கண்ணீர் சுரந்தது
அவன் ஹாஸ்டலை அடையும் போது பிற்பகல் சுமார் மூன்று மணி இருக்கலாம். அங்கும் நிசப்தமாகத் தான் இருந்தது. இடைவேளைச் சிற்றுண்டி சாப்பிடுவதற்கு மாணவர்கள் இன்னும் யாரும் வரவில்லை. நேராகக் கோபியின் அறைக்குச் சென்று கதவைத் திறந்து உள்ளே சென்றான் மூர்த்தி. ஜன்னல் ஓரமாகச் சாய்வு நாற்காலியை எடுத்துப் போட்டுக் கொண்டு படுத்தான். அப்படியே தூங்கியும் போனான். அவன் கண் விழித்துப் பார்த்தபோது, மாலை சுமார் ஐந்தரை மணிக்கு மேல் ஆகியிருந்தது. கோபி காலேஜிலிருந்து வந்து உடை மாற்றிக்கொண்டு கையில் ’டென்னிஸ்' மட்டையுடன் வெளியே புறப்படத் தயாராக நின்றான்.
“என்னடா அப்பா பட்டப்பகலிலே இப்படித் தூக்கம்? உன் ஆபீசிலே உனக்குத் தண்டச் சம்பளம் கொடுக்கிறார்களாடா? இந்த மாசத்தில் நாலு நாள் இதோட மட்டம் போட்டிருக்கிறாய்? கொடுத்து வைத்த மகராசன் நீ" என்று சிரித்துக் கொண்டே கூறி விட்டு கோபி, ”எங்கேயாவது வெளியே போகிறாயா? இல்லை. தூக்கத்தைத் தொடர்ந்து ஆரம்பிக்கப் போகிறாயா?" என்று கேட்டான்.
சோம்பல் முறித்துக் கொண்டே எழுந்த மூர்த்தி ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டே "கோபி! எனக்கு ஓர் அறை வாடகைக்குக் கிடைத்து விட்டது. ரெயில்வே லயனுக்கு ஓரமாக ஒரு ரோடு போகிறதே, அங்கே நாற்பந்தைந்தாம் எண் உள்ள வீட்டில் மாடியில் இருக்கிறது அறை. தெற்குப் பக்கம் இரண்டு ஜன்னல்கள் இருக்கின்றன. சுகமாகக் காற்று வரும். ஏழு மணிக்கு மேல் அங்கே போய் விடுகிறேன் . உனக்கு ரொம்ப ’தாங்க்ஸ்' அப்பா. பத்து நாட்களாய் என்னை வைத்துக் கொண்டு சமாளித்தாய்!" என்று! கூறினான்.
"அடேடோ அப்படியா? என் பரீட்சை பிழைத்தது போ! நீயானால் அங்கே நாடகத்துக்கு வா, இங்க கச்சேரிக்கு வா என்று என்னையும் இழுத்துக் கொண்டு கிளம்புகிறாய். போய்விட்டு வந்த பிறகு அதைப் பற்றிப் பேசியே மண்டையைத் துளைத்து விடுகிறாய். சரி. அடிக்கடி வந்து போய்க் கொண்டிரு" என்று கூறியவாறு கோபி வெளியே கிளம்பினான். அவன் திரும்பி வருவதற்குள் மூர்த்தி போவதனால் அறையைப் பூட்டிச் சாவியை அடுத்த அறையில் கொடுத்து விட்டுப் போகும்படி கூறிவிட்டுச் சென்றான் கோபி.
அவன் அறையை விட்டுச் சென்றதும், மூர்த்தி எழுந்திருந்து கீழே சென்று ஹாஸ்டலில் சிற்றுண்டியும். காப்பியும் சாப்பிட்டு விட்டு வந்தான். பிறகு . சோப்புத் தேய்த்து முகம் கழுவி, வாசனை வீசும் பவுடர் பூசிக் கொண்டான், தலைக்கு வாசனைத் தைலம் தடவி தலைவாரிக் கொண்டு, உடை அணிந்து கொண்டான். பெட்டியையும் படுக்கையையும் எடுத்துக்கொண்டு அவன் புறப்படும்போது மணி சரியாக ஏழு அடித்து விட்டது. கோடம்பாக்கம் ரோட்டில் அவன் பார்த்திருந்த அறைக்குச் சென்று சாமான்களை வைத்து விட்டு இரவுச் சாப்பாட்டுக்காக மாம்பலம் பாண்டிபஜாரை நோக்கிப் போனான் மூர்த்தி.
கல கலவென்று இரவு ஒன்பது மணி வரையிலும் கூடச் சந்தடியாக இருக்கும் அந்தக் கடைத் தெருவில் இருந்த ஒரு வளையல் கடையின் முன்பாக ஒரு ரிக்ஷா வந்து நின்றது. அதிலிருந்து ராதா இறங்கினாள். கை யிலிருந்த வெல்வெட் பையைச் சுழற்றிக் கொண்டே அவள் கடைக்குள் நுழைவதை பார்த்தி கவனித்தான். நடைபாதையில் பின்கள், பித்தான்கள் 'கிளிப்'புகள் விற்கும் ஒரு கடை அருகில் நின்று ஏதோ வியாபாரம் செய்பவனைப் போல் வளையல் கடையைக் கவனித்துக் கொண்டு நின்றான் மூர்த்தி. ராதா உதட்டுச் சாய புட்டி ஒன்று வாங்கினாள். ஜிலு ஜிலு வென்ற சுடர் விடும் போலிக் கற்களால் செய்த மாலை ஒன்றை எடுத்துப் பார்த்தாள்.
நட்சத்திரங்கள் போல் செய்த மாலையின் நடுவில் சிவப்பு ஒற்றைக் கல் வைத்து பதக்கம் காணப்பட்டது. மாலையைத் தன் கழுத்தில் பதி வைத்துப் பார்த்துக் கொண்டாள் ராதா. எதிரே கண்ணாடியில் அவள் உருவம் தெரிந்தது. சங்கு போன்ற வெண்ணிறமான அவள் கழுத்துக்கு அது எடுப்பாகவே இருந்தது. மற்றும் சில கண்ணாடி வளையல்களும் ரிப்பன்களும் வாங்கிக் கொண்டு, பில் பதினைந்து ரூபாயையும் மேஜை மீது வைத்து விட்டு ரசீது பெற்றுக் கொண்டாள் ராதா.
அவள் கடையைவிட்டு இறங்கி வரும் போது மூர்த்தி அருகில் இருந்த சோடா கடைப் பக்கம் சென்று நின்றான். கலர் ஒன்று வாங்கிச் சாப்பிட்டவாறு தன் முதுகுப் புறத்தை அவள் பக்கமாகத் திருப்பிக்கொண்டு நின்றான். அவள் மறுபடியும் ரிக்ஷாவில் ஏறி 'பனகல் பார்க்' வழியாகச் செல்லுவதைக் கவனித்தான்.
அன்று அதற்கு மேல் அவன் அவளைத் தொடர்ந்து செல்ல விரும்பாமல். அருகில் இருந்த ஹோட்டல் ஒன்றில் இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு தன் அறைக்குத் திரும்பினான் மூர்த்தி.
'பனகல் பார்க்கைக் கடந்து சென்ற ரிக்ஷா உஸ்மான் ரோடு பக்கமாகக் கோடம்பாக்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது மணி சுமார் எட்டுக்கு மேல் ஆகியிருக்கலாம். தெருவிலே பெண்களின் கூட்டம் குறைந்து விட்டது. காரியாலயங் களிலிருந்து நேரம் சென்று வீடு திரும்பும் ஆடவர் சிலரேதான் அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்தனர். இருபுறமும் மரங்கள் கவிந்திருந்த அந்தச் சாலையில் போகப் போக ஜனக்கூட்டம் அதிகமாக இல்லை. தன்னைச் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்ட ராதாவுக்குச் சற்று பயமாகத் தான் இருந்தது. தெரியாத்தனமாக அவள் அன்று கைகளில் நாலைந்து தங்க வளையல்களையும் கழுத்தில் முத்து ’நெக்லெஸை' யும் அணிந்து கொண்டு கிளம்பி வந்து விட்டாள்,
இரவு வேளையில் தனியாக ரிஷாவில் போவதை விட நடந்து செல்லலாமே என்று கூட அவளுக்குத் தோன்றியது. உள்ளத்தில் பரபரப்பும், பயமும் அதிகம் ஆக ஆக. அவள் உடல் பூராவும் வேர்த்துக் கொட்டியது . எதிரே கொஞ்ச தூரத்தில் யாரோ ஒருவர் வந்து கொண்டிருந்தார். கையில் ஒரு பிரம்பு வைத்திருந்தார் அவர். வழியில் போகிறவர் வருகிறவர்களை வெகு கூர்மையாகப் பார்த்துக்கொண்டே வந்தார் அவர். ராதா தன் இதயத் துடிப்பு நின்று விடுமோ என்று அஞ்சினாள். அவள் மனம் அப்படி வேகமாக அடித்துக் கொண்டது. பிரம்பு மனிதர் பக்கத்தில் வந்து விட்டார். வண்டிக்குள் உற்றுப் பார்த்துவிட்டு, ”என்ன அம்மா இது? வேளை சமயம் இல்லாமல் கடைக்குக் கிளம்பி விடுகிறாய் நீ!" என்று அதட்டிக்கொண்டே ரிக்ஷாவை மேலே போக விடாமல் நிறுத்தினார் சுவாமிநாதன்.
"நீங்களா?" என்றாள் ராதா, பெருமூச்சு விட்டபடி.
"நான் தான்! அம்மா எங்கேடா காணோம். இப்போ இருந்தாங்களே என்று ராமையாவைக் கேட்டால். 'பாண்டி பஜாருக்குப் போச்சு வளையல் வாங்கியாற' என்கிறான். இந்தக் காலத்துப் பெண்களுக்கு எதை நினைத்துக் கொண்டாலும் உடனே ஆக வேண்டும் என்கிற சுபாவம்தான் அதிகமாக இருக்கிறது. இப்படி எட்டு மணிக்குமேல் வளையல் வாங்க ஒண்டியாகக் கடைத் தெருவுக்குப் போவது அவசியமா என்று நினத்துப் பார்க்கிறதில்லை. வீட்டிலே யாருக்காவது ஆபத்தா? ஏதாவது மருந்து தேவையா? சமயம் பார்க்காமல் போக வேண்டியதுதான். இப்படி வளையலும் ரிப்பனும் வாங்க..." சுவாமிநாத சற்றுக் கடிந்தவாறு இவ்விதம் கூறிவிட்டு, நீ ரிக்ஷாவில் வருகிறாயா? நான் கூடவே நடந்து வாறேன்" என்று கேட்டார்.
"வேண்டாம், வேண்டாம்! இந்தா அப்பா உன் கூலி" என்று ரிக்ஷாக்காரனுக்குப் பணத்தை கொடுத்து அனுப்பி விட்டு, சுவாமிநாதனுடன் ராதா நடந்தே வீடு சென்றாள்.
வீட்டுக்குள் செல்லும் வரையில் பேசாமல் இருந்த ராதா, சற்று பயத்துடன், ”அண்ணா வந்து விட்டாரா?" என்று கேட்டாள்.
"இல்லை அம்மா. வக்கீல் வேதாந்தத்தின் மனைவிக்கு உடம்பு அதிகமாக இருக்கிறதாம். அவருடைய பெண் டாக்டர் காமாட்சி இவரை வந்து பார்த்து விட்டுப் போகும்படி போன் செய்தாள். போயிருக்கிறார்" என்றார் சுவாமி நாதன்.
ராதா அங்கே இருந்த சோபாவில் உட்கார்ந்தாள். கைப் பையைத் திறந்து அன்று வாங்கிய மாலையை எடுத்து அருகில் இருந்த மேஜைமீது வைத்தாள். ' இதைப் பாருங்கள்! பத்தாயிரம் இருபதினாயிரம் கொடுத்து வாங்கும் வைர மாலை இதனிடம் தோற்றுப் போக வேண்டியதுதான். எப்படி ஜ்வலிக்கிறது பாருங்கள்!" என்று சுவாமி நாதனிடம் காட்டினாள்.
சுவாமி நாதன் சிரித்தார். கையில் இருந்த பிரம்பை ஆணியில் மாட்டினார். ராதாவின் அருகில் வந்து உட்கார்ந்தார்.
"இது ஜ்வலித்து விட்டால் மட்டும் நிஜ வைரத்தோடு இதை ஒப்பிட்டு விட முடியுமா ராதா? நான்கு நாளைக்குத் தண்ணீர் பட்டால் மங்கிக் கறுத்துப் போகுமே. வைரம் மாதிரி என்றைக்கும் நிரந்தரமான ஒளியோடு இது இருக்குமா என்ன? போயும் போயும் இதன் மேல் உனக்கு ஆசை போயிற்றே! வீட்டிலே வேறு மாலையே இல்லையா என்ன? அதையெல்லாம் பெட்டி யில் வைத்துப் பூட்டிவிட்டு. இதைப் போய் வாங்கி யிருக்கிறாயே அம்மா, உனக்கு ஒன்றுமே தெரியவில்லை போ ..."
சுவாமி நாதனின் சுபாவத்தை ராதா நன்றாக அறிவாள். "அசடு அசடு" என்பார். அவருக்குக் கோடம் வந்திருக்கிறது என்று அதற்குப் பொருள்.
அவர் கூறியதைக் கேட்ட ராதா கல கலவென்று சிரித்தாள். கழுத்தில் ஏற்கெனவே அணிந்திருந்த முத்து மாலையைக் கழற்றிவிட்டு, புதிதாக வாங்கி வந்த மாலையை அணிந்து கொண்டு அவர் எதிரில் வந்து நின்றாள் அவள்.
வசந்த காலத்துப் பௌர்ணமி இரவில் மலர்ந்த மல்லிகையைப் போல் அவள் அழகு பிரதிபலித்தது. ’இப்படி அழகும், அறியாமையும், வெகுளித்தனமும் நிறைந்த இந்தப் பெண்ணுக்குத் தகுந்த கணவன் வாய்க்க வேண்டுமோ' என்று சுவாமிநாதன் கவலைப்பட்டார்.
அவரையறியாமல் அவர் கண்களில் நீர் சுரந்தது.

