சந்திப்பு

மூர்த்தி சென்னைக்கு வந்து விட்டான் என்பது நாம் ஆச்சரியமோ பரபரப்போ அடைய வேண்டி தில்லை. பசுமலையில் சுமார் நான்கைந்து மாதங்கள் அவன் தங்கியிருந்த-தற்குக் காரணமே பவானி தான். அந்த இளம் பெண்ணின் மனத்தைக் கெடுத்து தன் சுயநலத்தைப் பூர்த்தி செய்து கொள்ளவே மூர்த்தி அங்கு தங்கியிருந்தான். வயது சென்ற மாமாவுக்காகவோ மாமிக்காகவோ அங்கு இல்லை.

பசுமலை ரயில் நிலையத்தை விட்டு பவானி புறப் பட்டு வந்த பாசஞ்சர் வண்டி கிளம்பிப்போன பிறகு சோர்ந்த மனத்துடன் மூர்த்தி வீட்டுக்கு வந்தான். பூட்டப்பட்டுக் கிடந்த பவானியின் வீட்டு வாசலை ஏக்கத்துடன் பார்த்தான். அவள் தினமும் மாலை வேளைகளில் மல்லிகைப் பூப்பறிக்கும் மல்லிகைப் பந்தலின் கீழ் பெருமூச்சுடன் சிறிது நேரம் நின்றான். ஆனால் உறுதியும், வைராக்கியமும், நெஞ்சழுத்தமும் நிறைந்த அவள் தோற்றத்தைப் பற்றி ஒரு கணம் சிந்தித்தான் மூர்த்தி. கருணையே வடிவமாக விளங்கும் அந்தக் கண்கள் நடராஜப் பெருமானின் படத்தை நோக்குங்கால் கசிந்து கண் மல்கித் தம் அன்பை வெளியிட்டதைக் கவனித்திருக்கிறான். அதே கண்கள் நெருப்புத் துண்டங்களாக ஜ்வலித்ததையும் பார்த்தான்.

திடசித்தம் நிறைந்த அந்தப்பெண் எங்கே இருந்தாலும் ஏமாற மாட்டாள் என்பது அவனுக்கு பொங்கிவிட்டது. ஆகவே இனி அவளைப் பற்றி சிந்திப்பதில் பலனில்லை என்பது அவனுக்குத் தெள்ளெனத் தெரிந்து போயிற்று.

பவானி ஊருக்குச் சென்று இரண்டு தினங்கள் கழித்து மூர்த்தி தனக்குச் சென்னையில் முக்கியமான அலுவகள் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு புறப்பட்டு விட்டான். சென்னையில் அவன் தங்குவதற்கு உறவினர் யாரும் கிடையாது. கல்கத்தா ஆபீசில் அவனுடன் வேலை பார்த்து வந்த நண்பர் ஒருவரின் சகோதரன் கோடம் பாக்கம் ஹாஸ்டல் ஒன்றில் இருந்து கொண்டு படித்து வந்தான்.

எழும்பூரில் இறங்கியதும், அவன் நினைவு வரவே மூர்த்தி நேராக கோடம்பாக்கம் சென்று ஹாஸ்டலில் அந்தப் பிள்ளையைப் பற்றி விசாரித்தான். தகவலும் கிடைத்தது. தன் பெட்டி படுக்கையை அங்கே வைத்து விட்டு, ஸ்நானம் செய்து காலை ஆகாரத்தை முடித்துக் கொண்டான் மூர்த்தி. பிறகு கம்பெனி வேலையாக சைனா பஜாருக்குச் சென்று விட்டு இரவு மவுண்ட்ரோட் ஹோட்டல் ஒன்றில் சாப்பாட்டை முடித்துக் கொண்டு ஹாஸ்டலுக்கு வந்தான்.

அடுத்த நாள் அவனும், அவன் நண்பனும் வெளியில் எங்கும் போகவில்லை. அன்று சனிக்கிழமை. விடுமுறை நாள். நண்பர்கள் இருவரும் சாப்பிட்டு விட்டு அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். வாயில் இருந்த சிகரெட்டைப் புகைத்தபடி மூர்த்தி, தன்னுடைய அகில இந்திய விஜயத்தைப் பற்றி அளந்து கொண்டிருந்தன்! பார்த்த இடங்கள் பாதி இருந்தால், பார்க்காத இடங்களையும் அவன் வர்ணித்தபோது தேர்ந்த ஓர் எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய கற்பா சக்தி இப்படி ஒருவனிடம் வீணாக விரயமாகிறதே என்று தான் எண்ணத் தோன்றும். ஹாஸ்டல் அறைகளில் திடீரென்று நிசப்தம் நிலவியது,

நாலைந்து பெண்கள், அழகாக உடுத்திக் கொண்டு கல கல வென்று பேசியபடி வந்தார்கள். ஒவ்வொரு அறையாக நுழைந்து அங்கிருந்த மாணவர்களிடம் பேசி -டி.ராமாவுக்கு டிக்கெட் வாங்கிக் கொள்ளும்படிக் கேட்டார்கள். கடைசியாக மூர்த்தி இருந்த அறைக்குள் நுழைந்தார்கள் அவர்கள், அவர்களில் ஒரு பெண் படிப்படியாக இருக்கும் கூந்தலை இரட்டைப் பின்னல்களாகப் பின்னி, பாதியில் வெண்ணிற ரிப்பனால் கட்டியிருந்தாள். காதுகளில் ஜிலு ஜிலு வென்று பிரகாசிக்கும் வைரத் தோடும், வைர ஜிமிக்கிகளும் அணிந்திருந்தாள். மூக்கில் ஒன்றும் ஆபரணம் இல்லை. நெற்றியில் வட்ட வடிவ மாகப் பெரிய அளவில் பொட்டு வைத்து. அதன் கீழே சிறிய பொட்டொன்று வைத்திருந்தாள். ரோஜா வண்ணத்தில் ’ஷிபான்' புடவையும், முழங்கை வரையில் கை வைக்கப்பட்டிருந்த சோளியும் அணிந்திருந்தாள் அவள். துரு துரு வென்று அவள் முகம் பார்ப்பதற்கு வசீகரமாக இருந்தது. கண்களைச் சுழற்றி அவள் புன்னகை புரிந்தவாறு மூர்த்தியையும், அவன் நண்பனையும் கைகுவித்து வணங்கினாள்.

”காசநோய் நிவாரணத்துக்காக டிராமா போகிறோம். இவர்கள் எல்லாம் பி. ஏ. படிக்கும் மாணவிகள் இரண்டு டிக்கெட்டுக்கள் வாங்கிக்கொள்ள வேண்டும்” என்றாள் அவள்.

அவர்கள் பதிலையும் எதிர்பாராமல் இரண்டு ஐந்து ரூபாய் டிக்கெட்டுகளைக் கிழித்து மேஜை மீது வைத்தாள் அந்தப் பெண். மூர்த்தி பர்ஸைத் திறந்து நண்பனுக்கும் சேர்த்து பத்து ரூபாய் கொடுத்து டிக்கட் வாங்கினான்.

”அடேடே! எனக்கெதற்கப்பா வாங்கினாய்? என்றான் நண்பன்.

”பரவாயில்லை, போய் விட்டு வரலாம்" என்று மூர்த்தி சிரித்துக் கொண்டே கூறினான்.

பெண்கள் விடை பெற்றுக் கொண்டு அந்த அறை மயக் கடக்கும் போது ஒருத்தி சொன்னாள். ”அடி ராதா! நீ வந்திருக்காவிட்டால் எங்களால் பத்து டிக்கெட்டுகள் கூடவிற்றிருக்க முடியாது. கெட்டிக் காரியடி நீ!"

ராதா கல கலவென்று சிரித்தாள். ”பூ! இதென்ன பிரமாதம்? நீ தான் கட்டுப் பெட்டி மாதிரி தலையை குனிந்து கொண்டு நின்றாய், பேசுகிற விதத்தில் பேசினால் ஒருவர் இரண்டு டிக்கெட்டுகள் என்ன நாலைந்து டிக்கெட்டுகள் கூட வாங்கிக் கொள்வார்"

என்றாள்.

”இருந்தாலும். ராதாவின் கண்களுக்கு அடிமை ஆகாமல் ஒருத்தர் இருக்க முடியுமா?" என்று சொல்லிக் கொண்டே மற்றொரு பெண் செல்லமாக ராதாவின் கன்னத்தில் தட்டினாள்.

”சீ! போடி?" என்று சொல்லிக் கொண்டே ராதா மறுபடியும் கலகலவென்று சிரித்தாள். மூர்த்தி ஜன்னல் ஓரமாக நின்று கீழே தோட்டத்தில் ஒற்றையடிப் பாதையில் நடந்து செல்லும் அந்தப் பெண்களின் மத்தியில் போய் ராதாவைக் கண் இமைக்காமல் பார்த்தான். அவர்கள் அவன் பார்வையை விட்டு மறைந்ததும் அறைக்குள் திரும்பி, ”கோபி! கட்டாயம் இந்த டிராமாவை 'மிஸ்' பண்ணக்கூடாதுடா!?" என்று சொல்லிக் கொண்டே டிக்கட்டுடன் அவர்கள் கொடுத்த நாடக நோட்டீசை எடுத்துப் பார்த்தான், நடிப்பவர்களின் பெயர்கள் வரிசையாகக் காணப்பட்டன. முதலில் மிஸ் ராதா, பி. ஏ. மீரா' என்று போடப்பட்டிருந்தது.

மனிதன் சிந்திக்கும் சிந்தனைகள், செய்கைகள் யாவுமே புனிதமானவை என்று சொல்ல முடியாது. தன்னால் கூடுமான வரையில் நல்லவைகளையே செய்து நினைத்து வாழ்ந்தானாகில் அவன் வாழ்க்கையில் ஓரளவு உண்மையாக வாழ்ந்தவன் என்று சொல்லலாம். அப்படி இராமல் அவன் எண்ணும் எண்ணமெல்லாம், செய்யும் செய்கைகள் எல்லாம் பிறர் மனத்தை நோகச் செய்வனவாகவும் இழிவானவை-களாகவுமே இருந்தால் 'மனிதப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே' என்று வேண்டி அவன் மனிதனாகப் பிறக்க வேண்டிய அவசியமே இல்லை.

மூர்த்தியின் மனம் சடுதியில் இப்படிப் பல விதங்களாக மாறும் இயல்பை அடைந்து விட்டது. பிறகு தான் அவன் தன் நண்பனுடன் நாடகம் பார்க்க வந்தான். வந்த இடத்தில் ராதாவிடம் தன் சந்தோஷத்தையும் அறிவித்தான். அதற்குப் பதிலாகக் கிடைத்த அவள் புன்சிரிப்பை அவன் விலை மதிக்க முடியாத *கோஹினூர்' வைரத்துக்கு ஒப்பிட்டான். அதைப் பற்றியே அவன் சிந்தித்துக் கொண்டு சென்னையை வலம் வந்து கொண்டிருந்தான்.