தந்தி வந்தது
அடுத்த நாள் பொழுது விடிந்தது. வழக்கம்போல் அப்பொழுது நகர்ந்து அதற்கு அடுத்த நாளும் உதயமாகியது. பார்வதி மட்டும் கல்யாண வீட்டிலிருந்து கொண்டுவந்த பலகாரங்களை எடுத்து வந்து பாலுவுக்குக் கொடுத்தாள். கல்யாணம் நடந்த விமரிசைகளைப் பற்றிப் பவானியிடம் கூறினாள். எல்லாவற்றையும் கூறிவிட்டு, ”கல்யாணம் பண்ணிக் கொண்ட பெண்ணும், பிள்ளையும் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டார்கள். அவர்களின் காதலின் உறுதியைது. ஆழத்தை, பண்பைக் கண்டு இரு தரப்பினரும் உடன்பட்டுக் கல்யாணம் நடந்ததாம்" என்று முடித்தாள் பார்வதி.
நேற்றைக்கு முந்திய நாள் சேஷாத்திரியும், மூர்த்தியும் வாதித்துச் சண்டையிட்ட சீர்திருத்தத்தைப் பற்றிப் பவானி நினைத்துப் பார்த்தாள். ’சீர்திருத்தம் என்கிற பெயரிலே எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்று சொல்லி, அந்தப் பெண்களுடன் ஒருவரைப் பற்றி ஒருவருக்குத் தெரியாமல் அழைத்துக் கொண்டு, ஊரில் கண்ட இடங்களில் திரிந்து வரும் ஜோடிகள் செய்வது சீர்திருத்தமா?’ என்று பவானி உள்ளம் குமுறினாள்.
"பவானி! ஏன் என்னவோ போல இருக்கிறாய்?” என்று பார்வதி அவளை அன்புடன் விசாரித்தாள்.
பவானி மூர்த்தியைப் பற்றி மறுபடியும் பேச விரும்ப வில்லை. ஆகவே அவள் வெகு 'சாமர்த்தியமாக’ “எனக்கு மூன்று நாட்களாகவே உடம்பு சரியில்லை!" என்று கூறினாள்.
”அப்படியா? அதுதானே பார்த்தேன். உடம்பு சரியில்லை என்று என்னிடம் சொல்ல மாட்டாயோ? நீ என்றும் அலைந்து வேலை செய்யவேண்டும்? ராத்திரி நீ ஒன்றும் சமைக்க வேண்டாம். பாலுவும். நீயும் நம் வீட்டிலேயே சாப்பிட்டு விடலாம்" என்று அன்புடன் கூறினாள் பார்வதி.
தெருவில் அவர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்த கல்யாணம் பவானியை இரைந்து கூப்பிட்டார். இருவரும் எழுந்து வாசலுக்கு வந்தனர். கல்யாணத்தின் கையில் இருந்த தந்திக் காகிதத்தையும், கவர் ஒன்றையும் பார்த்துத் திடுக்கிட்டார்கள் இருவரும்.
”பவானி! இந்தா! உன் தமையன் தந்தி அடித்துக் கடிதமும் போட்டிருக்கிறான். உன் மன்னிக்கு உடம்பு சரியில்லையாம். உடனே உன்னைச் சென்னைக்குப் புறப்படச் சொல்லி இருக்கிறது. மற்ற விவரங்கள் கடிதத்தில் இருக்கும். படித்துப் பாரம்மா!" என்று
அவளிடம் கடிதத்தையும் தந்தியையும் கொடுத்தார்.
பவானி கைகள் நடுங்க கடிதத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தாள். அதில் கோமதிக்குக் கருச்சிதைவு ஏற்பட்டு ரொம்பவும் அபாயகரமான நிலையில் ஆஸ்பத்திரியில் கிடப்பதாகவும், வீட்டையும் குழந்தை சுமதியையும் கவனித்துக் கொள்ள யாரும் இல்லை யென்றும் பவானியை உடனே புறப்பட்டு வரச் சொல்லியும் எழுதி இருந்தான் நாகராஜன்,
பவானியின் உள்ளத்தில் இருந்த பழைய சோர்வெல்லாம் எங்கேயோ போய்விட்டது. புதிய கவலை பரபரப்பு. அவள் உள்ளத்தில் குடி கொண்டது.
"என்ன மாமா செய்வது?" என்று கேட்டாள் கல்யாணத்தைப் பார்த்து.
”என்னம்மா இப்படிக் கேட்கிறாய்? உடன் பிறந்தவன் உன் உதவியை நாடி எழுதி இருக்கிறான். நீ போய்த் தான் ஆக வேண்டும்."
”பாவுலுக்குப் பள்ளிக்கூடம் திறக்க இன்னும் ஆறு தினங்கள் தானே இருக்கின்றன?"
”அதைப்பற்றிப் பிறகு யோசித்துக் கொள்ளலாம். நீ நாளைக்கே புறப்பட்டு விடு" என்றார் கண்டிப்பாக.
வெளியே போயிருந்த பாலு வீட்டுக்கு வந்ததும் பவானி விஷயத்தைச் சொன்னாள். ’பாவம் சுமதி' என்றான் அவன்.
பவானியும் ஆசையுடன் அவன் தலையைக் கோதி விட்டு, ”பாலு! நீ எங்கேயும் வெளியே போய் விடாதேடா. சாமான்களை யெல்லாம் கட்டி ஓர் அறையில் போட்டுவிட வேண்டும் வருவதற்கு நாள் ஆனாலும் ஆகலாம். கூடமாட எனக்கு ஒத்தாசை பண்ணுகிறாயா?" என்று கேட்டாள்.
தாயும் மகனுமாக வீட்டை ஒழித்துத்துப்புரவு செய் தார்கள். பாத்திரம். பண்டங்களைப் பெட்டியில் போட்டுப் பூட்டி ஒரு சிறு அறையில் வைத்தார்கள். கூடத்திலே இருந்த படங்களை யெல்லாம் கழற்றித் துடைத்து வைத்தான் பாலு.
பவானி கூடத்துப் பக்கம் வந்தவள் சுவரை அண்ணாந்து பார்த்தாள். பார்த்தவள் திடுக்கிட்டு ”எங்கேயடா நடராஜரின் படம்?" என்று கேட்டாள். சுருட்டி வைத்திருந்த சாக்குப் பையிலிருந்து படத்தை எடுத்துக் கொடுத்தான் பாலு. பவானி அதை வாங்கி மார்புடன் அணைத்துக் கொண்டாள். ”இதை மட்டும் நாம் எடுத்துப் போகலாம் பாலு" என்று கூறிவிட்டுப் படத்தைப் பத்திரமாகத் தன் பெட்டியில் வைத்துப் பூட்டினாள்.
இதற்குள் மாலையும் நெருங்கி வந்தது. பவானியும் பாலுவும் ஊருக்குப் போவதால் அன்றும் மறு நாளும் தங்கள் வீட்டிலேயே சாப்பாடு என்று பார்வதி சொல்லி விட்டாள். சாமான்களைக் கட்டி வைத்த பிறகு பவானிக்கும் பொழுது போகவில்லை. தெருவிலே நின்று தூரத்தில் தெரியும் பசுபதி கோவிலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மாலைக் கதிரவன் ஒளியில் குளித்துக் கொண்டிருந்தது கோபுரம்.
'நாளை இந்நேரம் சென்னையில் இருப்பேன்' என்கிற எண்ணம் அவள் மனத்தை வேதனையில் ஆழ்த்தியது. ஐந்தாறு வருஷங்களுக்கு மேலாகப் பழகிப் போயிருந்த அவ்வூரை விட்டுச் செல்ல அவளுக்கு வருத்தமாக இருந்தது.
முன்பு ஒருதரம் அவள் சென்னை போயிருந்தபோது எழும்பூரில் ரயிலை விட்டு இறங்கியதும் ஒரு பரிதாபமான காட்சியைக் கண்டாள். பரிதாபம் மட்டும் அல்ல. வெட்கப்படவும், அருவருப்படையவும் வேண்டிய காட்சி அது.
கர்ப்ப ஸ்திரீ ஒருத்தி தனக்குப் பிரசவ வேதனை கண்டிருப்பதாக முக்கி முனகிக் கொண்டிருந்தாள். அவளோடு இன்னும் இரண்டு குழந்தைகள் இருந்தார்கள். அவள் உண்மையான கர்ப்பஸ்திரீதான்! வயிற்றில் துணிகளைச் சுற்றிக் கொண்டிருக்க-வில்லை. ஆனால் அவளைப் பாசாங்குக்காரி என்று ஏசி பலர் உதாசீனம் செய்தனர். கேலியாகப் பேசினர். சிலர் இரக்கப்பட்டுப் பொருள் உதவியும் புரிந்தார்கள்.
அப்பொழுது அவளையும் அவள் கணவன் வாசுவை யும் அழைத்துப் போக நாகராஜன் ரயிலடிக்கு வந்திருந்தான்.
“அண்ணா ! அவளைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது" என்று தயங்கினாள் பவானி.
”நீ ஒரு பைத்தியம்!" என்றான் நாகராஜன்.
”இந்த நகரத்திலே இம் மாதிரிக் காட்சிகள் சர்வ சகஜமானவை. உனக்குப் புதிதாக இருப்பதால் நீ இதை எல்லாம் பார்த்துப் பரிதாபப்படுகிறாய். எங்களுக்குக் கவனிக்கவே பொழுதில்லை" என்று கூறி நகைத்தான் நாகராஜன்.
”அண்ணா ! சமுதாயத்தின் வளர்ச்சியிலேதான் தேசத்தின் பெருமை அடங்கியிருக்கிறது. அழகு மிகுத்த இந்த சென்னையிலே அவதியுறும் பல காட்சிகளைப் பார்க்க வேண்டி இருக்கிறதே. சமூகம் வளர்ந்து வருகிறதா? செடிகளின் வேரிலே புழு வைத்தால் செடி வதங்கச் சில காலம் ஆகுமாமே. அப்படிச் சமூகத்தின் வேரிலே, வேர்ச் செல் தோன்றி அரித்து வருவதற்கு இவை யாவும் அத்தாட்சியோ என்னவோ" என்றாள் பவானி, டாக்சியில் உட்கார்ந்து அந்த கர்ப்ப ஸ்திரீயைப் பார்த்துக் கொண்டே.
நாகராஜன், பதில் ஒன்றும் கூறவில்லை. பவானி கணவனைக் கேட்டு எட்டணாக் காசை வாங்கிக் கொடுத்தாள் அந்தப் பெண்ணிடம். அவள் உள்ளம் சோர்ந்து விட்டது. எந்த விதத்திலாவது இம்மாதிரி அபலைப் பெண்களுக்கு உதவி புரிய மாட்டோமா என்று ஏங்கினாள்.
அப்புறம் அவள் சென்னைப் பக்கமே போகவில்லை. இப்பெழுது அந்த நகரத்திலே பெரிய மாறுதல்கள் ஏற்பட்டிருக்கலாம். பஞ்சமும் பிணியும் கொஞ்சமாவது குமைந்திருக்கும். பெண்கள் இன்பமாக வாழ்வார்கள் என்றெல்லாம் நினைத்தாள். தெருவிலே விளக்கேற்றி விட்டார்கள். கோவிலிலிருந்து மணியின் நாதம் கேட்டது.
”பவானி கால் கடுக்க அரை மணியாய் நிற்கிறாயே? நாளைக்குத் தான் நீ ஊருக்குப் போகிறாய், திரும்பி வர இன்னும் எத்தனை மாசங்கள் ஆகுமோ? உள்ளே வந்து "ட்கா ரேன்" என்று பார்வதி அவளை அழைத்தாள்.

