டவுன் பஸ்

அடுத்த நாள் காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடன் பலானிக்குப் பாலுவை அழைத்துப் போய் வேறு பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டு வரவேண்டும் என்கிற விஷயம் நினைவுக்கு வந்தது. ஆனால் பாலு படுக்கையை விட்டு எழும் போதே கேரம் பலகையைப் பற்றி நினைத்துக் கொண்டே எழுந்தான். அம்மாக்குத் தெரியாமல் மூர்த்தி மாமாவைப் பார்த்து அந்தப் பலகையை வாங்கி வந்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். எழுந்திருந்து பல் தேய்த்து முடிப்பதற்குள் பாவனி அவனைப் பல தடவைகள் 'எத்தனை மணிக்குப் பள்ளிக்கூடம் போகவேண்டும்' என்று கேட்டு விட்டாள்.

பாலு நிதானமாகப் பற் பொடியை இடது கையில் வைத்துக் கொண்டு மதில் சுவர் ஓரமாகப் போய் அடுத்த வீட்டில் எட்டிப் பார்த்தான். மூர்த்தியும், பற்பசையும் ’பிரஷ்' ஷையும் கையில் எடுத்துக்கொண்டு "என்னடா விஷயம்?" என்று கேட்டுக் கொண்டு பவழ மல்லிகை மரத்தடியில் வந்து நின்றான். பாலு பயத்துடன் உள்புறம் பார்த்து விட்டு, "மூர்த்தி மாமா! கேரம் பல கையை மச்சிலிருந்து எடுத்துத் தருகிறீர்களா?" என்று கேட்டான்.

"ஓ! எடுத்துத் தரேன்."

"..என்னோடு யார் ஆடுவார்கள்?' '

*பூ! பிரமாதம்! நான் ஆடிவிட்டுப் போகிறேன். இதற்காகக் கவலைப்படுவாயோ?" என்று கேலியாகக் கூறிவிட்டுச் சிரித்தாள் மூர்த்தி.

அதற்குள் சமையலடையிலிருந்து பவானி பாலுவை அழைத்தாள்.

”இன்றைக்கு என்ன... அழுது வடிகிறாய்? பள்ளிக் கூடம் போக வேண்டுமென்றால் உனக்கு அழுகை தான் போ" என்று கூறியதைக் கேட்டதும் மூர்த்தி, ' ஏண்டா இன்று பள்ளிக்கூடத்துக்குப் போகிறாயா என்ன?" என்று விசாடத்தான்.

"போகவேண்டும் மாமா. அம்மாவும் தானும் போய் வரவேண்டும். அதுக்காகத்தான் அம்மா ஓடுர அடர்க்களப் படுத்துகிறான்"

அதற்கு மேல் மூர்த்திக்கு அங்கே இருப்புக் கொள்ள வில்லை. அவசரமாகப் பல் தேய்த்து விட்டு உள்ளே சென்று காப்பி அருந்தினான். முதல் வேலையாகப் பரணில் கிடந்த 'கேரம்' பலகையை எடுத்துக் கீழே வைத்து விட்டுச் சமையலறைக்குள் சென்று பார்வதியிடம்,

"மாமி! இன்றைக்கு நான் டவுன் வரைக்கும் போக வேண்டிய வேலை இருக்கிறது. சாட்டாட்டுக்கு வரமாட்டேன். எனக்காகக் காத்துக் கொண்டிருக்க வேண்டாம்" என்றான். அதைக் கேட்ட பார்வதி, ”ஏண்டா அட்டா! திருச்சி வரைக்கும். 'காம்ப்’ போகவேண்டியிருக்கும் என்று நேற்று ராத்திரி சொன்னாயே?" என்று கேட்டாள்.

"நாளைக்குப் போகலாம் என்று இருக்கிறேன் மாமி" என்று சுருக்கமாகக் கூறிவிட்டு, அவன் குளித்து உடை அணிந்து கொண்டு கிளம்பும்போது காலை ஒன்பது மணி ஆகிவிட்டது.

பவானியும் பாலுவும் சாப்பிட்டு விட்டுக் கதவைப் பூட்டிக் கொண்டு கல்யாணராமன் வீட்டுக்குள் வந்தார்கள். அப்பொழுது தான் ஸ்நானம் செய்து விட்டுப் பூஜையில் ஈடுபட்டிருந்த கல்யாணம் ”என்னம்மா வெயில் ஏறி விட்டதே! காலையில் சீக்கிரமே கிளம்பி இருக்க வேண்டும்" என்றார்.

பிறகு பள்ளிக்கூடத்தில் சீக்கிரமே வேலைகளை முடித்துக் கொண்டு வந்து விடும்படியாகக் கூறினார். இருவரும் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தார்கள்.

பசுமலை பஸ் ஸ்டாண்ட் குளத்தங்கரையின் சமீபத்தில் இருந்தது. குளத்தைச் சுற்றிப் பெரிதும் சிறிதுமாக வளர்ந்திருந்த மரங்களின் நிழலில் கல்பெஞ்சுகள் போட்டிருந்தார்கள். சுமை தாங்கிகளும் இருந்தன. தாக சாந்திக்காக அங்கே இரண்டு மூன்று இள நீர்க் கடைகளும், ஒரு சோடாக் கடையும் இருந்தன. அதைத் தவிர கிழவி ஒருத்தி விற்கும் பனஞ்சாறுக்கு அங்கே ஏகப் பட்ட கிராக்கி.

பவானியும் பாலுவும் அங்கே வந்து சேர்ந்தபோது மணி பதினொன்றாகி விட்டது. ஒன்பதரை மணி பஸ் கிளம்பி டவுனுக்குப் போய்விட்டது. அடுத்த பஸ் பதினான்றே காலுக்கு வரும் என்று சோடாக் கடைக்காரர் அறிவித்தார். மரத்தடியில் கிடந்த பெஞ்சில் இருவரும் உட்கார்ந்தார்கள் .

மினு மினு வென்று பசுமையாக இருக்கும் இள நீர்க் காய்களைச் 'சதக் சதக்' கென்று சீவி இள நீரைக் கண்ணாடி ட்ம்ளரில் கவிழ்த்து நிரப்பி அவன் கொடுத்துக் கொண்டிருந்ததைப் பாலு கவனித்துக் கொண்டே உட்கார்ந்திருந்தான். இளநீர்க் காய்களில் இருக்கும் இளந் தேங்காயைத் தின்று, இனிப்பான அந்த நீரைச் சாப்பிடும் அவர்களை அவன் மாறி மாறிக் கவனித்துக் கொண்டிருந்தான். தானும் அந்த மாதிரிச் சாப்பிட வேண்டும் என்று அவனுக்கு சையாக இருந்தது . பவானியும் பாலு அந்தப் பக்கமே பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தாள்.

”உனக்கு வேணுமாடா? சாப்பிடுகிறாயா?" என்று கேட்டாள்,

"நீயும் சாப்பிடு அம்மா !" என்றான் அவன்.

"நான் என்ன குழந்தையா. வழியில் பார்க்கிறதை யெல்லாம் வாங்கிச் சாப்பிட?" என்றாள் பவானி.

இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த கடைக்காரன் மடமட வென்று இரண்டு இள நீரைச் சீவிக் கண்ணாடி டம்ளர்களில் நிரப்பினான்.

"சாப்பிடுங்க அம்மா, குழந்தை சொல்லுது'* என்று சொல்லிக் கொண்டே அவர்களிடம் கொடுத்தான்.

இருவரும் சாப்பிட்டனர். சில்லறை கொடுப்பதற்காகப் பவானி தன் கைப் பையைத் திறந்தபோது, ”வேண்டாம் நான் கொடுத்து விட்டேன்" என்று சொல்லிக் கொண்டு மூர்த்தி அவள் எதிரில் வந்து நின்றான். பவானியின் திகைப்பு அடங்குவதற்கு முன்பு *மூர்த்தி மாமா, மூர்த்தி மாமா 'கேரம்' பலகையை படுத்தாச்சா?’ என்று கேட்டுக் கொண்டே பாலு அவன் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

பஸ் வரும் சத்தம் கேட்டு அங்கிருந்த பிரயாணிகள் எல்லோரும் சுறுசுறுப்படைந்தனர்.

பாலுவின் கையைப் பற்றி அழைத்துக் கொண்டு மூர்த்தி பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தான். திகைத்த உள்ளத்துடன் பவானி பேச முடியாடல் பஸ்ஸில் ஏறினாள். பள்ளிக்-கூடத்துக்குப் போகிறோமே என்று அவள் அன்று சற்று நாகரிகமாக உடுத்திக் கொண்டிருந்தாள். தினம் தலையை வாரி முடிந்து கொள்கறவள் இன்று 'பிச்சோடா' போட்டுக் கொண்டிருந்தாள். கறுப்புக் கரை போட்ட வெள்ளை மில் புடவை கட்டி இருந்தாள். சாதாரணமாக பார்க்கும் போதே எடுப்பாகத் தோற்றமளிக்கும் பவானிக்கு அவை விசேஷ அலங்காரங்களாக அமைந்த மாதிரி இருந்தன, கட்டுக்குள் அடங்காமல் அவள் முன் நெற்றியில் கூந்தல் சுருள்கள் சுருண்டு விழுந்து கொண்டிருந்தன. அவைகளை அவள் எத்தனை முறைகள் கோதிவிட்டுக் கொண்டாலும், மீண்டும் நெற்றியில் விழுந்து அவள் அழகை அதிகப்படுத்தின.

பஸ் புறப்பட்டது. டிக்கட் கொடுக்கிறவரிடம் மூர்த்தி ரூபாயைக் கொடுத்து மூன்று டிக்கெட்டுகள் வாங்கினான். பஸ்ஸில் கூட்டமாக இருந்ததால் பவானி, பாலு. மூவரும் ஒரு பக்கத்தில் உட்கார வேண்டியிருந்தது. பாலுவுக்கு ஒரு பக்கத்தில் பவானி உட்கார்ந்தாள். இன்னொரு பக்கத்தில் மூர்த்தி உட்கார்ந்தான். பவானிக்கு இவையெல்லாம் சற்றும் எதிர்பாராத சம்பவங்கள்.

மூர்த்தி தடவியிருந்த மருக்கொழுந்து செண்ட்டின் மணம் ’கம்' மென்று நாசியைத் துளைத்தது. பவானி கழுத்து வலியெடுக்கிறமாதிரி ஜன்னல் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தாள். பாலு மட்டும் தொணதொண வென்று ஏதோ மூர்த்தியுடன் பேசிக்கொண்டிருந்தான்.

பஸ் அடுத்த கிராமத்தின் 'ஸ்டாண்டில்' வந்து நின்றது. அங்கேயும் சிற்றுண்டிக் கடைகளும், இளநீர்க் கடைகளும் இருந்தன. அந்த இளநீர்க் கடைக்காரன் கொஞ்சம் வியாபார தந்திரம் தெரிந்தவன். நல்ல வெயிலுக்கு இளநீரில் ஐஸைப் போட்டுக் கொடுத்தான் எல்லோரும் விரும்பிச் சாப்பிட்டார்கள். மூர்த்தி பாலுவுக்கு ஒரு டம்ளர் வாங்கிக் கொடுத்துத் தானும் அருந்தினான்.

"உங்க தங்கச்சிக்கும் வாங்கித் தாங்க சார்!' என்றான் கடைக்காரன் மூர்த்தியிடம் பவானியை பார்த்து.

"நோ. நோ! தங்கச்சியா?" என்று அசடு வழியச் சொல்லிவிட்டு, "நீங்கள் சாப்பிடு-கிறீர்களா?" என்று கேட்டான் பவானியிடம்.

பவானி, 'வேண்டாம்' என்கிற பாவனையாகத் தலையை அசைத்தாள்.

வண்டியில் உட்கார்ந்திருந்த ஒரு ஸ்திரீ பவானியைக் கவனித்தாள்.

"ஏனம்மா! அவர் உன் அண்ணா தானே?" என்று கேட்டாள்.

பவானிக்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை. 'ஆமாம்' என்று சொல்லி வைப்பதில் என்ன தவறு என்று நினைத்தாள். ஆகவே அவள். 'ஆமாம் அம்மா. அவர் என் அண்ணன் தான்" என்றாள் அவளிடம்.

"அது தானே பார்த்தேன். பின்னே ஏனம்மா நீர் சாப்பிடலே நீ" என்று கேட்டாள் அந்தப் பெண்.

"வரும்போது தான் சாப்பிட்டு வந்தேன்" என்று நருக்கமாகவே பதிலளித்தாள் பவானி.

வயது வந்த ஒரு வாலிபனும் பெண்ணும் பழகுவைத பலகம் எப்படியெல்லாம் வேவு பார்க்கிறது? அவன் உன் அண்ணனா, மாமனா, தம்பியா என்று கேட்டுச் சமாதானம் அடைகிறது. அண்ணன், தம்பி என்று சொல்லி விட்டால் திருப்தியுடன் தலையை ஆட்டி அத்தச் சகோதர அன்பை ஆமோதிக்கிறது. மாமன் அத்தை மகன் என்று சொல்லி விட்டால் ’உன் புருஷன் எங்கே? ஓகோ, வேறு ஊரில் இருக்கிறாரோ? ஏதோ அலுவலாக இவர்களுடன் போகிறாயோ' என்றெல்லாம் திருப்தியடையப் பார்க்கிறது. யாரோ அன்னியனுடன் ஒரு பெண் பழகுகிறாள் என்றால் அதைப்பற்றி இல்லா ததும் பொல்லாதததும் புனைந்து பேசவோ தயங்குவ இல்லை .

பஸ் கிளம்புவதற்கு அறிகுறியாக டிக்கெட் கொடுப்பவர் பஸ்ஸுக்குள் ஏறிச் சில்லறை கேட்க ஆரம்பித்தார். வெளியே நின்றிருந்த மூர்த்தி உள்ளே வந்து உட்கார்ந்தான். பஸ் டவுனை அடையும் வரை அவன் எவ்வளவோ முயன்றும் பவானி அவனுடன் முகம்

கொடுத்துப் பேசவில்லை.