மூர்த்தியின் ஏமாற்றம்

பசுமலை ரயில் நிலையத்துக்குப் பாசஞ்சர் வண்டி காலை பத்தரை மனிக்கு வருவது வழக்கம். சாதாரணமாகவே பத்தரை மணி வண்டி. பன்னிரண்டு மணிக்குத் தான் வரும். பத்தரை மணி வண்டியைப் பிடிக்க ரயிலடிக்குப் பதினொன்றரை மணிக்குப் போய்ச் சேர்ந்தால் போதும் என்று ஊரில் பேசிக் கொண்டார்கள்,

பார்வதி, பவானி- பாலுவிற்காகச் சிறந்த விருந்து ஒன்று தயாரித்தாள். பரிந்து பரிந்து உபசரித்தாள். பவானியின் மனநிலை விருந்துண்ணும் நிலையில் இல்லை. 'கோமதியின் உடல் நிலை எப்படி இருக்கிறதோ' என்று கவலைப் பட்டுக் கொண்டேயிருந்தாள்.

"அதெல்லாம் ஒன்றும் இருக்காது. அவ்வளவு பெரிய நகரத்தில் வைத்தியர்களுக்கும் அவர்கள் திறமைக்கும் பஞ்சமா என்ன? நிதானமாகச் சாப்பிடு" என்று உபசரித்தாள் பார்வதி.

பாலு ஊரில் ஒரு பையன் பாக்கியில்லாமல் தான் சென்னைக்குப் போவதைப் பற்றிச் சொல்லிக் கொண்டான்.

”ஒரு வேலை அங்கேயே சேர்ந்து படிக்க ஆரம்பித்து விடுவேன். மாமாவுக்குக் கார் இருக்கிறது. எங்கள் சுமதி ரிக்ஷாவில் பள்ளிக்கூடம் போவாள் " என்றெல்லாம் அவர்களிடம் பெருமைப் பட்டுக் கொண்டான். ஒவ்வொருவரும் அவனுக்குத் தத்தம் நினைவாக ஒருபொருளைப் பரிசாகக் கொடுத்தனர். கோலிகளும், பம்பரங்களும், கதைப் புத்தகங்களும் ஏகப்பட்டவை பாலுவுக்கு கிடைத்தன.

பவானி ஊருக்குக் கிளம்பும் விஷயம் சேஷாத்ரிக்கு எட்டியது. அந்தக் கிழவர் இரண்டு சீப்பு வாழைப் பழங்களுடன் பாலுவைப் பார்க்க வந்தார்.

”ஏனம்மா! நாலு தினங்களுக்கு முன்பு உன்னிடம் சொன்ன வார்த்தை இவ்வளவு சீக்கிரம் பலித்து விட்டது பார். நல்ல பெண் நீ. அடக்கத்துக்கும் பண்புக்கும் உதாரணமாக இருந்தாய். ஊருக்குப் போகிறாயே என்று தான் இருக்கிறது. பையனை ஜாக்கிரதையாகப் பார்த் துக்கொள். சௌக்கியமாக போய் வா" என்று விடை கொடுத்தார்.

தெருவில் மாட்டு வண்டி வந்து நின்றது. பவானி கல்யாணராமனையும், பார்வதியையும் வணங்கினாள். கல்யாணம் உணர்ச்சிப் பெருக்கால் கண்களைச் சிறிது நேரம் மூடியபடியே இருந்தார்.

”உனக்கு எந்தவிதமான ஆசியை நான் வழங்குவது அம்மா? இந்த ஊருக்கு வரும் போது மஞ்சள் குங்குமத்துடன் வந்தாய். நோயாளிக் கணவனுக்காக உயிருக்கு மன்றாடினாய். மலர வேண்டிய உன் வாழ்வு கருகி விட்டதே என்று நான் மனதுக்குள் மாய்ந்து போனேன். இருண்டு போன உன் வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்ட உன் மகன் பாலு இருக்கிறான். அவனை ஜாக்கிரதை யாகப் பார்த்துக் கொள். நீ எப்பொழுது இந்த ஊரை நாடி வந்தாலும் என் வீட்டிற்கு வரலாம்" என்றார் அவர்.

பவானி பேச முடியாமல் திணறினாள். பார்வதியை நீர் பெருகும் விழிகளால் பார்த்தாள். 'மாமி' என்று அழைக்கிறவள். 'அம்மா' என்று கூப்பிட்டாள். அவளை அப்படியே அணைத்துக் கொண்டு குலுங்கக் குலுங்க அழுதாள்.

”பவானி பைத்தியம், பைத்தியம். ஏன் இப்படி அழுகிறாய்?" என்று பார்வதி அவளைத் தேற்றினாள்.

”இந்த மாதிரி மாசில்லாத அன்பை நான் சென்னையில் எங்கே பார்க்கப் போகிறேன்?" பவானி அழுது கொண்டே பார்வதியை இவ்விதம் கேட்டாள்.

"நீ பைத்தியம் தான் போ! உன் மனசிலே அன்பு நிறைந்திருக்கும் போது பிறத்தியார் உள்ளத்திலும் அன்பு தான் நிறைந்திருக்கும். உன்னை வெறுப்பவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்" என்றாள் பார்வதி. பிறகு இருவரும் அழுகையையும் பேச்சையும் நிறுத்தி விட்டு மூட்டை முடிச்சுக்களை வண்டியில் ஏற்றுவதற்கு முனைந்தனர்.

"ரயிலடிக்கு நானும் வருகிறேனே" என்று கல்யாணம் அவளைக் கேட்டார்.

”வேண்டாம். மாமா! ஊருக்குப் போய்விட்டு வந்ததிலிருந்து உங்களுக்கு உடம்பு சரியில்லை. இன்று தான் தலைக்கு ஜலம் விட்டுக் கொண்டீர்கள். அலைய வேண்டாம்" என்று பவானி தடுத்து விட்டாள்.

பாலு மட்டும் உற்சாகத்துடன் இருந்தான். புது ஊரைப் பார்க்கப் போகிறோம் என்கிற களிப்பு அவன் முகத்தில் படர்ந்திருந்தது.

வண்டி தெருக்கோடியைக் கடந்து பசுபதி கோவி லைத் தாண்டிச் செல்ல ஆரம்பித்தது.

ஆடி அசைந்து போகும் வண்டியில் பவானி சிந்த னையே உருவாக உட்கார்ந்திருந்தாள். நோயாளி வாசுவை அழைத்துக்கொண்டு இப்படித்தான் ஒரு நாள் அந்த ஊருக்குள் வந்தாள். இன்று பாலுவை அழைத்துக் கொண்டு மறுபடியும் ஊரைவிட்டுப் போகிறாள்.

பசுபதி கோவில் கோபுர வாயிலை வண்டி அடைந்த போது உள்ளே கொடிக் கம்பத்தைத் தாண்டி இருக்கும் மூலஸ்தானம் தெரிந்தது. பவானி கையெடுத்து வணங்கினாள்.

பாலுவும் கோவிலை அரைகுறையாகப் பார்த்துக் கொண்டே கன்னத்தில் போட்டுக் கொண்டான். அவன் பார்வை தெருக் கோடியில் வரும் மூர்த்தியின் மேல் இருந்தது.

”அம்மா! அதோ மூர்த்தி மாமா வரார்" என்றான் உற்சாகம் பொங்க.

"வரட்டும்" என்றாள் பவானி அமைதியாக. சைக்கிளில் வேகமாக வந்த மூர்த்தி வண்டியை நெருங்கியதும் வேகத்தைக் குறைத்துக் கொண்டு 'மதராஸ் போகிறீர்களாமே........ டிக்கெட் வாங்கிக் கொடுத்து ரயில் ஏற்றிவிட்டு வரச் சொல்லி மாமா அனுப்பினார்" என்றான்.

”எதற்கு உங்களுக்கு வீண் சிரமம்?" என்று கூறிய பவானி அத்துடன் பேச்சை நிறுத்திக் கொண்டு விட்டாள்.

ரயிலடியை அடையும்போது மணி பத்தாகி விட்டது . "வண்டி பன்னிரண்டரைக்குத்தான் வரும்" என்று ஸ்டேஷன் மாஸ்டர் அறிவித்தார். சாமான்களை யெல்லாம் ஒரு பக்கமாக வைத்து விட்டு எல்லோரும் பெஞ்சியில் உட்கார்ந்தார்கள்.

'டிக்கெட்தான் வாங்கியாகி விட்டதே நீங்கள் போங்கள்' என்று மூர்த்தியிடம் சொல்லப் பவானிக்குத் தைரியமில்லை.

"பாலு நீ இனிமேல் அங்கேதானே படிக்கப் போகிறாய்?" என்று பேச்சை ஆரம்பித்தான் மூர்த்தி.

”ஆமாம்! மாமா... எங்க மாமாவுக்கு கார் இருக்கிறது. மாமா பெண் சுமதிக்கு ரிக்ஷா இருக்கிறது. எதில் வேண்டுமானாலும் பள்ளிக்கூடம் போகலாம்" என்றான் பாலு பெருமை தொனிக்க.

”பேசாமல் இருடா நீயும் உன் பெருமையும்!" என்று அதட்டினாள் பவானி.

”சொல்லட்டும். அவனை அதட்டாதீர்கள்" என்றான் மூர்த்தி புன்முறுவலுடன். பிறகு எதையோ நினைத்துக் கொண்டவனாக. அந்தக் கிழவர் சீர்திருத்தவாதிகளைப் பற்றிக் கேலி பண்ணினாரே. இவரை யார் பேசச் சொல்லிக் கூப்பிட்டார்கள்?" என்று பழைய கதையைக் கிளப்பினான்.

"அவருடைய அபிப்பிராயம் அவ்விதம் இருந்தது. அதைச் சரியென்று எல்லோரும் ஆமோதிக்க வேண்டும் என்று அவர் சொல்லவில்லையே!" என்றாள் பவானி.

”இன்று நீங்கள் ரயிலுக்குக் கிளம்பிய பிறகு என்னைப் பார்த்து விட்டு மறுபடியும் எங்கள் வீட்டுக்கு வந்தார். தன் பேத்தியின் ஜாதகத்தைக் கொடுத்து விட்டு. மாமாவிடம் என் ஜாதகத்தைக் கேட்டார். அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?" என்று கேட்டான் மூர்த்தி.

" என்ன நடந்தது?" என்று தன் அகன்ற விழிகளை கல விழித்துக் கேட்டாள் பவானி.

”ஒன்றும் அசம்பாவிதமாக நடக்கவில்லை. பயந்து விடாதீர்கள். மாமா என்னைக் கூப்பிட்டு என் ஜாதகத்தைக் கேட்டார்”.

”ஜாதகத்தை எடுத்து வந்து அவர்கள் எதிரிலேயே கிழித்துப் போட்டேன்! எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. நான் சீர்திருத்தவாதி. சீர்திருத்தமணம் செய்து கொள்ளப் போகிறேன்" என்றேன்.

”பார்த்தாயாடா கல்யாணம்?" என்று ஆரம்பித்தார் கிழவர்.

”பார்க்கிறது என்ன சார். பார்க்கத்தான் போகி றீர்கள். ஜாதி விட்டுக் கலியாணம் பண்ணிக் கொள்கிறது ஒருவிதமான சீர்திருத்தம். நம் நாட்டிலே வாடும் ஆயிரக் கணக்கான விதவைகளை மறுமணம் செய்து கொண்டு வாழவைப்பதும் ஒரு சீர்திருத்தம்தான். நான் ஒரு விதவையை மறுமணம் செய்து கொண்டாலும் நீங்கள் ஆச்சரியம் அடைய வேண்டாம் என்றேன்" என்று கூறி முடித்தான் மூர்த்தி.

ரயிலடி நிசப்தமாக இருந்தது. அங்கே அன்று கூட்டமே இல்லை. பவானி பற்களைக் கடித்துக் கொண்டு தலையைக் குனிந்து கொண்டாள். பாழும் ரயில் சீக்கிரம் வராதா என்று வேதனைப் பட்டாள். இந்த அதிகப் பிரசங்கியின் பேச்சிலிருந்து விடுபட்டு எப்பொழுது ரயில் ஏறுவோம் என்று ஆத்திரப்பட்டாள். வாழ்க்கையில் நேர்மையைப் பற்றி அறியாதவர்கள் முதலில் தன் வாழ்க்கையைச் சீர்திருத்தம் பண்ணிக் கொண்டல்லவா சமூகத் தொண்டு என்கிற புனிதமான சீர்திருத்தத்தில் இறங்க வேண்டும்? சே! இவனைப் போய் ரயிலடிக்கு அனுப்பினாரே கல்யாணம் மாமா என்று வேதனை பொங்க பொழுது ஒரு பாரமாய் உட்கார்ந்திருந்தாள் பவானி.

அவுட்டரில் கை காட்டி இறங்கியது. புஸ் புஸ் என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே வண்டி வந்து நின் மது. சாமான்களை ஏற்றி விட்டுப் பாலுவுடன் பவானி பெட்டியில் ஏறிக் கொண்டாள்.

வண்டிக்குள் கூட்டம் அதிகமில்லை. ஜன்னல் ஓரத் தில் ஒரு பெண் மூன்று குழந்தைகளுடன் உட்கார்ந்து கொண்டிருந்தாள். இன்னும் சில பேர் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

”பாலு! போய்விட்டு வருகிறாயா?" என்று கேட்டான் மூர்த்தி.

"நான் வருகிறேன். உங்கள் மாமாவிடமும் மாமியிடமும் சொல்லுங்கள்" என்றாள் பவானி, வெறுப்பை எல்லாம் அடக்கிக் கொண்டு.

”சென்னையில் உங்கள் விலாசம்?"

மூர்த்தி கபடமாகச் சிரித்துக் கொண்டே பவானியை இவ்விதம் கேட்டான்.

பவானி துணிச்சலுடன் முகத்தைத் திருப்பிக் கொண் டாள். அருகில் உட்கார்ந்திருந்த பெண்ணைப் பார்த்து 'நீங்கள் சென்னைக்குப் போகிறீர்களா?" என்று கேட்டாள்.

அந்தப் பெண் பதில் கூறுவதற்கு முன்பு ரயில்கிளம்பி விட்டது. ஜன்னல் ஓரத்தைப் பிடித்துக் கொண்டு மூர்த்தி வாடிய முகத்துடன் நடந்து வந்தான். ஜேபியிலிருந்து கைக்குட்டையை எடுத்து ஆட்டினான். தன்னையே வெறித்துப் பார்க்கும் அவனைப் பார்க்க விரும்பாத பவானி முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

பசுமலையின் கோவில் கோபுரம் தெரிந்தது. அது வும் மறைந்து கொண்டே வந்தது. பவானிக்கு மனத்தில் ஏற்பட்டிருந்த வெறுப்பு அடங்கி வண்டிக்குள் இருந்த வர்களைக் கவனிக்கச் சிறிது நேரம் பிடித்தது.