காதல் வேகம் ...!
இங்கே வீட்டில், சுவாமிநாதன் ராதாவைப் பற்றிக் கவலையுடன் பேசிக் கொண்டிருக்கும்போது சென்னை நகரின் பிரபலமான ஹோட்டல் அறை ஒன்றில் ராதாவும் மூர்த்தியும் உட்கார்ந்து சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் . அடையாறு பக்கம் நாட்டிய நிகழ்ச்சியைப் பார்க்கக் கிளம்பியவர்கள், மழை பிடித்துக் கொள்ளவே நேராக டவுனுக்குச் சென்று, ஹோட்டல் ஒன்றில் நுழைந்தார்கள். அங்கே விதம் விதமாகத் திரியும் ’நாகரிகம்' மிகுந்த ஆடவர்களும், பெண்களும் கூட்டங் கூட்டமாக வளைய வந்தனர். பீங்கான் கோப் பைகளின் சத்தமும், கலீரென்று எழும் சிரிப்பும், 'கம்' மென்று எழும் வாசனையும் அதை சுவர்க்க லோகமாக மாற்றி இருந்தது . அண்மையில் சாக்கடை ஓரங்களில், மழைத் தண்ணீர் சொட்ட வாடும் மக்களும் இருக்கிறார் கள் என்பதை ஹோட்டலுக்குள் இருந்த ஒரு சிறு கூட்டம் அறவே மறந்து இருந்தது என்று கூடச் சொல்லலாம்.
மூர்த்தியும் ராதாவும் அறையை விட்டு வெளியே வந்தார்கள். சற்றுத் தொலைவில் நாகராஜன் தன் வியாபார நண்பருடன் பேசிக்கொண்டே ஒரு மேஜை அருகில் உட்கார்ந்திருந்தான். ராதா இரண்டடி பின் வாங்கினான்.
"இப்படி வாருங்கள். அவர் என் அண்ணாவுக்குத் தெரிந்தவர். நாம் இப்படி வெளியில் சுற்றுவதைப் பார்த்தால் ஏதாவது..." என்று மெதுவாகச் சொல்லிக் கொண்டே அறைக்குள் சென்றாள் ராதா மறுபடியும்.
"ஓகோ! யார் அவர்?" என்று கேட்டான் மூர்த்தி.
'கோடம்பாக்கத்தில் தான் இருக்கிறார். ரொம்பவும் தெரிந்தவர்: அவர் மனைவி ஒரு நிரந்தர நோயாளி. அவருக்கு ஒரு தங்கை இருக்கிறாள். விதவை. பார்ப்ப தற்கு ரொம்பவும் நன்றாக இருக்கிறாள்....பாவம்..."
"அப்படியா? இவ்வளவு 'சோஷியலாக' இருக்கிற மனுஷர், தங்கைக்கு ஏன் மறுமணம் செய்து வைக்கக் கூடாது?" |
"அவர் செய்து வைத்தாலும், தங்கை சம்மதிக்க பாட்டாளே. அவள் என்னவோ இப்பொழுதே அறுபது வயசு பாட்டி மாதிரி பூஜையும், பக்தியும் பிரமாதப் படுத்துகிறாள். எனக்கு அதெல்லாம் கட்டோடு பிடிப்பதில்லை .. "
"பிடிக்காவிட்டால் போகிறது."
”உனக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லையே.... இனிமேல் தானே ஆகப்போகிறது. பிறகு தான் பக்தி, அது இது என்று ஏற்படும்."
ராதா. வாசல் திரையைத் தள்ளிக் கொண்டே வெளியே எட்டிப் பார்த்தாள். நாகராஜன் அங்குமில்லை.
"வாருங்கள் போகலாம்..." என்று கூறியதும் மூர்த்தியும், அவளும் வெளியே வந்தார்கள். மழை பெய்து தரையில் ஒரு ஓரமாக ஜலம் தேங்கிக் கொண் டிருந்தது . தவறிப் போய் ராதா தண்ணீரில் காலை வைத்துவிட்டாள். 'ஐயையோ!" என்று சொல்லிக் கொண்டே அவள் தண்ணீரைத் தாண்டப் போக மூர்த்தி அவள் கீழே விழுந்து விடப் போகிறாளே என்று கைகளைப் பலமாகப் பிடித்துக் கொண்டான்.
வெகு சமீபத்தில், வக்கீல் வேதாந்தத்தின் கார் நின்று கொண்டிருந்தது. பழக்கமான குரல் அருகில் கேட்கவே. டாக்டர் காமாட்சி வெளியே எட்டிப் பார்த்தாள். ராதாவை அவளுக்குத் தெரியும். 'என்ன அப்பா இது? டாக்டர் ஸ்ரீதரனின் தங்கை தானே, அந்தப் பெண்? கூட இருக்கிற பையன் யார் என்று தெரியவில்லையே? உம்... ”
வேதாந்தம் வெளியே பார்த்தார். மூர்த்தியும் ராதாவும் தொலைவில் சென்று விட்டார்கள்.
"அவள் தான் அம்மா! அந்தப் பையன் யார் என்று தெரியவில்லையே! அறியாத பெண் இப்படி இந்த ஊரில் தெருவில் ... டாக்டர் ஸ்ரீதரனுக்கு ஒன்றுமே தெரியவில்லை. வயசு வந்த பெண்ணை எதற்கு வீட்டில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்? பணமா இல்லை? காலாகாலத்தில் கல்யாணத்தைப் பண்ணி விடுவது தானே... அவன் யாராக இருக்கும்?..." என்று திருப்பித் திருப்பிக் கேட்டார் வேதாந்தம்.
"யாரோ" என்று சற்று கோபத்துடன் சொன்னாள்.
விஷயம் விபரீதமாக வளர்ந்து கொண்டே போயிற்று. வீட்டாருக்குத் தெரியாமல் ராதாவும், மூர்த்தியும் கடற்கரையில் சந்தித்தார்கள். சினிமாவுக்குப் போனார்கள். நாடகம் பார்த்தார்கள். ஹோட்டலுக்குப் போனார்கள். இவர்களின் காதல் - நாடகம் ரகசியமாக நடக்கிறது என்றே அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
சென்னையில் தன் தமையனைத் தெரிந்தவர்கள் அநேகர் என்பதை ராதா அறவே மறந்து போனாள். காதலின் வேகம் எல்லாவற்றையும் மறக்கச் செய்து விடுமோ என்னவோ ! மூர்த்திக்குக் கவலை இல்லை. அவனை அந்த ஊரில் தெரிந்தவர்கள் கோபியும் அவன் காரியாலயத்தைச் சேர்ந்த ஒரிருவரும்தான்.
டாக்ஸியில் போய்க் கொண்டிருக்கும் போது மூர்த்தியை ராதா கேட்டாள்: ”நீங்கள் எங்கள் வீட்டுக்கு ஒரு நாள் வாருங்களேன். அண்ணாவுக்கு அறிமுகப் படுத்துகிறேன்" என்றாள்.
”எதற்கு?" என்றான் மூர்த்தி.
"எதற்கா? நாம் இப்படியே இருந்து விட முடியுமா? நாலு பேர் அறியக் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டாமா? இப்படி ஒளிந்து ஒளிந்து நடப்பது எனக்குப் பிடிக்கவே இல்லை ..."
”கல்யாணமா? அதற்கு இப்போது என்ன அவசரம்?" ராதா கலீரென்று சிரித்தாள். பின்னே அறுபது வயசிலா கல்யாணம் பண்ணிக் கொள்வார்கள்?"
"வருகிறேன் ராதா! உன் வீட்டில் இருக்கிறாரே அந்தக் கிழவர், அவரைக் கண்டாலே எனக்குப் பிடிக்க வில்லை !"
”உங்களுக்கு. என்னைத்தானே பிடிக்க வேண்டும்! அந்தக் கிழவரை இல்லையே? அவர் பாட்டுக்கு இருந்து விட்டுப் போகிறார்" என்றாள் ராதா சிரிப்புக்கிடையே.
முன்னைப் போல கார் அவர்கள் வீட்டு வாசலில் வந்து நிற்கவில்லை. வீட்டுக்குச் சற்றுத் தொலை விலேயே நின்றது ராதா இறங்கினாள். பிறகு . 'டாடா' ’பை பை' என்று கைக் குட்டையை ஆட்டிக் கொண்டே வீட்டை நோக்கி நடந்தாள்.
இதைக் ' காம்பவுண்ட்' சுவர் ஓரமாக மறைந்திருந்து கவனித்த சுவாமிநாதன், ராதா உள்ளே சென்றதும் பின்னால் சன்றார்.
”எங்கேயம்மா போய்விட்டு வருகிறாய்?" என்று கேட்டார்.
”கொலுவுக்கு. வருகிற வழியிலேயே சுண்டலை எல்லாம் தின்று விட்டேன்!" என்று பச்சையாகப் புளுகினாள் ராதா.
காதலின் வேகம் அப்படிப் பட்டது போலும்!

