சீர்திருத்தவாதி .....!
'கேரம்' பலகையை வெளியே எடுத்து வைத்துவிட்டு மூர்த்தி வெளியூர் போனது பாலுவுக்குப் பிடிக்கவில்லை. இன்னும் பத்து நாட்களில் பள்ளிக்கூடம் திறந்து விடுவார்கள். பிறகு பள்ளிக்கூடம் போகவும் பாடங்களைப் படிக்கவுமே பொழுது சரியாகிவிடும். மூர்த்தியுடன் விளையாடலாம் என்று நினைத்திருந்தான் பாலு. அவனும் ஊரில் இல்லாமல் போகவே அவனுக்கு எதுவுமே பிடிக்கவில்லை .
உள்ளே பவானி ரவா தோசை வார்த்துக் கொண்டிருந்தாள். 'கமகம' வென்று வாசனை வீசியது. மாலை சுமார் மூன்று மணி இருக்கலாம். பாலு கால்களைச் சப்பணம் கட்டிக்கொண்டு, வெறிச்சோடிக் கிடந்த தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தான், கல்யாணமும் பார்வதியும், யாரோ உறவினர் வீட்டுக் கல்யாணத்திற்காகப் போயிருந்தனர். அவர்கள் போய் நான்கு தினங்கள் ஆயின. கதவைப் பூட்டிச் சாவியை மூர்த்தி வந்தால் கொடுத்து விடும்படி பார்வதி பவானியிடம் கொடுத்து விட்டுப் போயிருந்தாள்.
"அவன் என்றைக்கு வருகிறானோ" என்று கூறி விட்டு. .. நான் வந்த பிறகு பாலுவைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கலாம் அம்மா. ஜாக்கிரதையாக இரு" என்று கூறிவிட்டுக் கல்யாணம் புறப்பட்டார்.
"சே! சே! இதென்ன ஊர்? பகல் நேரங்களிலேயே பாழ் அடைந்து கிடக்கிறதே" என்று மனத்துள் அலுத்துக் கொண்டான் பாலு.
அடுப்பங்கரையில் அடுப்பு அணைக்கப்படும் சத்தம் கேட்டது . தட்டில் தோசைகளை எடுத்துக்கொண்டு பவானி பாலுவைத் தேடிக் கொண்டு கூடத்துக்கு வந்தாள். பின்னர், தெருப்பக்கம் சென்று பார்த்தாள். திண்ணையில் உட்கார்ந்திருக்கும் பாலுவைப் பார்த்து. ”பாலு எழுந்திருந்து உள்ளே வந்து தோசை சாப்பிடு" என்று அழைத்தாள்.
கூடத்தில் தோசைத்தட்டின் எதிரில் வந்து உட்கார்ந்து கொண்டான் பாலு. பவானி கடைந் தெடுத்த வெண்ணெயை உருட்டி எடுத்து வந்து அவன் தட்டில் போட்டாள். அவன் தோசைகளை விரும்பிச் சாப்பிட்ட... தாகம் பவானிக்குத் தோன்றவில்லை.
"என்னடா உனக்கு? உடம்பு ஏதாவது சரியில்லையா என்ன?" என்று கேட்டுக் கொண்டே. பவானி அவன் நெற்றியிலும் மார்பிலும் கை வைத்துப் பார்த்தாள். தாயின் முகத்தில் வேதசை வருவதைக் கவனித்த பாலு. கண்களில் நீர் ததும்ப, ”எனக்கு இந்த ஊரில் பொழுதே போகவில்லை அம்மா. நாள் பூராவும் இப்படிக் கொட்டு கொட்டென்று எப்படி உட்கார்ந்திருக்க முடியும்?" என்று கேட்டான்.
பவானிக்கு வருத்தமாக இருந்தது. பாலுவின் அப்பா இருந்தால் அவனை அழைத்துக் கொண்டு நாலு இடங்களுக்குப் போய் வருவார். அத்தை என்றும் சித்தப்பா பெரியப்பா என்றும் சீராட்டப் பலர் வருவார்கள். விடுமுறைக்காக அவர்கள் வீட்டுக்குப் போய் வருவான். தகப்பனைச் சேர்ந்த குடும்பத்தினருடன் தொடர்பு அறுந்து போன மாதிரிதான். வாசு இறந்தபோது வந்துபோனவர்கள், பிறகு பாலுவைப் பற்றி விசாரிக்கவே இல்லை .
எதிரிலே உட்கார்ந்திருக்கும் மகனின் முகவாயை ஆதுரத்துடன் தடவிக் கொடுத்தாள் பவானி. அவன் கன்னங்கள் இரண்டையும் கையால் வருடிக் கொண்டே ”எண்டா லீவுக்கு உன் மாமா வீட்டுக்குப் போய்விட்டு வாயேன். அங்கே சுமதி கூட இருக்கிறாள் உன்னுடன் விளையாட என்று சொன்னேனே! நீதான் நானும் வர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாய்" என்றாள்.
பாலு பதிலளிப்பதற்கு முன் கொல்லைப் பக்கம் ஏதோ சத்தம் கேட்டது. கல்யாணராமன் வீட்டில் மாடு கறப்பதற்காக ஆள் வந்திருக்கிறான் என்பது தெரிந்ததும், பவானி கூடத்தை விட்டு எழுந்து கொல்லைப் பக்கம் சென்றாள்.
அதே சமயம் வாசற் கதவைத் திறந்து கொண்டு மூர்த்தி உள்ளே வந்தான். சோர்ந்து கிடந்த பாலுவின் உள்ளம் துள்ளி எழுந்தது. ”மூர்த்தி மாமா! வந்து விட்டீர்களா? எனக்கு நீங்கள் இல்லாமல் பொழுதே போகவில்லை. இந்தாருங்கள் சாவி. மாமாவும், மாமியும் கல்யாணத்துக்குப்போய் இருக்கிறார்கள். நாளைக்கு வாருவார்கள்" என்று பொரிந்து தள்ளிக் கொண்டே, கூடத்தில் ஆணியில் மாட்டியிருந்த சாவியை எடுத்து அவனிடம் கொடுத்தான்.
கையில் பால் செம்புடன் உள்ளே வந்த பவானி ஒரு கணம் அவனைப் பார்த்துத் தயங்கி நின்றாள்.
"போய்க் குளித்து விட்டு வாருங்கள் மாமா, தோசை தின்னலாம்" என்றான் பாலு. குழந்தைப் பருவத்தைப் போலும், குழந்தை உள்ளங்களைப் போலும் களங்கமற்றவை வேறு எதுவுமே இருக்க முடியாது. தாயின் மனத்திலே கொந்தளிக்கும் எண்ணங் களையோ மூர்த்தியின் மனத்தில் இருக்கும் நஞ்சுகலந்த அன்பைப் பற்றியோ பாலு அறிய மாட்டான்.
மூர்த்தி சாவியைச் சுழற்றிக் கொண்டே கல்யாணத்தின் வீட்டை அடைந்தான். கதவைத் திறந்து நேராகக் கிணற்றடிக்குச் சென்று ஸ்நானம் செய்து விட்டு, வாசனைத் தைலம் தடவி தலை வாரி, ஊரிலிருந்து வரும் போது வாங்கி வந்த பழங்களை எடுத்துக் கொண்டு பவானியின் வீட்டுக்கு வந்தான்.
கூடத்துப் பெஞ்சில் தட்டில் தோசைகளும், சுடச் சுடக் காப்பியும் வைக்கப் பட்டிருந்தன. பழங்களைப் பாலுவிடம் கொடுத்துவிட்டு மூர்த்தி சிற்றுண்டி அருந்தினான் .
பவானி சமயலறையை விட்டு வெளியே வந்தாள். வெறுமனே சாத்தியிருந்த தெருக் கதவை நன்றாகத் திறந்தவாறு சேஷாத்திரி உள்ளே வந்தார். பெஞ்சியிலே உட்கார்ந்து பல்லை இளிக்கும் மூர்த்தியையும், கையில் தோசையுடன் மிரண்டு பார்க்கும் பவானியையும் பார்த்தார். ஊஞ்சலில் இருந்த பழங்களைப் பார்த்தார்.
"ஹும்..." என்று தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.
பவானிக்குத் தைரியம் ஏற்பட்டது. ”வாருங்கள், எங்கே, இவ்வளவு தூரம்?” என்று கேட்டுக் கொண்டே மூர்த்தியின் தட்டில் தோசையை வைத்து விட்டு அவரை உட்காரும்படி கூறினாள்.
"ஒன்றுமில்லை. உன் பிள்ளையைப் பத்து நாட்களாக அந்தப் பக்கம் காணோம். உடம்பு ஏதாவது சரியில்லையோ என்று பார்த்துப் போக வந்தேன். ஹைஸ் கூலில் தானே சேர்க்கப் போகிறாய்?" என்று கேட்டார் சேஷாத்ரி.
"உடம்பு ஒன்றுமில்லையே! நான் தான் வெயிலில் அலைய வேண்டாம் என்று சொன்னேன். ஹைஸ்கூலில் தான் சேர்க்க வேண்டும்" என்றாள் பவானி.
சேஷாத்திரி மூர்த்தியைக் கவனித்தார்.
"ஏண்டா ! நீ கல்யாணத்தின் மருமகன் தானே? உனக்கு கல்யாணம் ஆயிற்றோ ?" என்று விசாரித்தார்.
"இல்லை சார்" என்றான் மூர்த்தி.
"என்னடா இல்லை? என் பெரிய பிள்ளை ராமுவின் ஈடுடா நீ. அவனுக்கு நாலு குழந்தைகள் இருக்கிறார்கள். நீ பிரம்மச்சாரியாய் ஊரைச் சுற்றிக் கொண்டு, வரட்டும் அந்தக் கல்யாணம்! ‘உன் மருமகன் என்னடா பச்சைக் குழந்தையா?' என்று கேட்கிறேன்."
”கேளுங்கள் சார்" என்றான் மூர்த்தி கைக்குட்டையினால் வாயைத் துடைத்துக் கொண்டு.
*கேட்கிறேண்டா! கேட்கிறதோடு விட மாட்டேன் என் பேத்தி ஒருத்தி இருக்கிறாள். பத்தாவது படித்திருக்கிறாள். வீட்டு வேலைகளும் செய்யத் தெரியும். அவளை உனக்கு முடிச்சுப் போட்டு விட்டுத்தான் மறு வேலை. ஆமாம்..." என்றார் அவர். பிறகு ”ஜாதகம் கீதகம் இருக்கிறதா! இல்லை கிழித் தெறிந்து விட்டாயா!" என்று கேட்டார்.
மூர்த்தி ஊஞ்சல் பலகையிலே இருந்த ஆப்பிள் ஒன்றை எடுத்துச் சாவிக் கொத்தில் இருந்த பேனாக் கத்தியால் சீவித் துண்டங்களாக நறுக்கிக் கொண்டிருந்தான். சிறிது நேரம் பதில் கூறாமல் இருந்தால் எதிரே இருப்பவர் தானாகவே எழுந்து போய் விடுவார் என்று எதிர்பார்த்துத் தான் அவன் மௌனமாக இருந்தான். சேஷாத்திரி இவனுடைய அலட்சியத்தை மதிப்பவராக இல்லை.
"என்னடா. பதில் பேச மாட்டேன் என்கிறாய்? பம்பாய், கல்கத்தா எல்லாம் போயிருந்தாயே, அங்கே யாரையாவது ரிஜிஸ்தர் கலியாணம் செய்து கொண்டு விட்டாயா என்ன?"
மூர்த்தி தலை நிமிர்த்தி அவரைப் பார்த்தான். "அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்களேன். சார்! சீர்திருத்தம் என்று வாயால் பேசி விட்டால் போதுமா! செய்கையாலும் காட்டித் தானே ஆக வேண்டும்?"
"ஓ! அப்படியா? நீ பெரிய சீர்திருத்த வாதியோ? சீர்திருத்தம் பண்ணுவதிலும் நேர்மையும் உண்மையும் இருக்க வேண்டும் அப்பா. அதிலே சுயநலம் கலந்து விட்டால் அப்புறம் உருப்பட்டாற் போலத்தான்!" என்றார் அவர் சற்று காரமாகவே. மூர்த்தியின் முகம் கோபத்தால் சிவந்தது.
”சார்! எதையோ பேச வந்து சம்பந்தமில்லாமல் பேசுகிறீர்கள். நீங்கள் இங்கே வந்ததே வேறு விஷயம். அநாவசியமாக என்னை வம்புக்கு இழுக்காதீர்கள்..."
சேஷாத்திரி துள்ளி எழுந்தார்.
"என்னடா பிரமாதமாக அவசியத்தையும் அநாவசியத்தையும் கண்டு விட்டாய்? உன்னைப்பற்றி எனக்குத் தெரியுமடா! மேட்டுத் தெருவில் இருந்தாளே பாலம்பாள். அவள் பெண்ணிடம் நீ எப்படி நடந்து கொண்டாய்? அந்தப் பெண்ணின் கல்யாணத்தின் போது என்ன வெல்லாம் கடிதமாக எழுதினாய் என்றெல்லாம் எனக்குத் தெரியும்! எனக்குத் தெரிந்து பிறந்த பையன் நீ! சீர்திருத்தத்தைப் பற்றிப் பேச வந்து விட்டான்!"
பவானி அப்படியே நின்றவள் நின்றவள் தான்!
மேட்டுத்தெரு பாலம்மாளின் பெண்ணிடம் மூர்த்தி நடந்து கொண்ட விதம் என்ன என்கிற விவரம் பூராவும் பவானி அறிந்து கொள்ள ஆசைப்படவில்லை. மாங்காயை ஒரு ஓரத்தில் கடித்தவுடன் புளிப்போ இனிப்போ உடனே தெரிந்து போகிறது.
சே! இவன் இவ்வளவு தானா? என்று அவள் தீர்மானித்து மூர்த்தியைப்பற்றி எடை போட்டுத்தான் வைத்திருந்தாள். அந்தத் தீர்மானம் ஏகமனதாக அவள் இதயத்திலே நிறைவேறிற்று.
பாலு வந்து இடையில் கல்யாணமும் பார்வதியும் வந்து விட்ட செய்தியைச் சொல்லாமல் இருந்திருந்தால் அந்தக் கிழவர் சேஷாத்திரியும், இளைஞன் மூர்த்தியும்
கை கலந்திருப்பார்கள்.
மூர்த்தி அவசரமாக எழுந்து வெளியே போனான். ”அம்மா பவானி!" என்றார் சேஷாத்திரி.
"நீ இப்படி இந்த அறியாப் பிள்ளையை வைத்துக் கொண்டு தனியாக வாழ்வேன் என்று பிடிவாதம் பிடிப்பது சரியில்லை. நாகராஜனிடம் போய் இழப்பது தான் சிறந்தது" என்று கூறிவிட்டு வெளியே போய் விட்டார் அவர்.
சேஷாத்திரி ஏன் திடீரென்று வந்தார்? பாலுவைப் பற்றி விசாரித்துப் போக வந்தாரா? மூர்த்தி தன் வீட்டினுள் நுழைந்ததைப் பார்த்து விட்டுத்தான் தன்னை எச்சரிக்க வந்திருக்கிறார் என்பது பவானிக்குப் புரிந்து விட்டது.
சிலையைப் போல அவள் கூடத்தில் மாட்டி இருந்த நடராஜப் பெருமானின் படத்தின் முன்பு சென்று உட் கார்ந்து விட்டாள்.

