சென்னையில் மூர்த்தி
அன்று மாலையில் மியூஸியம் தியேட்டரில் கூட்டம் நெரிந்தது. சென்னையில் இருக்கும் பிரபல பெண்கள் கல்லூரி மாணவிகளால் நடத்தப்படும் பக்தை மீராவின் நாடகம் அங்கு நடத்த ஏற்பாடு ஆகியிருந்தது. வசூலாகும் பணத்தை காசநோய் நிவாரணத்துக்கு அளிப்பதாக அவர்கள் அறிவித்திருந்தபடியால் கூட்டம் அதிகமாகவே இருந்தது. முதல் வகுப்பிலிருந்து கடைசி வகுப்புவரையில் இடமில்லாமல் ரசிகர்கள் நெருக்கியடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.
இரண்டாவது வகுப்பில் நாகராஜனும் கோமதியும் உட்கார்ந்திருந்தார்கள். நாகராஜன் சற்றைக்கொரு தரம் தன் கைக்கெடியாரத்தைப் பார்ப்பதும், பிறகு மனைவியின் பக்கம் திரும்பி ஏதோ முணுமுணுப்பதுமாக இருந்தான். கோமதி முகத்தில் கோபம் பொங்க உட்கார்ந்திருந்தாள்.
வீட்டை விட்டு அவர்கள் புறப்படும் போது ஒரு சின்னஞ்சிறு தகராறு நடந்தது. கணவனுடன் டிராமாவுக்குச் செல்ல வேண்டும் என்று கோமதிக்கு ஆசை அவனும் அவமாகச் சேர்ந்து எங்குமே வெளியே போவதேயில்லை. நாகராஜனுக்குத் தன் 'பிஸினஸ்* ஒன்றேதான் லட்சியம். இந்த மாசத்தில் இருபதினாயிரத்துக்கு பிஸினஸ் போயிருக்கிறது. ”நான் கவனிக்கா விட்டால் அதில் கால் பங்குக்கூட நடந்திருக்காது" என்று மனைவியிடம் பெருமைப்பட்டுக் கொள்வான்.
பணம் ஏராளமாக வருகிறது. வீட்டில் கார் இருக்கிறது. வேலையாட்கள் இருக்கிறார்கள். இதனால் எல்லாம் கோபதிக்கு மனத்தில் திருப்தி ஏற்படவில்லை. வாழ்க்கையில் திருப்தியடையப் பணம் மட்டும் இருந்து விட்டால் போதுமா? அன்பும் ஆரோக்கியமும் சீரிய பண்பும் சேர்ந்தால்தானே அந்தப் பணத்தின் மதிப்பும் உயர்ந்து பிரகாசிக்கும்? மாசத்தில் இருபது நாட்கள் கணவனும் மனைவியும் சரியாகப் பேசக்கூட அவகாச மில்லாமல் நாகராஜன் வெளியிலேயே சுற்றிக் கொண்டிருப்பான். மிகுதி நாட்கள் வீட்டில் இருந்தாலும் மனைவி மகளுடன் பேசுவதற்கு அவனுக்கு அவகாசம் இருக்காது. மாதாந்தரச் செலவுகள், புடைவைக் கடை பில்கள், டாக்டர் பில்கள். அவன் மேஜைமீது வைக்கப் பட்டிருக்கும். அவற்றுக்கு 'செக்' கிழித்துக் கையெழுத்துப் போட்டு குமாஸ்தா மூலமாக அனுப்பி விடுவான் .
மனைவி எழிலரசியாக அலங்காரம் பண்ணிக் கொண்டு நின்றாலும் கவனிக்க அவனுக்கு அவகாசம் இருக்காது. மகள் பள்ளிக்கூடத்தில் பரிசுகள் வாங்கிக் கெட்டிக்காரியாக விளங்கினாலும் பெருமைப்பட அவன் கொடுத்து வைத்தவனல்ல. இக்காரணங்களே கோமதியை ஒரு நிரந்தர நோயாளி ஆக்கிவிட்டன. வெளியார் அந்தத் தம்பதியைப் பற்றிப் பெருமையாகத்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு தடவை பெங்களூர் போய்விட்டு வந்த நாகராஜன் புடவை ஒன்று வாங்கி வந்தான். உடல் தெரியும்படி அவ்வளவு மெல்லியதாக இருந்தது அப்புடவை. உடலெங்கும் ஜரிகைப் பூக்கள் வைத்து தைக்கப்பட்டிருந்தது. ”இந்தப் புடவையை உடுத்திக் கொண்டு என்னோடு என் நண்பர் வீட்டுக் கல்யாணத்துக்கு வா" என்று அழைத்தான் நாகராஜன்.
புடவையைப் பார்த்தவுடன் கோமதியின் மனத்தில் ஓர் அருவருப்பு ஏற்பட்டது. அவள் அதுவரையில் அம் மாதிரி உடுத்திக் கொண்டதில்லை. கணவன் சொல்கிறாரே என்று மனைவி எதை வேண்டுமானாலும் செய்து விட முடியுமா? நன்மை தீமையை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவது தான் சிறந்தது.
கோமதி அதை உடுத்திக் கொண்டு வர மறுத்தாள். அத்தி பூத்தாற் போல் தன்னன உடன் வரும்படி அழைக்கும் கணவனின் அன்பை உதறுகிறோமே என்று கோமதி மனம் வருந்தினாள். இருந்தாலும் சுய கௌரவத்தை இழக்க, அவள் விரும்பவில்லை . அன்று அவனுடன் அவள் கல்யாணத்துக்குப் போகவில்லை.
நாகராஜன் மனைவியைப் பற்றி வேறு விதமாக நினைத்துக் கொண்டான். அவள் ஒரு ஜடம் என்பது அவன் அபிப்பிராயம். அதன் பிற, அவளை அவன் வெளியே அழைத்துச் செல்லவேயில்லை.
அன்று பகல் சாப்பாட்டிற்கு அப்புறம் கோமதி டிராமா டிக்கெட்டுக்களை எடுத்துக் கொண்டு நாகராஜனின் அறைக்குள் துழைந்தாள். ஈமலும் மின்சார விசிறியின் கீழ் உட்கார்ந்திருக்கும் அவர் அருகில் தயங்கியபடி நின்றாள் , பிறகு தைரியத்தை வரவழித்துக் கொண்டு ”இன்றைக்கு டிராமாவுக்குப் போகலாமா வருகிறீர்களா?" என்று கேட்டாள்.
நாகராஜன் சிறிது நேரம் 'பைல்'களைப் புரட்டிக் கொண்டிருந்தான். பிறகு கோமதியை நிமிர்ந்து பார்த்து "என்ன கேட்டாய்?" என்று விசாரித்தான்.
கோமதிக்கு ஆத்திரம் வந்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல், "டிராமாவுக்குப் போகலாமா என்றேன்?" என்றாள்.
"ஓ! பேஷாய்ப் போயேன். நான் வெளியே போக ’டாக்ஸி' வைத்துக் கொள்கிறேன்."
”இல்லை ........ நீங்களும் வாருங்களேன் என்னோடு!" என்றாள் கோமதி முகத்தில் வெட்கம் படர.
”பார்த்தாயா? என்னைப் போய்க் கூப்பிடுகிறாயே எனக்கு ’பிஸினஸ்' விஷயமாய் ஒருத்தரை ஹோட்டல் ’பிரகாஷில்' இன்று இரவு எட்டு மணிக்குச் சந்தித்தாக வேண்டும், முன்னாடியே போய்ப் பார்த்தாலும் தேவலை."
கோமதிக்கு முன்பு அடங்கிப் போன ஆத்திரம் மீண்டும் கிளம்பியது .
“உங்களுக்கு என்றைக்கும் தான் 'பிஸினஸ்" இருக்கிறது! அப்படி என்ன முழுகிப் போகிறதோ தெரியவில்லை. சம்பாதித்த மட்டும் போதுமே" என்று கூறி விட்டு அருகில் கிடந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டாள்.
"நோ, நோ, கோமதி! உனக்கு வியாபார விஷயம் எல்லாம் தெரியாது, ஒரு நிமிஷம் அருந்திருந்தாலும் போச்சு!"
“போகட்டும் போங்கள்! நான் இந்தத் தடவை சாகப் பிழைக்க ஆஸ்பத்திரியில் கிடந்தேன். பிழைத்து வீட்டுக்கு வந்த நா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டோ கூட எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசை எனக்கு. உடம்பு தேறட்டும் என்று இருக்கிறேன். நீங்கள் வந்து தான் ஆக வேண்டும்......"
என்னதான் பணத்துக்கு அடிமையாக இருந் தாலும் அவனால் மனைவியின் இந்த வேண்டுகோளைத் தட்ட முடியவில்லை.
அரை மனத்துடன் நாடகத்துக்கப் புறப்பட்டான் நாகராஜன். சுமதி முன்னதாகவே ஜெயஸ்ரீயுடன் போய் விட்டாள். அவள் பாலகிருஷ்ணனாக டிராமாவில் நடிக்க வேண்டும்.
”ஒரு டிக்கெட் வீணாகப் போகிறதே. பவானி நீ வருகிறாயா அம்மா!" என்று கேட்டான் நாகராஜன்.
”நாடகத்துக்கா? வேண்டாம் அண்ணா நீயும் மன்னி யும்போய் வாருங்கள். கோபாலன் எனக்குத் துணை இருப்பதாகச் சொல்லுகிறான். அவன் மனைவியும் இங்கு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறாள்" என்றாள்.
”உம்...சரி...பாலு எங்கே? அவனாவது வரட்டும்!" என்றான் நாகராஜன்.
”பாலுவா?" என்றாள் கோமதி கோபத்துடன். அவள் முகம் கோபத்தால் சிவந்தது.
"அவன் ஒருத்தர் எதிரிலும் வரமாட்டான். அவள் காலையில் பண்ணின விஷமத்துக்கு டிராமா ஒன்றுதான் அவனுக்குக் குறைச்சலாக இருக்கிறது!"
நாகராஜன் லினன் ஸ்லாக் ஷர்ட்டை உதறிப் போட்டுக் கொண்டு . ’ சரி நீயாவது சீக்கிரம் கிளம்பு' என்றான் அலுப்புடன். இருவரும் காரில் ஏறிக் கொண்டு நாடகம் பார்க்கப் புறப்பட்டார்கள்.
மாடி வராந்தாவில் நின்று தன்னை நாடகத்துக்கு அழைத்துப் போகாமல் வெளியே செல்லும் தன் மாமா மாமியைக் கவனித்தான் பாலு அந்தப் பிஞ்சு மனத்திலே ஏமாற்றம், ஏக்கம், துக்கம் முதலியவை நிறைந்திருந்தன. கண்களிலிருந்து வழியும் கண்ணீருடன் தொலைவில் செல்லும் காரையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் பாலு. நோட்டுப் புத்தகத்தைக் கிழித்ததை ஜெயஸ்ரீ பொருட் படுத்தவில்லை. 'பாலு! நீ டிராமாவுக்கு வருவாயில்லையா?' என்று அவனைப் பார்த்துப் பள்ளிக்குச் செல்லும் பொழுது கேட்டாள். ஆனால் பெரியவர்கள், எல்லாம் தெரிந்தவர்கள். ஒரு குழந்தை செய்த அற்பத் தவறை மகத்தானதாக நினைத்துப் பெரிதாக்க அதற்கு தண்டனையும் அளித்து விட்டார்கள்.
பவானியின் மனமும் வருந்தியது. 'தனக்கெதற்கு நாடகமும் இன்னொன்றும்? வாழ்க்கையிலே நாடகம் ஆரம்பித்து, நடித்து முடித்து வெளியேறிய நடிகையாகி விட்டோமே நாம்! நம்மைக் கூப்பிட்டார்களே! ஒன்றும் தெரியாத சிறு பையன். அவளை மன்னித்து அழைத்துப் போக அவர்களுக்கு மனமில்லையே' என்று வருந்தினாள் அவள்.
”பாலு! நீ சமர்த்தாகப் படித்துப் பெரியவனாகி சுதந்திரமாக இருக்கும் போது இதைப்போல எவ்வளவோ நாடகங்கள் பார்க்கலாம் அப்பா. வா, கை கால்களை அலம்பிக்கொண்டு கீதை சுலோகங்களைச் சொல், கேட்கிறேன்" என்று மகனைக் கையைப்பற்றி அழைத்துக்கொண்டு கீழே வந்தாள் பவானி.
அங்கே மியூஸியம் தியேட்டரில் நாகராஜனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கோமதியைத் தனியாக விட்டு விட்டு நான் போய் அவரைப் பார்த்துவிட்டு நேராக வீட்டுக்குப் போய் விடுவேன். காரை அனுப்புகிறேன், நீ சுமதியை அழைத்துக் கொண்டு வந்து விடு" என்று கூறிவிட்டு, திரை தூக்கிச் சில காட்சிகள் நடந்து கொண்டிருக்கும்போது வெளியே எழுந்துபோய் விட்டான்.
மஞ்சத்திலே சாய்ந்து படுத்திருக்கிறாள் பக்த மீரா. மேவாரின் மகாராணி அவள். இட்டதைச் செய்ய ஆயிரம் பேர் காத்துக் கிடந்தார்கள். பெட்டி பெட்டியாக அணிகளும் ஆடைகளும் கேட்பாரற்றுக் கிடந்தன. அவள் எண்ணும் எண்ணமெல்லாம் அந்தக் கண்ணனைப் பற்றித்தான். அவள் பார்க்குமிடங்களில் எல்லாம் அவன் தெரிந்தான். மகாராஜா தம் மனைவியைக் காண அந்தப்புரம் வருகிறார். அழகே உருவான மீரா பதறி எழுந்து பதிக்கு மரியாதை செய்கிறாள் . அவர் மனைவியிடம் இன்பமாகப் பேசுகிறார். ஆனால் அவள் செவிகளிலே கண்ணனின் வேய்ங்குழல் இசை கேட்கிறது. மஞ்சத்திலிருந்து எழுந்து அரண்மனைப் பூங்காவினுள் பாய்ந்து ஓடுகிறாள். அங்கே நீலவானில் மிதந்து செல்லும் வெண்ணிலவில் கண்ணன் தெரிகிறான். மலர் செறிந்த மரங்களின் ரகத வண்ணத்தில் தோன்று கிறான் கண்ணன். தடாகத்திலே கண்ணன். மீராவின் இதயம் முழுவதும் அவன் உருவமே வியாபித்து திருக் கிறது. மீரா மயங்கிக் கீழே விழுகிறாள்.
பக்த மீராவாக வந்த ராதையின் எழிலும் நடிப்பும் சபையோரைப் பரவசப்படுத்தி விட்டன. பலமான கர கோஷம் எழுந்தது சபையில்.
நாடகம் முடிந்தது. அநேகமாக எல்லோரும் வெளியே போய்விட்டார்கள். நாடகத்தில் நடித்த பெண்களின் பெற்றோர்கள் உறவினர்கள் மட்டும் இருந்தார்கள்.
வேஷத்தைக் கலைத்துவிட்டு ராதா வெளியே வந்தாள். சுவாமிநாதன் நின்று கொண்டிருந்தார். ”போகலாமா அம்மா?" என்று கேட்டார். எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்தாள் ராதா. அங்கே ஒரு சிறு கூட்டம் நின்றிருந்தது. ஐந்தாறு வாலிபர்கள் வரிசையாக நின்றிருந்தார்கள்.
'வொண்டர் புல் ஆச்ஷன்!" என்றான் ஒருவன் .
"மார்வெலஸ்!" என்றான் இன்னொருவன்.
"ரொம்பவும் பிரமாதமாக இருந்தது உங்கள் நடிப்பு" என்று, தான் தமிழன் என்பதை மறந்து விடாமல் தமிழிலேயே பேசித் தன் உற்சாகத்தைத் தெரிவித்தான் மற்றொருவன்.
கடைசியில் இருந்த வாலிபன் முன்னே வந்தான். “என்னைத் தெரிகிறதா? நேற்று கோடம்பாக்கம் ஹாஸ்டலில் டிக்கட் விற்க வந்தீர்களே. உங்கள் நடிப்பைப் பார்த்த மூன்று மணி நேரமும் நான் மீராவின் காலத்தில் வசித்தவன் மாதிரி இருந்தேன். கங்க்ராஜு லேஷன்ஸ்" என்றான் அவன். அவன் வேறுயாருமில்லை மூர்த்தி தான்!
சுவாமிநாதனுக்கு இவர்கள் உற்சாகம் ஒன்றும் வேண்டிருக்கவில்லை. வா அம்மா. மணி பதினொன்று ஆகப்போகிறது" என்று சொல்லிக்கொண்டே அவளை அழைத்துக் கொண்டு காரை நோக்கி நடந்தார் அவர்.

