கண்டான் ராதாவை .....

அன்றிரவு நாடகம் பார்த்து விட்டு வந்த மூர்த்திக்கு வேறு எதிலும் மனம் செல்லவில்லை. ராதையின் எழில் உருவம் அவன் மனத்தில் நிறைந்திருந்தது. தன்னைக் கோபிகையாக பாவித்துக் கொண்டு மீரா கண்ணனுடன் கனவில் விளையாடிய காட்சி அவன் மனத்தில் பதிந்து போயிற்று. அவளுடைய அழகிய முகத்தில் எத்தனை விதமான பாவங்கள் வெளிப்பட்டன! அவள் கணீர், கணீர் என்று பேசியும் பாடியும் சபையோரிடம் வாங்கிய பாராட்டுக்களை நினைத்து மூர்த்தி மனம் களித்தான். எல்லோரும் தான் சிரிக்கிறார்கள். ஆனால் ராதா சிரித்தால் அதில் ஒரு தனி அழகு இருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது. இப்படி எதையோ நினைத்துக் கொண்டு அறையில் குறுக்கும் நெடுக்குமாக உலவும் மூர்த்தியை அவன் நண்பன் கோபி கவனித்தான்.

"என்னப்பா இது! குட்டி போட்ட பூனை மாதிரி அலைகிறாயே, சரியாகச் சாப்பிடுகிற-தில்லை, தூங்குகிற தில்லை. மூன்று நாட்களாக ஆபீஸ் வேலைக்கு மட்டம் வேறே!" என்று கேலி செய்தான் கோபி.

"அதெல்லாம் ஒன்றும் இல்லை அப்பா, அந்தப் பெண் யார்? எங்கிருக்கிறாள் என்பது ஒன்றும் தெரிய வில்லையே?" என்று கூறினான் மூர்த்தி. கோபிக்கும் அந்த விவரங்கள் ஒன்றும் தெரியாது.

"ஓஹோ! அதுதானா விடியம்? என்னவோ என்று பார்த்தேன்" என்று கூறிவிட்டு அவன் காலேஜூக்குப் புறப்பட்டார்.

மூர்த்திக்குத் தனியாக அந்த அறையில் இருப்புக் கொள்ளவில்லை. உடுத்திக் கொண்டு வெளியே புறப் பட்டான். நேராக சைனா பஜாருக்குச் சென்று தன் காரியாலயத்தில் நுழைந்து, டெலிபோன் அறைக்குள் சென்றான். ஜேபியிலிருந்த நாடக நோட்டீசை எடுத்து எந்தக் கல்லூரி மாணவியர் அன்று நாடகம் போட்டார்கள் என்று கவனித்து விட்டு, அந்தக் கல்லூரிக்குப் 'போன்' செய்தாள்.

காலேஜ் பிரின்ஸிபால் பேசினார்.

"நாடகம் மிகவும் நன்றாக இருந்தது. அதைப் பாராட்டிச் சொல்லவே தங்களை அழைத்தேன். ஹூம்... நாடகத்தில் மீராவாக நடித்தாளே அந்தப் பெண் யார்? எந்த வகுப்பில் படிக்கிறாள்?" என்று நாசூக்காக விசாரித்தான் மூர்த்தி.

"ஐஸீ. அவரை, மிஸ் ராதாவைத் தானே கேட்கிறீர்கள்? அவள் எங்கள் கல்லூரியின் பழைய மாணவி. சென்ற வருஷம் தான் படித்து பி. ஏ, பாஸ் செய்திருக்கிறாள். சூடிகையான பெண், எஸ்... எஸ்... டாக்டர் ஸ்ரீதரன் இருக்கிறாரே. அவருடைய தங்கை."

மூர்த்திக்கு இதற்குமேல் விவரங்கள் தேவை இல்லை. தேவையாக இருந்தாலும், ஒவ்வொன்றையும் விசாரித்தால் நன்றாக இராதென்று நினைத்துக்கொண்டு "போனை' வைத்து விட்டு வெளியே வந்தான். அவனுக்கு இருந்த உற்சாகத்தில் அருகில் இருந்த ஹோட்டல் ஒன்றில் நுழைந்து 'ஐஸ்க்ரீம்' வரவழைத்துச் சாப்பிட்டான். நேராக டவுனில் இருந்து கோடம்பாக்கம் செல்லும் பஸ்ஸில் புறப்பட்டான்.

வடபழனி செல்லும் பாதையில் பஸ்ஸிலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தான் அவன். கொஞ்ச தூரம் சென்றதும், ஒரு சிறிய காம்பவுண்டுக்குள் இருந்த கட்டடத்தின் வாசலில் போர்டு ஒன்று தொங்குவதைக் கவனித்தான். 'டாக்டர் ஸ்ரீதரன் எம். பி. பி. எஸ் . மருத்துவ சாலை' என்று போட்டிருந்தது. பகல் வேளையானதால் கதவு பூட்டப்-பட்டிருந்தது. தாழ்வாரத்தில் இருந்த பெஞ்சியில் காவல்காரன் மட்டம் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். மெதுவாகக் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே சென்று “ஐயா! ஐயா!" என்று அவனை எழுப்பினான் மூர்த்தி.

அவனுக்கு நல்ல தூக்கம். ”பகல் வேளைகளில் டாக்டர் இங்கே வரமாட்டார் ஐயா! வீட்டிலே போய்ப் பாரு" என்று சொல்லிக்கொண்டே திரும்பிப் பார்த்துத் தூங்க ஆரம்பித்தான் அவன்.

"அங்கேதான் போகிறேன். விலாசம் சொல் ஐயா" என்று மறுபடியும் அவனை எழுப்பிக் கேட்டான் மூர்த்தி. காவல்காரனுக்குத் தூக்கம் தெளிந்து விட்டது.

"என்னய்யா சும்மாத் தொந்தரவு பண்றீங்க! ரயில்வே லயன் ஓரமாப் போவுது பாருங்க ரோடு. அந்த ரோடு கடைசியிலே இருக்குதுங்க அவர் பங்களா" என்று கூறிவிட்டு, சட்டைப் பையில் இருந்த பீடித் துண்டைப் பற்ற வைத்துப் புகைவிட ஆரம்பித்தான் அவன்.

அப்பொழுது நடுப்பகல் வேளை. தெருக்கள் எல்லாம் நிசப்தமாக இருந்தன. சில வீடுகளிலிருந்து வானொலியில் மத்தியான இசை கேட்டுக் கொண்டிருந் சூது. பெண்கள் சிலர் வீட்டு வராந்தாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். தெருவில் சில பையன்கள் ஐஸ் விற்றுக் கொண்டிருந்தார்கள்.

மூர்த்தி தெருவிலே வேடிக்கை பார்த்துக் கொண்டு நடந்தான். ஒரு வீட்டு வாசலில் 'அறை வாடகைக் விடப்படும்' என்ற விளம்பரம் காணப்பட்டது . கதவை தட்டிக் கூப்பிட்டு விசாரித்தான். ஐம்பது வயசு மதிக்கும்படியான ஒரு பெண்மணி கதவைத் திறந்து கொண்ட வெளியே வந்தாள். ”என்ன வேண்டும்?" என விசாரித்தாள்.

மூர்த்தி தனக்கு ஓர் அறை தேவையாக இருப்பதாகக் கூறினான். அறையைத் திறந்து காண்பித்தாள் அந்த அம்மாள். அறை விசாலமாகவும் காற்றோட்டத்துடனும் இருந்தது. மாதம் பதினைந்து ரூபாய் வாடகையென்றும் லைட்டுக்காக இரண்டு ரூபாய் தனியாகக் கொடுத்து விட வேண்டும் என்றும் அறிவித்தாள் அவள். ஒரு மாதத்திய வாடகையை முன் பணமாகக் கொடுத்து விட்டு மூர்த்தி அங்கிருந்து கிளம்பினான்.

நேராக அதே தெரு வழியாகச் சென்று தெருக் கோடியை அடைந்தான் அவன். அங்கே பெரிய பங்களா ஒன்று காணப்பட்டது. வாசலில் டாக்டர் ஸ்ரீதரன் என்று ஒரு புறமும், மறுபக்கத்தில் ஜெயஸ்ரீ என்று வீட்டின் பெயரும் எழுதப்பட்டிருந்தது. பங்களாவின் வாசலில் இருந்து உள்ளே கவனித்தான் மூர்த்தி. வீட்டிலே சந்தடி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. வீட்டிலிருந்து யாராவது வெளியே வருகிறார்களா என்று கவனித்தான் மூர்த்தி. இப்படியும் அப்படியும் ஏதோ ஒரு வீடு தேடுகிற மாதிரி மதில் சுவர் ஓரமாக நடந்தவாறு கவனித்துக் கொண்டிருந்தான். அரைமணி நேரம் ஆகியும் ஒருவரும் வெளியே வரவில்லை . அலுத்துப் போய்ச் சோர்ந்த உள்ளத்துடன் அவன் திரும்புகிற போது, மாடியிலிருந்து ஒரு குரல் தெளிவாகக் கேட்டது.

"ராமையா ! வெட்டி வேர் தட்டிகளுக்குத் தண்ணீர் ஊற்றவில்லையா?" என்று கூறியவாறு ராதா 'பால்கனி' பக்கமாக வந்து தோட்டத்தில் மாமரத்தின் கீழ் சிமிட்டிபெஞ்சியில் படுத்திருந்த தோட்டக்காரனைக் கூப்பிட்டாள். வெள்ளைப் புடவை உடுத்தி, ஸ்நானம் செய்த கூந்தலைப் பின்னல் போடாமல் முதுகில் புரள விட்டுக் கொண்டு அவள் அங்கு நின்ற காட்சி அழகாக இருந்தது.

ராமையா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். ராதாவின் குரல் கேட்டு சுவாமிநாதன் வெளியே வந்தார்.

"ராமையா! அம்மா கூப்பிடறாங்க பார். எழுந்திரு' ' என்று அவனை எழுப்பினார்.

”யார் இந்த வழுக்கைத் தலை ஆசாமி?" என்று யோசித்தான் மூர்த்தி. நெற்றியில் பளிச்சிட்ட திரு நீறும் அவருடைய வெள்ளை வேஷ்டியும், மேல் துண்டும் அவ ருக்கு எந்த விதமான உருவமும் கொடுக்கவில்லை. கண்டிப்பாக அவர் டாக்டராக இருக்கமுடியாது என்று தீர்மானித்தான் அவன். ராதாவின் தந்தையாக இருக்கலாம் என்று தோன்றியது. ’யாருமில்லாத ஒரு பங்களாவுக்குள் இந்த மோகினி இருந்தால், அவளை அடைவது எவ்வளவு சுலபம்? இப்படிக் காவல்காரனும், வழுக்கைத் தலையருமாக ஒருவர் மாற்றி ஒருவர் எதற்காக இருக்க வேண்டும்?’ என்று மூர்த்தி நினைத்துக் கொண்டே ராதாவின் வீட்டைக் கண்டு பிடித்த மகிழ்ச்சியுடன் மெதுவாக ஹாஸ்டலை நோக்கி நடந்தான்.