கும்! நாலு இடங்களுக்குப் போய் வந்தால் தான் மனசுக்குத் தெம்பு. எங்கே, என்னைப் பார்த்துச் சொல்லுங்கள். பக்கத்தில் இருக்கிறதே வடபழனி ஆண்டவன் கோயில், ஒரு நாளாவது எதற்காவது போனதுண்டா? நீங்கள் திருவல்லிக்கேணியில் மெரினாவுக்கு ஒருநாள் போயிருக்கிறீர்களா? ப்ரிஜிடேரும், சிரிஜிடேரும் யாருக்கு வேண்டும் இங்கே?" என்று பேசினாள் கோமதி.
நாகராஜன் சிரித்தான்.
"அடேடே! வக்கீல் வேதாந்தம் தம் ப்ராக்டினை விட்டு விட்டாராம். அவருக்குப் பதிலாக நீ போகிறாயா கோர்ட்டுக்கு? எல்லா வேலைகளுக்கும் தான் நீங்கள் போகலாமே இந்தக் காலத்தில் !" என்று கேட்டான்.
மறுபடியும் மனைவியிடம் அவன் பிடிவாதம் தோற்றது. அன்று அவர்கள் சுமதி, பாலு இருவரையும் அழைத்துக் கொண்டு சினிமாவுக்குப் போனார்கள்.
தெருவில் கார் வந்து நின்றது. ஸ்ரீதரன் இறங்கி உள்ளே வந்தார். கூடத்தில் பவானி மட்டும் உட்கார்ந்திருந்தாள். டாக்டரைப் பார்த்ததும் எழுந்து நின்று உள்ளே வரும்படி அழைத்தாள்.
ஸ்ரீதரன் உள்ளே வந்து சோபாவில் உட்கார்ந்து கொண்டார். சிறிது நேரம் வரையில் பேசாமல் இருந்து விட்டு "எங்கே ஒருத்தரையும் வீட்டில் காணோம்?" என்று கேட்டார்.
"அண்ணாவும் மன்னியும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சினிமாவுக்குப் போயிருக்கிறார்கள்."
”பாலு எப்படி இருக்கிறான்? முன்னைப் போல அவன் எங்கள் வீட்டுக்குக் கூட அடிக்கடி வருவதில்லை. பெரியவனாகி விட்டான் இல்லையா?" என்று விசாரித்தார் அவர்.
”ஆமாம், அவன் பசுமலையில் இருந்த போது என்னை என்ன பாடுபடுத்தி வைத்தான்! சதா சண்டை தான். இப்பத்தான் ஒரு வருஷமாக ரொம்பவும் சாதுவாகப் போய் விட்டான். படிப்பில் அக்கறை ஏற்பட்டிருக்கிறது."
"வயசாகிக் கொண்டு வருகிறது பாருங்கள். இனிமேல் புத்திசாலியாக மாறவேண்டியது தானே" பவானிக்கு டாக்டர் ஸ்ரீதரன் தன் மகனைப் புத்திசாலி என்று கூறியதில் ஆனந்தம் ஏற்பட்டது. பெயரும் புகழும் பெற்றுள்ள அவர் ஒரு குணவான். நலல வருமானமும், இஷ்டப்படி வாழ சுதந்திரமும் இருக்கும் போதும் டாக்டர் ஸ்ரீதரன் கட்டுப்பாடுடனே வாழ்ந்து வந்தார். எந்தப் பெண்ணையும் தாயாகவும் சகோதரியாகவும் காணும் பக்குவமான மனநிலை அவருக்கு ஏற்பட்டிருந் தது. அப்படிப்பட்டவரின் வாயால் பாலுவைப் புத்திசாலி என்று அழைப்பது ஓர் ஆசி மாதிரி இருந்தது அவளுக்கு.
கூடத்தில் மாட்டியிருந்த கடிகாரம் 'டிக்' 'டிக்' என்று சப்தித்துக் கொண்டிருந்தது. பவானி கையில் இருந்த புத்தகத்தைப் புரட்டிக் கொண்டே இருந்தாள்.
"என்ன படித்துக் கொண்டிருந்தீர்கள்?"
”காரைக்கால் அம்மையாரின் சரிதம். பக்தியால் பரமனுடன் பேசி மாங்கனி பெற்றவளின் மனசைப் பற்றி, பண்பைப் பற்றி வியந்து கொண்டே இருந்தேன். எனக்கு இந்தப் பையன் இராமல் இருந்தால் நான் எங்காவது புண்ணிய ஸ்தலங்களுக்குப் போயிருப்பேன்..."
அவளுடைய நீல நிற விழிகள் ஹாலில் இருந்த புத்தர் சிலை மீது பதிந்து இருந்தன.
”அம்மா பவானி!" என்று அழைத்தார் டாக்டர் ஸ்ரீதரன் .
”உங்களுடைய உயர்ந்த நோக்கங்களும் உன்னத லட்சியங்களும் போற்றப்ப - வேண்டியவையே. இருந்தாலும், ஆண்டவனிடம் காரைக்கால் அம்மையாரைப் போல் பக்தி செலுத்தி அதற்கேற்ற முறையில் வாழ்க்கை முறையை வகுத்துக் கொள்வது இந்தக் காலத்தில் முடியாது. ஓர் இளம் பெண் - அழகானவள் - துணையற்றவள்-ஒவ்வொரு ஊராகச் சென்று கொண்டிருந்தால் ஆபத்துக்கள் வருவது நிச்சயம். ’துணையில்லாதவள்’ என்னும் போதே சமூகம் அவளைச் சாதாரணமாகப் பார்ப்பதில்லை. அனுதாபத்துடன் பார்க்கிறது. சுய நலத்துடன் பார்க்கிறது என்று கூடச் சொல்லலாம். ஆண்டவனிடம் செலுத்தும் பக்திக்குச் சமமாக ஒன்று இருக்கிறது. நம்மால் முடிந்தவரை பிறருக்கு உதவிகள் புரிவது. பிறர் இன்னல்களை நம்முடைய-தாகப் பாவித்து அவர்களுக்குச் சேவை புரிவது. இதிலே மனசுக்கு மகத்தான ஆறுதல் கிடைக்கும். அதற்கு உதாரணமாக நான் இருக்கிறேன். மனைவியை இழந்து பதினைந்து வருஷங்கள் ஆயின. இருந்தும் எனக்கு மனசிலே ஆறுதல் இருக்கிறது. வாழ்க்கையில் இன்பம் இருக்கிறது. காரணம் பிறருக்குச் சேவை செய்வது என் வாழ்க்கையின் லட்சியமாக இருப்பதால் தான்..."
பவானி பணிவுடன் எழுந்து நின்றாள். "டாக்டர்! அன்றொரு நான் என்னிடம் ஏதோ பேச ஆசைப் படுவதாகக் கூறினீர்கள் ....."
”அதைத் தான் கேட்க வந்தேன் அம்மா. நாகராஜனிடமே இதைப் பற்றிக் கேட்க இருந்தேன். அவர் ஊரிலேயே இருப்பதில்லை. ராதாவின் கல்யாணத் தன்று அவரைப் பார்த்தேன். மறுபடி பார்க்க முடியவில்லை. சுமதிக்கு ஜுரம் வந்த போது நீங்கள் நர்ஸாகப் பணி புரிந்தது என் மனத்தை விட்டு நீங்கவில்லை. தமையன் குழந்தையைக் காப்பாற்றி விட்டீர்கள். ஆனால் இம் மாதிரியான சேவையைப்பெற எத்தனையோ குழந்தைகள், பெரியவர்கள், தாய்மார்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஏன் ’நர்ஸ்' தொழிலுக்குப் படிக்கக் கூடாது?"
ஸ்ரீதரன் தாம் சொல்ல வந்ததைச் சொல்லி விட்டார் பவானி கொஞ்ச நேரம் மெளனத்தில் ஆழ்ந்திருந்தாள்.
தமையனின் குலவிளக்கு அணையாமல் இருக்க வேண்டும் என்று அன்று நினைத்தாள் அவள். அம்மாதிரி எத்தனை குலவிளக்குகள், தாய்மார்கள். குடும்பத் தலைவர்கள் ஆஸ்பத்திரிகளில் வியாதியுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள்? ஒவ்வொருவரும் உயிர் வாழ வேண்டும் என்ற ஆசையிலே நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்களுக்குச் சேவை செய்வது எவ்வளவு மகத்தானது என்று சிந்தித்துப் பார்த்தாள் பவானி.
"டாக்டர்! அண்ணாவிடம் கேட்டுச் சொல்கிறேன் . அதற்கும் நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டாள் அவள்.
டாக்டர் ஸ்ரீதரன் காரில் வீட்டுக்குத் திரும்பும் போது மன நிறைவுடன் திரும்பினார். பவானியைப்பற்றி ஓர் உயர்ந்த எண்ணம் அவர் மனத்தில் ஏற்பட்டது.

