பஸ் நகர்ந்தது
டவுனில் முனிசிபல் ஹைஸ்கூலில் பாலுவைச் சேர்க்க வேண்டிய விவரங்களை விசாரித்துக் கொண்டு. பவானியும் பாலுவும் பசுமலை திரும்பும்போது மாலை ஆறு மணி ஆகி விட்டது. அன்று பகல் டவுனில் பஸ்ஸை விட்டுக் கீழே இறங்கிச் சற்று தூரம் நடந்து சென்றதும் பவானி ஒரு மரத்தடியில் தயங்கி நின்றாள். பிறகு தைரியத்துடன் மூர்த்தியைப் பார்த்து "நீங்கள் எங்களுக்காக வருகிறீர்களா? இல்லை, உங்களுக்கு ஏதாவது சொந்த வேலை இருக்கிறதா?" என்று கேட்டாள்.
மூர்த்தி உதட்டைப் பற்களால் அழுத்திக் கடித்துக் கொண்டே பவானியைப் பார்த்து ஒரு மாதிரியாகச் சிரித்தான். கபடமும் வஞ்சமும் நிறைந்த அந்த சிரிப்பைப் பார்த்ததும், பவானி மனம் வெறுத்து தரையைப் பார்த்துக் கொண்டு நின்றாள். விதவை பவானி யாருக்காக வாழ்கிறாள்? பாலுவுக்காக. அந்தக் குழந்தை படித்து முன்னுக்கு வந்தால் தான் தனக்கு இன்பம் உ.ண்டு என்று கருதுகிறவள். அவனுக்காகவே உற்றார் உறவினரை விட்டு ஒதுங்கி வாழ முயன்றவள். பின்னால் மூர்த்தி தொடர்ந்து வந்தால் அவள் வாழ்க்கை என்ன ஆவது?
அருகில் நின்றிருந்த பாலுவின் கையைக் கெட்டி யாகப் பற்றிக்கொண்டு பவானி குமுறும் மனத்துடன், ”நான் வருகிறேன். எனக்காக நீங்கள் இவ்வளவு சிரமப் பட வேண்டாம். எனக்குத் துணை அவசியமாக இருந்தால் கல்யாண மாமாவை அழைத்து வந்திருப்பேனே! என் தகப்பனாருக்குச் சமானமாக இருக்கும் அவர் எனக்கு உதவி புரிவதையே பசுமலையில் உள்ளவர்கள் வம்பு பேசுகிறார்கள். அதனால் தான் நான் அவரையும் இன்று வரும்படி அழைக்கவில்லை" என்று சொல்லி விட்டு இரண்டடி முன்னால் நடந்தான்.
மரத்தடியில் வாயில் சிகரெட்டைப் புகைத்தபடி நின்றிருந்த மூர்த்தி சிகரெட் துண்டை கீழே எறிந்து காலினால் அழுத்தித் தேய்த்தான். நெற்றியில் முத்து முத்தாக அரும்பி இருந்த வியர்வைத் துளிகளைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே பவானியும், பாலுவும் செல்லும் திசையைப் பார்த்துக்கொண்டு நின்றான் அவன்.
அவனிடம் இதுவரையில் யாரும் இவ்வளவு அலட்சியமாக நடந்து கொண்டதில்லை. பம்பாயிலே பல வருஷங்கள் இருந்திருக்கிறான். பல குடும்பங்களுடன் பழக இருக்கிறான். அங்கே யெல்லாம் பலதரப்பட்ட பெண்களுடன் அவனுக்குப் பழக்கம் உண்டு. ஊரிலே நல்ல சினிமாவாக வந்தால் அவன் தனக்குத் தெரிந்த குடும்பப் பெண்களை அழைத்துப் போகத் தவற மாட்டான். முதல் வகுப்பு டிக்கட வாங்கி சினிமா பார்த்த பிறகு டாக்சியில் அவர்களை வீட்டுக்கு அழைத்து வருவான். சிரிப்பும் வேடிக்கையுமாக அவர்களுடன் பொழுது போக்குவது ஒரு நாகரிகம் என்று அவன் கருதினானோ என்னவோ!
மூர்த்திக்கு மங்கள தாஸ் என்கிற குஜராத்தி வியாபாரியின் மகள் தமயந்தி நினைவுக்கு வந்தாள். செக்கச் செவேல் என்று செவ்வாழைத் தண்டு மாதிரி வாளிப்பான கைகளும், உருண்டை முகமும் உடைய அவளோடு எத்தனை இடங்களுக்குப் போயிருக்கிறான்? 'மரீன' கடற்கரையிலே அந்த நீண்ட பாலத்தில் அவனும் அவளும் எத்தனை பெளர்ணமி இரவுகள் கை கோத்து உலாவி இருக்கிறார்கள்!
பெண்களை விளையாட்டுப் பொம்மைகளாகவும் அலங்காரப் பொருள்களாகவும் தன் உல்லாச வாழ்க்கைக்கு ஒரு கருவியாகவும் நினைத்து இறுமாந்திருந்த மூர்த்தியின் மனம், பவானியின் உதாசீனத்தை நினைத்துப் பொருமியது.
ஏக்கத்துடன் பெருமூச்சு விட்டுவிட்டு மூர்த்தி மறுபடியும் பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தான். அங்கிருந்து பஸ் ஒன்று புறப்பட்டுக் கொண்டிருந்தது. அடுத்த ஊர் வரையில் அவன் ஓர் அலுவலாகச் செல்ல வேண்டியிருந்ததால் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தான். பஸ் முனிசியல் கட்டிடத்தின் மணிக் கூண்டைச் சுற்றிக் கொண்டு, முனிசிபல் ஹைஸ்கூலுக்கு வந்து சேர்ந்தது. பள்ளிக்கூடத்தின் தாழ்வாரத்தில் போட்டிருந்த பெஞ்சில் பவானியும் பாலுவும் உட்கார்ந்திருந்தனர். மூர்த்தி ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தான். அங்கே கூடியிருந்த பல பேரை விட்டு அவன் பார்வை பவானியின் மேல் சென்றது. அடக்கமே உருவாக அமர்ந்திருந்த அவளது கவர்ச்சி-கரமான தோற்றம், அவன் மனத்தில் பல எண்ணங்களை எழுப்பிவிட்டது.
"அந்த உருண்டை மூஞ்சி தமயந்தியும், பள்ளக் கண்களையுடைய ரோகிணியும் இந்தப் பவானியின் முன்பு எம்மாத்திரம்?" என்று மூர்த்தி நினைத்தான்.
இவள் விதவையானால்தான் என்ன? விதவைக்கு வாழ்வே இல்லையா? அவர்கள் மறுமணம் செய்து கொண்டு வாழத்தான் சட்டமும், சமூகமும் இடங் கொடுக்கிறதே! ஆனால் பவானியின் உள்ளத்திலே என்ன இருக்கிறது? மென்மையான உடலையும் கவர்ச்சி கரமான தோற்றத்தையும் உடைய அவள் உள்ளம் கற்பாறையைவிடக் கடினம் வாய்ந்தது. அங்கே கருணைக்கும், அன்புக்கும் தான் இடம் உண்டு. ஆனால் சுய கௌரவத்துக்கு இழுக்கோ அவமானமோ ஏற்பட அந்த மனம் இடங் கொடுக்காது என்பதை மூர்த்தி அறிய வில்லை.
சற்றும் எதிர்பாராத விதமாகப் பவானி, பள்ளிக் நடத்துக்கு வெளியே நின்றிருந்த பஸ்ஸைப் பார்த்தாள். தற்செயலாக அவள் பார்வை மூர்த்தியின் மேல் சென்றது. சோகமும் கருணையும் ததும்பும் அவள் கண்கள் ஒரு வினாடி நெருப்புத் துண்டங்களாக ஜ்வலித்தன. அலட்சியமும் வெறுப்பும் நிறைந்த பார்வை ஒன்றை அவன் மீது வீசிவிட்டுப் பவானி முகத்தை வேறுபுறம் இருப்பிக் கொண்டாள்.
மூர்த்தி புன்முறுவல் பூத்தான். அவளுடைய அலட்சியத்தையும் வெறுப்பையும் பார்த்துத் தனக்குள் நகைத்துக் கொண்டான்.
கண்டக்டர் விசில் கொடுக்கவும் பஸ் இடத்தை விட்டு நகர்ந்தது.

