டாக்டர் ஸ்ரீதரன்
டாக்டர் ஸ்ரீதரனுக்கு இப்பொழுது வயது முப்பத்தி ஐந்து - சென்னை நகரின் பிரபல டாக்டர்களில் அவரும் ஒருவர். மாதம் ஆயிரம் ரூபாய்களுக்கு மேல் வரும்படி வந்தது. மனைவி இறந்து போய் எட்டு வருஷங்கள் ஆகின்றன. மறுமணம் செய்து கொள்ளும் எண்ணமா அதை தூண்டி நடத்தி வைப்பவர்களையோ ஒன்றையும் அடையக் கொடுத்து வைக்காதவர் ஸ்ரீதரன். உடன் பிறந்த தங்கையும், மகள் ஜெயஸ்ரீயும் தவிர, அவருடைய லட்சிய மெல்லாம் வைத்தியத் தொழிலில் இருந்தது. அவருடைய அன்பு மனைவி இறந்து போன பிறகு அந்த லட்சியம் வலுப்பெற்றது. அவளை அடியோடு மறந்து விட்டு வேறொருத்தியை மணந்து வாழ விரும்பவில்லை. மண வாழ்க்கையின் சுவையை அவர் நான்கே வருஷங்களில் அனுபவித்து முடித்து விட்டார்.
ஜெயஸ்ரீயின் தாய் பத்மாவுக்கு அழகும் குணமும் ஒருங்கே பொருந்தி இருந்தன. பிறந்த வீட்டிலிருந்து அவள் கொண்டுவந்த சீதனப் பொருள்களில் சுவாமி நாதனும் ஒருவர். பத்மாவுக்குத் துணையாக ஒத்தாசை புரியவந்த அந்தக்கிழவர் பத்மா இவ்வளவு சடுதியில் மறைந்து போவாள் என்று நினைக்கவேயில்லை. அவள் போன பிறகு ஒரு தினம் சுவாமிநாதன் தம் மூட்டையை எடுத்துக் கொண்டு ஸ்ரீதரனைப் பார்க்க வந்தார்.
"என்ன? எங்கே கிளம்புகிறீர்கள்?" என்று கேட்டார் ஸ்ரீதரன்.
"எனக்கு இங்கே என்ன பாக்கி இருக்கிறது? மகாலட்சுமி மாதிரி இருந்தவள் போய்விட்டாள்!" என்று கண்ணீர் பெருகக் கூறினார் சுவாமி.
ஸ்ரீதரன் நாற்காலியை விட்டு எழுந்து வந்தார். அவர் கைகளைப் பற்றிக் கொண்டு ”சுவாமி! உமக்கு இங்கேதான் இனிமேல் முக்கியமான வேலைகள் பாக்கி இருக்கின்றன. அவள் போய் விட்டாள். நீரும் போய் விட்டால் இந்தக் குழந்தையை யார் வளர்ப்பார்கள்?"
குழந்தை ஜெயஸ்ரீ விண் விண் என்று தொட்டிலை உதைத்துக் கொண்டு படுத்திருந்தாள். இன்னும் சிறிது நேரத்தில் பால் புகட்ட வேண்டும். தொட்டிலையும் அதில் கிடந்த குழந்தையையும் மாறி மாறிப் பார்த்தார் சுவாமி.
தாயின் பராமரிப்பிலே வளரவேண்டிய மகவு அந்தப் பாக்கியத்தை இழந்து வாடுகிறது. தாமும் அதை உதறித் தள்ளி விட்டுப் போய்விட்டால்? அந்த நினைவே தம்மைச் சுட்டுப் பொசுக்கிவிடும் என்று தோன்றியது சுவாமிக்கு. மூட்டையைக் கொண்டு போய் பரணில் வைத்தார். குழந்தை ஜெயஸ்ரீயும் ராதாவும் அவர் பராமரிப்பில் வளர்ந்து வருகிறவர்கள் தான். ஏன்? டாக்டர் ஸ்ரீதரனைக் கூட அவர்தான் வளர்த்து வருகிறார்.
”இன்றைக்குச் சனிக்கிழமை. வென்னீர் போட்டு வைக்கிறேன். டிஸ்பென்சரியிலிருந்து வந்ததும் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுங்கள்" என்று கண்டிப் பாக உத்தரவு போடுவார் சுவாமி. வீட்டுக்கு அவரைப் பெரியவராக ஆக்கியிருந்தார் டாக்டர்.
ஸ்ரீதரனுக்கு ஒரு பெரிய பொறுப்புக் காத்துக் கிடந்தது. இருபது வயதை அடைந்த அவர் தங்கை ராதாவைச் சரியான இடத்தில் கல்யாணம் பண்ணிக் கொடுத்து விட்டால், அவர் நெஞ்சிலே இருக்கும் பாதிப் பளு இறங்கிவிடும். ஜெயஸ்ரீயைப் பற்றி இப்போதைக்குக் கவலை இல்லை.
டாக்டரின் கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்த சுவாமி, ”டாக்டர்! யாருடைய வீட்டுக்கோ போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தீர்களே நேரமாக-வில்லையா?" என்று கேட்டு அவருடைய சிந்தனைகளுக்கு ஒரு முடிவை ஏற்படுத்தினார்.
ஸ்ரீதரன் தம் கைப் பெட்டியை எடுத்துக் கொண்டு காரில் போய் உட்கார்ந்தார். மாமரத்தில் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் ஜெயஸ்ரீ மட்டும் உட்கார்ந்து ஆடி கொண்டிருந்தாள். குழந்தை தனியாக இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டு... ”ஜெயஸ்ரீ! நீயும் என்னோடு வருகிறாயா அம்மா? உன் அத்தை எங்கே?" என்று கேட்டார் காரின் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு.
ஜெயஸ்ரீ ஊஞ்சலை நிறுத்தினாள். பிறகு பலமாகக் கைகளை ஆட்டி. நான் வரல்லேப்பா. அத்தை கிளப்புக்குப் போயிருக்கா. நான் மாமாகிட்டே கதை கேட்கப் போறேன். தான் வரலை. நீ போகலாம்... டா....... டா........" என்று கையை அசைத்துத் தகப்பனாருக்கு விடை கொடுத்தாள் அந்தப் பெண்!
ஸ்ரீதரன் தனக்குள்ளாகச் சிரித்துக் கொண்டார். குழந்தையின் மனம் எவ்வளவு நுட்பமானது. போகிற இடத்துக் கெல்லாம் நீ வர முடியுமா என்று தாம் சற்று முன் கேட்டதைப் புரிந்து கொண்டு, எவ்வளவு சமர்த்தாக நடந்து கொள்கிறாள் ஜெயஸ்ரீ என்று மனதுக்குள் வியப்பும் திகைப்பும் அடைந்தார்.
காரை வெளியில் நிறுத்தி விட்டு அவர் உள்ளே நுழைந்ததும் நாகராஜனின் மகள் சுமதி எதிரே ஓடி வந்தாள். கைகளைக் குவித்து அவருக்கு வணக்கம் செலுத்தி விட்டு , ”டாக்டர், ஜெயஸ்ரீ வரவில்லையா?" என்று கேட்டாள்.
”முதலில் வருகிறேன் என்று தான் சொன்னாள் அம்மா. பிறகு வரவில்லை என்று சொல்லி விட்டாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை போ. காரணம் என்னவாக இருக்கும்? நீ சொல் பார்க்கலாம்.........? ரைட்... அம்மா எங்கே? மாடியில் இருக்கிறாளா?" என்று கேட்டுக் கொண்டே படிகளில் ஏறி மாடிக்குச் சென்றார்
ஸ்ரீ தரன்.
சுமதி குதித்துக் கொண்டு உள்ளே ஓடினாள். “அத்தை! அத்தை! டாக்டர் மாமா வந்திருக்கிறார். கை அலம்ப சோப்பும், வென்னீரும் வேண்டுமாம்" என்று கூவிக் கொண்டே சமையல் அறைக்குள் சென்றாள் அவள்.
பவானி ஒரு பீங்கான் பாத்திரத்தில் வென்னீரை ஊற்றி வைத்தாள். சோப்பை நறுக்கி எடுத்துக் கொண்டே, “சுமதி! உன்னாலே இவற்றை எடுத்துப் போய் மாடி:பில் கொடுக்க முடியுமா?" என்று கேட்டாள். சிறிது நின்று யோசித்து விட்டு, ”அந்த கோபாலன் பொருந்தி வேலை செய்கிறதில்லை. பெண்டாட்டியை சினிமாவுக்கு அழைத்துப் போகிற ஜோரில் பாதி வேலைகளைப் போட்டு விட்டுப் போய் விட்டான். வென்னீர் சுடப் போகிறது. நானே எடுத்து வருகிறேன்" என்று சொல்லிக் கொண்டு மாடிக்குப் போனாள் பவானி.
கோமதியின் உடம்பு பவானி வந்த பிறகு எவ்வளவோ தேறியிருந்தது. வெள்ளை வெளேர் என்று வெளுத்துப் போயிருந்த கன்னங்களில் செம்மை படர ஆரம்பித்திருந்தது. நாலைந்து பவுண்ட் நிறை கூட ஏறி இருப்பதாக ஸ்ரீதரன் கூறினார். கை - நாடியைப் பரிசோதித்து விட்டு அவர், ”பலவீனம் ரொம்பவும் குறைந்து விட்டது. இன்னும் மூன்று ஊசிகள் போட்டால் போதும். பிறகு தேவையில்லை. மாடியிலேயே இப்படி அடைந்து கிடக்காதீர்கள், காற்றோட் டமாக வெளியிலே உலாவ வேண்டும். சிறுசிறு வேலைகள் செய்தாலும் குற்றமில்லை. இப்படிக் காற்றாட வெளியில் போய் விட்டு வருகிறது தானே! நாகராஜன் எங்கே? ஊரில் இல்லையா?" என்று கேட்டார் ஸ்ரீதரன். இப்படிப் பேசிக் கொண்டே ஊசியையும் ஏற்றினார். பச்சைக் கவனித்துக் கொண்டிருந்த கோமதிக்குக் கூட அவர் எப்பொழுது குத்தினார் என்பது புரியாமல் போய் விட்டது.
கை அலம்ப வென்னீர் கொண்டு வந்த பவானி அதை அங்கிருந்த மேஜை மீது வைத்து விட்டு ஒதுங்கி நின்றாள்.
பிறகு மெதுவான குரலில். ”இந்த வாரத்தில் இன்னொரு தரம் தலைக்கு ஜலம் விடலாமா? சாப்பாடு பிடிக்க வேயில்லையே. சரியாகவே மன்னி சாப்பிடுகிற தில்லை " என்று கூறினாள்.
ஸ்ரீதரன் கைகளைத் துண்டினால் துடைத்துக் கொண்டே பவானியை ஏறிட்டுப் பார்த்தார்.
’நாகராஜனுக்கு இப்படி ஒரு விதவைத் தங்கையா? வியாபாரத்தில் பணம் ஒன்றையே குறியாக வைத்து வாழ்க்கையில் மனைவி குழந்தைகளைக் கூடக் கவனிக்க அவகாசமில்லாமல் திரிபவனுக்கு இப்படி ஒரு உடன் பிறந்தவளா?' என்றுதான் ஆச்சரியம் அடைந்தார் ஸ்ரீதரன்.
"ஓ! தாராளமாய் ஸ்நானம் செய்யலாம். உடம்புக்கு ஒன்றுமில்லை. கொஞ்சம் ரத்தக் குறைவு. அதுவும் நாளடைவில் சரியாகி விடும்" என்று கூறிவிட்டு "நான் வருகிறேன் அம்மா" என்று சொல்லிக் கொண்டே மாடிப்படிகளில் இறங்கிச் சென்று காரில் உட்கார்ந்து காரைச் செலுத்த ஆரம்பித்தார்.
மாடி 'பால்கனி’யில் கை அலம்பிய நீரைக் கீழே மாற்றுவதற்காக வந்த பவானியின் பார்வை, ஸ்ரீதரனின் பார்வையைச் சந்தித்து மீண்டது.

