அம்பலத்தரசன்
தகுந்த துணையின்றி வாடும் ஒரு அபலையின் வாழ்க்கையிலே. இன்பமும் அமைதியும் பார்ப்பதற்குக் கிட்டாது.
கல்யாணராமனின் வீட்டிலிருந்து கிளம்பி பவானி கொல்லைப் பக்கமாகவே தன் வீட்டுக்குள் சென்றாள். கொல்லையில் அடர்த்தியாகப் படர்ந்திருந்த நித்திய மல்லிகைப் பந்தலிலிருத்து 'கம்' மென்று மணம் வீசியது. மாலைத் தென்றலில் மலர்ந்து பசுமையான இலைகளின் ஓடையே அவை ஆடி அசைவதே வனப்பு மிகுந்த காட்சியாக இருந்தது.
பந்தலின் கால் ஒன்றில் சாய்ந்து பவானி சிறிது நேரம் வான வெளியையும், தொலைவில் மறையும் சூரியனின் அஸ்தமனத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள். அக்கினிப் பிழம்பான ஆதவன் தன் வெப்பத்தைக் குறைத்துக் கொண்டு மேற்குக் கடலாகப் போய்க் கொண்டிருந்தான். வான வீதி எங்கும் பாவைகளின் பட்டம். தெருக்களில் மேய்ச்சலிலிருந்து திரும்பும் பமக்களின் குளம்பொலி. பசுமலைக் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் பசுபதி கோவிலிலிருந்து மிதந்து வரும் பணியின் நாதம்.
'இன்னொருவருடைய மனதிலே என்ன இருக்கிறது? விஷம் இருக்கிறதா அல்லது அன்பெனும் அமுதம் நிறைந் திருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? கல்யாணராமன் வெள்ளை மனத்தவர். அன்புடன் பழகுகிறார். அந்த அம்மாள் பார்வதி கருணையே உருவானவள். அடக்கமானவள். ஆனால் அவர்? அந்த மூர்த்தி எப்படிப்-பட்டவர்? பேச்சும் செய்கையும் அவரைப் பலவிதமாக எண்ணத் தோன்றுகிறதே!' என்று குழம்பினாள் பவானி.
அப்பொழுது கோவிலிலிருந்து காற்றிலே ஒரு இசை கலந்து வந்தது. மணியின் நாதத்தோடு அந்த இசை பரவியது.
இசையின் ஆனந்தத்தில் லயித்துப் பவானி அப்படியே நின்றாள். மேற்கே செக்கர் வானில் ஒளிப் பிழம்பாகச் சுழலும் சூரியனின் வடிவத்திலே தில்லையம் பதியிலே ஆனந்த நடனமிடும் இறைவன் தோன் றினான். உலகையே தன் சக்தியால் ஆட்டுவிக்கும் வள்ளலின் ஆட்டங்களுக்கு முன்பு நல்லவையும், தீயவையும். தலை குனிந்து வணங்க வேண்டியது தானே?
பவானியின் கல்யாணத்தின் போது அவளுக்குப் பல பரிசுகள் வந்திருந்தன. அதிலே அவளுக்குப் பிடித்தமான தேவாரப் பாடல்கள் புத்தகத்தை மட்டும் எடுத்துப் பத்திரமாகப் பெட்டியில் வைத்துப் பூட்டிக் கொண்டாள். யாரோ ஒருவர் அன்புடன் அளித்த நடராஜனின் திருஉருவப் படத்தை வீட்டுக் கூடத்தில் மாட்டி வைத்தாள்.
குடும்பம் பல்கிப் பெருகப் போகிறது என்றுதான் முதலில் அவள் நினைத்தாள். ஆனால், அவள் இதயத்தில் அரசு புரிந்த நடராஜன் வேறு விதமாகவல்லவா செய்து விட்டான்? கணவனைப் பிரிந்த பிறகு சிலகாலம் அவள் நடராஜனின் உருவத்தை ஏறிட்டும் பார்க்க வில்லை. வாசு போய் ஒரு வருஷம் வரையில் அந்தப் படத்தில் தூசும். தும்பும் படிந்து கிடந்தது.
அன்று திருவாதிரை நாள். கோவிலில் பாண்டும் நாதஸ்வரமும் ஒலித்தன. உதயத்தில் நடராஜன் ஆடிக் கொண்டே கோபுர வாயிலில் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்க வந்து விட்டான். பவானி தன் வீட்டுத் திண்ணை ஓரமாக வந்து நின்று கோவிலின் வாயிலை நோக்கினாள்.
அருள் சுரக்கும் ஆண்டவனின் வதனம் அந்தச் காலை வேளையில் அன்புடன், தன் மகவுக்குப் பாலூட்டும் தாயின் கருணை முகத்தை நினைவூட்டியது. தாயை மறந்து மகவால் உயிர் வாழ முடியுமா? வறண்டு போயிருந்த அவள் உள்ளத்தில் அன்புப் பிரவாகம் பெருக ஆரம்பித்தது. பித்துப் பிடித்தவள் போல் வீட்டுக்குள் ஓடினாள். கூட்டத்தில் மாட்டியிருந்த நடராஜப் பெருமானின் உருவப் படத்தை நீர் மல்கும் கண்களால் பார்த்தாள் . விம்மி விம்மி அழுது கொண்டே . . ’பிரபு! என்னை மன்னித்துவிடு! உன்னை உதாசீனம் செய்தால் என் நெஞ்சில் ஏற்பட்ட துயரத்துக்கு முடிவு காண முடியும் என எண்ணி ஏமாந்து விட்டேன்' என்று வாய் திறந்து தன் உறவினர் ஒருவருடன் பேசுவது போல் அந்தப் படத் கடன் பேசினாள் பவானி.
கொல்லையில் பவழ மல்லிகைப் பூக்கள் உதிர்ந்து கிடந்தன. கூடை நிறைய மலர்களைச் சேர்த்து எடுத்து வந்து பாலை புனைந்து படத்துக்கு அணிவித்தாள் பவானி. அன்றிலிருந்து அவள் துன்பத்தால் வாடும் போதெல்லாம் தன் ஒப்புவமையற்ற புன்னகையால் நட ராஜப் பெருமான் அவளைத் தேற்றி வந்தான்.
கல்யாணராமனும் புன்னகை புரிந்து தான் அவளுடைய துயரங்களைக் கேட்கிறார். பார்வதி கவலையும் கஷ்டமும் பட்டுக் கொண்டே அந்தப் பேதைக்கு ஆறுதல் அளிக்கிறாள்.
’மூர்த்தி’ என்று நினைத்ததும் பவானியின் மனம் ஒரு வினாடி 'திக்' கென்று அடித்துக்கொண்டது. உடம்பு ஒரு தரம் குப்பென்று வியர்த்தது. அவன் கபடமாகச் சிரிக்கும்போது அதில் வஞ்சகம், சுயநலம், அதர்மம். கோழைத் தனம் இவ்வளவும் குமிழியிடுகின்றனவே என்று நினைத்தாள் பவானி.
இவ்வளவு பேர்களுடைய சிரிப்பையும் விட அவளுக்கு நடராஜப் பெருமானின் கொவ்வைச் செவ்வாயின் குமிண் சிரிப்புத்தான் பிடித்திருந்தது. ஆகவே, அவள் அப்பொழுதுதான் அலர்ந்து கொண்டிருந்த நித்திய மல்லிகை மலர்களைப் பறித்து எடுத்துக் கொண்டு வீட் டுக்குள் நுழைந்தாள்.
கூடத்தில் ஸ்வாமி படத்தருகில் விளக்கேற்றி விட்டு இரண்டு ஊதுவத்திகளை எடுத்துக் கொளுத்திச் சுவரில் செருகி வைத்தாள். வாழை நாரை எடுத்து வந்து படத்துக்கு நேராக உட்கார்ந்து கூடையிலிருந்த மலர்களைத் தொடுக்க ஆரம்பித்தாள்.
அந்த அந்தி வேளையிலே, சற்றே திறந்திருந்த கொல்லைக் கதவை நன்றாகத் திறந்து கொண்டு அசட்டுச் சிரிப்புடன் மூர்த்தி உள்ளே வந்து நின்றான்.
பந்தாட்ட நிபுணன் போல் அவன் “ஸ்போர்ட்ஸ்' பனியனும், அதன் கழுத்துப் புறத்தில் சற்றே வெளியில் தெரியும்படியாகச் சுற்றப்பட்டிருந்த கைக்குட்டையும், 'பனாமா பாண்ட்'டும் அணிந்து உதட்டைப் பற்களால் அழுத்திக் கடித்துக் கொண்டே நின்றான். அவன் தடவியிருந்த வாசனைத் தைலத்தின் நெடி காத வழிக்கு வீசியது.
”யார்? நீங்களா?" என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் பதறி எழுந்த பவானி.
"ஆமாம். என்னைக் கண்டு நீங்கள் ஏன் இப்படிப் பதறுகிறீர்கள்? படித்த பெண்ணாகிய நீங்கள் இப்படிப் பயந்து நடுங்குவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என்றான் மூர்த்தி.

