செல்வப்பெண் ராதா

வக்கீல் வேதாந்தம் தம் வீட்டு அறையில் மேலும் கீழுமாக உலாவிக் கொண்டிருந்தார். பத்து தினங்களுக்கு முன்பு ஹோட்டல் வாசலில் ராதாவையும், மூர்த்தியையும் பார்த்த அவர். அதன் பிறகு ஒரு சினிமாவிலும் மெரினா கடற்கரையிலும், வேறொரு ஹோட்டலிலும் பார்த்து விட்டார். அந்தப் பிள்ளை யார்?" என்று எப்படியாவது விசாரித்துத் தகவல் சேகரிக்க முயன்றார். இதற்குள் ஊரில் ராதாவைப் பற்றிப் பல தினுசாகப் பேச்சுக்கள் அடிப்பட்டன. அதனால் மேலும் அவர் இதைப்பற்றி யாரிடமும் விசாரிக்கக் கூடாது என்று தீர்மானித்து. தாமே டாக்டர் ஸ்ரீதரனிடம் இதைப் பற்றிப் பேசி ஒரு ஏற்பாடு செய்யவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார். இதை அவர் தம் மகளிடம் கூறியதும், ”அப்படித்தான் செய்ய வேண்டும் அப்பா ! நீங்களே இதைப் பற்றி அவரிடம் சொல்லுங்கள். நான் கூறினால் அவ்வளவு நன்றாக இருக்காது. நீங்கள் வயதிலும், அனுபவத்திலும் பெரியவர். நீங்கள் சொல்வது தான் நல்லது" என்றாள் காமாட்சி.

வேதாந்தத்துக்கு அவள் கூறுவது சரியென்று தோன் றியது. ஆகவே காரில் டாக்டர் ஸ்ரீதரனின் வீட்டை நோக்கிக் கிளம்பினார் அவர், அங்கு அவர் போய்ச் சேர்ந்தபோது டாக்டர் வீட்டில் இல்லை. சுவாமி நாதன் மட்டுமே உட்கார்ந்திருந்தார். சில மாதங்களுக்கு முன் பார்த்தபோது அவர் தெம்பாகவும் திடமாகவும் காணப்பட்டார். திடீரென்று வயசு அதிகமாகி விட்டவர் போல் அவர் தோற்றத்தில் ஒரு மாறுதல் ஏற்பட் டிருந்தது. வேதாந்தத்தைப் பார்த்ததும் அவர் வாருங்கள். ரொம்ப நாளாயிற்று உங்களைப் பார்த்து" என்று வரவேற்று. அவரை உட்காரும்படி கூறினார்.

"எங்கே இப்படி? டாக்டரைப் பார்க்க வந்தீர்களா? வீட்டில் மகள் சௌக்கியந்தானே?" என்று விசாரித்தார் சுவாமிநாதன்.

" எல்லோரும் சௌக்கியமாகத்தான் இருக்கிறோம். டாக்டரைப் பார்க்க வேண்டும் என்றுதான் வந்தேன். சில விஷயங்கள் பேச வேண்டும்..."

”அவர் எங்கே வீட்டிலிருக்கிறார்? குடும்பப் பொறுப்பு ஒன்றையுமே அவர் வகிக்கிறதில்லை. ’நீ என்ன செய்கிறாய்? குடும்பத்துக்கு எவ்வளவு செலவாகிறது' என்றெல்லாம் கேட்பதில்லை. நானாகவே வரவு செலவை அவரிடம் ஒப்பித்தால் இருக்கட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்ன அவசரம் இப்போது என்கிறார்."

வேதாந்தம் யோசனையில் மூழ்கி உட்கார்ந்திருந்தார். பிறகு. ஆமாம். வயசு தங்கை ஒருத்தி வீட்டில் இருக்கிறாளே இதையெல்லாம் அவளைக் கவனிக்கச் சொல்லக் கூடாதா?" என்று கேட்டார்.

"ராதாவா? அந்தப் பெண், தான் ஒரு குடும்பத்தில் பிறந்தவள் என்றோ , அதைப் பற்றிய பொறுப்பு தனக்கு உண்டு என்றோ நடந்து கொள்ளவில்லை. இஷ்டப்படி வெளியில் போகிறதும், வருகிறதும்." சுவாமிநாதன் இவ்விதம் ராதாவைப் பற்றித்தானே அன்னியரிடம் கூறியதை நினைத்து மனதுக்குள் வருந்தினார்.

"அதைத்தான் கேட்க வந்தேன் ஐயா! வயசு வந்த பெண்ணை ஒரு இடத்தில் கல்யாணம் பண்ணிக் கொடுத்து விடவேண்டும் - வீட்டிலே அதைப் போற்றி வளர்க்க- அதாவது நாலும் தெரியும்படி வளர்க்க- எப்பொழுது ஒரு பெண் துணை இல்லையோ நாம் ஏன் அதைக் கன்னியாக வைத்துக் கொண்டிருக்க வேண்டும்?" வேதாந்தம், சிறிது உணர்ச்சி வசப்பட்டே பேசினார்.

"டாக்டருக்கு அந்த எண்ணமே இன்னும் ஏற்பட வில்லை. தம் மகள் ஜெயஸ்ரீயைப் போல் ராதாவும் ஒரு குழந்தை என்கிற நினைவு அவருக்கு."

வேதாந்தம் விஷயத்தைப் பச்சையாகக் கூறவில்லை. யாரோ ஒரு பிள்ளையுடன் அந்தக் குழந்தையைப் பார்த்தேன். ஒரு இடத்தில் மட்டும் இல்லை. பல இடங்களிலும் பார்த்தேன். என் மனசுக்கு ஒன்றும் சரி யாகத் தோன்றவில்லை.

சுவாமிநாதன் மௌனமாகவே உட்கார்ந்திருந்தார். அவர் மனத்தில் வேதனை நிறைந்திருக்கிறது. பேச முடியாமல் உணர்ச்சிகளை மனத்தில் புதைத்துக் கொண்டு அவர் உட்கார்ந்திருக்கிறார் என்பது வேதாந்தத்துக்குப் புரிந்தது.

“நான் இப்படிச் சொல்கிறேனே என்று வருத்தப் படாதீர்கள். டாக்டருடைய குடும்ப நண்பன் நான். அவரைச் சிறு பிராயத்திலிருந்து அறிந்தவன். இந்தக் குழந்தை ராதாவுக்கு காப்பிட்ட அன்று என் மனைவி வந்திருக்கிறாள் இந்த வீட்டுக்கு!"

“அப்படியெல்லாம் உங்களை நான் தவறாகப் புரிந்து கொள்ளவில்லை. மனசைச் சங்கடப்படுத்தும் விஷயமாக இருக்கவே எனக்கு வருத்தமாக இருக்கிறது. டாக்டர் வந்ததும் அவரிடம் கூறி ஏதாவது ஏற்பாடு செய்கிறேன்" என்றார் சுவாமிநாதன். வேதாந்தம் மனத்தில் இருந்த பாரம் நீங்கப்பட்டவராகக் கிளம்பிச் சென்றார்.

சுவாமிநாதன் அந்த வீட்டுச் சமையற்காரர் மட்டும் அல்ல. அந்தக் குடும்பத்தினரின் நம்பிக்கைக்குப் பாத்தரமான ஒரு நண்பர் அவர். வீட்டிலே பெண் துணை இல்லாமல் இருக்கையில் தாயும் தந்தையுமாக இருந்து. இரண்டு பெண் குழந்தைகளை வளர்த்து வருகிறவர். 'கல்லூரியில் சிறு சம்பவம் நடந்தாலும். தன்னிடம் ஒன்றுவிடாமல் கூறும் ராதாதான் எப்படி மாறிவிட் டாள். ஒவ்வொன்றையும் மறைக்க அவளுக்குச் சாமர்த் தியம் வந்து விட்டது. இப்படி மறைத்து வைத்துப் பாழும் பெண் ஏதாவது ஆபத்தில், மானக்கேட்டில் சிக்கிக் கொண்டுவிட்டால் என்ன பண்ணுவது? டாக்டர் பூதானின் நற்பெயரும், அவன் புகழும் என்னாவது? ராதாவின் வாழ்க்கை தான் என்ன ஆகும்?" என்று (வேதனை துடிக்க நினைத்துக் கொண்டே உட்கார்ந்திருந்தார் அவர்.

வெளியே சென்றிருந்த டாக்டர் வீட்டுக்கு வந்ததும் சுவாமி நாதன் உற்சாகம் இல்லாமலேயே அவருக்கு உணவு பரிமாறினார். தினம் டிஸ் பென்ஸரி'க்கு வரும் நோயாளிகளைப் பற்றியும் மற்ற விஷயங்களையும் விசாரித்து உற்சாகத்துடன் பேசும் சுவாமிநாதன், மௌனமாக எதிலுமே அக்கறை இல்லாதவரைப்போல இருப்பதைப் பார்த்து ஸ்ரீதரன், "ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்?" என்று விசாரித்தார்.

சுவாமிநாதன் வேதாந்தம் வந்து போனதை அறிவித்தார். பிறகு அவர் ராதாவைப் பற்றிச் சொல்லியதையும் நாசூக்காகக் குறிப்பிட்டார். ”இப்படியே நாம் இருந்து விட்டால் ராதாவின் கதி எப்படி ஆதமோ" என்று வருத்தம் தொனிக்க அவர் கூறியபோது ஸ்ரீதரனே சுவாமிநாதன் ராதாவிடம் கொண்டிருந்த அன்பின் ஆழத்தை நினைத்து ஆச்சரியம் அடைந்தார். அந்த ஆச்சரியம் சடுதியில் மறைந்து விட்டது. தான் இவ்வளவு காலம் வரையில் ராதாவின் கல்யாண விஷயத்தில் அக்கறை செலுத்தாது இருந்த தவறை உணர்த்து ராதாவையே அவள் விரும்பும் பிள்ளையைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ள அவளைத் தேடிச் சென்றார்.

மாடி அறையில் ராதா சோபா ஒன்றில் ஒய்யாரமாகச் சாய்ந்திருந்தாள். தலை நிறையச் சூடி இருந்த மல்லிகை மலர்களின் மனம் 'கம்' மென்று எழுந்தது. வெள்ளையில் சரிகைக்கரை போட்டிருந்த படவை உடுத்தி, இளம் சிவப்பு வர்ணச் 'சோளி' அணிந்திருந்தாள் அவள். முதுகில் புரளும் பின்னலை எடுத்து முன்புறம் போட்டு, அதில் கட்டியிருந்த ரிப்பனை முறுக்கிய படி மெல்லிய குரலில் பாட்டு ஒன்றைப் பாடிக் கொண்டிருந்தாள் அவள்.

காதலெனும் தீவினிலே ராதே ! ராதே - அன்று

கண்டெடுத்த பெண்மணியே ராதே ! ராதே!

காதலெனும் சோலையிலே ராதே ! ராதே - நின்ற

கற்பகமாம் பூந்தருவே ராதே ! ராதே!

என்னும் பாட்டு மெதுவாக இனிமையாகக் கேட்டுக் கொண்டிருந்தது .

ஸ்ரீதரன் சிறிது நேரம் பாட்டில் லயித்து அங்கேயே நின்றிருந்தார். பாட்டு முடிந்ததும் அறைக்குள் சென்று, அவள் எதிரில் இருந்த சோபாவில் உட்கார்ந்தார்.

திடீரென்று அண்ணா வந்ததை அறிந்ததும் ராதா திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டாள். அவள் சற்று முன் பாடிய பாட்டை நினைத்தபோது அவளுக்கே வெட்கமாக இருந்தது.

ஸ்ரீதரன் தன் சகோதரியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே ”என்ன அம்மா! என்னைக் கண்டதும் பாட்டை நிறுத்தி விட்டாய்?" என்று கேட்டார்.

”பாட்டா?... என்னவோ அந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடித்திருந்தது."

”என்ன பாட்டு அது? 'காதலெனுந் தீவினிலே ராதே ராதே!' என்ற பாட்டல்லவா? காதலைப் பற்றிக் கூட உனக்குத் தெரிந்து விட்டது!"

”போங்கள் அண்ணா! என்னைக் கேலி செய்யாதீர்கள்!" என்றாள் ராதா. அவள் முகம் வெட்கத்தால் சிவந்து காணப்பட்டது.

"எனம்மா சீக்கிரம் உனக்கு கல்யாணம் பண்ணி விடலாம் என்று நினைக்கிறேன். உன்னைப் பற்றி ஒரு விஷயமும் கேள்விப் பட்டேன் ..”

"என்ன?" என்பது போல் ராதா அவரைப் பார்த்தாள்.

”நீ யாருடனோ சிநேகிதமாக இருக்கிறாயாம். அடிக்கடி அவனுடன் வெளியில் போவதாகக் கேள்விப் பட்டேன்..."

ஸ்ரீதரன் விஷயத்தை மறைக்காமல், சுற்றி வளைத்துப் பேசாமல், நேராகவே கேட்டுவிட்டார்.

ராதா முதலில் பதில் கூறவே தயங்கினாள். பிறகு வெட்கத்தோடு தலையைக் குனிந்து கொண்டு. ”வாஸ்தவம் தான் அண்ணா ! அவரை எனக்குப் பிடித்திருக்கிறது..." என்றாள்.

"சரிதான் அம்மா ! அந்த ' அவர்' யார் என்ன வென்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும். நம் வீட்டுக்கு வரச் சொல்லி அழைப்பது தானே?"

ராதா தனக்குள் மெதுவாகக் சிரித்துக்கொண்டாள். ”ஆகட்டும் அண்ணா , சீக்கிரமே அழைத்து வருகிறேன்." ஸ்ரீதரன் அறையை விட்டு வெளியே போனதும் ராதாவின் உற்சாகம் கரை புரண்டு ஓட ஆரம்பித்தது.

”மாதரசே செல்வப் பெண்ணே ராதே! ராதோ..."

என்று தொடர்ந்து பாட ஆரம்பித்தாள். அவள் செல்வப் பெண் என்பதை நினைத்தபோது அவள் மனம் இறுமாப்பு அடைந்தது. தன்னைத் தேடி. தன் மனத்தில் வரித்திருப்பவனைப் பற்றிய விவரங்களை அறிய வந்த ஸ்ரீதரனுக்குத் தான் செல்வத் தங்கைதான் என்று நினைத்து ஆனந்தமடைந்தாள்.