குரங்கு மூஞ்சி பாலு....!

ஒருநாள் பிற்பகல் மூன்று மணிக்கு டாக்டர் ஸ்ரீதரனும், ராதாவும் நாகராஜனின் வீட்டிற்கு வந்தார்கள், தெருப் பக்கத்து அறையில் மேஜைமீது கட்டுக் காகிதங்களை வைத்துக் கொண்டு நாகராஜன் உட்கார்ந்திருந் தான் . கூடத்து சோபாவில் சாய்ந்து கொண்டு கோமதி புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். பவானி உள்ளே வேலையாக இருந்தாள். வீடு நிசப்தமாக 'வெறிச்' சென்று கிடந்தது.

டாக்டரும், ராதாவும் வருவதைக் கவனித்த கோமதி வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள். வாயிற்படி அரு கில் வந்து நின்று சிரித்துக் கொண்டே “வா ராதா! என்னவோ நீங்கள் எல்லாம் டிராமா போடுகிறீர்களாமே? சுமதி சொன்னாள். அவள் தான் அதில் கிருஷ்ணனாம். நீ மீராவாக வருகிறாயாம், எனக்கு இலவசமாக டிக்கெட் உண்டோ இல்லையோ?" என்று கேட்டாள்.

கையிலிருந்த அழகுப் பையைச் சுழட்டிக் கொடே ராதா புன்முறுவலுடன் உள்ளே வந்தாள். இதற்குள் அறையைவிட்டு உவளியே வந்த நாகராஜனைப் பார்த்து வணக்கம் செலுத்திவிட்டுச் சோபாவில் அமர்ந்தாள் ராதா.

”என்ன டாக்டர்! இப்படி விச்ராந்தியாக உங்களைப் பார்ப்பதே அபூர்வமாயிற்றே! சௌக்கியம் தானே?" என்று கேட்டான் நாகராஜன்.

”சௌக்கியந்தான் மிஸ்டர் நாகராஜன். பள்ளிக்கூட டிராமாவுக்கு டிக்கட்டுகள் விற்க வேண்டுமாம். என்னையும் கூட வரும்படி, நச்சரித்து விட்டாள் ராதா. இனிமேல் உங்கள் பாடு அவள் பாடு. நீங்கள் பணம் கொடுத்தே டிக்கட்டுகள் வாங்குவீர்களோ, அல்லது படங்கள் மனைவி கூறிய மாதிரி அவளே இலவசமாக டிக்கட்டுகள் கொடுப்பாளோ எனக்குத் தெரியாது" என்று கூறிவிட்டு ஸ்ரீதரன் தமக்கே உரித்தான முறையில் கட கட வென்று சிரித்தார்.

யாரோ நண்பர்கள் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்து பவானி தட்டுக்களில் பழங்களும், காப்பியும் கொண்டு வந்து கூடத்தில் இருந்த மேஜை மீது வைத்தாள். பிறகு டாக்டரைப் பார்த்துப் புன்முறுவலுடன் வணக்கம் செலுத்திவிட்டு, அருகிலிருந்த சோபாவில் உட்கார்ந்தாள்.

தன் அருகில் உட்கார்ந்திருந்த ராதாவைக் காண்பித்துக் கோமதி பவானிக்கு அவளை அறிமுகம் செய்து வைத்தாள்.

நாகராஜன் தனக்கு அவசர வேலை இருப்பதாகச் சொல்லிக் கொண்டு தன் அறைக்குச் சென்று விட்டான். டாக்டர் ஸ்ரீதரன் தாம் நேராக 'டிஸ்பென்சரி'க்குப் போய்விட்டு வருவதாகச் சொல்லிவிட்டு ராதாவிடமும் கோமதியிடமும் விடை பெற்றுக்கொண்டு சென்றார்.

ஆண்களை விடப் பெண்கள் சீக்கிரம் ஒருவரை ஒருவர் தெரிந்து கொண்டு நண்பர்களாகி விடுவார்கள். கூடத்தில் உட்கார்ந்திருந்த கோமதியும் பவானியும் ராதாவும் நெடுநாள் பழகியவர்களைப் போலப் பேச ஆரம்பித்தார்கள் . பவானியை நாடகத்துக்கு வரச் சொல்லி ராதா மிகவும் வற்புறுத்தினாள். மூன்று டிக் கட்டுக்களைக் கிழித்துக் கொடுத்து விட்டு நாகராஜனிடம் முப்பது ரூபாய்கள் வாங்கிக்கொண்டு ஒரு பெரிய கும்பிடு போட்டு விட்டுக் கிளம்பினாள் அந்தப் பெண். அவள் இருந்த சிறிது நேரம் வரை அங்கு கலகலவென்று சிரிப்பும், பேச்சுமாக இருந்தது. அவள் போன பிறகு பவானி, 'என் மன்னி! பெண் துரு துருவென்று நன்றாக இருக்கிறாள் இல்லையா? ரொம்பவும் வெகுளியான சுபாவம்" என்று தன் அபிப்பிராயத்தைத் தெரிவித்தாள்.

”த்சூ......” என்று சூள் கொட்டினாள் கோமதி. ”என்ன சுபாவமோ? வீட்டிலே அரை மணிகூ:-- த் தங்கு கிறதில்லையாம். காலையில் ஒரு உடை. நடுப்பகலில் வேறு உடை. மாலையில் ஒரு அலங்கரம் என்று உடுத்திக் கொண்டு ஊரைச் சுற்றி வருகிறது. வயசுப் பெண் ஆயிற்றே என்று கவலைப்பட யார் இருக்கிறார்கள்? டாக்டருக்கு அவர் வேலை தான் சரியாக இருக்கிறது. அத்துடன் ஆண்களுக்குப் பெண் குழந்தைகளை வளர்க் கும் விதம் தெரியுமா என்ன?" என்றாள் கோமதி,

பவானியின் மனம் உண்மையில் ராதாவுக்காக இரக்கப்பட்டது. இளமையும் அழகும் படிப்பும் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு வாழ்க்கையில் இன்னல்கள் வராமல் இருக்க வேண்டுமே என்று கவலைப்பட்டாள்.

”இங்கே அடிக்கடி வருவது வழக்கமா?" என்று விசாரித்தாள் பவானி கோமதியை.

”அதெல்லாம் ஒன்றுமில்லை. எப்பொழுதாவது வருவாள். நான் என்ன பி.ஏ. வா படித்திருக்கிறேன்? அவளுக்கென்று படித்த சிநேகிதிகள் ஏகப்பட்டவர்கள் இருக்கிறார்கள்" என்றாள் கோமதி அலட்சியமாக,

படித்தவர்கள் படித்தவர்களுடன் தான் பழக வேண்டும். படித்தவர்கள் படிக்காதவர்-களுடன் பழகுவதோ பேசுவதோ கூடாது. ஏன் இப்படி எல்லாம் வித்தியாசங்களை நாமே வகுத்துக் கொள்ள வேண்டும் என்று தான் பவானிக்குப் புரியவில்லை .

சிந்தனை தோய்ந்த மனத்துடன் பவானி கொல்லைத் தாழ்வாரத்தில் போய் உட்கார்ந்தாள். அவள் மனத் திரையை விட்டு மூர்த்தியோ அவனுடைய செயல்களோ மறையவே இல்லை. பட்டண வாசத்தில் சாரி சாரியாக ஒரு அலுவலுமின்றித் திரிந்து வரும் ஆண்களையும் அவர்கள் நடுவில் ராதாவைப்போன்ற இளம்பெண்களின் வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தாள் பவானி.

அப்போது பள்ளிக்கூடத்திலிருந்து பாலு வந்தான். கண்கள் சிவந்து உதடுகள் துடிக்க சோர்ந்த முகத்துடன் வரும் அவனைப் பார்த்துப் பவானி திடுக்கிட்டாள். "என்னடா பாலு! என்ன ஆயிற்று?" என்று கேட்டாள் பதறியவாறு. பாலு தாயின் அருகில் வந்து உட்கார்ந்தான். அழுது கொண்டே பையிலிருந்த புத்தகங்களை வெளியே எடுத்தான். அதில் இருந்த கணக்கு நோட்டுப் புத்தகத்தில் இருந்த ஒரு சித்திரத்தைத் தாயிடம் காண்பித்தான். பூசனிக்காய் போன்ற உடலில் மாங்காயைப் போன்ற தலையும் கொட்டையாக விழிகளுமாக வரையப்பட்டிருந்தது கீழே அந்தச் சித்திரத்திற்கு விளக்கமும் தரப்பட்டிருந்தது . "குரங்கு மூஞ்சிபாலு! உன்னோடே பேச மாட்டேன்!" என்று எழுதியிருந்தது. எழுதியவர் தம் பெயரையும் போட்டிருந்தார். இந்தப் பிரபல ஓவியர் வேறு யாருமில்லை சுமதி தான்.

பவானி இதைப்பார்த்ததும் 'பக்' கென்று சிரித்து விட்டாள். அம்மா சிரிப்பதைப் பார்த்ததும் பாலுவுக்கு அழுகை அதிகமாக வந்தது.

”பாலு, இதெல்லாம் விளையாட்டுக்குப் போட்டிருக்கிற படம் அப்பா. உன் முகம் குரங்கு மாதிரி இல்லை யென்பது உனக்குத் தெரியாதா? சே! சே! சுமதி உன்னை விடசின்னவள். அவள் பேரில் கோபித்துக் கொண்டு அழலாமா? வா, டிபன் சாப்பிட்டுவிட்டு விளையாடப் போகலாம்..." என்று கூறி அவனைத் தேற்றினாள். ஆனால் பாலுவின் உள்ளம் பொருமிக் கொண்டே இருந்தது. "ஆகட்டும், அந்த சுமதியை விட்டேனாபார்!" என்று கருவிக்கொண்டே யிருந்தான்.

சுமதி அன்று பள்ளிக்கூடத்திலிருந்து நேரம் கழித்து வந்தாள். வந்தவள் உற்சாகம் பொங்கப் பாலுவை அழைத்தாள்.

சுமதி அவன் அந்தப்புறம் திரும்பினால் அப்படிப் போய் நின்றாள். இந்தப் பக்கம் பார்த்தால் எதிரில் வந்து நின்றாள்.

"சீ! போ. நான் தான் குரங்கு மூஞ்சியாச்சே. என்னோட பேச மாட்டேன் என்று எழுதினாயே. ஏன் பேச வந்தாய்? வெட்கமில்லை, மானமில்லை, வெள்ளைக் கத்தரிக்காய்' என்று கூச்சல் போட்டான் பாலு.

”பாலு" என்று கண்ணீர் பொங்க அழைத்தாள் சுமதி. ”டேய்! டேய்! நான் தெரியாமல் எழுதினேன். என்னை மன்னித்துக் கொள்ளடா" என்றாள் கண்ணீருக்கடையில். ஆசையுடன் அவன் கரங்களைப் பற்றிக் காண்டு அவள் கெஞ்சும் காட்சியைப் பவானி பார்த்து உவகை யெய்தினாள். அவள் மனத்திலே பற்பல கனவுகள் தோன்றின.