கிழவரின் கண்ணீர்
மனித வாழ்க்கையில் நடப்பவை யாவுமே வேடிக்கை என்றோ விசித்திர மென்றோ தள்ளிவிட முடியாது. ’கஷ்டங்களைச் சிரிப்பினாலேயே வெல்ல வேண்டும்' என்று வாயளவில் சொல்லி விடலாம். செய்கையிலே காண்பது அரிது. சிற்சில விஷயங்களை மிகைப் படுத்தாமல் சிலவற்றை வேண்டுமானால் ஒதுக்கி வாழ முயற்சிக்கலாம். ஆனால், அதி முக்கியமான விஷயங்களைச் செய்யமுன்பு ஆலோசித்துதான் ஆகவேண்டும்.
டாக்டர் ஸ்ரீதரன் சிறந்த அறிவாளி. வைத்திய மேதை. ஒரு டாக்டரின் வாழ்க்கையில் அலகாசச்தைக் காண்பது அரிது. அதுவும் பொறுப்பு உள்ள, திறமையுள்ள டாக்டருக்கு ஓய்வு கிடைக்கிறதா என்பது சந்தேகம், ஸ்ரீதரனின் மருத்துவ சாலையில், காலையிலும் மாலையிலும் கூடும் கூட்டத்தைப் பார்த்தே இதை அறிந்து கொள்ளலாம். ஒட்டி உலர்ந்த உடம்புடன் வரும் தாய் மார்கள், கன்னங்கள் ஒட்டி எலும்பு தெரியும்படி ஆடவர்கள், நோஞ்சான் குழந்தைகள், அளவுக்கு மீறிய சுகவாசத்தால் பருத்த உடல் கொண்ட பெண்கள், ஆண்கள். இப்படி ஏதோ ஒரு நோயைச் சொல்லிக் கொண்டு கூட்டம் நெரிந்தது.
அந்த நோயாளிகளில் பாதிக்கு மேல் குழந்தைகள் இருந்தார்கள். மாம்பழக் கதுப்புப் போன்ற கன்னங்களையும் நீலோற்பல விழிகளையும், முகத்திலே துள்ளி விளையாடும் சிரிப்பையும் அடைந்திருக்க வேண்டிய அவர்கள் நோய்களுக்கு இரையாகிவிடும் கொடுமையைத் தான் டாக்டர் ஸ்ரீதரனால் சகிக்க முடிய வில்லை.
இப்படி அல்லும் பகலும் பிறர் நலனைக் கருத்தில் கொண்டு வாழும் ஸ்ரீதரனால் தன்னுடைய குடும்பத்தில் அதிக அக்கறை செலுத்த முடியவில்லை. குடும்பப் பொறுப்பு பூராவும் சுவாமிநாதனே ஏற்று நடத்தி வந்தார். மாதாந்தரம் வாங்க வேண்டிய சாமான்கள் இதர செலவுகள் யாவும் அவருடைய மேற்பார்வையில் நடந்து வந்தன. குழந்தை ஜெயஸ்ரீயை விட அவர் அன்பு செலுத்தியது ராதாவிடம் தான். தாயையும் தந்தையையும் இழந்து சகோதரன் ஒருவனையே ஆதாரமாகக் கொண்டு வாழும் அந்தப் பெண்ணிடம் அவருக்கு அலாதி அன்பு ஏற்பட்டது. அத்துடன் ராதா வயது வந்த பெண். அவளைத் தக்கபடி காப்பாற்றித் தகுந்த இடத்தில் கல்யாணம் பண்ணித் தரவேண்டும் என்கிற கவலையும் பட்டு வந்தார் சுவாமிநாதன். அவர் வாழக்கையை விளையாட்டாகவும் விசித்திரமாகவும் கருதுபவர் அல்ல. எதையும் தீர ஆலோசித்தே செய்ய வேண்டும் என்கிற கொள்கையை உடையவர்.
அன்று மாலை ஆறு மணிக்கு வெளியே சென்ற ராதா இரவு ஒன்பது மணி வரையில் வீடு திரும்பவில்லை. வாசல் ’கேட்'டுக்கும், உள்ளுக்குமாக அலைந்து கொண்டிருந்தார் சுவாமிநாதன். ஸ்ரீதரன் யாரோ நோயாளியைப் பார்ப்பதற்காக வெளியே சென்றிருந்தார். ஜெயஸ்ரீ படுத்துத் தூங்கி விட்டாள். ’இந்த இடத்துக்குப் போகிறேன் என்று ஒரு பெண் சொல்லி விட்டுப் போகாதோ' என்று சுவாமிநாதன் தமக்குள் பல முறைகள் சொல்லிக் கொண்டார். ’வயசு வந்த பெண். என்ன தான் பி.ஏ. படித்திருந்தாலும், இவ்வளவு துணிச் சல் ஆகாது' என்று தான் அவருக்குத் தோன்றியது.
தெருவுக்கும் உள்ளுக்குமாக அலைந்து அலைந்து கால்கள் சோர்ந்து போய் உள்ளே வந்து உட்கார்ந்தார் சுவாமிநாதன். வெளியே சென்றிருந்த ஸ்ரீதரனும் வந்து விட்டார். காரைக் கொண்டு போய் ஷெட்டில் விட்டு விட்டு ஹாலுக்குள் நுழைந்தபோது பெஞ்சில் கவலை யுடன் உட்கார்ந்திருந்த சுவாமி நாதனைப் பார்த்தார்.
"என்ன சுவாமி, எனக்காகவா காத்துக் கொண் டிருக்கிறீர்கள்? சாயங்காலம் சாப்பிட்ட சிற்றுண்டியே வயிறு நிறைந்திருக்கிறது எனக்குப் பசியே இல்லை. ஒரு டம்ளர் பால் மட்டும் கொடுங்கள் போதும். ஜெயஸ்ரீயும், ராதாவும் தூங்கிப் போய்விட்டார்களா?" என்று கேட்டார்.
”ராதாவா? அவள் சாயங்காலம் வெளியே போனவள்தான். இன்னும் வரவே இல்லையே? எங்கே போனாள் என்று உங்களுக்கு தெரியுமா?" என்று கவலையுடன் விசாரித்தார் சுவாமிநாதன்.
"எனக்குத் தெரியாதே!" என்றார் ஸ்ரீதரன். "எங்கே போயிருப்பாள்? யாராவது சினேகிதியின் வீட்டுக்குப் போயிருக்கலாம். வந்து விடுவாள்" என்று சொல்லிக் கொண்டே மாடிக்குச் சென்றார் ஸ்ரீதரன்.
சுமார் பத்து மணிக்கு ராதா வீடு வந்து சேர்ந்தாள். சோர்ந்த முகத்துடனும் கவலையுடனும் தனக்காக வழி பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் சுவாமி நாதன் எதிரில் வந்து நின்றாள். ஏதோ டிராமாவிற்கோ நடனத்துக்கோ அவள் வேஷம் போட்டுக் கொண்டு வந்திருந்த மாதிரி இருந்தது அவள் அலங்காரம். நெற்றியில் வகிட்டுக்கருகில் கட்டியிருந்த பதக்கமும், காதுகளில் ஆடும் ஜிமிக்கியும், காதளவு மை தீட்டிய கண்களும் அவளை ஒரு கோபிகையாகத் தோன்றச் செய்தன.
"என்னம்மா குழந்தை! என்ன வேஷம் இது?" என்றார் சுவாமி நாதன்.
”வேஷம் தான்! நாங்கள் எல்லோரும் டிராமா போடுகிறோம். அதற்காக நானும் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறேன். உங்களிடம் காண்பிக்க வேண்டும் என்று தான் வேஷத்தைக் கலைக்காமல் என் சினேகிதியின் காரில் வந்தேன். இன்றைக்கு 'ரிகர்ஸல்' ஆயிற்று. இன்னும் நாலு நாளில் டிராமா இருக்கிறது. நீங்களும் வருகிறீர்களா?" என்று கேட்டாள் ராதா.
சுவாமி நாதனுக்கு அவளை என்ன சொல்வது என்றே புரியவில்லை. சிறிது நேரம் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றார். பிறகு நிதானமா "அதெல்லாம் சரிதான். இப்படி நீ இரவு பத்து மணி வரைக்கும் வெளியே சுற்றி விட்டு வரலாமா? சாப்பிட வேண்டாமா? வேளையில் சாப்பிட வில்லை யென்றால் உடம்பு என்னத்துக்கு ஆகும்?" என்று தம் கருத்தை நாசூக்காக அறிவித்தார் சுவாமிநாதன்.
கீழே பேச்சுக்குரல் கேட்கவே மாடியிலிருந்து ஸ்ரீதரன் கீழே இறங்கிவந்தார். கூடத்தில் ஒளிரும் மெர்க் குரி விளக்கின் ஒளியில் அழகுப்பிம்பமாக நிற்கும் ராதையைப் பார்த்தார் ஸ்ரீதரன். தன் சகோதரி இப்படி ஒப் பற்ற எழிலுடன் இருப்பது அவருக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியது.
"என்ன சொல்கிறார் சுவாமி? நேரம் கழித்து வீடு திரும்பலாமா என்று கேட்கிறா-ராக்கும்?" என்று சிரித்துக் கொண்டே கூறியவாறு ஸ்ரீதரன் தங்கையின் அருகில் வந்து நின்றார்.
"அதெல்லாம் ஒன்றும் இல்லை. வேளையில் சாப்பிடா விட்டால் உடம்புக்கு ஆகாதாம். அதைப் பற்றித் தான் கவலைப்படுகிறார் அண்ணா" என்றாள் ராதா சிரித்துக் கொண்டே.
சுவாமி நாதன் ஒரு பாத்திரத்தில் தயிர் சாதத்தைப் பிசைந்து கொண்டு எலுமிச்சை ஊறுகாயும் கொண்டு வந்தார். ராதையை அங்கிருந்த சோபாவில் உட்காரச் சொல்லி, ஒவ்வொரு பிடியாகச் சாதத்தை எடுத்து அவள் கையில் வைத்தார்.
இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டு நின்ற ஸ்ரீதரன், “என்னம்மா ராதா! உனக்குக் கல்யாணமாகி விட்டால் இந்தக் கிழவர் இங்கே இருக்க மாட்டார். உன்னுடன் வந்து விடுவார் ! அப்புறம் என்பாடும் ஜெயஸ்ரீயின் பாடும்தான் திண்டாட்டமாகி விடும்" என்றார் வேடிக்கையாக.
தலையைக் குனிந்து கொண்டிருந்த சுவாமிநாதன் திமிர்ந்து ஸ்ரீதரனைப் பார்த்தார்.
“நான் அவளுடன் புக்ககம் போகிறது இருக்கட்டும். முதலில் இந்த வருஷம் ராதாவுக்குக் கல்யாணம் பண்ணி விட வேண்டும்; நல்ல இடமாக வந்தால் பாருங்கள்" என்றார்.
கலகலவென்று சிரித்துக் கொண்டே ராதா உட் கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தாள். அவள் இப்படி. ஒன்றும் அறியாத பெண்ணாக வெகுளியாக இருப்பதை நினைத்து சுவாமிநாதன் வருந்தினார், ஒரு சொட்டுக் கண்ணீர் திரண்டு அவர் கண்களின் முனையில் தேங்கி நின்றது.

