மாமரமும் மாங்கனியும்
ஒரு தோட்டம் இருக்கிறது. அதில் உயர்ந்த ஜாதி மாமரம் ஒன்று உண்டு. அம்மரத்தில் அபூர்வமாக அந்த வருஷம் நாலைந்து பழங்கள் தான் பழுத்தன. காய்கள் சிறியவையாக இருந்த முதற்கொண்டே மரத்தின் சொந்தக்காரர் அந்தப் பழத்தின் சுவையை அனுபவிக்க ஆவலுடன் இருக்கிறார். அணிற் பிள்ளைகள் கடித்துப் போடாமல் பார்த்துக் கொள்கிறார். காய்கள் மஞ்சள் நிறம் காணும் போது கட்டும் காவலும் அதிகமாகிறது. கடைசியாகப் பழம் சாப்பிடுவதற்குத் தயாராக இருப்ப தாகத் தோட்டக்காரன் கூறுகிறான் , அவன் பறித்து வந்து கொடுத்த பழங்களைக் கடவுளுக்குப் படைத்து விட்டுத் தான் அவர் உண்கிறார். அதன் சுவையைப் பூராவும் அவரால் அனுபவிக்க முடிகிறது.
இதைப் போலத்தான் இல்லற வாழ்வும் இருக்கிறது. மகனோ, மகளோ , தகுந்த வயதை அடைந்ததும் பெற்றோர் மணமுடித்து வைக்கிறார்கள். காதலனும் காதலியும் மனம் விட்டு ஒருவரோடொருவர் பேசுவதற்குச் சட்டென்று பெரியவர்கள் சந்தர்ப்பம் அளிப்பதில்லை. கல்யாணம் முடிந்தவு டன் ஆடிக்கு மருமகனை அழைக்கிறார்கள். பிறகு தீபாவளி வருகிறது. பின்னர் தைப்பொங்கல் வருகிறது. கணவனும் மனைவி யும் படிப்படியாக மனம் விட்டுப் பழகுகிறார்கள். அன்பு நிதானமாக மாம்பழத்தின் சுவையைப் போல வளருகிறது.
ராதாவும் மூர்த்தியும் கல்யாணம் பண்ணிக்கொண்ட விதமே அலாதியானது. பத்துப் பன்னிரண்டு வருஷங்கள் தம்பதிகள் பழக வேண்டிய முறையில் ஆறே மாதங்களில் அவர்கள் பழகினார்கள்; பேசினார்கள். 'சீ! வாழ்க்கை என்பது இதுதானோ? இதற்குத்தான் கல்யாணம் என்கிற கால்கட்டைக் கட்டிக் கொண்டோமா?' என்று மூர்த்தி பல தடவைகள் நினைத்தான்.
ராதாவுக்கும் அவனுக்கும் கல்யாணமாகி ஏழெட்டு மாதங்களுக்குள் மூர்த்தியின் நடத்தையில் பல மாறுதல்களைக் கண்டாள் ராதா. மாதம் அவன் சம்பளத்துக்கு அந்த வீட்டில் செலவு இல்லை. அவனுடைய தேவைகள் அனைத்தையும் ராதா கவனித்துக் கொண்டாள். அவனுக்கென்று பிரத்யேகமான அறை. அந்த அறைக்கு அடுத்தாற் போல் ஸ்நானம் செய்ய அறை இருந்தது. மாடியிலேயே சகல வசதிகளும் நிரம்பி இருந்தன. சாப்பிடும் போது சில நாட்களில் மூர்த்தி கீழே வருவான். அவன் அதிகமாகத் தன் மைத்துனர் ஸ்ரீதரனுடன் பேசுவதில்லை. இருவரும் வெளியே செல்லும்போது தோட்டத்தில் சந்தித்துக் கொள்வார்கள்.
”ஆபீசுக்குக் கிளம்பியாயிற்றா?" என்று சிரித்த வாறு ஸ்ரீதரன் கேட்பார். மூர்த்தி புன்னகையுடன் தலையை ஆட்டிவிட்டுப் போய்விடுவான் .
இப்படியே ஒரு வருஷம் ஆயிற்று.
மூர்த்தியின் நடத்தையில் அவ்வப்போது சில மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன. அடிக்கடி பம்பாய்க்கும், கல்கத்தாவுக்கும் அவன் பணம் அனுப்பி வருவது ராதாவுக்குத் தெரிந்தது. 'அங்கே உறவினர் யாருமே இல்லையே, இவர் யாருக்குப் பணம் அனுப்புகிறார்?' என்று யோசித்துப் பார்த்தாள் அவள். மூர்த்தி குளிப்பதற்குப் போயிருந்த போது அவன் சொக்காய் ஜேபியில் இருந்த சில முக்கியமான காகிதங்களை எடுத்துப் பார்த்தாள். நாலைந்து மணியார்டர் ரசீதுகள் இருந்தன. பம்பாய்க்கு இரண்டும் கல்கத்தாவுக்கு மூன்றும் அனுப்பப் பட்டிருந்தன. பம்பாயிலிருந்து வந்த ரசீதுகளில் தமயந்தி என்றும் ரோகிணி என்றும் கையெழுத்துக்கள் காணப்பட்டன. கல்கத்தாவில் ஒரு புடவைக் கடையின் பெயர் மற்றொரு ரசீதில் காணப்பட்டது. இன்னொன்றில் நகைக் கடையின் பெயர்.
ராதா பிரமை பிடித்தவள் போல் நின்றாள். தன்னுடைய படிப்பு. அழகு. சாதுர்யம் யாவும் ஒரு சூதாடியிடம் பணயம் வைக்கப்பட்டது போல இருந்தது. வெளியூர்களிலும் இவருக்குப் பெண்களிடம் சிநேகமா?
ராதா தன்னைச் சுதாரித்துக்கொண்டாள். அவசரப் பட்டு வெளியே சொன்னால் விஷயம் ஆபாசமாகிவிடும். அவர் போக்கில் விட்டுத் திருப்ப வேண்டும் என்று தீர்மானித்தாள்.
அன்று இரவு மூர்த்தி வீடு திரும்பும் போது மணி பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டது. சுவாமிநாதன் ”உன் புருஷனை இன்னும் காணவில்லையே? எங்கே போயிருக்கிறான்?" என்று ராதாவை விசாரித்தார்.
"எங்கே போனாரோ, எனக்கு அதெல்லாம் ஒன்றும் தெரியாது. உங்களுக்குத் தூக்கம் வந்தால் போய்த் தூங்குங்கள்."
ராதாவுக்குத் திரும்பத் திரும்ப காலையில் பார்த்த ரசீதுகளின் நினைவே வந்தது. சபலம் நிறைந்த ஓர் ஆணின் மனத்தைப் பற்றிப் பெண்ணால் என்ன புரிந்து கொள்ள முடியும்? வண்டின் குணத்தை மலர்கள் புரிந்து கொண்டிருந்தால், மறுநாள் அந்த வண்டைத் தங்களிடம் அணுக விடுமா என்ன?
கடைசியாக மூர்த்தி வீடு திரும்பினான். நேராகத் தன் அறைக்குள் சென்று சோபாவில் உட்கார்ந்தான் அவன்.
வாசற்படியில் நின்று அவனைப் பார்த்து. ”என்ன. சாப்பிட வருகிறீர்களா?" என்று மட்டுமே கேட்டாள் ராதா.
அவன் தன் இரு கைகளால் தலையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தி-ருந்தான். பதில் ஒன்றும் பேசவில்லை .
ராதா உள்ளே வந்தாள்.
“என்ன இது? இரவு பன்னிரண்டு மணி வரையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தால் என் அண்ணா என்ன நினைத்துக் கொள்ள மாட்டார்? நாம் இருக்கிறது அவர் வீட்டில் ஞாபகமிருக்கிறதா?" என்று கேட்டாள்.
"நீ சொன்ன பிறகுதான் தெரிகிறது. யார் வீட்டில் இருக்கிறோமென்று, ஏதேது பேச்சு ஜோராக வருகின்ற து?"
கணவனுக்குக் கோபம் வந்திருக்கிறதென்று புரிந்து கொண்டாள் ராதா. சட்டென்று தணிந்து போனாள். "ஆமாம் உங்களுக்கு என்ன கஷ்டம்? ஏன் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறீர்கள்?" என்று கேட்டுச் கொண்டே சோபாவின் பிடியில் உட்கார்ந்து கொண்டாள் அவள்.
"எப்படி?" என்று ஒன்றும் புரியாதவனைப் போலக் கேட்டான் அவன்.
”முதலில் சாப்பிட வாருங்கள். அப்புறம் பேசலாம்.”
சாப்பிட்ட பிறகு, இருவருமே முன்பு பேசியவற்றை அடியோடு மறந்து போனார்கள். தமயந்தியும் ரோகிணியும் யார்? என்று அவனைக் கேட்டுவிடப் பல முலைகள் முயன்றாள் ராதா. கேட்டிருக்கலாம்; கேட்பதில் தவறில்லை. ஆனால் வீட்டிலே சுவாமி நாதன் இருந்தார். மாடியின் இன்னொரு பக்கத்தில் ஸ்ரீதரன் படுத்திருந்தார். தோட்டத்தில் குடிசையில் ராமய்யா படுத்திருந்தான். இவர்கள் எல்லோருக்கும் இந்த விஷயங்கள் தெரிந்து விட்டால் என்ன செய்வது?
ஒன்றுக்குப் பத்தாகக் கற்பனை கலந்து அவை கோடம்பாக்கம் முழுவதும் பரவுமே! கௌரவமும் கண்ணியமும் வாய்ந்த டாக்டர் ஸ்ரீதரனின் தங்கை புருஷன் ஸ்திரீலோலன் என்று எல்லோரும் ஏசுவார்களே என்றுதான் ராதாவின் வாய் அடைத்துக் கிடந்தது. உள்ளம் குமுற ஆரம்பித்தது. மூர்த்தி தூங்கிய பிறகு கூட அவளுக்குத் தூக்கம் வரவில்லை. வெகு நேரம் வரையில் விழித்திருந்து விட்டு தூங்கப் போனாள் ராதா.
அதிகாலையில் படுக்கையை விட்டு எழுந்து கீழே இறங்கி வந்த ஸ்ரீதரன், சுவாமி நாதனைப் பார்த்து ”இரவு மூர்த்தி எத்தனை மணிக்கு வந்தான்? விளக்கு வெகு நேரம் வரையில் எரிந்து கொண்டிருந்ததே?”, என்று விசாரித்தார்.
சுவாமிநாதன் தயக்கத்துடன் பேசாமல் இருந்தார். பிறகு மெதுவாக “நான் தூங்கி விட்டேன். பதினொன் றரை மணிக்குமேல் இருக்கும். நாலைந்து மாசங்களாக அந்தப்பிள்ளை இப்படித்தான் கண்ட வேளைகளில் வருகிறான்" என்றார்.
ஸ்ரீதரன் சிறிது நேரம் யோசித்தபடி நின்றார். ”இதையெல்லாம் நாம் காதில் போட்டுக் கொண்டால் நன்றாக இராது. பார்க்கலாம்..." என்று கூறியவாறு தம் அலுவல்களைக் கவனிக்கச் சென்றார்.

