உடலும் உள்ளமும்

ஒன்றுமில்லாததற்கெல்லாம் பிரமாதப்படுத்துவது சிலருடைய பிறவிக்குணம். நன்றாக ஆரோக்கியமாகவே இருப்பார்கள்; பாலும் பழமும் வெண்ணெயும் ரொட்டியும் சாப்பிடுவார்கள். கன்னத்திலேயும், கண்களிலேயும் ஆரோக்கியத்தின் செம்மை படர்ந்திருக் கும். மகிழ்ச்சி துள்ள வேண்டிய முகத்தைச் சோர்வாக வைத்துக் கொண்டு எனக்கு உடம்பு சரியில்லை, வயிற்றில் வலி. சாப்பாடு பிடிக்கவில்லை. இரண்டு வாய் சாப்பிட்டால் வயிறு நிறைந்து விடுகிறது" என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

”போன பிரசவத்தின்போது உடம்பு கெட்டுப் போய் விட்டது. திரும்பவும் தேறவில்லை. குழந்தைக்குக் கூட நான் பால் கொடுப்பதில்லை. 'உடம்புக்கு ஆகாது . பாலை நிறுத்தி விடு' என்று டாக்டர் சொல்லி விட்டார். புட்டிப்பால்தான் கொடுக்கிறேன்" என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் தாய்மார்கள் அநேகம் பேர் உண்டு. இவர்களைப் பார்த்தால் வியாதியஸ்தர் கள் மாதிரி இருக்க மாட்டார்கள். தாங்கள் பெற்ற மகவுக்குப் பாலூட்டினால் தங்களுடைய அழகு குறைந்து போகும் என்கிற ஒரு வித அசட்டு மனப்பான்மை உடையவர்கள் இவர்கள்.

டாக்டர் ஸ்ரீதரன் சென்ற பிறகு, கோமதி ’உஸ்' என்று கூறிக் கொண்டே படுக்கையில் சாய்ந்தாள். "அப்பா அவர் போட்ட ஊசி எப்படி வலிக்கிறது!" என்று சொல்லிக் கொண்டு கைகளைத் தடவிக் கொண்டாள்.

பால்கனியை விட்டு வந்த பவானி தன்னுடைய மன்னி படுக்கையில் ஆயாசமாகச் சாய்ந்து இருப்பதைப் பார்த்து அன்புடன் அவள் அருகில் வந்து, ”மன்னீ! ஏதாவது சூடாகச் சாப்பிடுகிறாயா? புதுப் பால் கறந்து விட்டான். காய்ச்சி வைத்திருக்கிறேன். ஓவல்டின் போட்டுக் கொண்டு வரட்டுமா?" என்று கேட்டாள்.

”அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் பவானி எனக்குப் பசியே இல்லை" என்றாள் கோமதி.

பவானி சிறிது தயங்கிக் கொண்டே நின்றாள். பிறகு சற்றுப் பயத்துடன். "கீழே இறங்கி வாயேன் மன்னி. இன்றைக்கு வெள்ளிக்கிழமை, கைகால்களை அலம்பிக் கொண்டு சுவாமி படத்துக்கு விளக்கேற்றி நமஸ்காரம் செய்யேன். சற்றுக் காற்றாட ஊஞ்சலில் உட்காரேன். இப்படி நாள் கணக்கில் இந்த அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தால் மனசு தான் என்னத்திற்கு ஆகும்?" என்று அழைத்தாள்.

கோமதிக்கு முதலில் அலுப்பாகவும் வேண்டா வெறுப்பாகவும் இருந்தது. பவானி சொல்லுகிறாளே என்று நினைத்துக் கீழே இறங்கி வந்தாள்.

கூடத்தில் ரேடியோ மேஜை மீது முன்னைப் போல் பத்திரிகைகளும் கிழிந்த துணிகளுமாக இராமல் துப்புரவாக வைக்கப்பட்டிருந்தது. அதற்கடுத்த பூஜைக் கூடத்திலிருந்து மலர்களின் நறுமணம் ’கம்' மென்று வீசியது. பலவித மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளைப் படங்களுக்குச் சாத்தி இருந்தாள்.

அந்த வீட்டில் சமையலுக்கு ஆள் கிடையாது. மாதத்தில் அநேக நாட்கள் ஹோட்டலிலிருந்து எடுப்புச் சாப்பாடு வந்து விடும். அதைக் குழந்தைக்குப் போட்டுத் தானும் சாப்பிடவே கோமதிக்கு அலுப்பாக இருக்கும். மின்சார அடுப்பில் காலையில் பாலைக்காய்ச்சி, தானே காட்பி போட்டுக் கொண்டு விடுவான் நாகராஜன். மனைவி எழுந்து போட்டுக் கொடுக்க வேண்டும் என்று காத்திருக்க மாட்டான். அவள் படுக்கையை விட்டு எழுந்து வருவதற்குக் காலை சுமார் ஏழு மணி ஆகும். பால்காரன் பாலைக் கறந்து வைத்து விட்டுப் போய் விடுவான். வேலைக்காரி சுமதிக்குத் தலைவாரிப் பின்னி குளிப்பாட்டி உடை அணிவித்து விடுவாள். சில நாட் களி வேலைக்காரி கொடுக்கும் ஆகாரத்தைச் சாப்பிட்டு சுமதி 'கான்வெண்டு'க்குப் போய் விடுவாள். தலை வாரிப் பூச்சூட்டி, மை தீட்டிப் பொட்டிட்டு மகிழ வேண்டிய தாய் உள்ளம் உறங்கிக் கிடந்தால், அந்தக் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றி என்ன சொல்ல முடியும்?

கோமதி சுபாவத்தில் கொஞ்சம் நோயாளி. 'நோய் பீடிப்பது உடலையே தவிர உள்ளத்தை அல்ல' என்று அதை உதறித் தள்ளும் சுபாவத்தைப் படைத்தவள் அல்ல, தலையை வலிக்கிறதா? அது சாதாரணத் தலைவலி என்று இருந்து விடமாட்டாள். நரம்புத் தளர்ச்சியினால் வந்த தலைவலியா ‘மெனிஞ்ஜைடிஸ்’ என்கிற பயங்கர வியாதியின் ஆரம்பமா என்றெல்லாம் மண்டையைப் பிளந்து கொள்வாள். வீட்டில் ’போன்' இருந்தது. தானாகவே ’போன்' செய்வாள் டாக்டருக்கு.

”தலைவலிதானே? சூடாகக் காப்பி சாப்பிடுங்கள். குளிர்ந்த காற்றில் உலாவுங்கள், சரியாகி விடும்" என்று டாக்டர் கூறினால், அதைச் சரியென்று ஆமோதித்து விடமாட்டாள் கோமதி.

”நரம்புத் தளர்ச்சியினால் ஏற்பட்ட தலைவலி யானால் அதற்குக் காப்பி நல்லதா? சீதளத்தினால் வந்த தலைவலியானால் குளிர்ந்த காற்று உடம்புக்கு ஆகுமா?" என்று கேட்பாள் டாக்டரை.

தன்னுடைய ஆரோக்கியத்தில் இப்படித் திடமான நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ளாமல் அரைகுறை யாக எதையாவது படித்தும் கேட்டும் அவள் தினசரி நோயாளியாக மாறிவிட்டிருந்தாள்.

மனைவி ஒரு வியாதிக்காரி. ஆண்களின் மனம் ரீங் காரமிடும் வண்டைப் போன்றது. மலர்ந்த மலர்களிலே மதுவும் அழகும் இருக்கின்றனவா என்று சோதனை போடும் தன்மையை உடையது வண்டு.

வாயிற்படி ஏறும் போதே சிரித்துக் கொண்டு வரவேற்கும் மனைவி சதா கட்டிலில் படுத்துக்கொண்டு முனகியவாறு இருந்தால் எந்தக் கணவன்தான் அலுத்துக் கொள்ள மாட்டான்?

பணத்தை மதியாமல் நாகராஜன் புட்டி புட்டியாக மருந்துகள் வாங்கினான். அவள் வாய் அசைப்பதற்கு முன் பணிபுரிய அந்த வீட்டில் மூன்று வேலைக்காரர்கள் இருந்தார்கள். வீட்டில் இருப்பவர்கள் மூன்று பேர்! வேலையாட்கள் மூன்று பேர்!

கோமதியின் உடல் நிலையை விட மனோநிலையைச் சரியாகப் புரிந்து கொண்டவர் டாக்டர் ஸ்ரீதரன். உடலில் ஏற்பட்டிருக்கும் வியாதிகளுக்கு வைத்தியர்களால் சிகிச்சை செய்ய முடியும். உள்ளத்தில் ஏற்பட்டிருக்கும் நோய்க்கு அவர்களால் என்ன செய்ய முடியும்?

”கோமதி அம்மா உங்களை வரச் சொன்னாங்க" என்று டாக்டர் வீட்டுக்கு, நாகராஜன் வீட்டைச் சேர்ந்த வேலைக்காரர்கள் யார் வந்து அழைத்தாலும் டாக்டர் ஸ்ரீதரன் பதறிக் கொண்டு போக மாட்டார்.

"அம்மாவுக்கு என்ன உடம்பு?" என்று கேட்பார்.

"ஒண்ணுமில்லீங்க, ஏதோ உ.டம்பு சரியில்லையாம். வரச் சொன்னாங்க" என்பான் வேலையாள்.

"பேசிக் கொண்டு நடமாடிக் கொண்டு தானே இருக்காங்க?"

”ஆமாங்க, இன்னிக்கு எங்க சம்பளம்கூட அம்மா தான் குடுத்தாங்க"

ஸ்ரீதரன் மனதுக்குள் சிரித்துக் கொண்டு, ”வரேன் என்று சொல்லப்பா" என்று அவனை அனுப்பி விடுவார். அன்று போக மாட்டார். நாலு தினங்களுக்கு அப்புறம் தான் போய்ப் பார்த்து வருவார்.

இப்படித்தான் ஒரு மாசத்துக்கு முன்பு இரவு இரண்டு மணிக்கு நாகராஜன் டாக்டரைக் கூப்பிட்டான் போனில்.

”ரொம்பவும் ஆபத்தாக இருக்கிறது. மயக்கம் தான். கருச்சிதைவு என்று நினைக்கிறேன். என்ன செய்வது?" என்று கேட்டான்.

"கருச்சிதைவா? நான் எதிர்பார்த்தேன் மிஸ்டர் நாகராஜன் உங்கள் மனைவிக்கு உடல் உழைப்பு போதாது. கர்ப்ப ஸ்திரீகள் உட்கார்ந்த இடத்தை விட்டு நகராமல் இருப்பது நல்லதில்லை. அதே சமயத்தில் அதிகமாக உடம்பை அலட்டிக் கொள்ளவும் கூடாது இப்பொழுது என்ன செய்வது? ஆசுபத்திரிக்குப் போன் பண்ணுகிறேன். ’அட்மிட்' செய்து விடுங்கள்" என்றார்.

அதற்கப்புறம் தான் வீடு இருக்கும் அவல நிலையைப் பார்த்து நாகராஜன் பவானியை வரவழைத்தான். அவள் வந்த பிறகு வீட்டிற்கு ஒரு அழகு. சோபை எல்லாமே வந்து விட்டது. இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை' என்பார்கள். அந்த இல்லாளும் அமைய வேண்டிய முறையில் அமைந்தால் தான் உண்டு. இல்லாவிட்டால் அந்த வீட்டில் ஆசை. அன்பு, காதல். இன்பம் ஒன்றுமே இல்லைதான்!

தன்னுடைய மன்னி இப்படி ஏன் இருக்கிறாள் என்று வியந்தாள் பவானி.

கொல்லையில் சென்று கால் அலம்பிக் கொண்டு வந்த கோமதி கூடத்து சோபாவில் சென்று உட்கார்ந்தார். இதற்குள் பவானி ஓவல்டின் கரைத்து எடுத்து வந்தாள். அதைச் சாப்பிடும் வரை பவானி கோமதியுடன் ஒன்றுமே பேசவில்லை. அவள் சாப்பிட்டு முடித்ததும் அவள் அருகில் உட்கார்ந்து "ஏன் மன்னி அண்ணா மாசத்தில் வீட்டில் எத்தனை நாளைக்கு இருப்பான்? நான் வந்ததிலிருந்து சேர்ந்தாற்போல் அவனை நாலு நாட்கள் கூட வீட்டில் பார்க்க முடியவில்லையே?" என்று கேட்டாள்.

கோமதி பவானியை ஒரு தினுசாகப் பார்த்தாள். பிறகு வறண்ட குரலில், ”ஏன் அப்படிக் கேட்கிறாய் பவானி? மாசத்துக்கு நாலைந்து நாட்களுக்கு மேல் உன் அண்ணா வீட்டில் இருப்பதில்லை. அப்படி இருந்தாலும் அந்த சமயங்களில் அவருக்குத் தன் ' பிஸினஸ்' அலுவலா கவே பிறருடன் ' போனில் பேசுவதற்குச் சரியாக இருக்கும்" என்றாள்.

மனதில் இருந்த ஏக்கமும் வருத்தமும் அவள் குரலில் பிரதிபலித்தன. அழகுள்ள மனைவி, ஆசைக் குழந்தை, சுகவாழ்வு எதையும் கவனிக்காமல் ’வேலை வேலை' என்று எதையோ லட்சியமாக வைத்துக் கொண்டு நாகராஜன் நடந்து கொண்டான்.

இவையெல்லாமே வேடிக்கையாகவும் விசித்திர மாகவும் இருந்தன பவானிக்கு.