ராதாவின் கல்யாணம்
ராதாவின் கல்யாண வைபவங்கள் அமர்க்களமாக நடைபெற்றன. பசுமலையிலிருந்து கல்யாணராமன். டாக்டர் ஸ்ரீதரனுக்கு கடிதம் எழுதியிருந்தார். 'பெண்ணும் பிள்ளையும் மனம் ஒப்பிக் கல்யாணம் செய்து கொள்கிறபடியால், பெரியவர்களாகிய நாம் அதை உடன் இருந்து நடத்த வேண்டியது ஒன்று தான் செய்யக் கூடியது. மிகவும் சந்தோஷம். நாங்கள் அவசியம் வருகிறோம்'- என்று கடிதம் வந்தது. பிள்ளையைச் சேர்ந்தவர்களில் பெரியவர்களாகச் சிலர் இருக்கிறார்கள். பரவாயில்லை என்று சுவாமிநாதனுக்கு ஒரு மகிழ்ச்சி .
இந்தக் கல்யாண ஏற்பாட்டில் நாகராஜன் வீட்டார் கலந்து கொண்டிருப்பார்கள். ஆனால், எத்தனையோ இரவுகள் பவானி, டாக்டர் ஸ்ரீதரனுடன் போனில் பேசினாள்.
'குழந்தை தூங்காமல் ரொம்பவும் சிரமப்படுகிறாள். என்ன செய்வது?' என்று யோசனை' கேட்டிருக்கிறாள். அவர் கூறியபடியே செய்ததாகவும் பதில் கூறுவாள் பவானி. இந்நிலையில் கோமதியும் நாகராஜனும் மனமிடிந்து உட்கார்ந்திருந்தார்கள். யார் வீட்டில் என்ன நடக்கிறது என்பதே இவர்கள் வீட்டுக்குத் தெரிய வில்லை.
மூன்றாவது வாரம் ஆரம்பித்த பிறகு சுமதியின் நிலையில் மாறுதல் ஏற்பட்டது. ஜுரம் தணிந்து கொண்டே வந்தது. கண்ணை விழித்துத் தன் அருகில் நிற்பவர்களைப் பார்த்தாள் அந்தப் பெண். ஜன்னல் ஓரமாக நின்று கவனித்த பாலுவை அவள் கண்கள் கவனித்தன.
"அத்தை, அத்தை !" என்று பலஹீனமான குரலில் கூப்பிட்டாள் அவள்.
"பாலுவை நான் இனிமேல் ஒன்றும் சொல்ல மாட்டேன் அத்தை. அவன் மனசை நோக வைத்தேன், அதற்கு அனுபவித்து விட்டேன்" என்றாள். பெரிய பாட்டி மாதிரி. அந்தப் பன்னிரண்டு வயசுப் பெண்.
பாலுவிற்கு அறைக்குள் ஓடிப் போய்ச் சுமதியின் முகத்தைப் பரிவுடன் தடவிக் கொடுத்து ஆறுதல் கூற வேண்டும் என்று ஆசை. இரண்டடி வைத்து முன்னால் வந்தவனைப் பவானி தடுத்தாள். பாலு! இந்த அறைக்குள் யாரும் வரக்கூடாது அப்பா! ஒருத்திக்கு வந்து படுகிற பாடு போதும்" என்றாள்.
நோயாளியைக் கவனிக்க வந்த டாக்டர். பவானி சொல்வதைக்கேட்டுச் சிறிது அப்படியே நின்றார். மூன்று வாரங்கள் வரையில் கருமமே கண்ணாக இருந்த பவானியைக் கவனித்தார் ஸ்ரீதரன். கொழுகொழுவென்றிருந்த அவள் கன்னங்களின் திரட்சியில் சிறு வாட்டம் கண்டு சுருங்கியிருந்தது. அவளுடைய கருநீல விழிகள்
தூக்கமின்மையால் சிவந்திருந்தன.
"பவானி! இனிமேல் நீங்கள் உங்கள் உடம்பைக் கவனித்துக் கொள்ள வேண்டும். நோயாளி தூங்கும் போது நீங்கள் விழித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நன்றாகத் தூங்கி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்" என்றார்.
"குழந்தை இனிமேல் பிழைத்து விடுவாள் இல்லையா டாக்டர்?" என்று கேட்டாள் பவானி.
"பிழைத்து விடுவாள் அம்மா. உங்கள் கைராசி ரொம்பவும் நல்லது."
புன்முறுவலுடன் இப்படிக் கூறிய டாக்டரின் முகத்தைப் பார்த்தாள் பவானி. தெளிவான அந்த முகம் ஏதோ யோசனையில் ஆழ்ந்து இருக்கிற மாதிரி தோன்றியது.
அங்கிருந்த ’பேஸினி'ல் கை அலம்பிக் கொண்டே பவானி கொடுத்த துண்டை வாங்கி கைகளை துடைத்து கொண்டார் அவர்.
பொறுமையும் அன்பும் அழகும் உருவான அந்தப் பெண்ணினுடைய சோகச் சித்திரத்தை அவர் மலர் ஆராய்வதில் சிறிது நேரம் சென்றது. இந்தப் பெண்ணின் வாழ்க்கை இப்படியே கழிய வேண்டியது தானா? தமையன் வீட்டுக்கு உழைக்கிறாள். தனக்காக இல்லா பிறருக்காக உழைக்கும் உழைப்பில் இன்பம் காணுகிறாள். பவானியின் உள்ளம் எவ்வளவு விசாலமானது? மாசு மருவற்று இருக்கும் இந்த உள்ளத்தில் 'தனக்கு' என்கிற எண்ணமே இருக்காதா? எத்தனை பெண்கள் இந்தப் பவானியைப்போல நம் நாட்டில் இருக்கிறார்கள்? பெண் என்றால் தியாகம் என்பது தான் பொருளோ?'
கையை மறுபடி மறுபடி அழுத்தித் துடைத்துக் கொண்டே நிற்கும் ஸ்ரீதரனின் முகத்தைப் பார்த்த பவானி, "டாக்டர்!" என்று அழைத்தாள்.
"பவானி உங்களுடன் நான் சாவகாசமாகச் சில! விஷயங்கள் பேசவேண்டும். ஒன்று சொல்ல மறந்து விட்டேன், அடுத்த திங்கட்கிழமை ராதாவுக்கு கல்யாணம். பத்திரிகை வரும். நீங்கள் எல்லோரும் வரவேண்டும். அதற்குள் சுமதிக்கு உடம்பு சரியாகிவிடும். ஆனால் படுக்கையை விட்டு எழுந்திருக்கக்கூடாது”, என்றார் ஸ்ரீதரன்.
அதன் பிறகு இரண்டு மூன்று நாட்கள் வரையில் அவர் வரவில்லை. கல்யாணப் பத்திரிகை மட்டும் வந்தது. மேஜைமீது கிடந்த அந்தப் பத்திரிகையை எடுத்துப் பார்த்தாள் பவானி.
"சௌ. ராதாவை.... சி. சாம்பமூர்த்திக்கு"
விவாகம் செய்து வைப்பதாக இருந்தது. பிள்ளையின் காலஞ் சென்ற தகப்பனாரின் பெயர் மட்டும் காணப் பட்டது. இன்னொரு முக்கியமான விஷயத்தைப்பற்றிக் குறிப்பிட வேண்டும். மூர்த்தி வேலை பார்த்து வந்த ஸ்தாபனத்தைப் பற்றிப் பவானிக்கு ஒன்றும் தெரியாது. ஆகவே சாம்பமூர்த்தியும் மூர்த்தியும் ஒருவர் தான் என்கிற சந்தேகம் பவானிக்கு ஏற்படவே இல்லை.
அன்று மாப்பிள்ளை அழைப்பு . வீட்டிலே எதுவாக இருந்தாலும் ஸ்ரீதரன் டிஸ்பென்சரிக்குப் போகாமல் இருக்க மாட்டார். அன்று காலையிலும் அவர் டிஸ்பென்சரிக்குப் போகும் போது நாகராஜன் வீட்டுக்கு வந்தார். அவசரமாகக் கூடத்தில் நின்று கொண்டே. "வீட்டில் யாரும் பெண்கள் பெரியவர்களாக இல்லை. இருந்தால் வந்து அழைத்திருப்பார்கள். நீங்கள் எல்லோரும் அவசியம் கல்யாணத்துக்கு வர வேண்டும்" என்று கூறிவிட்டுச் சென்றார்.
இரவு ஏழு மணிக்கு மேல் மாப்பிள்ளையை ஊர்வலமாகக் காரில் அழைத்து வந்தார்கள். நாகராஜன் வீட்டு வழியாக ஊர்வலம் வருவது தெரிந்ததும், பவானி கோமதி இருவரும் மாடியிலிருந்து ஊர்வலத்தைப் பார்த்தார்கள். ஊர்வலம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. அருகில் வரவர பவானி மணமகனைக் கூர்ந்து கவனித்தாள். பசுமலையில் சுமார் இரண்டு வருஷங்களுக்கு முன்பு பார்த்த மூர்த்தியேதான் இவன்!
”ஆஹா! மனித வாழ்க்கையில் தான் எத்தகைய அதிசயங்கள் நடைபெறுகின்றன. இதில் மூர்த்திக்கு ஏற்பட்ட அதிர்ஷ்டம் தான் என்ன? பணக்கார இடத்தில் படித்த- அழகிய- யுவதியைக் கைப்பிடிக்கும் பாக்கியம் இவனுக்கு ஏற்பட்டிருக்கிறது. எவ்வளவு அதிசயமான விஷயம்? டாக்டர் ஸ்ரீதரன் இந்த மாப்பிள்ளையை எங்கே தேடிப் பிடித்தார்?" என்றெல்லாம் எண்ணை வியந்தாள் பவானி.
"பவானி. மாப்பிள்ளை நன்றாகத்தான் இருக்கிறான்" என்று கோமதி தன் அபிப்பிராயத்தை தெரிவித்தாள்.
ஊர்வலம் மெல்ல நகர்ந்து போய்க் கொண்டிருந்தது. கூட்டத்தில் பார்வதி அம்மாளின் தலை தெரிந்தது . பசுமலையில் தன்னிடம் தாயை விட அன்பாக இருந்த அந்த அம்மாளைப் பார்த்துப் பேசவேண்டும் என்று பவானி ஆசைப்பட்டாள்.
கல்யாணராமன் ஸ்ரீதரனுடன் பேசிச் சிரித்தவாறு சென்றார். இடையில் ஜெயஸ்ரீ பட்டுப் பாவாடையும் தாவணியும் அணிந்து இவர்கள் வீட்டுக்கு வந்தாள். நேராக மாடிக்கு வந்து “மாமி , சுமதி எப்படி இருக்கிறாள்?" என்று விசாரித்தாள். அறைக்குள் எட்டிப் பார்த்து விட்டு, அடுத்த அறையில் உட்கார்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்த பாலுவைப் பார்த்தாள். பாலு முன்னைவிட இப்போது உயர்ந்து இருந்தான்.
"பாலு. எங்கள் வீட்டுக் கல்யாணத்துக்கு வாயேன்" என்று அழைத்த ஜெயஸ்ரீயை ஏறிட்டுப் பார்த்தான் அவன் . ஜெயஸ்ரீயும் வளர்ந்து தான் இருந்தாள்.
“உங்கள் வீட்டுக் கல்யாணத்திற்கு வந்தால் என்ன தருவாய் ஜெயஸ்ரீ?"
”ஆமாம்.குறும்பைப் பார். கல்யாணத்துக்கு வந்தால் என்ன கிடைக்கும்? லட்டும் பாயசமும் கிடைக்கும் ...... நாளைக்கு உனக்கும் சுமதிக்கும் கல்யாணம் ஆகும்போது எனக்கு என்ன தருவாய்?" பின்னலில் வைத்துப் பின்னப்பட்டிருந்த பட்டுக் குஞ்சலங்களை முறுக்கியபடி சிரித்துக் கொண்டே கேட்டாள் ஜெயஸ்ரீ.
குழந்தைகளின் பேச்சுக்கு அர்த்தம் கிடையாதுதான். இருந்தாலும் அறைக்குள் இவற்றைக் கேட்டுக் கொண் டிருந்த பவானிக்கு. ஜெயஸ்ரீ கூறியதைக் கேட்டதும் ஆனந்தம் பொங்கியது.
இதற்குள்ளாக ஜெயஸ்ரீயைக் காணவில்லை என்று ஊர்வலத்தில் யாரோ தேடினார்கள். சிறகடித்துப் பறந்து செல்லும் பட்டாம்பூச்சியைப் போல் துள்ளி ஓடும் ஜெயஸ்ரீயை ஜன்னல் வழியாகப் பாலு கவனித்தான். ஜெயஸ்ரீயை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ’நல்ல பெண்' என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் அவன்.

