கபடச் சிரிப்பு

சுமதி அன்று பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போதே சோர்வுடன் வந்தாள். நேராக மாடிக்குச் சென்று கட்டிலில் படுத்து விட்டாள் அவள். மணி ஐந்தரைக்கு மேல் ஆகியும் சுமதி பள்ளிக்கூடத்திலிருந்து வரவில்லையே என்ற கவலையினால் பவானி தோட்டக்காரன் கோபாலனை விசாரித்தாள். மாலை நாலரை மணிக்கே சுமதி வந்து விட்டதாகக் தெரிவித்தான் அவன். கோமதி துணிமணிகள் வாங்க கடைத்தெருவுக்குச் சென்றிருந்தாள். பவானி. உள்ளம் வாட மாடியில் சென்று பார்த்தாள் அங்கே கட்டிலில் படுத்திருந்தாள் சுமதி. மெதுவாக அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள் பவானி. உடம்பு நெருப்பாகச் சுட்டது. லேசான முனகலுடன் சுமதி கண்ணை மூடிப் படுத்திருந்தாள். 'நாலைந்து நாட்களாகச் சரிவரச் சாப்பிடாமல். எதிலும் உற்சாகம் இல்லாமல் அவள் இருந்தது பவானிக்கு அப்பொழுதுதான் நினைவுக்கு வந்தது. இதைப்பற்றி கோமதியிடம் அவள் இரண்டு மூன்று தடவைகள் சொன்னாள். "எல்லாம் சாப்பிடுவாள் இதற்கெல்லாம் ஒரு வைத்தியமா?" என்று கூறிவிட்டு கோமதி அலட்சியமாக இருந்து விட்டாள்.

பவானி, கட்டிலில் கிடந்த போர்வையை எடுத்து உதறிச் சுமதிக்குப் போர்த்தி விட்டாள்.

கீழே சென்று சிறிது காப்பியைச் சுட வைத்து எடுத்து வந்தாள். மெதுவாக, “சுமதி! சுமதி! இதைச் சாப்படு அம்மா. உனக்கு உடம்புக்கு என்ன?" என்று கேட்டாள்.

யாரோ கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போல் இருந்தது சுமதி பேசிய வார்த்தைகள். "அத்தை! எனக்குத் தலையை வலிக்கிறது. எங்கோ போகிற மாதிரி இருக்கிறது அத்தை. டாக்டரை வர வழையேன்...."

பவானி அவசரமாக டாக்டர் ஸ்ரீதரனைப் போனில் கூப்பிட்டாள். ”குழந்தைக்கு ஜுரம் அடிக்கிறது. நூற்று மூன்றுக்கு மேலே இருக்கலாம். உடனே வர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டாள்.

காலையில் டாக்டரிடம் சுவாமி நாதன் ராதாவின் விஷயத்தைக் கூறினார். அன்று மாலையே அவர்கள் வீட்டுக்கு ராதா. மூர்த்தியை யாரும் எதிர்பாராத விதமாக அழைத்து வந்தாள்.

"அண்ணா ! இவர் தான் மூர்த்தி என்கிறவர்" என்று கூறி, அவன் வேலை பார்க்கும் அலுவலகத்தைப் பற்றியும் தெரிவித்தாள். டாக்டர் ஸ்ரீதரன் மூர்த்தியை ஒரு கணம் நிதானித்து நிமிர்ந்து பார்த்தார்.

'உட்காருங்கள். நீங்கள் இருப்பது சென்னையிலா? பெற்றோர் எங்கே இருக்கிறார்கள்?" என்றும் விசாரித்தார்.

இதற்குள் சுவாமிநாதன் ஆவலே உருவாக அவசரத்துடன் ஹாலுக்கு வந்தார். ஆசையுடனும், ஆர்வத்துட னும் தான் வளர்த்த ராதாவின் கரம்பிடிக்கப் போகும் புருஷனைப் பார்த்தார். டாக்டர் ஸ்ரீதரனைப் பார்த்துப் புன்முறுவல் பூத்த மூர்த்தி, சுவாமிநாதனைப் பார்த்த தும் முகத்தைச் சுளித்துக் கொண்டான்.

"ஆமாம், உங்கள் குடும்பத்தில் பெரியவர்கள் இருக்கிறார்களா? கல்யாண விஷயமாக யாரைக் கலந்து பேச வேண்டும்? விலாசம் கொடுங்கள். எழுதுகிறேன்" என்று கேட்டார் ஸ்ரீதரன்.

மூர்த்தி ஒரு மாதிரியாகச் சிரித்தான்.

"எனக்குத் தாய் தந்தை இல்லை. மாமாவும் மாமியும் பசுமலையில் இருக்கிறார்கள். அவர்கள் தான் நெருங்கிய உறவினர்கள்."

"சரி, அவருக்கே எழுதுகிறேன்."

"அதுவும் அவசியமில்லை. மாமா அநேகமாக என் விவகாரங்களில் தலையிட மாட்டார். உனக்குப் பிடித்த பெண்ணாக வந்தால் சொல். கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று தான் சொல்லுவார்."

"அப்போ உங்கள் மனசுக்கு எங்கள் ராதாவைப் பிடித்திருக்கிறது என்று சொல்லுங்கள்" என்றார் டாக்டர் ஸ்ரீதரன். சிரித்துக் கொண்டு எதிரில் உட்கார்ந்திருந்த ராதாவின் முகம் வெட்கத்தால் சிவந்தது. மேஜை மீது சிற்றுண்டி வைக்கப்பட்டிருந்தது.

நல்ல இடமாகப் பார்த்துக் கல்யாணம் பண்ண வேண்டும். தகுந்த இடத்தில் அவளை ஒப்புவித்து விட வேண்டும் என்றெல்லாம் சுவாமிநாதன் மனத்தில் ஓயாமல் நினைத்துக் கொண்டிருந்தவர். வாயைத் திறந்தும் பல முறைகள் சொல்லி இருக்கிறார். கண் இமைப்பதற்குள் ராதாவுக்குக் கல்யாணம் நிச்சயமாகி விட்டது. அடுத்த பத்து தினங்களுக்குள் அவளுக்குக் கல்யாணமாகி விடும். ஆனால் ராதா, மாமியார் வீடு என்று போகத் தேவை இல்லை. மூர்த்தி அவர்களுட னேயே இருந்து விடுவான் என்றெல்லாம் சுவாமிநாதன் நினைத்துக் கொண்டார். ராதாவும் அவர் கணவனும் தன்னுடனேயே இருப்பார்கள் என்பதில் அவருக்கு பரம திருப்தி.

"பலகாரத்தைச் சாப்பிடுங்கள்" என்று உபசரித்தார் சுவாமிநாதன்.

ஹாலில் அவர்கள் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தான் பவானி, டாக்டர் ஸ்ரீதரனைப் 'போனில்' அழைத்தாள் அவர் அவசரமாக எழுந்து உள்ளே சென்று தம் கைப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே புறப்பட்டார்.

நாகராஜன் வீட்டிலிருந்து ' போன்' வந்திருக்கிறது. சுமதிக்கு ஜுரமாம். பவானிதான் 'போன்’ பண்ணியிருக்கிறாள். நான் அப்படியே இன்னும் சில நோயாளிகளைப் பார்த்துவிட்டு வருகிறேன்" என்று கூறி, மூர்த்தியிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினார் டாக்டர்.

'பவானி' என்கிற பெயர் மூர்த்தியின் மனத்தில் ஒரு வித அதிர்ச்சியைத் தந்தது. சாப்பிட்டுக் கொண்டிருந்த காப்பியை பாதி அப்படியே வைத்துவிட்டுச் சிறிது யோசித்தான். சென்னை நகரிலே எத்தனையோ பவானிகள் இருப்பார்கள். இதென்ன பைத்தியக்காரத் தனம் என்றுகூட அவன் நினைத்தான். இருந்தாலும் அந்தப் பெயர் அவன் மனத்தில் ஒருவித அச்சத்தையும் சலனத்தையும் உண்டாக்கியது.

செல்வமும் சீரும் நிரம்பிய இந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பாக ஏதாவது தடங்கல் நேர்ந்து விடுமோ என்று அஞ்சினான் மூர்த்தி.

"என்ன, யோசனை பலமாக இருக்கிறது?" என்று கேட்டுக் கொண்டே ராதா அவன் அருகில் வந்து நின்றாள். சுவாமிநாதன் ஏதோ அலுவலாக எழுந்து உள்ளே சென்று விட்டார்.

மூர்த்தியின் கம்பீரமான உருவத்தைப் பார்த்துப் பரவசமெய்தினாள் அந்தப் பேதைப் பெண். அவனுடைய ஆழ்ந்த பார்வையும், கபடச் சிரிப்பும் அவள் மனதுக்குப் பிடித்துப் போயிற்று. அவன் மேல் உண்மையான அன்பு - அதாவது காதல் - ஏற்பட்டது

அவளுக்கு.

காதலர்கள் இருவரும் அந்த வீட்டுத் தோட்டத்து ஊஞ்சலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள் வெகு நேரம்.

நாகராஜனின் வீட்டில் சுமதிக்கு டாக்டர் ஸ்ரீதரன் வந்து பார்த்தபோது ஜுரம் அதிகமாகத்தான் இருந்தது. மருந்து கொடுத்துவிட்டு. ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளும்படி பவானியிடம் கூறினார் அவர்.

முதலில் சாதாரண ஜுரம் என்று தான் எல்லோரும் நினைத்திருந்தார்கள். நாலைந்து நாட்களுக்கு அப்புறம் ஜுரத்தின் வேகம் அதிகமாயிற்று. தன் நினைவை இழந்து படுக்கையில் கிழித்த நார் போல் கிடந்த சுமதியைப் பவானியும், கோமதியும் நாகராஜனும் கவலையுடன் பார்த்தார்கள்.

ஸ்ரீதரன் 'டைபாய்ட்' ஜூரமாக இருக்கலாம் என்று அபிப்பிராயப் பட்டார். கோமதி வெல வெலத்துப் போய்விட்டாள். அவளுக்குத் தலையைச் சுற்றி மயக்கம் வரும் போல் ஆகி விட்டது.

"அதனால் ஒன்றும் பயமில்லை. மூன்றாவது வாரம் இறங்கிவிடும். பயப்படாதீர்கள்" என்று தைரியம் கூறினார் டாக்டர்.

பவானியின் மனத்தில் சொல்ல முடியாத வேதனை நிரம்பியிருந்தது. வியாதிக்-காரர்களைப் படுக்கையில் படுக்கவைத்துச் சிசுருஷை செய்யவே அவள் பிறந்தவள் போலும்! கணவன் வாசுவைப் பல மாதங்கள் படுக்கையில் வைத்துப் பணிவிடை செய்தாள். அதன் பிறகு கோமதியை மூன்று மாதங்கள் வரையில் கவனித்துக் கொண்டாள். இப்பொழுது சுமதி கிடக்கிறாள். "இந்தப் பாழும் கையினால் யாருக்கும் ஒன்றும் நேரக் கூடாதே!" என்று பவானி மனதுக்குள் குமைந்து போனாள்.

அப்பொழுது இரண்டாவது வாரம் ஆரம்பம். ஜூரம் மும்முரமாக இருந்தது. நோயாளியின் அருகில் அருந்து அல்லும் பகலும் பணி புரிய ஒருவர் தேவை என்பது டாக்டர் ஸ்ரீதரனின் அபிப்பிராயம். இதை அவர் கூறிய போது நாகராஜனும் கோமதியும் ஒரு 'நர்ஸை' ஏற்பாடு செய்யும்படி அவரிடம் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், ஜுரவேகத்தில் பிதற்றும் போது கூட அந்தப் பெண், ”அத்தை அத்தை” என்று அழைப்பதைக் கவனித்த டாக்டர். அருகில் நிற்கும் பவானியைப் பார்த்தார். "ஏனம்மா குழந்தை உங்களிடம் அதிகப் பிரியம் போல் தோன்றுகிறதே, உங்களால் அவளைக் கவனித்துக்கொள்ள முடியுமா? இல்லை. ஆஸ்பத்திரியில் சேர்த்து விடலாமா?" என்று கேட்டார்.

பவானி நீர் நிறைந்த கண்களுடன் அவரை ஏறிட்டுப் பார்த்தாள். "நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் என்னவெல்லாம் செய்யச் சொல்கிறீர்களோ, அதன் படியே நடந்து கொள்கிறேன். குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டாம்..." என்றாள்.

தன் தமையனின் குலவிளக்கு அணையாமல் இருக்க வேண்டும் ; அந்த வீட்டிலே இன்பம் நிறைய வேண்டும் என்கிற எண்ணம் ஒன்றே பவானியை நர்ஸாக மாற்றி யது. படித்து அவள் அந்தத் தொழிலுக்கு வரா விட்டா லும், மனத்தில் இருந்த ஆவப் அவளை அத் தொழிலைச் சீக்கிரம் கற்றுக் கொள்ளும்படிச் செய்தது.

பவானி நோயாளியின் அறைக்கு அடுத்த தாழ்வாரத்தில் தனக்கென்று படுக்கை அமைத்துக் கொண்டாள். மாடியை விட்டு அவள் கீழே போவதில்லை. பாலுவைக் கூடப் பாராமல் சுமதியின் அருகிலேயே இருந்து கவனித்து வந்தாள்.