கோமதியின் குறை
ஹாலில் இருந்த புத்தர் சிலையைத் துடைத்து வைத்து விட்டு, தோட்டத்தில் மலர்ந்திருந்த பெரிய ரோஜா மலரை எடுத்து வந்து சிலையின் பாதங்களில் வைத்தாள் பவானி. கீழே கம்பளத்தில் உட்கார்ந்து பாலுவுடன் ' கேரம்' ஆடிக் கொண்டிருந்த சுமதி "அத்தை! நீ ஏன் அன்றைக்கு டிராமாவுக்கு வரவில்லை. பாதியில் அப்பா, அம்மாவைத் தனியாக விட்டு விட்டு எழுந்து போய்விட்டாராமே . அம்மா சொன்னாள். நீ ஏன் அத்தை எப்பொழுதும் ஒரு மாதிரியாக இருக்கிறாய்? சுவாமிக்குப் பூஜை பண்ணுகிறாய். எங்களுக் கெல்லாம் வேலை செய்கிறாய். அம்மா கூடச் சொல்கிறாள். 'பவானி வராவிட்டால் என் உடம்பு தேறி இருக்காது. பாவம்! அவளைப் பார்த்தால் என் மனசு சங்கடப்படுகிறது' என்று. இனிமேல் என்னோடு வெளியே வாயேன் அத்தை. ஜெயஸ்ரீயின் வீட்டுக்குப் போகும் போது வருகிறாயா?" என்று கேட்டாள். பேச்சின் இடையில் அந்தக்குழந்தையின் குரல் கம்மிற்று. பளபளக்கும் அவள் விழிகளில் கண்ணீர் திரண்டு நின்றது.
பவானி வாஞ்சையுடன் சுமதியின் அருகில் வந்து உட்கார்ந்தாள். ஆசையுடன் அவள் தலையை வருடினாள். அப்புறம். 'கண்ணே ! பிறருக்கு உபகாரமாக இருக்க வேண்டும் என்பது ஒன்றுதான் என் ஆசை. வேறு ஆசைகளோ விருப்பங்களோ எதுவும் எனக்கில்லை. உனக்குத் தலைவாரிப் பின்னி மலர் சூட்டிப் பொட்டு வைத்தால் என் மனத்திலே ஆனந்தம் பொங்குகிறது. நல்ல உணவாகச் சமைத்து எல்லோருக்கும் பரிமாறினால் அவர்கள் சாப்பிட்டுப் பசி தீர்ந்தவுடன் என் வயிறு திருப்தியால் நிறைந்து விடுகிறது.
”இங்கே பார் சுமதி! இந்த மகானைப் பற்றி நீ உன் சரித்திரப் புத்தகத்தில் படித்திருப்பாய். பிறருடைய துன்பங்களுக்காக இரக்கப்பட்டு அன்பையும். அஹிம்சை யையும் தம் லட்சியமாகக் கொண்டு அரச போகத்தைத் துறந்தவரல்லவா இவர்?" என்று அருகில் மேஜை மீது இருந்த புத்தர் சிலையைக் காட்டிப் பேசினாள் பவானி. சுமதியும் பாலுவும் திறந்த வாய் மூடாமல் பவானி சொல்வதைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். புத்தரையும் காந்தி அடிகளையும் போற்றி வணங்குவதால் தான் அத்தை இவ்வளவு நல்லவளாக இருக்கிறாள் என்று சுமதி நினைத்துக்கொண்டாள்.
"அத்தை! அத்தை!" என்று சொல்லிக் கொண்டே சுமதி அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் இரண்டு முத்தங்கள் கொடுத்தாள்.
சுமதி தன் அம்மாவை முத்தமிடுவதைப் பார்த்து ”ஹே! ஹே!" என்று சிரித்தான் பாலு.
"எதற்கெடுத்தாலும் சிரிப்புத் தாண்டா உனக்கு" என்று பவானி அவனைக் கோபித்துக் கொண்டாள்.
மாடியில் இருந்த கோமதி கீழே இறங்கி வந்தாள். மூன்று நாட்களாக அவளுக்கு மறுபடியும் உடம்பு சரியில்லை. நாடகத்தில் நாகராஜன் பாதியில் அவளை விட்டு விட்டு எழுந்து போனவுடன் மனம் சோர்ந்து உட்கார்ந்திருந்தாள் கோமதி. நாடகத்தில் பல ரசமான காட்சிகள், நடனங்கள், சம்பாஷணைகள், பாட்டுக்கள் இருந்தும் அவளால் ஒன்றையுமே ரசிக்க முடியவில்லை. 'எதற்காக வந்தோம்' என்று அலுத்துக் கொண்டாள். ஜோடி ஜோடியாக உட்கார்ந்து நாடகம் பார்க்கும் தம்பதிகளைப் பார்த்துப் பெருமூச்செறிந்தாள் கோமதி. கடைசிக் காட்சி நடந்து கொண்டிருந்தபோது. அலுப்புடன் வெளியே வந்து பார்த்தாள். நாகராஜனே காருடன் வந்திருந்தான். நாடகம் முடிவதற்கு முன்பே மனைவி வெளியே வந்து விடவே, "என்ன? ஒன்றும் நன்றாக இல்லையா? எனக்கு அப்பொழுதே தெரியும்”, என்று ஆரம்பித்தான் அவன்.
"எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது; எனக்குத் தான் இருக்கப் பிடிக்கவில்லை. பிறந்த இடத்தில் தான் ஒண்டியாகப் பிறந்தேன் என்றால், புகுந்த இடத்திலும் ஒண்டிக் கட்டைதான்!" என்றாள் நிஷ்டூரமாக.
"யார் அப்படிச் சொன்னது?" என்றான் நாகராஜன் காரை 'ஸ்டார்ட்' செய்து கொண்டே. கோமதி பதில் ஒன்றும் கூறாமல் முகத்தை 'உர்' ரென்று வைத்துக் கொண்டிருந்தாள். மனைவியைத் திரும்பிப் பார்த்தான் நாகராஜன்.
"கோமு! ஒரு நெக்லெஸ் விலைக்கு வந்திருக்கிறது. எட்டாரத்க்குள் அடங்குமாம். பழைய வைரமாம். வாங்கிப் போட்டு வைத்தால் மேலே மூன்று நாலு வந்தால் விற்று விடலாம்!"
"அதை வாங்குவானேன், பிறகு விற்பானேன்? வாங்காமலேயே இருந்து விட்டால் அலுப்பே இல்லை."
"அட, போட்டுக் கொள்கிற வேளையில் போட்டுக் கொள்ளேன். மேலே மூவாயிரம் கிடைத்தால் நமக்குத் தானே லாபம்! விற்கிறவருக்கு ரொம்பப் பணமுடையாம்."
கோமதிக்கு இந்த வியாபாரப் பேச்சே பிடிக்கவில்லை. வீட்டுக்கு வந்த பிறகு, பவானி பரிமாறிய உணவைச் சாப்பிட்டு விட்டு மாடிக்குப் போய் விட்டாள். பளபள வென்று மின்னும் வைர 'நெக்லெஸை' எடுத்துக் கொண்டு நாகராஜன் மாடிக்கு வந்தான். கோமதி அயர்ந்து துங்கிக் கொண்டிருந்தாள்.
அதற்கப்புறம் நாகராஜன் அந்த நகையை வாங்கினானா என்பதை கோமதியும் கேட்கவில்லை. அவனும் ஒன்றும் கூறவில்லை. வேலை விஷயமாக வெளியூர் சென்று விட்டான்.
மாடியில் உட்கார்ந்து உட்கார்ந்து அலுத்துப்போன கோமதி கீழே இறங்கி வந்து டாக்டர் ஸ்ரீதரன் வீட்டுக்கு போன்' செய்து, "ராதா இருக்கிறாளா?" என்று விசாரித்தாள். ”அவள் வெளியே போயிருக்கிறாள். கச்சேரிக்கு" என்று சுவாமிநாதன் தெரிவித்தார். அத்துடன், * நீங்கள் சௌக்கியந்தானே அம்மா?" என்றும் விசாரித்தார் அவர்.
"உம்... சௌக்கியத்துக்கு ஒரு குறைவும் இல்லை " என்று அலுப்புடன் கோமதி சொல்லிக் கொண்டே ’ரிஸீவரை' போனில் வைத்தாள்.

